Wednesday, September 05, 2007

அம்பாறையில் முஸ்லிம்களின் வீடுகளுக்கு சிங்களக் காடையர் தீ வைப்பு!!!

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட அஸ்ரப் கிராமத்திற்குள் புகுந்த சிங்களக் காடையர்கள், முஸ்லிம் மக்களின் 12-க்கும் அதிகமான வீடுகளை அடித்து நொருக்கி, தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.


கூரிய ஆயுதங்களுடனும், நெருப்புப் பந்தங்களுடனும் புறப்பட்ட சிங்களக் காடையர் கூட்டமொன்று, பள்ளக்காடு ஒலுவில எல்லைப் புறங்களுடாக அத்துமீறிப் பிரவேசித்து, அஸ்ரப் கிராமத்தை அடைந்தது.

நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் நுழைந்த இந்த சிங்களக் காடையர் கூட்டம், அங்கிருந்த வீடுகளில் தங்கியிருந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாகக் கலைத்த பின்னர், அந்த வீடுகளிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், வீடுகளுக்கும் தீ வைத்தனர்.

அப்பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள், அப்பகுதி அரசசார்பற்ற உதவி நிறுவனங்களிடம், தற்காலிக பாதுகாப்பும் அவசர உதவிகளும் தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். அஸ்ரப் கிராமம் அமைந்துள்ள பகுதி, பௌத்த சிங்களவர்களுக்கான புனித பூமி என்று கூறிய அந்தக் காடையர்கள், அங்கு முஸ்லிம்கள் யாரும் வாழ்வதற்கு அனுமதியில்லை என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

பாதுகாப்புக் கடமையிலிருந்த அக்கரைப்பற்று காவல்துறையினர், விசாரணைகளை தாம் ஆரம்பித்திருப்பதாகக் தெரிவித்துள்ள போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: