Sunday, September 30, 2007

கருணா விவகாரத்தில் இரட்டை வேடமிடும் பிரித்தானியா!!!

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துiணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தானியா மறுத்துவிட்டது.


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பேச்சாளர் ஜோன் சுல்லியிடம் இது தொடர்பிலான கேள்வியை கொழும்பு ஊடகவியலாளர்கள் நேற்று சனிக்கிழமை கேட்டபோது பதில் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

"விசா கோரி விண்ணப்பிக்கும் தனிநபர்கள்" குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் சிறிலங்காவில் உள்ள பிரித்தானியா தூதரகத்தினால் வழங்கப்பட்ட விசாவினூடே பிரித்தானியாவுக்குள் கருணா நுழைந்திருப்பதாக கொழும்பு "ஐலண்ட்" நாளிதழில் லண்டன் செய்தியாளர் சுஜீவ நிவுன்கெல உறுதி செய்துள்ளார்.

"இலங்கையின் கிழக்கு பகுதி நிலைமைகளை கருணா குழு என்றழைக்கப்படுவோர் சீர்குலைத்து வருவதாக" கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் சாடியிருந்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய அந்நாட்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இலங்கை- பிரித்தானிய உறவுகளுக்குப் பொறுப்பானவருமான கிம் ஹெளல்ஸ், நீதிக்குப் புறம்பான படுகொலைகளைக் கருணா செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

2007 ஆம் ஆண்டு மே மாதம் பிரித்தானியா நாடாளுமன்றில் பேசிய கிம் ஹெளல்ஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே வன்முறையில் ஈடுபடவில்லை. கருணா குழுவுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் கூறினார்.

மேலும் "இலங்கையில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், சிறார்களை படையணிகளில் சேர்த்தல் ஆகியவற்றுக்கு கருணா குழுதான் பொறுப்பு" என்றும் "பொதுமக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கருணா கைவிட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அதே பிரித்தானியாதான் இப்போது அதே கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இலங்கை இனப்பிரச்சனையில் அனைத்துலக நாடுகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்ற இரட்டை வேடத்தையே இது வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

Saturday, September 29, 2007

கத்தோலிக்க மதகுருமார் படுகொலை: ஹரித்தாஸ் கண்டனம்!!!

கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டமைக்கு ஹரித்தாஸ் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


ஹரித்தாஸ் அமைப்பின் அனைத்துல செயலாளர் லெஸ்லி ஆன் நைட் கூறியதாவது:

இலங்கையின் நிலைமையை வெளிப்படுத்தும் வகையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அங்கு அமைதி உருவாக்கப்பட வேண்டும் என்பதனை வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுகின்ற மனிதாபிமானப் பணியாளர் யுத்தத்தினால் பாதிக்கப்படுகிறவர்களாக இருக்கின்றனர். இந்த மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருமே மனிதாபிமானப் பணியாளர்களினது வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும்.

அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் சேவையாற்றிய மக்களுக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம் என்றார் அவர்.

இது தொடர்பில் ஹரித்தாசின் சிறிலங்காவுக்கான தேசிய இயக்குநர் டமியன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாவது:

அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளாரின் படுகொலையானது எம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. விளிம்புநிலை மற்றும் ஏழை மக்களுக்கான பணியில் தன்னை அவர் ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டவர். எமது சமூகத்தின் ஆயுதம் ஏந்தாத அமைதியை விரும்பும் நாயகர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களும் படுகொலைகளும் வெறுக்கத்தக்கதாகும்.

அப்பாவி மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து வகையான வன்முறைகளையும் நாம் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். இத்தகைய வன்முறைகளை அனைத்து மத இலங்கையர்களும் கண்டிக்க வேண்டும். இந்த நாட்டில் அமைதியை உருவாக்க இணைய வேண்டும். மோதலில் தொடர்புபட்ட தரப்புகள், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.

கத்தோலிக்க மதகுருமாரின் படுகொலை அனைத்துலக சமூகம் கண்டனம் செய்வதோடு அர்த்தமில்லாத தற்போதைய யுத்தத்தையும் கண்டிக்க வேண்டும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

Wednesday, September 26, 2007

கருணா பிரித்தானியாவுக்கு தப்பி ஓட்டம்?

கருணா கூலிக்குழுவின் தலைவர் கருணா இவர்களது குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற பிளவினையடுத்து பாதுகாப்பு தேடி பிரித்தானியாவுக்கு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகிறது.

இவரது குடும்பத்தினர் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக பிரித்தானியாவில் தங்கியிருப்பதாகவும் கொழும்பில் இவருக்கு விசாகிடைக்கப்பெற்று நான்கு நாட்களின்பின் பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும். இவரது சிறீலங்கா கைத்தொலைபேசி இலக்கம் இன்னமும் வேலை செய்வதாகவும் இவருக்கு நெருங்கியவட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

இதேவேளை அரசாங்கதரப்பில் இருந்தும் கருணாகுழுவிற்கு சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் அதாவது மற்றய துணைஇராணுவக்குழுக்களான ஈ.பி.டிபி போன்றவற்றை கிழக்கில் இயங்கவிடாமல் செயற்படுவதை தொடர்ந்தே இவ்அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் மேலும் அறியமுடிகிறது.
நன்றி>பதிவு.

Wednesday, September 19, 2007

தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள்- தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?

தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் மற்றும் அரசாங்கங்களால் விதிக்கப்படும் தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி விளக்கம் அளித்துள்ளார்.


அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) கடந்த செவ்வாய்க்கிழமை (28.08.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலின் இரண்டாம் பகுதியின் எழுத்து வடிவம்:

இந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஊடாகவும் அனைத்துலகம் சொல்கின்ற சில நடைமுறைகளுக்கு ஊடாகவும் சில விடயங்களில் ஒத்துப் போகின்றோம். அளவுக்கு மீறிப் போனால் ஒத்துப்போக முடியாத விடயங்களில் ஒத்துப் போக முடியாதுதான். ஆனால் பல வழிகளில் நாங்கள் ஒத்துப் போய் இருக்கின்றோம்.

இன்றைய சமாதானப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட நல்ல பயன் என்னவென்று சொன்னால், அனைத்துலக அளவில் செய்தித்தாள்களாக இருக்கலாம், தொலைக்காட்சிகளாக இருக்கலாம், அவர்களும், அரசியல் சார்ந்தவர்களும் இங்கு வந்தனர். மக்களைப் பார்த்தனர். இங்குள்ள நிலைமைகளைப் பார்த்தனர். முன்பு வீட்டளவிலே கேள்விப்பட்ட விடயங்கள், யாரோ சொன்னவற்றிலிருந்து புரிந்து கொண்ட விடயங்களுக்கு அப்பாற்பட்டு இங்கு கள உண்மை என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்துள்ளது.

இன்று, அவர்கள் தங்கள் கொள்கை சார்ந்த சில விடயங்களைப் பேசினாலும் கூட கள நிலைமை என்ன என்பதை புரிந்து கொண்டார்கள்.

அதனால் அனைத்துலக ரீதியாக அரசு மட்டங்களிலும், மக்கள் மட்டங்களிலும் ஒரு விழிப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது. இது தொடர்பான சில கருத்துருவாக்கங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம். ஆனால் அவையெல்லாம் செயல்வடிவம் பெற வேண்டும்.

முன்பைவிட அனைத்துலகம் என்பது தமிழ் மக்கள் விடயத்தில் ஆழமான ஒரு விழிப்புணர்வை இப்போது பெற்றுள்ளது என்பது உண்மை. அது ஒரு முழுமையான விழிப்புணர்வு பெற்ற நிலைமைக்கு அப்பாற்பட்டு செயற்படுமானால், நாங்கள் போராடத்தான் வேண்டும். அதற்குப் பக்கபலமாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களும் நிற்கத்தான் வேண்டியிருக்கும்.

வெற்றி என்பது இன்று வருமா நாளை வருமா என்று கேட்டுக் கொண்டிருக்காமல், எப்படியும் வெல்வோம் என்ற நம்பிக்கையோடு அந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதுதான் எங்கள் பணி.

அதே நேரத்தில் இந்த சமாதானத்தால் மாற்றங்கள் ஏற்படுவதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இன்னும் செயற்பாடு ரீதியாக ஒன்றும் நடைபெறவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு சில இடங்களில் சிலவற்றைச் செய்யவேண்டிய நிலைமைக்கு சிங்கள அரசால் அவர்கள் தள்ளப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தினால் நாங்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. அதே நேரத்தில் அதற்காக அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் செயற்படவில்லை.

உலக அரசியலில் ஒரு பக்கமாகத்தான் எல்லாம் நடைபெறும். ஆனாலும் ஏதோ ஒரு கட்டத்திலே அவர்கள் இந்த சிங்கள அரசாங்கத்துடன் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைமைக்குத் தள்ளப்படலாம். அவர்களும் சில விடயங்களைப் பார்க்கிறார்கள்.

விடுதலைப் புலிகள், அடக்கப்பட வேண்டும். சிங்கள தேசம் ஏதாவதொரு தீர்வுத் திட்டத்தை அது உண்மையில் ஒரு போலியாக இருந்தாலும் அதனை முன்வைக்கும். அதற்கு ஊடாக ஏதாவது செய்வதுபோல் காட்டிக் கொள்ளலாம் என்பது போன்ற ஒரு போக்கை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை என்பது தெரியும். ஆக ஏதோ ஒரு கட்டத்தில் அனைத்துலகம் ஒட்டுமொத்தமாக இதிலிருந்து விலக வேண்டி வரலாம். ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டி வரலாம்.
ஆக்கப்பூர்வமாக செயற்படாது போனால், அவர்கள் தங்கள் சார்ந்த, தங்கள் விடயங்கள் சார்ந்து ஒரு தோல்வியை ஏற்கத்தான் வேண்டும்.

அதனை எவ்வளவு தூரம் ஏற்பார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் எதிர்மறையாக அவர்கள் செயற்படவில்லை என்ற ஒரு கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக நாங்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தாகும்.

ஒருவகையில் இந்தப் புலம்பெயர் வாழ் தமிழர்களுடைய வளர்ச்சி மூலம், அவர்கள் செய்கின்ற பண உதவியை அல்லது வேறு பல உதவிகளை நிறுத்துவதன் மூலம், புலிகளை செயலிழக்கச் செய்யலாம் என்று இந்த அனைத்துலக நாடுகள் நினைக்கின்றன. அந்த வகையிலே இந்தப் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு ஒரு அச்சுறுத்தலை தரத்தான் அதனைச் செய்கிறார்கள். புலம்பெயர் வாழ் மக்கள் ஒன்றை தெரிந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். அனைத்து நாடுகளும் பல சட்டதிட்டங்களை வைத்திருக்கின்றன. அதற்குள் பல ஓட்டைகளை வைத்திருக்கின்றன.

ஏனெனில் அவற்றின் மூலம் தாங்களும் தப்ப வேண்டும் என்பதற்காகவே அந்த ஓட்டைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. ஆக அனைத்துலக நாடுகளுடைய அந்த அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத்தான் புலம்பெயர் வாழ் தமிழர்கள் போராட்டங்களை நடத்த முடியும், சட்டத்திற்குள் நுழைந்து வர முடியும். இவர்களில் ஒருசிலரைப் பிடித்து விட்டார்கள் என்பதற்காக ஒதுங்கிப்போய் இருப்பதென்பது சரியான முறையல்ல.

ஏதோ வகையில் அந்த நாட்டுக்குரிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட அங்கு பெரிய போராட்டங்களை அவர்கள் நடத்த முடியும். தொடர்ந்து போராட்டங்கள் நடக்கும்போது, சில பிரச்சினைகள் வரலாம். சில வேளைகளில் சிலரைக் கைது செய்யலாம், அவர்களைச் சிறையில் அடைக்கலாம். அவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் மக்கள் போராடினால், அந்த நாட்டினுடைய கொடுமையான இந்த அடக்குமுறைகள் தோல்வி அடையும்.

ஒரு கட்டத்துக்கு மீறி ஓரளவுக்கு ஜனநாயகம், மனித உரிமைகள் இவற்றையெல்லாம் வெளிநாடுகளுக்குச் சொல்வதற்காக, தங்கள் மக்களுக்காக விட்டு வைக்கிறார்கள். இவையெல்லாம் தங்களைப் பாதிக்கிறது என்பதனை அந்தந்த நாட்டு மக்கள் உணரும்போது அவர்களும் எங்கள் போராட்டத்துடன் இணையத்தான் செய்வார்கள், எங்களுடன் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.

எனவே அங்கே, நாங்கள் எவ்வளவு உற்சாகமாக, உறுதியாக துணிந்து அந்த நாட்டினுடைய சட்ட திட்டங்களுக்கு ஊடாக, அவர்கள் அந்த நாட்டின் சட்ட திட்டங்களில் இருக்கின்ற ஓட்ட, உடைவுகளுக்கு ஊடாக அவர்கள், கூறுகின்ற சட்டங்களை உடைப்பதற்கான ஒரு முயற்சியை செய்வோமாக இருந்தோமானால் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். அதில் நாங்கள் தோற்க மாட்டோம்.

புலம்பெயர் வாழ் தமிழர்களின் முழுமையான செயற்பாடுகள் என்ன என்பதனை நான் முழுமையாக அறிந்துகொண்டவன் அல்ல.

கடமையுணர்வோடு பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து புலம்பெயர் வாழ் தமிழர்கள் கணிசமான பங்களிப்பை இடைப்பட்ட காலத்தில் செய்திருக்கிறார்கள் என்பதனை நாம் அறிவோம்.

ஆனால் அந்தப் பங்களிப்பையும் அந்த முயற்சியையும் தடுப்பதற்கான ஒரு முயற்சியைத்தான் அனைத்துலக அரசுகள் செய்கின்றன. புரப்புரைகளும் அந்த வகையிலேதான் சிங்கள அரசும் பலரும் செய்கின்றனர்.

புலம்பெயர் வாழ் தமிழர்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

அதாவது என்னவெனில், நாங்கள் உதவுவோம், தோற்றால் உதவமாட்டோம் என்ற மனநிலை இருக்கக் கூடாது.

நாங்கள் எவ்வளவுக்களவு சிக்கல்களை, சிரமங்களைச் சந்திக்கிறோமோ அந்த நேரத்தில்தான் அவர்கள் எங்களுடன் உறுதியாக இருக்க வேண்டும். இந்நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். அதில் தெளிவாக இருக்க வேண்டும்.

எங்களுக்குரிய பணி என்னவென்று சொன்னால் அங்கு போராடுகின்ற நோக்கம் இதுதான்.

எங்களுடைய குறிக்கோளில் தடம்புரண்டதில்லை. 20 ஆயிரத்துக்கும் மேலான போராளிகளை, பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்துக்காக உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த மண் மீட்கப்பட வேண்டுமானால், எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், எங்களால் இந்தப் போராட்டம் வலுவூட்டப்பட வேண்டும் என்பதிலே குழப்பம் அடையாமல், அனைத்துலகம் எந்த வகையில் தடைபோட்டாலும், அச்சுறுத்தினாலும், அதற்கு அப்பாற்பட்டு, பரப்புரைகள் எல்லாம் சரிகள் இருக்கலாம் பிழைகள் இருக்கலாம் அது வேறு விடயம். அவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, நாங்கள் ஒன்றுபட்டு நின்று இந்தப் போராட்டத்தில் நிச்சயமாக வெல்வோம் என்ற நம்பிக்கையோடு, இப்போது எந்த வகையில் அவர்கள் உதவி செய்தார்களோ, இப்போது சிலவேளை அச்சம் காரணமாக அவர்கள் ஒதுங்கியிருக்கலாம். ஆனால் அந்த ஒதுக்கத்திலிருந்து வெளியே வந்து அவர்கள் மீண்டும் எப்படி எங்களோடு நின்றார்களோ, அதுபோல எங்களுடன் இருப்பார்கள் என்றால், எங்களுக்கு நம்பிக்கை தரும். எங்களுடைய உளவுரணை கூட்டும். நாங்கள் பல விடயங்களை எளிதாகச் சாதிக்க உதவும்.

கூட்டு முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் தனிமனித முயற்சி என்பதும் முக்கியம் எனக் கருதுகிறேன். நாங்கள் கணினிகளைப் பயன்படுத்தலாம், தொலைக்காட்சியைப் பயன்படுத்தலாம், செய்தித்தாள்களைப் பயன்படுத்தலாம்....

ஆனால் உள்ளூரில் இருக்கின்றவர்கள் தங்களின் கருத்துக்களைச் சொல்லலாம்.

இங்கு நடக்கின்றன படுகொலைகளை, இங்கு நடைபெறும் கொடுமைகள், அனைத்துலக நாடுகள் அவற்றைக் கண்டும் காணாமல் இருக்கின்ற தன்மைகள், இவற்றையெல்லாம் துண்டுப் பிரசுரங்களாகவோ, கலந்துரையாடல்களாகவோ வெளியிட்டு அல்லது இதுபோன்ற வேறு வகையிலோ தொடர்ந்து செய்து கொண்டுதான் வர வேண்டும்.

பல நாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம், அல்லது மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களாக இருக்கலாம். அவர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் கலந்து உரையாடுவதும், அவர்களுடன் பண்பாடு ரீதியில், கலாச்சார ரீதியில் உறவுகளை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் இக்கருத்துக்களை முன்வைப்பதும், இப்படியாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.

இதனைப் பலர் சேர்ந்து செய்யலாம். அல்லது தனிமனிதராகவும் செய்ய முடியும்.

காசி அண்ணையை எடுத்துக்கொண்டால், ஈழவேந்தனை எடுத்துக் கொண்டால் அவர்கள் தனி மனிதர்கள்தான்.

அவர்கள் உலகம் எல்லாம் செல்கிறார்கள்.

இந்தியாவில் இருந்தபோது தமிழ்நாட்டில் பரப்புரை செய்தனர். ஈழவேந்தனை எடுத்துக்கொண்டால் உலகம் எல்லாம் செல்லும் இடங்களில் தன் கருத்துக்களை சொல்லி வருகிறார். அதில் இருக்கின்ற விடயம் என்வெனில், அது எந்தளவில் வெற்றியைக் கொடுக்கிறது என்பதும் முக்கியமல்ல.

நீங்கள் செய்ய வேண்டிய வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும். எல்லோருடனும் தொடர்பு கொண்டு, உறவாடி, நட்பை வளர்ப்பதுதான் முக்கியம். அந்த நட்பின் துணையோடு கருத்துக்களை வளர்ப்பது.

இதன் மூலம் எங்களுக்குரிய தொடர்பாடல்களை உருவாக்குவதும் முக்கியம்.

இத்தகைய தொடர்பாடல்களும், தொடர்புகளும், அவர்களின் மூலமாகக் கிடைக்கும் நட்பும்தான் பல போராட்டங்களின் தலைவிதியை தீர்மானித்துள்ளன.

ஆகவே அந்த முயற்சியிலேயே எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கணிசமான நேரத்தை ஒதுக்கிச் செயற்பட வேண்டும். அது பெரிய பயனைத் தரும்.

இங்கு நான் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். அங்கு எனென்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், என்னென்ன செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியாது. நாங்கள் சில விடயங்களைச் குறைவென்று சொல்லிவிடலாம்தான். ஆனால் அது பலருடைய மனதைப் புண்படுத்தக்கூடும். ஆகவே இதற்கு அப்பாற்பட்டு, இருக்கின்ற சிக்கல் என்னவெனில், பொதுவாக மனித இயல்பு எப்படிப்பட்டதென்றால், வெற்றிகளைக் கண்டு பூரிப்பதும், தோல்விகளைக் கண்டு துவளுவதும்தான். இந்த இயல்பு பொதுவானது.

இருந்தாலும் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்ற மனிதர்கள், இதனையெல்லாம் பொதுவாகப் பார்க்கின்ற மனிதர்கள், தெளிவான பார்வை உடையவர்களுக்கு நம்பிக்கையூட்டி, தொடர்ச்சியாக அவர்களது பங்களிப்புக்கு உற்சாகமூட்டி, தொடர்ந்து செயற்பட வேண்டிய சூழல்தான் இருக்கிறது.

அதாவது வெற்றியின்போது பலர் கூட இருப்பார்கள். தோல்வியின்போது ஒருவரும் உடன் இருக்கமாட்டார்கள். இதனைப் பலமுறை சந்தித்திருக்கிறோம்.

ஆக இப்படியான கால கட்டங்களில்தான் குறிப்பிட்ட சில மனிதர்களின் முயற்சி என்பது முக்கியமாகிறது.

இதற்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் தானே பொறுப்பேற்றுக்கொண்டு செயல்பட முன்வருவார்களேயானால், இங்கு பரப்புரை செய்பவர்களுக்கு பக்கபலமாக உதவியாக இருக்கும்.

ஊடகங்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய உணர்வை, தமிழரின் தொன்மையை, எங்களுடைய விடுதலைப் போராட்டத்தினுடைய ஆழமான அர்ப்பணிப்பு உணர்வை கேள்விக்குறியின்றி வெளியிட வேண்டும்.

இந்த விடயத்தில் அவர்கள் குழம்பிக் கொண்டிருக்கக் கூடாது. உதாரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டால், டி.பி.எஸ்.ஜெயராஜ் போன்றவர்கள் தங்களை நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொண்டு பல்வேறு விடயங்களை எழுதுவார்கள். ஆனால் சில விடயங்களில் இடறுவார்கள். அது முறையுமல்ல, சரியுமல்ல. அவரிடமும் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

அமெரிக்காவில் மனித விழுமியங்கள் என்று பேசுகிறார்கள் என்று சொன்னால், அது ஒரு பெரிய ஆலமரம். அந்த மரத்தின் ஒன்றிரண்டு கொப்புக்களை தட்டவிடுவார்கள். நாங்கள் இந்த ஆலமரத்தின் நிழலுக்குள்ளே உயிர்த்தெழுந்து வருகின்ற ஒரு சிறிய மரம். இதனை கொப்புத் தட்டுகின்ற வேலைகளை நீங்கள் பார்க்க வேண்டாம்.

அவர்கள் தட்ட விடுகிறார்கள் என்பது உண்மையில் அது பொய்மை. இதற்குள் சேரன் போன்றவர்கள் கூட ஒரு காலத்தில் அகப்பட்டுத்தான் கிடந்தார்கள். அவர்கள் பேசிய மனித விழுமியங்களை அவர்கள் கைவிட்டு விட்டு குவான்தம் பே அப்படி, இப்படி சிறைக்கைதிகள் மீது சித்ரவதை என்பதெல்லாம் இன்று வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. இது இன்று நடக்கின்ற விடயமில்லை. காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் விடயம்தான். ஆனாலும் இவர்கள் அள்ளுப் போகின்ற தன்மையொன்று உண்டு.

இவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், உலக அரசியல் என்பது, அரசு என்பது தன்னலம் சார்ந்தே செயற்படும்.

தமிழர்களைப் பொறுத்தவரையில், எங்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், நியாயமான சில குறைபாடுகள் இருக்கலாம். அதனை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் போராட்டத்துக்குப் பின்னால் முழுமையான அர்ப்பணிப்போடு, அந்தப் போராட்டத்தினுடைய சரியான விடயங்களை தெளிவாகச் சொல்லிக் கொண்டு வந்தாலே போதும்.

அதில் இடையிடையே குழப்பம் இருக்கத் தேவையில்லை. இதில் நடுநிலைமை என்று ஒன்றில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களுக்கு எதிராக உலக அரசாங்கம் மட்டுமல்ல, சிங்கள அரசாங்கம் மட்டுமல்ல, பல்வேறு சிறுசிறு குழுக்களும் பரப்புரை செய்கின்றன.

நாங்கள் ஒன்றுபட்டு நிற்போமேயானால் அவர்களுடைய பரப்புரைகள் எல்லாம் தோல்வியடைந்து எங்களுடைய பரப்புரைகள் வெற்றி பெறும். இதில் நாங்கள் தெளிவாக இருந்தால் போதும். அதனைத்தான் நாங்கள் சொல்ல முடியும்.

இந்தியா

இந்திய அரசைப் பொறுத்த வரையில் அந்த அரசினுடைய அதிகார வர்க்கங்கள் சில தமிழர்கள் என்றாலே ஒருவித பகைமை உணர்வைக் கொண்டிருக்கின்றன. அண்மையில் 'றோ'வின் தலைவராக இருந்த வர்மா கூட அதனை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இந்திய அரசியலில் குறிப்பிட்ட சிலர், ஆழமாக திட்டமிட்டு அரசியல் செய்கிறார்களா என்பதற்கு அப்பாற்பட்டு, தமிழர்கள் என்றாலே ஒருவித பகைமை உணர்வு அவர்களிடம் இருக்கிறது. அதற்குக் காரணம் இந்தியாவின் தொன்மையான நாகரிகத்திற்கு சொந்தக்காரர்கள் திராவிடர்கள் என்று சொல்லப்பட்டாலும், அதன் மூல நாயகர்கள் தமிழர்கள்தான். இதனை இந்தியாவின் இன்றயை வரலாற்றை எழுதக்கூடிய பலர் ஏற்றுக்கொண்ட விடயம்.

இலங்கையில் உள்ள சிக்கலைப் போன்று அங்கே பலருக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன.

அந்தச் சிக்கல்களுக்குள்ளே தமிழர்கள் குறித்த பல விடயங்கள் இருக்கின்றன. இதன் மூலமாக பல பிரச்சினைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால்கூட எங்களைப் பற்றி, அங்குள்ள ஊடகங்களினூடாக பல பொய்யான கருத்துக்களை உருவாக்கி, ஒரு பிரச்சினை என்றால், அதைப் பெரிதுபடுத்தி பூதாகரமாகக் காட்டுகிறார்கள். அங்குள்ள ஊடகங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை.

இதில் முக்கியமான இன்னொரு அம்சம் என்னவெனில், சிங்கள அரசின் போக்கு, இந்தியர்களுக்கு எதிரானது என்பதனை இந்தியாவில் உள்ள பலர் இப்போது சுட்டிக்காட்டுகிறார்கள்.

இன்று இந்தியா, அமெரிக்காவுடன் இணக்கமான ஒரு போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஆனால் சிங்கள அரசாங்கத்தின் செயற்பாடுகள் எல்லாம் ஏதோ ஒருவகையிலே, இந்திய நலனுக்கு எதிரானது என்பதனை இவ்வளவு காலமாக சுட்டிக்காட்டாதவர்கள் கூட அண்மைக்காலமாக சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஆக, இந்திய அரசாங்கத்தின் போக்கிலே ஒரு மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதன் நலன் சார்ந்து கூட இந்த மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையில் அந்த அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை. அவ்வாறு செயற்படுவதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் காணவில்லை. எனினும், அண்மைக்காலமாக பல ஆய்வாளர்கள், எங்களோடு பேச்சு நடத்தியவர்களுடன் தொடர்புடையவர்கள், எங்களைப் பற்றி கடுமையான கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களும் கூட, எங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்று சிங்கள அரசின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கும்போது அது இந்திய நலனுக்கு உகந்ததாக அமையவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

காலப்போக்கில் அவர்கள் சிங்கள அரசாங்கத்துக்கு ஆதரவு என்ற நிலையிலிருந்து மாறி, நடுநிலைமை வகித்தால் அதுவே எங்களுக்குப் போதுமானதுதான். இது நடைபெறுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்பட வேண்டும்.

ஏனெனில் இந்தியாவுடன் உறவு ஏற்பட்டால்தான் உலக நாடுகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். அதற்கான முயற்சிகளோடும் நம்பிக்கையோடும் நாங்கள் இருக்கிறோம்.

இன்று அதுமாதிரியான சூழ்நிலை இல்லை என்றாலும், இருந்தாலும் நாங்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அங்கு பல சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் உறுதியாக சில முடிவுகளை எடுத்தால், அவர்கள் உறுதியாக ஒரு செயற்பாட்டுக்கு வந்தால், மத்திய அரசால் ஒன்றும் செய்ய இயலாது. நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.

அவரவர்க்கு பல அரசியல் நிர்பந்தங்கள் இருக்கலாம். ஆனால் இங்கே நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். சிங்கள அரசாங்கம் தமிழர்களை அடியோடு அழிப்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது என்பது தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் தெரியும்.

எனவே அவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் ஆங்காங்கே எங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத்தான் செய்கிறார்கள். ஒருமித்த குரலாக எங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும்போது இந்தியாவின் மத்திய அரசும் மாறுவதனைத் தவிர வேறு வழியில்லை. இந்திய மத்திய அரசுக்கு அங்குள்ள மக்கள் தரும் அழுத்தம் தவிர இந்திய அரசும் தனது நலன் கருதி மாற வேண்டிய சூழ்நிலையும் வரும்.

