Sunday, September 30, 2007

கருணா விவகாரத்தில் இரட்டை வேடமிடும் பிரித்தானியா!!!

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துiணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தானியா மறுத்துவிட்டது.


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பேச்சாளர் ஜோன் சுல்லியிடம் இது தொடர்பிலான கேள்வியை கொழும்பு ஊடகவியலாளர்கள் நேற்று சனிக்கிழமை கேட்டபோது பதில் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

"விசா கோரி விண்ணப்பிக்கும் தனிநபர்கள்" குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் சிறிலங்காவில் உள்ள பிரித்தானியா தூதரகத்தினால் வழங்கப்பட்ட விசாவினூடே பிரித்தானியாவுக்குள் கருணா நுழைந்திருப்பதாக கொழும்பு "ஐலண்ட்" நாளிதழில் லண்டன் செய்தியாளர் சுஜீவ நிவுன்கெல உறுதி செய்துள்ளார்.

"இலங்கையின் கிழக்கு பகுதி நிலைமைகளை கருணா குழு என்றழைக்கப்படுவோர் சீர்குலைத்து வருவதாக" கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் சாடியிருந்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய அந்நாட்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இலங்கை- பிரித்தானிய உறவுகளுக்குப் பொறுப்பானவருமான கிம் ஹெளல்ஸ், நீதிக்குப் புறம்பான படுகொலைகளைக் கருணா செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

2007 ஆம் ஆண்டு மே மாதம் பிரித்தானியா நாடாளுமன்றில் பேசிய கிம் ஹெளல்ஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே வன்முறையில் ஈடுபடவில்லை. கருணா குழுவுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் கூறினார்.

மேலும் "இலங்கையில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், சிறார்களை படையணிகளில் சேர்த்தல் ஆகியவற்றுக்கு கருணா குழுதான் பொறுப்பு" என்றும் "பொதுமக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கருணா கைவிட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அதே பிரித்தானியாதான் இப்போது அதே கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இலங்கை இனப்பிரச்சனையில் அனைத்துலக நாடுகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்ற இரட்டை வேடத்தையே இது வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

No comments: