Thursday, January 31, 2008

கடலுக்குள் கண்ணி வெடி! - ரவிக்குமார் எம்.எல்.ஏ.




- யூனியர் விகடன் -

'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு' என்று வாழும்
மீனவ மக்களின் பிழைப்பில் இப்போது நெருப்பை அள்ளிப்போட்டிருக்கிறது
இலங்கை அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில்
கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடலில் கண்ணி வெடிகளை இலங்கைக்
கடற்படை இப்போது மிதக்கவிட்டிருக்கிறது. பாதுகாப்பு நோக்கத்தில்
செய்யப்பட்டதாக அதை இலங்கை அரசு வர்ணித்தாலும், உண்மையில் தமிழக
மீனவர்களைப் படுகொலை செய்யவும் பயமுறுத்தவும்தான் இந்தக் காரியத்தை
இலங்கைக் கடற்படை மேற்கொண் டிருக்கிறது என மீனவர்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்புதான் இலங்கை அரசு தமிழர் பிரச்னைக்கு சமாதானத்
திட்டம் ஒன்றைத் தயாரித்திருப்பதாக அறிவித்தது. அனைத்துக் கட்சிப்
பிரதிதிகள் குழுவால் (APRC) முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ராஜபக்ஷே அரசு
ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் செய்திகள் வந்தன. கடந்த பதினெட்டு மாதங்களாக
அறுபத்து மூன்று முறை கூடிப்பேசி, வெறும் மூன்று பக்கங்களைக் கொண்ட
அறிக்கை ஒன்றை அந்த அனைத்துக் கட்சிக்குழு சமர்ப்பித்திருந்தது!
அதிலும்கூடப் புதிதாக எதுவும் இல்லை. 1987--ம் ஆண்டு போடப்பட்ட இந்திய-
இலங்கை ஒப்பந்தத்தின் வழிகாட்டு தலின்படி இலங்கை அரசியலமைப்புச்
சட்டத்தில் செய்யப்பட்ட பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிக் குழுவின் 'அரிய'
ஆலோசனையாகும்.

மாகாணக் கவுன்சில்களை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க
வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற பேச்சுக்கள் பலமாக அடிபட்டன. இந்தப்
பிரதிநிதிகள் குழுவில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய
கட்சியும் (யு.என்.பி.), ஜனதா விமுக்தி பெரமுனாவும் (ஜே.வி.பி.) கலந்து
கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சியினரும் அதில்
பங்கேற்கவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளால்
புறக்கணிக்கப்பட்ட அந்தக் குழுவின் பரிந்துரைகளை இலங்கையில் எவரும்
மதிக்கவில்லையென்பதே உண்மை.

போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட ராஜபக்ஷேவின்

கொடுநெறிப் போக்கை உலக நாடுகள் கண்டித்து வந்த வேளையில், அதிலிருந்து
தப்பிப்பதற்காக ராஜபக்ஷே ஆடும் நாடகம்தான் இது என்று எல்லோருக்குமே
தெரிந்துவிட்டது. அதனால்தான், சிங்கள அரசின் சமாதானத் திட்டத்தை எவரும்
'சீரியஸாக' எடுத்துக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தக்
கண்ணிவெடி சமாசாரம் இப்போது வெளியே தெரிய வந்திருக்கிறது.

1974--ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த
இந்திரா காந்தியும் இலங்கை பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகாவும்
செய்து கொண்ட ஒப்பந்தம்தான் முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய-இலங்கைக்
கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின்
அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின்
மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த நாடுகளின் கப்பல்கள் ஒன்று
மற்றொன்றின் எல்லைக்குள் சென்று வரும் உரிமை தொடர்ந்து காக்கப்படும்
எனக்கூறிய அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், 'இந்திய மீனவர்களும்,
யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு
இலங்கையிடம் அனுமதி பெறத்தேவையில்லை' எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1974-க்குப் பிறகு 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள்
இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான்
அது. இந்தியா சார்பில் கேவல்சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி.
ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு
ஒப்பந்தங்களிலோ... இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22-ம் தேதி
கையெழுத்தான இலங்கை, இந்தியா, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான
முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ... கச்சத்தீவு பகுதியில் தமிழக
மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. இந்த
ஒப்பந்தங்களுக்குப் பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான்
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்தார்கள் என்று
கூறப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று
ஓய்வெடுக்கவும், அங்கே தமது வலைகளை உலர்த்த வும், அங்கே இருக்கும் புனித
அந்தோணியார் கோயில் திருவிழாவுக்குச் செல்லவும் தொடர்ந்து உரிமை
பெற்றிருந்தார்கள்.

1983-ம் ஆண்டுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவர்கள் மீன்பிடித்
தொழிலைச் செய்து வந்தனர். 83-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தைத் தொடர்ந்து
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது.
அந்தத் தடை 2003 வரைதொடர்ந்தது.

தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலை
களும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும்
தொடர்கதையாயின. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால்
சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படித் தமிழக மீனவர்கள்
பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட
முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதுவரை துப்பாக்கியால்
சுட்டவர்கள் இப்போதோ கண்ணிவெடிகளை மிதக்க விட்டுவிட்டார்கள்.
கடல் கண்ணிவெடி என்பதுநிலத்தில் பயன்படுத்துவதைவிடவும் சக்தி
வாய்ந்ததாகும். 'டார்பிடோக்கள்'என அழைக்கப்பட்ட பழைய காலத்து கடல்
கண்ணிவெடிகள் பதினாறாம் நூற்றாண்டி லேயே புழக்கத்துக்கு வந்துவிட்டன.
கடல் கண்ணி வெடிகள் நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கக் கூடியவை
என்கிறார்கள். முதலாம் உலகப் போரின் போது பாரசீக வளைகுடாவில் ஈரானால்
மிதக்க விடப்பட்ட கடல் கண்ணிவெடி, 1988-ம் ஆண்டில் அமெரிக்கக் கப்பல்
ஒன்றைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதே 'நீண்ட ஆயுளுக்கான' உதாரணம்
ஆகும்.

கடல் கண்ணிவெடிகளில் இப்போது பலரகங்கள் வந்து விட்டன. இலக்கைத்
துல்லியமாகத் தாக்கி அழிக்கும்படி அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கடலில்
வெவ்வேறு ஆழங்களில் அவற்றை மிதக்கவிட முடியும். கடல் கண்ணிவெடி
போடப்பட்டிருப்பதை எளிதாகக் கண்டறிய முடியாது. எனவே, அப்பாவி மீனவர்கள்
அதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். அதனால்தான் இலங்கைக் கடற்படை
கண்ணிவெடி போட்ட செய்தி தெரிந்ததற்குப் பிறகு தமிழக மீனவர்கள் தொழிலுக்கே
போகவில்லை.

யுத்தகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சர்வதேச அளவில்
பல்வேறு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஆனால், கடல் கண்ணிவெடிகளை எப்படிக்
கையாள வேண்டும் என்பதை 1907-ம் ஆண்டு இயற்றப்பட்ட 'ஹாக் கன்வென்ஷன்'
மட்டும்தான் வரையறுத்துள்ளது. அது இப்போது அவ்வளவாகப் பயன்படுவதில்லை.
எனவே, 1994-ம் ஆண்டு 'சான் ரெமோ கையேடு' என ஒன்றை நிபுணர்கள்
தயாரித்தார்கள். அதில் கடல் கண்ணிவெடிகளைக் கையாளுவது பற்றிய
வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

'பொதுவான கடல் பகுதிகளில் கண்ணிவெடிகளை போடக் கூடாது. சர்வதேச கடல்
பகுதியிலோ, பொதுவான கடல் பகுதியிலோ கப்பல்கள் செல்வதை தடுக்கக்கூடாது,
அதோடு கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும்.
அப்படி, வழி ஏற்படுத்தித் தராதுபோனால் கடல் கண்ணிவெடிகளை எவரும்
மிதக்கவிட அனுமதி கிடையாது' என 'சான் ரெமோ கையேடு' குறிப்பிட்டுள்ளது.
இப்போது இலங்கை அரசு செய்திருக்கும் காரியம், மேலே சொல்லப்பட்ட சர்வதேச
விதிகளுக்குப் புறம்பானதாகும். எனவே, இலங்கை அரசு உடனடியாகக் கடல்
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

கடல் கண்ணி வெடிகளைக் கண்டறிவதற்கு இப்போது நவீன கருவிகள் வந்து விட்டன.
ஆனால், அவை மிகவும் செலவு பிடிக்கக் கூடியவையாகும். சோனார்(Sonar) கருவி
பொருத்தப்பட்ட கப்பலை கண்ணிவெடி போடப்பட்டுள்ள இடத்தை நோக்கிச் செலுத்தி
அந்த வெடிகள் எங்கு உள்ளன என்பதை ஆராய லாம். மற்றொரு நடைமுறை -
ஹெலிகாப்டரில் அந்தக் கருவியைப் பொருத்தி, அதைக் கண்ணிவெடி போடப்
பட்டிருக்கும் கடற்பரப்பில் இழுத்துச் செல்வதாகும். இப்போது ரோபோக்களை
இப்படியான வேலையில் பயன்படுத்துகிறார்கள். எப்படியானாலும் அதற்கு ஆகும்
செலவு மிகமிக அதிகம்.

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத்
தீர்ப்பதற்காக இந்திய-இலங்கை அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. 'கூட்டு
நடவடிக்கைக் குழு' என ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் மட்டத்தில்
பேச்சுவார்த்தைகளும் நடந்தன. 2006-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்புவில்
நடந்த 'கூட்டு நடவடிக்கைக் குழு' கூட்டத்தில் சில முடிவுகளும்
எடுக்கப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து ஐந்து கடல் மைல் வரையிலான
தூரத்துக்குள் சென்று மீன் பிடித்த மீனவர்களைக் கைது செய்வதில்லை எனவும்,
இரு நாடுகளின் சிறைகளிலும் வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது
எனவும் அந்த 'கூட்டு நடவடிக்கைக் குழு' முடிவெடுத்தது. அதற்கு மாறாக
இப்போது கண்ணிவெடிகளைப் போட்டிருப்பது மேலே கண்ட கூட்டு நடவடிக்கைக்
குழுவின் முடிவுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதையும்
எடுத்துக்காட்டுகிறது.

சேது கால்வாய் திட்டம் சுற்றுச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் என்ற
அச்சம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறியிருப்பதையும், இப்போது
கண்ணிவெடி போடப்பட்டுள்ள நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால்,
சேதுக்கால்வாய் திட்டத்தை ஒரேயடியாக ஒழிப்பதற்காகத்தான் இலங்கை அரசு இந்த
நடவடிக்கையை எடுத்துள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி சர்வதேச
நெறிமுறைகளுக்கும், தானே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களுக்கும் எதிராகச்
செயல்பட்டுவரும் ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகளை 'போர்க்காலக் குற்றச்
செயல்களாகக்' (War Cerimes) கருதுவதில் தவறில்லை.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகம் இலங்கை மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டும். தனது குடிமக்களின் மீது
அக்கறையிருந்தால், தமது இறையாண்மையைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணினால்
இதைச் செய்வதற்கு இந்தியா தயங்கக்கூடாது.

இலங்கை கடற்படை கண்ணிவெடிகளைப் போட்டுவிட்டு செய்தி அனுப்பியதும், இந்திய
கடற்படை அதிகாரிகளோ நமது மீனவர்களைத் தடுத்து நிறுத்தி கைது
செய்கிறார்கள்! இலங்கைக் கடற்படை போட்டிருப்பது என்ன வகையான கண்ணிவெடி?
அது நீரின் ஓட்டத்தில் இந்தியப் பகுதிக்குள் வரக்கூடிய ஆபத்து
இருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா? அந்தக் கண்ணிவெடிகளை மனித
நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் போட்டிருக்கிறோம் எனச் சொல்கிறது
இலங்கைக் கடற்படை. அப்படி இருக்கும்போது ஏன் தமிழக மீனவர்களை இந்திய
கடற்படையினர் கைது செய்ய வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு நமது
அதிகாரிகள் பதிலெதையும் இதுவரையில் கூறவில்லை.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியபோது
வெகுண்டெழுந்த முதல்வர் கலைஞர், ''மீனவர்களின் கைகள் இனி மீன்களை மட்டுமே
பிடித்துக் கொண்டிருக்காது'' என எச்சரித்தார். இலங்கை அரசு மட்டுமல்ல...
இந்திய அரசும் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.
- யூனியர் விகடன்

Sunday, January 27, 2008

பிரித்தானியாவில், கருணாமீது தாக்குதல் நடாத்தபட்டு,சுடுநீர் ஊற்றாப்பட்டது.

பிரித்தானிய சிறையில் கருணா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான த நேசன் தெரிவித்துள்ளது.

போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடிய சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுக்களின் முன்னாள் தலைவரான கருணாவுக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:9 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள கருணா மீது சிறையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகம் உள்ள சிறையிலேயே கருணா அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அரசியல் கைதியாகவே வைக்கப்பட்டுள்ளார். அந்தச் சிறையில் இரு தமிழ்க் கைதிகளும் உள்ளனர். அவர்கள் வேறு குற்றங்களுக்காக அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள தமிழ்க் கைதிகள் கருணா மீது வெந்நீரைக் கொட்டியதுடன், ஆயுதங்கள் கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கருணாவுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே கருணா தனது சிறைவாசத்தை நிறைவு செய்த பின்னர் அவர்மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

கருணா தனது சிறைவாசத்தை அங்கு கழித்த பின்னர் அவர் சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும். ஆனால் அவர் மீதான போர்க்குற்றங்களை பிரித்தானியாவில் விசாரணை செய்யுமாறு அனைத்துலக மன்னிப்புசபை, மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன பிரித்தானியா அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

சித்திரவதைகள், சிறார் படைச்சேர்ப்பு, கடத்தல், படுகொலைகள் போன்ற அவர் மீதான போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கருணா மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>லங்காசிறீ

சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்கான எதிர்வினைதான் விடுதலைப் புலிகளின் யுத்தம்: ரணத் குமாரசிங்க!!!



இலங்கையில் இனவெறி கொண்ட பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் மற்றும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினது எதிர்வினைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்துகிற யுத்தம் என்று சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் சிறிலங்காவின் புதிய இடதுமுன்னணியின் மத்திய குழு உறுப்பினரான சிங்களவரான ரணத் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "கண்டனமும் இரங்கலும் தேசத்துரோகமா?" என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் கருத்துரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் ரணத் குமாரசிங்க ஆற்றிய உரையின் தமிழாக்கம்:

ஆறு ஆண்டுகளாக நார்வே சமரசத்தால் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த ஜனவரி 2ஆம் நாள் மகிந்த ராஜபக்ச, ஒருதலைபட்சமாக முறித்துக் கொண்டுவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்த ஒப்பந்தம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே இருவரும் கைச்சாத்திட்டு ஏற்றுக் கொண்ட ஒப்பந்தம் ஆகும்.

இப்படி தமிழர்களோடு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை சிறிலங்கா ஒருதலைப்பட்சமாக முறித்துக் கொள்வது இது முதல் முறையல்ல. பல முன்னுதாரணங்கள் உண்டு.

1958ஆம் ஆண்டில் சிறிலங்கா அரச தலைவர் பண்டாரநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்குமிடையே உருவான ஒப்பந்தமும்

டட்லி சேனநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையே 1966இல் உருவான ஒப்பந்தமும் இப்படித்தான் முறிக்கப்பட்டது.