முன்பே சொன்னதுபோல இது நடக்குமா நடக்காதா என்று பார்ப்பது எங்கள் வேலை அல்ல. எங்களுடைய பணி என்பது எங்களுக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதுதான். காலமும் சூழலும் வருகின்றபோது, அனைத்தும் தானாகக் கனியும் என்ற நம்பிக்கையுடன் போராடுவோமே தவிர, வேறு ஒரு வழியும் இல்லை.

நான் முன்பே சொன்னதுபோல இந்த விடயங்கள் குறித்து ஆழமாக விவாதிக்கின்ற போது பல சிக்கல்கள் ஏற்படும்.

இன்று தமிழகத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடியவர்கள் குரல் கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆங்காங்கே எங்கள் சார்பாக போராட்டங்களை நடத்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எங்களுக்குள்ள ஒரு கவலை என்னவென்று சொன்னால், இராமதாசாக இருந்தாலும் சரி, நெடுமாறன் ஐயாவாக இருந்தாலும் சரி, வைகோவாக இருந்தாலும் சரி, திருமாவளவனாக இருந்தாலும் சரி, தனித்தனியாக அல்லாமல் இவர்கள் எல்லோரும் ஈழத் தமிழர்கள் விடயங்கத்தில் ஒருங்கிணைந்து, ஒன்றிணைந்த குரலாக செயற்படுவார்களேயானால், மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். அந்தக் காலத்தை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கிறோம்.

இந்தியாவின் அனுசரணை என்பதல்ல முக்கியம். இதில் பிரச்னை என்னவென்று சொன்னால், தனிநாடு என்கிற அங்கீகாரம் வருகின்றன போது, உலக நாடுகளின் அங்கீகாரம் என்று வருகின்ற போது, இந்திய அரசின் கருத்தையும் உலக நாடுகள் கேட்கும். ஆனால் அது ஒரு நிலை.

எங்களைப் பொறுத்தவரையில் இந்திய அரசு அனுசரணை செய்துதான் நாங்கள் போராட்டத்தை வெல்வோம் என்றில்லை.

புலம்பெயர்வாழ் தமிழர்கள், உலகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் எல்லாம் தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், யார் உதவியும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். அதற்குரிய நம்பிக்கையும் உறுதியும் அர்ப்பணிப்பும் எங்கள் மண்ணில் உள்ள போராளிகளிடம் உண்டு. அதனை வழிநடத்துகின்ற தலைவரிடம் உண்டு.

எனவே உலகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு இருப்பார்களேயானால் யாருடைய அனுசரணையும் எமக்கு தேவையில்லை.

ஆனால் தனிநாடு என்று வருகின்றபோது இவர்களுடைய ஆதரவு நிலை தேவைதான். ஆக அத்தகைய களச்சூழல் வரும்போது, ஆதரவு நிலையும் வரும். இந்த நம்பிக்கையுண்டு.

இங்கே இந்தப் புலம்பெயர்ந்த நாடுகளில் எப்படி அந்த அரசுகளுடன் உறவு ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதுபோல தமிழகத்தில் இருப்பவர்களோடும், இந்திய அரசியலில் இருப்பவர்களோடும், டில்லியில் உள்ள அமைப்புக்களோடும் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய பணி புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு. அவர்கள் செய்கின்ற பல பணிகளில் இதுவும் ஒன்று.

ஆனால் இந்தியா அனுசரணை இருந்தால்தான் இந்தப் போராட்டம் நடக்கும், வெற்றி பெறும் என்று நினைத்துப் போராட முடியாது.

நாங்கள் இவ்வளவு காலம் இப்படியான ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம். தமிழ் மக்கள் எங்களுடன் ஒன்றாக இருந்தாலே போதும். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பொருளில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இதில் இருந்த விடயம் என்னவெனில், மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்லது குழுக்களைச் சார்ந்தவர்கள் யாராவது அங்கே பேசிக் கொண்டிருப்பார்கள். அங்கே இருந்து கொண்டு அரசின் வாய்ப்பு வளங்களைப் பயன்படுத்திக் கொண்டு எங்களுக்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள். இது அரசினுடைய வாய்ப்பு வளங்களைப் பயன்படுத்திக்கொண்டு எங்கள் சார்பான நடவடிக்கைகளை இவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். அது பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கிறதா இல்லையா என்பது வேறு விடயம்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் இவர்களுக்கு அப்பாற்பட்டு, இந்தப் போராட்டத்தில் புலிகளுக்குச் சார்பாக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பக்கூடிய அளவுக்கு அந்த இயக்கம் பலமாக இருக்கின்றது என்ற வகையில், ஒரு கருத்தியல் உருவாக்குவதில் அது சார்பாக இருக்கிறது.

அரசியல் என்பது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நடப்பதில்லை. அதற்கென சில வளைவு, நெளிவு, சுழிவுகளும் உண்டு. இந்த வளைவு, நெளிவு சுழிவுகளுக்குள் பாதை மாறாமல், எங்கள் இலக்கை நோக்கிச் சென்றால் சரி. அந்த வகையில் இதில் கிடைக்கின்ற வளங்களை எதிரிகள் பயன்படுத்துவதனை தடுக்க வேண்டும். அதற்கு ஊடாக வருகின்ற சில சாதகமான நிலைகளை பெற்றுக்கொள்வதனைத்தவிர தவிர வேறு எதற்கும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும்.

எங்களை அடக்குகின்றவர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆற்றல் உள்ளவர்கள் எங்கள் மீது அடக்குமுறைகளைப் பயன்படுத்தினாலும் சரி, நாங்கள் போராடுவோம்.

எங்கள் மண்ணை மீட்கின்ற வரை எங்கள் போராட்டம் தொடரும். அந்தப் போராட்டத்தை நாங்கள் நிச்சயமாக மிகுந்த அர்ப்பணிப்போடு நடத்துவோம். இதனைச் சொல்கின்ற அதேவேளையில், இத்தகைய அர்ப்பணிப்புடன் இங்கே போராடும் போராளிகளுக்கு அதனை வழிநடத்துகின்ற தலைவருக்கு உறுதுணையாக பக்கபலமாக பல வழிகளிலும் இந்தப் புலம்பெயர் வாழ் தமிழர்கள் மன வேறுபாடுகளை, தனிப்பட்ட கோப-தாபங்களை, பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு, தமிழர்களுக்கு ஒருநாடு வேண்டும் என்ற உணர்வோடு, ஒன்றுபட்டு நின்றால், நிற்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையும் வேண்டுதலும் ஆகும் என்றார் யோகி.
நன்றி>புதினம்.

Saturday, September 15, 2007

தமிழக எழுச்சி கண்டு பெருமை கொள்கிறது தமிழீழ தேசம்!!!


யாழ். மக்களுக்காக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலை மேற்கொண்டமையும் அதனைத் தொடர்ந்து தமிழகம் எழுச்சி கொண்டிருந்தமையும் குறித்து தமிழீழ தேசம் பெருமையும் நிறைவும் கொள்கிறது என்று திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.


பழ.நெடுமாறனுக்கு திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை தலைவர் வே.இரத்தினசிங்கம் அனுப்பியுள்ள கடித விபரம்:

சிறிலங்கா இராணுவ முற்றிகைக்குள்ளாகி பசியாலும் பட்டினியாலும் நோயாலும் அவலப்படும் யாழ். குடாநாட்டின் தமிழ் உறவுகளுக்கு ஓடிவந்து உதவத்துடிக்கும் தங்களது உணர்வுகளையும், தமிழக உறவுகளின் உணர்வலைகளையும் கண்டு பெருமைகொள்கிறது தமிழீழ தேசம்.

யாழ். குடாநாட்டின் பாதைகளை இறுக மூடி பல இலட்சம் மக்களுக்கான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்து அம்மக்களினை பட்டினிச் சாவிற்குள்ளாக்கி தனது இராணுவ மேலாதிக்கத்தை நிறுவ முற்படுகிறது சிறிலங்கா.

சிறிலங்கா அரசின் இரக்கமற்ற இனவாதக் கொடூரத்திற்கு ஆளாகி துயரப்பட்ட மக்களின் துயர்துடைக்க தமிழக உறவுகளிடம் சேகரிக்கப்பட்ட உணவு, மற்றும் மருந்துப்பொருட்களை செஞ்சிலுவைச்சங்கத்தின் மூலம் யாழ். குடாநாட்டு மக்களுக்கு கொடுத்துதவ எடுத்த முயற்சிகளெல்லாம் பலனற்றுப்போனதால் உயிராபத்தையும் பொருட்படுத்தாது படகுகள் மூலம் நேரடியாகக் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொண்டீர்கள். இந்திய அரசு தடுத்த நிலையில் சாகும் வரை உண்ணா நோன்பை தொடங்கினீர்கள்.

இச்செய்தியைக் கேட்டபோது இருபது ஆண்டுகளுக்குமுன் தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன், மக்களின் இயல்பு வாழ்வுக்கான ஜந்து அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து இந்திய அரசின் பாராமுகத்தினால் தியாகச் சாவைத் தழுவிக்கொண்டமைதான் நினைவுக்கு வந்தது.

திலீபனின் நினைவு நாளிலே யாழ். குடாநாட்டு மக்களின் பசி அடங்கவேண்டும் என்பதற்காக உணவைக் கொண்டுவர அதே இந்திய அரசு தடுத்தபோது நீங்கள் உங்கள் வயிற்றில் பசியை வளர்க்கத் தொடங்கினீர்.

இந்த வேள்வித் தீ தமிழகத்தின் நெஞ்சங்களிலெல்லாம் கொழுந்து விட்டெரியத் தொடங்கிவிட்டது என்ற செய்தியை அறியும்போது நீண்ட காலமாக சிங்களத்தின் இனவாத நெருப்புக்குள் நின்று போராடும் எங்களுக்கு இச்செய்தி புதிய உட்வேகத்தை ஊட்டி நிற்கிறது.

