Friday, April 06, 2007

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!!!

நாகப்பட்டனம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் காயமடைந்தார்.

தமிழக மீனவர்களை குறி வைத்து சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக சுடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

ஆனால் மத்திய அரசின் சார்பில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.ஆண்டனியிடம் இதுகுறித்து கேட்டால், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசின் அமைச்சர் போல பதிலளிக்கிறார்.

இந்த நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 7 மீனவர்கள், 2 நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இன்று அதிகாலை அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், சண்முகவேல் என்ற மீனவரின் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

திரும்பத் திரும்ப இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
http://thatstamil.oneindia.in/news/2007/04/06/fishermen.html

1 comment:

Anonymous said...

இவங்கள் திருந்தவே மாட்டார்களா?