நாங்கள் தனித்து விடப்பட்ட இனமல்ல. எங்களுக்கு பக்க பலமாக தமிழகத் தொப்புள்கொடி உறவுகள் கட்சி பேதங்களை மறந்து தமிழன் என்ற ஒரே உறவுணர்வுடன் எழுச்சிகொண்டிருப்பது கண்டு நிறைவடைகிறோம்.

உங்கள் உணர்வுகளுடன் எங்கள் இலட்சியப்பயணத்தை நாங்கள் தொடர்கிறோம்.

வேரும் விழுதுமாக நின்று விடுதலையை வென்றெடுப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Monday, September 10, 2007

எமது நிர்வாகப் பகுதிகளை ஐ.நா. மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையிட வேண்டும்: புலிகள் வலியுறுத்தல்!!!

சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தருகின்ற போது தமிழர் தாயகப் பிரதேசத்துக்கும் வருகை தந்து யதார்த்த நிலைமைகளை அறிய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை செல்வி வெளியிட்ட அறிக்கை:

தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களை பல தசாப்தகாலங்களாக சிறிலங்காவானது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலைகள், கடத்தல்கள், எறிகணைத் தாக்குதல்கள், வான்குண்டுத் தாக்குதல்கள், கிளைமோர் தாக்குதல்கள், கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறிலங்கா அரச தலைவராக கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், அனைத்து வகையான மனித உரிமை மீறல்கள், தாக்குதல்கள், அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் அதிகரித்தன.

கடந்த 21 மாத காலத்தில் சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் 1,974 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதே குழுவினரால் 842 பேர் கடத்தப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையினாலும் இதர அமைப்புகளாலும் இக்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் சிறிலங்கா அரசாங்கம் தனது தவறுகளை திருத்துவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

தமிழர் தாயகத்தில் தங்களது சொந்த வீடுகளில் வாழும் மக்கள் கூட பொருளாதாரத் தடைகளாலும் ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டமையாலும் பெருந்துயருக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தமிழர் தாயகத்தின் மீதான சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலினால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாக இடம்பெயர் நேரிட்டுள்ளது. இதனால் சிறார்களின் கல்விச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய செயற்பாடுகளை அப்படியே கைவிட்டு திடீரென இடம்பெயர்வதால் சொத்து இழப்பும் ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்துள்ள பலரும் அடிப்படை வசதிகளற்ற நலன்புரி மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்குப் பிரதேசத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பகுதியில் இடம்பெயர்ந்தோர் வலுவில் மீள்குடியேற்றத்துக்குள்ளாக்கப்படுகின்றனர். இடம்பெயர்ந்த மக்களை தங்களது சொந்த வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. அந்த மக்கள் பிளாஸ்டிக் கொட்டகைகளில்தான் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அங்கு குடிநீரோ கழிப்பிட வசதிகளோ ஏதுமில்லை.

மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பகுதிகள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு அந்தப் பிரதேச மக்கள் காலங் காலமாக பாரம்பரியாக வாழ்ந்த அப்பிரதேசங்களில் வாழ அனுமதிக்கப்படவில்லை.

கொல்லப்பட்டோர் விபரம்:

திருகோணமலை - 277

மன்னார் - 122

யாழ்ப்பாணம் - 607

மட்டக்களப்பு- 577

முல்லைத்தீவு - 74

அம்பாறை - 70

வவுனியா - 243

கிளிநொச்சி- 04

காணாமல் போதல்கள்:

திருமலை- 30

மன்னார் - 45

யாழ்ப்பாணம் - 624

மட்டக்களப்பு - 102

முல்லைத்தீவு - 04

அம்பாறை - 13

வவுனியா- 24

இதே காலப் பகுதியில் 16 வயதுக்கும் குறைந்த 69 சிறார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

150-க்கும் மேற்பட்ட சிறார்கள், யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் பாதுகாப்பு கோரி சரணடைந்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் 45-க்கும் மேற்பட்ட மனிதாபிமான பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 11 ஊடகப் பணியாளர்களும் 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவை குறித்த விரிவான தகவல்கள் இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தங்களது சட்டபூர்வமான உரிமைகளுக்காக 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். தமிழ் மக்களின் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலே ஒவ்வொரு சிங்கள அரசாங்கங்களும் செயற்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் உரிமை சரத்தின்படி சுயநிர்ணய உரிமைக்காக தமிழ் மக்கள் போராடி வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, வவுனியாவில் பாரிய மனித உரிமை மீறல்களிலும் அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்களிலும் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் மேற்கொள்ளப்படும் இந்த வன்முறைகளை விடுதலைப் புலிகளின் பெயரினால் மூடி மறைக்க முயற்சிக்கிறது.

தமிழர் தாயகத்தின் இந்த யதார்த்த நிலைமையை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தருகின்றபோது தமிழர் தாயகப் பிரதேசத்துக்கும் வருகை தந்து யதார்த்த நிலைமைகளை அறிய வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வேண்டுகோள் விடுக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர்,

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தொடர்பிலான சிறப்பு பிரதிநிதி மான்ப்ரெட் நோவக்

இடம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரின் பிரதிநிதி வால்டெல் கொலின் ஆகியோர் எதிர்வரும் ஒக்ரோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் போது எமது நிர்வாக தமிழர் தாயகப் பகுதிகளை புறக்கணிக்காமல் இருப்பார்கள் என்று நாம் நம்புகிறோம் என்று அதில் செல்வி தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

Saturday, September 08, 2007

விடுதலைப் புலிகளை பலவீனமடையச் செய்த பின்னரே அரசியல் தீர்வு: இந்தியாவிற்கு சிறிலங்கா அறிவிப்பு!!!

போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்த பிறகே வடக்கு - கிழக்குப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக இந்தியாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பின் வார இறுதி சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஆகியோரைக் கொண்ட உயர்மட்ட அரச தூதுக்குழுவொன்று அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமரின் செயலாளர் நாயர் ஆகியோரைச் சந்தித்த சிறிலங்கா தூதுக்குழுவினர் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதித் தீர்வினைத் தயாரிக்கும் போது தென்பகுதி மக்களினால் அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டிருக்கும் அரசாங்க தூதுக்குழுவினர், எவ்வாறாயினும் நியாயமான சமமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தீர்மானம் குறித்து இந்திய அரசாங்கம் இணக்கத்தைக் காண்பிக்கவில்லை என இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டினால் தமிழ்நாட்டிலிருந்து இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படலாம் என இந்தியத் தரப்பினரால் சிறிலங்கா தூதுக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம்மாத இறுதியில் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சிறிலங்காவின் நிலைப்பாடு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்பது குறித்து இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அந்த நாளேட்டின் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி>புதினம்.

Thursday, September 06, 2007

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தை சிறிலங்காவுக்கு எதிராக பயன்படுத்தவும்: அனைத்துலக மன்னிப்புச் சபை அழைப்பு!

சிறிலங்காவில் மிக வேகமாக மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் ஆறாவது கூட்டத்தொடரை பயன்படுத்துமாறு அதன் உறுப்பு நாடுகளுக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.


இது தொடர்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04.09.07) அனைத்துலக மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை:

சிறிலங்காவில் நடைபெறும் சம்பவங்களில் பொதுமக்கள் மோதல்களுக்கு இடையில் சிக்கி பாதிப்படைவதை விட திட்டமிட்ட முறையில் அரச படையினராலும், அதன் துணை இராணுவக் குழுவினராலும், விடுதலைப் புலிகளினாலும் குறிவைக்கப்படுகின்றனர் என்பது மிகுந்த வேதனையை தருகின்றது.

சிறிலங்கா அரசிற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அரசின் கருத்துக்களை முன்வைப்பதற்காக சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான அரச குழுவினர் இந்த கூட்டத்தொடரில் பங்குபற்ற உள்ளனர்.

பொதுமக்கள் மீது சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நீதிக்கு புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் என்பன அங்கு நாளாந்த நடவடிக்கையாகி விட்டது. பல நுற்றுக்கணக்கான நீதிக்கு புறம்பான படுகொலைகளும், பல நூற்றுக்கணக்கான பலவந்தமாக காணாமல் போகச் செய்தல்களும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் பதிவாகி உள்ளன.

பொதுமக்களை பாதுகாப்பதற்கான விரைவான நடவடிக்கை தேவை. 2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து நடைபெற்று வரும் மோதல்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வார இறுதியில் மன்னாரில் இரு சிறுவர்கள் உட்பட 9 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அண்மைய நாட்களில் 4,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளினால் ஏறத்தாழ 290,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களும் பெண்களுமாவார். பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிக்கான வழிகளும் கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் இருந்து 30-க்கும் மேற்பட்ட உதவி நிறுவன பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான நிறுவனங்களின் பணியாளர்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடுவதற்காக அரசின் மீது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கு காரணமானவர்கள் மீதான விசாரணைகளையும் அதற்கான ஒத்துழைப்புக்களையும் அரசு செயற்திறன் மிக்க வகையில் மேற்கொள்வதில்லை.

வடக்கு - கிழக்கில் உள்ள மக்களுக்கான உணவு விநியோகங்களை உறுதி செய்தல் மற்றும் மனிதாபிமான உதவி நிறுவனங்களுகளின் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குதல் என்பவற்றை அதிகார தரப்பு மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களால் இடம்பெயர்ந்த மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். அரசின் அவசரகாலச் சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள் தொடர்பாக நாம் எமது கவலைகளை பல வருடங்களாக மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றோம். இந்த சரத்துக்கள் தவறுகளையும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதிகளவான தடைகளையும் ஏற்படுத்தும் வண்ணம் அச்சுறுத்தலானவை.

படையினரை பயன்படுத்தவும், பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அற்ற நிலையிலும் ஒருவரை தடுத்து வைக்கவும் இந்த புதிய நடைமுறைகள் அரசிற்கு அனுமதியை வழங்கியுள்ளது.

உதாரணமாக அவசரகாலச் சட்ட விதிகளில் உள்ள 6 ஆவது சரத்தில் பயங்கரவாதம் மட்டுமல்லாது, குறிப்பிட்ட பயங்கரவாத செயற்பாடுகள், மேலும் பயங்கரவாதம் தொடர்பான செயற்பாடுகள், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர், குழு அல்லது குழுவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் 7 ஆவது சரத்து ஏனையவற்றை குறிப்பிடுகின்றது. அதாவது ஊக்குவித்தல், ஆதரவளித்தல், ஆலோசனை வழங்குதல், உதவி புரிதல், சார்பாக செயற்படுதல், திட்டமிடல், செயற்பாடுகளில் அல்லது நிகழ்வுகளில் பங்குபற்றுதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர். குழுவினர். அமைப்புக்கள் ஆறாவது சரத்தை மீறியதாக கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள பல சரத்துக்கள் மிகவும் தெளிவற்ற முறையிலும், பொதுவாகவும் வரையப்பட்டுள்ளன. எனவே அவற்றை ஊடக விசாரணைகள், அறிக்கைகள் போன்ற பரந்த அளவிலான செயற்பாடுகள் மீது பிரயோகிக்கப்பட முடியும். சட்டத்திற்கு முரணான இந்த அணுகுமுறைகள் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்படுவதை இட்டு எமது அமைப்பு கவலை அடைகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Wednesday, September 05, 2007

அம்பாறையில் முஸ்லிம்களின் வீடுகளுக்கு சிங்களக் காடையர் தீ வைப்பு!!!

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட அஸ்ரப் கிராமத்திற்குள் புகுந்த சிங்களக் காடையர்கள், முஸ்லிம் மக்களின் 12-க்கும் அதிகமான வீடுகளை அடித்து நொருக்கி, தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.


கூரிய ஆயுதங்களுடனும், நெருப்புப் பந்தங்களுடனும் புறப்பட்ட சிங்களக் காடையர் கூட்டமொன்று, பள்ளக்காடு ஒலுவில எல்லைப் புறங்களுடாக அத்துமீறிப் பிரவேசித்து, அஸ்ரப் கிராமத்தை அடைந்தது.

நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் நுழைந்த இந்த சிங்களக் காடையர் கூட்டம், அங்கிருந்த வீடுகளில் தங்கியிருந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாகக் கலைத்த பின்னர், அந்த வீடுகளிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், வீடுகளுக்கும் தீ வைத்தனர்.

அப்பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள், அப்பகுதி அரசசார்பற்ற உதவி நிறுவனங்களிடம், தற்காலிக பாதுகாப்பும் அவசர உதவிகளும் தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். அஸ்ரப் கிராமம் அமைந்துள்ள பகுதி, பௌத்த சிங்களவர்களுக்கான புனித பூமி என்று கூறிய அந்தக் காடையர்கள், அங்கு முஸ்லிம்கள் யாரும் வாழ்வதற்கு அனுமதியில்லை என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

பாதுகாப்புக் கடமையிலிருந்த அக்கரைப்பற்று காவல்துறையினர், விசாரணைகளை தாம் ஆரம்பித்திருப்பதாகக் தெரிவித்துள்ள போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Monday, September 03, 2007

விடுதலைப் புலிகளுக்கு எரித்தேரியா உதவி - அமெரிக்க செனற் சபை குற்றச்சாட்டு!!!




தமிழீழ விடுலைப் புலிகளுக்கு எத்திரியா அரசாங்கம் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க செனற் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கம் ஆயுதக்குழுக்கு உதவிகளை வழங்குவது ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்றும் இவ்வாறான செயற்திட்டங்களை எத்திரியா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமெரிக்க செனற் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளில் உறுப்பினராகவுள்ள ஒரு நாட்டிற்கு எதிராக செயற்படும் ஆயுதக்குழு ஒன்றிற்கு, ஐக்கிய நாடுகளில் உறுப்பினராகவுள்ள நாடொன்று ஆயுதங்களை வழங்குவதாகவும் அமெரிக்க செனற் வெளியுறவுக்குழு குறிப்பிட்டுள்ளது.

எத்திரியா இத்தாலிய காலணித்துவ நாடாகும், 1941ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ஆட்சிக்குள் இந்நாடு கொண்டுவரப்பட்டது.

1952ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தின்படி எத்திரியா சுயாட்சி கொண்ட எத்தியோப்பாவின் ஒரு பிராந்தியாமாக கொண்டுவரப்பட்டது.

நீண்டகால போராட்டத்திற்கு பின்னர் 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் எத்திரியா தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட இந்த நாட்டு அரசாங்கமே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்க செனற் சபை குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



1993 ஆம் ஆண்டு எரித்திரியா என்கின்ற தனிநாடு முழுமையான இராணுவ பலம் மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.

இன்று எங்களிடம் எங்களுடைய தாய் மண்ணின் மூன்றில் ஒரு பகுதி முழுமையான நிர்வாகப் பகுதியாக இருக்கின்றது. ஆனால் எரித்திரிய விடுதலைப் போராளிகள் தங்களுடைய நிலத்தை அதாவது முழுமையாக மீட்பதற்கான அந்தக் கடைசித் தாக்குதலை மேற்கொண்ட போது மிகச் சிறிய நிலப்பரப்புத் தான் அவர்களுடைய கைவசம் இருந்தது.

அந்த மிகச் சிறிய நிலப்பரப்பிலிருந்து தங்களுடைய நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவருடைய பலத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய தாய் மண் முழுமையையும் மீட்டனர். தங்களுடைய தாய் மண்ணை ஆக்கிரமித்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் எதிரிப் படைகளைச் சிறைப் பிடித்தனர்.

அவர்களுடைய பல நூற்றுக்கணக்கான டாங்கிகள் ஆட்டிலறிகள் மிகப் பெரும் போர்க் கலங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

இது 93 ஆம் ஆண்டு நடந்த வரலாறு.

எரித்திரியா 93 ஆம் ஆண்டு தங்களுடைய நிலப்பரப்பு முழுமையையும் மீட்டு தாங்கள் ஓர் தனியரசு என்று அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்.

அப்போது ஐ.நா.வில் ஒரு பிரச்சினை எழுந்தது. இதனை அங்கீகரிப்பதா இல்லையா என்று. அப்போது எரித்திய மக்கள் அனைவரிடமும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எரித்தியா தனிநாடாகப் போக வேண்டுமா இல்லையா என்பது. நீங்களே தீர்மானியுங்கள் என்று.

எரித்திய மக்கள் நாங்கள் தனிநாடாகத் தான் இருக்க விரும்புகின்றோம் என்று வாக்களித்தார்கள்.

எரித்தியா என்கின்ற தனிநாடு உருவானது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானொலியான புலிகளின் குரலின் செய்தி ஆசிரியர் தி.இறைவன் அவர்கள்
முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் அவர் பேசியவை
நன்றி>யாழ்.கொம்

புலிகளின் முற்றுகையில் சிக்கியிருக்கும் யாழ். சிறிலங்கா இராணுவம்: "லக்பிம"



பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பலாலி சிறிலங்கா வான்படை தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் செயலிழக்கச் செய்தால் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் ஒரு முற்றுகைக்குள் சிக்க நேரிடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவித்துள்ளது.
அந்த இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூர்ய எழுதிய பத்தியின் தமிழ் வடிவம்:

யாழ்குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத் மீது கடந்த 21 ஆம் நாள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 130 மி.மீ நீண்டதூர பீரங்கித் தாக்குதல் குறித்து சிறிய சந்தேகம் இருந்தாலும், அது விடுதலைப் புலிகள் பூநகரிப் பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதற்கான ஆதாரமாகும்.

யாழ். குடாநாட்டின் மீதான பெரும் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகள் பூநகரிப் பகுதியில் கனரக ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் சேமித்து வருகின்றனர் என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த பல வாரங்களாக பூநகரிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுவதுடன், தொடர்ச்சியாக கனரக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் நகர்த்தல்களும் அங்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் இந்த பலப்படுத்தல்களை நோக்கும் போது அவர்கள் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாகர்கோவில், முகமாலை, எழுதுமட்டுவாள் பகுதிகளில் மேற்கொண்டதைப் போன்று மீண்டும் ஒரு தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் கனரக வாகனங்கள் மட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. எனவே அவர்கள் தாக்குதல்களுக்கான தயார்படுத்தல்களின் போதே கனரக ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கள முன்னணி நிலைகளுக்கு நகர்த்தி அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள ஆயுதக் கிடங்குகளிலும், பீரங்கி நிலைகளிலும் பாதுகாத்து வருகின்றனர். இது விரைவான நகர்த்தும் திறனை அதிகரிக்கும் உத்தியாகும்.
ஆயுதங்களை நகர்த்துவதற்காக அதிக போராளிகளை பயன்படுத்துதல், வான் தாக்குதல்களில் இருந்து அவற்றை காப்பாற்றுதல் போன்றவற்றிற்காக விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கும் உத்தியுமாகும்.

ஆனையிறவு மீதான "ஓயாத அலைகள் - 03" மூன்று தாக்குதலின் போதும் விடுதலைப் புலிகள் தமது படையினரை செறிவாக்குவதை தவிர்த்திருந்தனர். இது முன்னைய பெரும் சமர்களில் எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளின் தாக்குதலினால் ஏற்பட்ட இழப்புக்களை போன்ற சேதங்களை தவிர்க்கும் முயற்சியாகும்.

களமுன்னணி நிலைகளுக்கு அண்மையாக விநியோகங்களை அவர்கள் நகர்த்திவிட்டால், தாக்குதல் துப்பாக்கிகள், இலகு இயந்திர துப்பாக்கிகள், ஆர்.பி.ஜிக்கள் போன்றவற்றை களமுனைகளுக்கு பின்னர் நகர்த்துவது அவர்களுக்கு இலகுவாக இருக்கும்.
தமது போராளிகளை விரைவாக நகர்த்துவதில் விடுதலைப் புலிகள் ஏனைய கெரில்லாக் குழுவினரை விட மிகவும் சிறந்தவர்கள் என்பது வெளிப்படை.
கிளிநொச்சியில் உள்ள தமது பின்னிருக்கைப் போராளிகளை இரு புறமும் உள்ள களமுனைகளுக்கு நகர்த்துவதில் அவர்களுக்கு அதிக நேரம் எடுக்காது.
வடபோர்முனையில் உள்ள படையினர் மீதான தாக்குதல்களின் போது பூநகரியே பிரதான பீரங்கி ஏவுதளமாக செயற்படலாம். ஏனெனில் பூநகரியின் நீண்ட முனைப்பகுதியான கல்முனையில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினரின் யாழ். குடாநாட்டு தலமையகம் 27 கி.மீ சுற்று வட்டாரத்தில் உள்ளது.
எனவே பலாலி, காங்கேசன்துறை துறைமுகம் ஆகியன 130 மி.மீ பீரங்கியின் தாக்குதல் தூரவீச்சான 27 கி.மீ தூர வீச்சுக்குள் உள்ளது.

விடுதலைப் புலிகளிடம் நான்கு 130 மி.மீ ஹெவிச்சர் பீரங்கிகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. இது அவர்களிடம் உள்ள
122 மி.மீ பீரங்கிகள் - 20
120 மி.மீ கனரக மோட்டார்கள் - 80
போன்ற கனரக ஆயுத தொகுதியின் ஒரு பகுதியாகும்.
எனினும் அதிக தூரவீச்சு கொண்ட சிறப்பான எறிகணைகளை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் பூநகரியின் உட்பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த அதிக தூர வீச்சுக்கொண்ட எறிகணைகளைப் பயன்படுத்தி 130 மி.மீ பீரங்கியினால் 38 கி.மீ தூரம் வரை சுட முடியும்.
விடுதலைப் புலிகளிடம் இத்தகைய எறிகணைகள் இருப்பது தற்போது உயர் இராணுவ அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் வன்னி மற்றும் மணலாற்றுப் பகுதிகளில் உள்ள தமது பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்தி வரும் அதே சமயம், அவர்களின் கண் யாழ். குடாநாடு மீதே உறுதியாக பதிந்துள்ளது.
எனவே யாழ். குடநாட்டில் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல்களைத் தொடுக்கும் போது வன்னி மற்றும் மணலாற்றுப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மீதான எதிர்த் தாக்குதல்களும் பலமானதாக இருக்கும்.

இருந்த போதும் வன்னியில் கைப்பற்றப்படும் பகுதிகளை தக்க வைப்பதற்கான நிலையில் விடுதலைப் புலிகள் இல்லை. ஏனெனில் அது நேரடியான விநியோக வழிகளைக்கொண்டது. எனவே சிறிலங்கா இராணுவத்தினரால் மேலதிக துருப்புக்களையும், விநியோகங்களையும் வழங்க முடியும்.

ஆனால் பலாலி வான்படைத் தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் விடுதலைப் புலிகள் செயலிழக்கச் செய்தால் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் ஒரு முற்றுகைக்குள் சிக்க நேரிடும்.

மேலும் விடுதலைப் புலிகள் நாகர்கோவில், முகமாலை முன்னரங்குகளை பின்தள்ளி கொடிகாமம் வரை முன்நகர்ந்தால், அவர்களின் பீரங்கி படையணிகளின் அசைவிற்கு அது அனுகூலமாகலாம்.
யாழ். குடாநாட்டுக்குள் ஊடுருவுவதும் தாக்குதல்களை நடத்துவதும் விடுதலைப் புலிகளின் மற்றுமொரு உத்தியாகும்.
கடந்த ஓகஸ்ட் 29 ஆம் நாள் அவர்கள் முகமாலைப் பகுதி ஊடாக ஊடுருவ முயற்சித்திருந்தனர். அதே போல இந்த வாரமும் யாழ். குடாநாட்டுக்குள்ளும் ஊடுருவ முயற்சித்திருந்தனர்.

யாழ். குடாநாட்டுக்குள் ஊடுருவும் விடுதலைப் புலிகள் அங்கு தாக்குதல்களை நடத்துவதுடன், எதிர்கால தாக்குதல்களின் போது அவர்களின் நேரடியற்ற சூட்டிற்கான இலக்குகள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களாகவும் செயற்படுகின்றனர்.
எனவே பெரும் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் தயாராகி வருவதுடன் அவர்கள் வடபோர் முனையின் முன்னணி நிலைகளிலும் தம்மை பலப்படுத்தி வருகின்றனர். கிழக்கு மீதான இராணுவ நடவடிக்கையின் பின்னர் சமர்கள் ஓய்ந்திருப்பது அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
அதனை விடுதலைப் புலிகள் தமது வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு பயன்படுத்தலாம்.

எனவே சிறிலங்கா இராணுவத்தினர் தமது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தொடர்வது அவசியமானது. இதன் மூலம் விடுதலைப் புலிகளை ஒரு தற்காப்பு நிலையில் வைத்திருக்க முடியும். கடந்த வெள்ளிக்கிழமை ஓமந்தைக்கு மேற்காக உள்ள முள்ளிக்குளம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
முள்ளிக்குளம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் கடும் மோதல்கள் நிகழ்ந்தன.
அதன் போது இராணுவத்தினர் தாம் கைப்பற்றிய பல நிலைகளில் இருந்து பின்வாங்கியிருந்தனர்.

கடந்த பல மாதங்களாக விடுதலைப் புலிகளை ஒரு தற்காப்பு நிலையில் சிறிலங்கா இராணுவத்தினர் வைத்து வருகின்றனர். எனினும் அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினர் தமது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நிறுத்தியிருப்பது விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை தொடுப்பதற்கு ஏதுவாக அமையலாம் என்று இராணுவ மற்றும் பொதுமக்கள் தரப்பு புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறையில் கடந்த சனிக்கிழமை மற்றொரு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு கொமோண்டோப் படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் கடும் எதிர் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இது மன்னார் வவுனியா வீதிக்கு தெற்கு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றும் நடவடிக்கையாகும்.
வவுனியாவில் இருந்து மன்னார் நகருக்கான தொடர்பை துண்டிப்பதற்கு விடுதலைப் புலிகள் சிலாவத்துறையை பயன்படுத்தலாம் என்ற அச்சம் இராணுவத்தினரிடம் உள்ளது.

அதாவது வவுனியா - மன்னார் வீதியின் இருபுறமும் உள்ள காட்டு பகுதிகளை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். எனவே இருபுறமும் இருந்து ஒரே சமயத்தில் தாக்குதல்களை தொடுப்பதன் மூலம் அவர்கள் மன்னாருக்கான தொடர்பை துண்டிக்கலாம் என்ற அச்சம் இராணுவத்தினரின் மத்தியில் இருக்கின்றது. இந்த தாக்குதல் மூலம் வன்னியின் படை நடவடிக்கையை அதன் முக்கிய கட்டத்தில் திசை திருப்ப முடியும். சிலாவத்துறையை விடுதலைப் புலிகள் தமது கடல் நடவடிக்கைக்கும் பயன்படுத்தி வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Sunday, September 02, 2007

மன்னாரில் முஸ்லீம் கிராமத்தவர்களை மனிதகேடயமாக பயன்படுத்தும் சிறீலங்கா படையினர்!

முசலி பிரிவுக்குட்பட்ட மன்னார் மாவட்டத்தில் சுமார் 50 முஸ்லீம் குடும்பத்தவர்களை மனிதகேடயங்களாக பயன்படுத்தி சிறீலங்கா படையினர் முன்னேற்ற நடவடிக்கையினை சனிக்கிழமை காலை மேற்கொண்டதாக தெரியவருகிறது.

இதேவேளை முள்ளிக்குளம் பகுதியில் உள்ள கிராமத்தவர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நானாட்டான் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் பகுதிநோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இப்பிரதேம் விடுதலைப்புலிகளும் சிறீலங்காபடையினரும் பிரசன்னமாகியிருக்கும் பிரதேசமாக இருந்ததாகவும் இப்பிரதேசத்தினுள் சிறீலங்கா படையினர் முன்னகர்ந்தபோது விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை எனவும் தெரியவருகிறது.

பண்டாரவெளி, முசலி, பிச்சைவாணிபக்குளம், கூழாங்குளம், பொற்குளம் ஆகியபகுதியில் 2002 ம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபின் மீளகுடியமர்த்தப்பட்ட முஸ்லீம் மக்களே இவ்வாறு மனிதகேடயங்களாக பயன்படுத்தப்பட்டுவந்ததாக இவ்இராணுவ நடவடிக்கையடுத்து தப்பிவந்த முஸ்லீம் இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்தள்ளனர்.
நன்றி>பதிவு.

Saturday, September 01, 2007

தொண்டர் அமைப்புப் பணியாளர்களை போராளிகளாகப் பார்க்கும் அரசுகள்: "ரொய்ட்டர்ஸ்"

இனப்பிரச்சினை நிகழும் நாடுகளில் பணியாற்றும் தொண்டர் அமைப்புப் பணியாளர்களைப் போராளிகளாகவே அரசாங்கங்கள் சந்தேகிக்கின்றன என்று அனைத்துலக செய்தி ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" தெரிவித்துள்ளது.


ரொய்ட்டர்சிற்காக நேற்று வெள்ளிக்கிழமை (31.08.07) பீற்றர் ஆப்ஸ் எழுதிய செய்தி ஆய்வின் தமிழ் வடிவம்:

தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்கள் தம்மை ஒரு நடுநிலையாளர்களாகவே கருதுவதுடன், மிகவும் முனைவாக்கப்பட்ட களமுனைகளில் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

எனினும் அவர்கள் ஒரு தரப்பிற்கு சார்பானவர்கள் என்றே குற்றம் சுமத்தப்படுகின்றனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் பெரும் ஆபத்தை சந்தித்துள்ளது.

ஈராக், ஆப்பானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறும் மோதல்களில் மேற்குலக உதவி நிறுவனப் பணியாளர்கள் கூட்டுப்படைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்துடன் பார்க்கப்படுவதனால் பெரும் ஆபத்தை சந்தித்து வருகின்றனர்.

எனினும் உலகில் உள்ள ஏனைய நாடுகளான எத்தியோப்பியா தொடக்கம் இலங்கை வரையிலும் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்கள் போராளிகளுக்கு ஆதரவு வழங்குவதாக அந்நாட்டு அரசுகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

"கிறிஸ்தவ தொண்டர் அமைப்புக்கள் உதவி வழங்குதல் என்ற போர்வையில் மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல முஸ்லிம் நாடுகள் சந்தேகப்படுவதாக" சில புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். இது அவர்களின் பணியை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

"பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வாதத்தினால் உதவிப்பணிகள் அதிகமாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது அல்லது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது" என்று அனைத்துலக அபிவிருத்திக்கான ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியான சமீர் எலாவாரி தெரிவித்துள்ளார்.

"உதவி அமைப்புக்கள் தமக்கு அதிகமான நெருக்கடிகள் உள்ளதாக உணரும் போது அவர்களின் செயற்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும்" என்று எண்ணுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"தொண்டர் அமைப்புக்கள் தாம் நடுநிலையானவர்கள் என்பதை நிரூபிப்பது எப்போதும் கடினமானது" என்று உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது அவர்களுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்துக்கள் அதிகமானவை. அவர்கள் ஒரு தரப்பினருக்கு சார்பானவர்கள் என்ற காரணத்தால் கடத்தல்கள், படுகொலைகள், உதவி அமைப்புக்களின் அலுவலகங்கள் தாக்கப்படுதல், அவற்றின் மீது குண்டுவீசுதல், அவர்கள் பொதுமக்களிடம் செல்வதை தடுத்தல் என்பவை அதிகரித்துள்ளன.

செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் அலுவலகங்கள் மீது நடைபெறும் மிக அதிகமான தாக்குதல்கள்களால் வெளிநாட்டு உதவி நிறுவன பணியாளர்கள் பணியாற்றுவதற்கு எற்ற இடம் என்ற எல்லையை ஈராக் முற்று முழுதாக தாண்டிவிட்டது.

எனினும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளும் ஆபத்தானவையே. பல வெளிநாட்டு மக்களும், உதவி நிறுவன பணியாளர்களும் அங்கு கடத்தப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவைச் சேர்ந்த பணியாளர்களில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தலிபான்களால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஏனையோரின் குண்டுகள் துளைத்த சடலங்கள் வீதியோரங்களில் போடப்பட்டிருந்தன.

2006 ஆம் ஆண்டு 85 பணியாளர்கள் உலகம் முழுவதிலும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் உள்நாட்டுப் பணியாளர்கள். 2003 ஆம் ஆண்டு பக்தாத்தில் அமைந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பணிமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பணியாளர்கள் கொல்லப்பட்ட பின்னர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைகள் உயர்வானவை.

"மீள்கட்டுமானப் பணிகளில் தாம் கூட்டுப்படையினருடன் இணைந்து பணியாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான காரணம் அதனால் மேற்குலகப் பணியாளர்கள் எப்போதுமே நடுநிiயாளர்களாக அங்கு பார்க்கப்படுவதில்லை" என்று தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தொண்டர் அமைப்புக்களின் வாகனங்கள் "நேட்டோ" படையினரின் வாகனங்கள் என தவறுதலாக குறிவைக்கப்படலாம் என்று தொண்டர் அமைப்புக்கள் அச்சமடைந்ததை தொடர்ந்து, நோர்வே இராணுவத்தினர் தமது இராணுவ மீள்கட்டுமானப் பணிகளுக்கு நான்கு சக்கர வெள்ளை நிற வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்ற உடன்பாடுக்கு கடந்த மே மாதம் வந்துள்ளனர்.

ஆனால் மேற்குலக உதவி அமைப்புக்களுக்கு மேற்கு நாட்டு அரசுகளே பரந்த அளவில் நிதியை வழங்கி வருகின்றன. எனினும் அவர்களே ஆப்கானிஸ்தானில் மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே தொண்டர் நிறுவனப் பணியாளர்களை படையினருக்கு ஆதரவானவர்கள் என்று நம்புவதற்கான ஆபத்துக்கள் அங்கு எப்போதும் அதிகம்.

மேற்குலக நாடுகள் நேரடியாக பங்குபற்றாத களமுனைகளில், அந்த நாடுகளின் பணியாளர்கள் மோதலில் ஈடுபடும் இரு தரப்பிற்கும் இடையில் பணியாற்றும் போது அவர்கள் போராளிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் எத்தியோப்பியா, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களை அதன் ஒகடென் பகுதியில் இருந்து வெளியேற்றியிருந்தது. சோமாலியாப் போராளிகளுடன் அவர்களுக்கு தொடர்புகள் இருந்தாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் "தாம் தமது நடுநிலைமைக்கான எல்லைக்குள் தான் பணியாற்றி வந்ததாக" அனைத்துலக செஞ்சிலுவைச சங்கம் தெரிவித்திருந்தது.

"எத்தியோப்பியா அரசு மிகவும் கொடுமையான முறையில் கெரில்லா எதிர்ப்புப் போரை நடத்தி வருவதாகவும், உணவு விநியோகங்களையும் தடுத்து வருவதாகவும்" உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் "ஒருபுறம் குறிப்பிடத்தக்களவு உதவி நிறுவனப் பணியாளர்களும், சில வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் இருந்த போதும் அரசு பெரும் மனித அவலங்களை ஏற்படுத்த முயன்று வருவதாக" போராளிகள் தெரிவிக்கின்றனர்.

"வெளிநாட்டு உதவி அமைப்புக்கள் தலையிடுவதையோ அல்லது அங்கு நடைபெறும் சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்பதையோ சில சமயங்களில் அரசும், கெரில்லாக்களும் விரும்புவதில்லை" என்று ஆய்வாளர்களும், உதவி அமைப்புக்களின் பணியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

உலகில் மிக அதிகளவில் மனிதாபிமானப் பணிகள் நடைபெறும் சூடானின் டாபார் மாநிலத்தில் உள்ள உதவி நிறுவனங்கள் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக வெளிப்படையாக பேச முடியாது உள்ளதாக தெரிவித்துள்ளன. எனவே களத்தில் பணியாளர்களை நிறுத்தாது ஆலோசனைகளை வழங்கி வருவதாக அவை தெரிவித்துள்ளன.

சூடானிய அரசு மிகவும் உணர்திறன் உள்தாகவே செயற்பட்டு வருகின்றது. கடந்த வார இறுதியில் "கெயர்" என்ற அனைத்துலக அமைப்பின் உள்ளக அறிக்கை வெளிவந்ததை தொடர்ந்து அதன் தலைவரை நாட்டை விட்டு அது வெளியேற்றி இருந்தது.

போராளிகளின் நடவடிக்கைக்கு சார்பாக உதவி நிறுவனங்கள் மக்களை திசை திருப்புவதாக அரசுகள் சந்தேகப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். போராளிகளுடன் தொண்டர் அமைப்புக்கள் இணைந்து பணியாற்றுவதனால் அவர்கள் ஒரு சட்டரீதியான அமைப்புக்களாக மாற்றம் பெற்று விடலாம் எனவும் அரசுகள் அஞ்சுகின்றன. போராளிகளின் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார, சமூக, உதவி நடைவடிக்கைகள் அவர்களுக்கு உதவியாக அமையலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

"தொண்டர் அமைப்புக்கள் விடுதலைப் புலிகளுக்கு தற்செயலாகவோ அல்லது திட்டமிட்ட வகையிலோ உதவி வருவதாக" சிறிலங்கா அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

"கடந்த ஆண்டு மூதூரில் தொண்டர் அமைப்பின் 17 பணியாளர்களை அரசே படுகொலை செய்ததாக" நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பு குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அரசு இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. "தொண்டர் அமைப்பின் பணியாளர்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருவதாக" மூத்த அரச அதிகாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்போரில் தமிழ் இன தொண்டர் நிறுவனப் பணியாளர்களை அரசு விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்படுகின்றது. இலங்கையில் கொல்லப்பட்ட எல்லாப் பணியாளர்களும் தமிழர்களே.

உள்ளூர்ப் பணியாளர்களிடம் ஆதரவுகளை கண்டறிவது கடினமானது என்று உதவி நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் தவிர்க்க முடியாத காரணங்களினால் மோதல்களில் அகப்பட்டுக் கொள்கின்றனர். எனினும் அதற்கு எதிரான பாதுகாப்புக்களை மேற்கொள்வதற்கு தாம் முயற்சித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

"ஆனால் எந்த குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை அணுகி அவர்களுக்கான உதவிகளை வழங்க வேண்டுமானாலும் நீங்கள் அந்த குழுவினருடன் தொடர்புகளை பேண வேண்டும்" என்று எலாவாரி தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.