தமிழர்கள், இனி ஒப்பந்தங்களைப் போட்டுப் பயனில்லை என்று முடிவெடுத்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க முடிவெடுத்ததற்கு காரணமே -ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களை இப்படி சிறிலங்கா மதிக்காமல் செயற்பட்டதுதான்.

அதன்பிறகுதான் தமிழர்கள் தங்களின் பாரம்பரிய பிரதேசத்துக்கு சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

இந்த யுத்தத்தினால் எங்கள் நாட்டில் கருத்துரிமை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. தமிழர்களின் கருத்துரிமை மட்டுமல்ல- சிங்களவர்- முஸ்லிம்களின் கருத்துரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது. ஒருநாட்டில் ஜனநாயகம் வளர்கிறது என்பதற்கான அடையாளமே கருத்துரிமைதான்.

யுத்தத்தில் முதல் பலிகடாவாவது கருத்துரிமைதான் என்று பல சிந்தனையாளர்கள் கூறியுள்ளனர். கருத்துரிமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு சர்வதேச உரிமை.

இனம், மொழி, மதம் என்று பாகுபாடுகாட்டாமல் அனைவருக்கும் கருத்துரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் எங்கள் நாட்டில், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. சுதந்திரத்துக்கான உரிமை இல்லை- தகவல்களை அறியக் கூடிய உரிமைகள் இல்லை.

அதுவும் ஒடுக்குமுறை யுத்தம் என்று வந்துவிட்டால் பொய்யும், திரிபும் இல்லாமல் அதனை நடத்தவே முடியாது.

எனவே ஒடுக்குமுறைகள் வெளி உலகுக்கு தெரிவதும் இல்லை. தமிழ்ப் பகுதியில் மக்களின் அவலங்கள் வெளியே தெரிவதில்லை.

தமிழ்ப் பகுதியில் மட்டுமல்ல- இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏதோ, சுதந்திரம் இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறதே தவிர உண்மையில் அங்கும் சுதந்திரம் வீசவில்லை. கொழும்பில் ஊடக மையங்கள் இயங்குகின்றன. சில ஊடகங்களை அரசே நேரடியாக நடத்துகிறது. பல ஊடகங்களைத் தனியார் நடத்துகின்றனர்.

அவற்றில் சுதந்திரமாக செயல்படும் ஊடகங்களுக்கு அரசை ஆதரித்து செயல்படும் ஊடகங்களும் உண்டு.

ஆனால், இந்த ஊடகங்களுக்கு முழு உரிமை கிடையாது. கடும் கட்டுப்பாடுகளுடன்தான் அவைகள் செயல்படுகின்றன. அரசு தனது அரசுக்குரிய அதிகாரத்தை மட்டுமல்ல, பொருளாதார அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஊடக உரிமைகளை ஒடுக்குகிறது.

அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டால், அரசு விளம்பரங்களும் அரசு வழங்கும் சலுகைகளும் நிறுத்தப்பட்டு விடுகின்றன.

தனக்குச் சாதகமாக செயல்படும் ஊடகங்களுக்கு அரசு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. ஒடுக்குமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசே கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

நேரடியாக சிறிலங்கா அரசாங்கம் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

கடந்த ஆண்டு பல ஊடகவியலாளர்களை சிறிலங்கா அரசு கைது செய்தது. கடந்த ஆண்டில் மட்டும் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.

லீடர் என்ற பத்திரிகைக் குழுமத்தின் அலுவலகம் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. இந்தப் பத்திரிகை அரசை எதிர்த்து வந்ததுதான் காரணம். இந்தப் பத்திரிகை அலுவலகமானது சிறிலங்காவின் விமானப் படைத்தளத்துக்கு மிக அருகில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் அடையாளம் தெரியாத நபர்கள் உள்நுழைந்து தீ வைத்தனர்.

ஏபிசி என்ற வானொலி தனது ஒலிபரப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் தகவல் ஒலிபரப்புத்துறை உத்தரவிட்டது. அந்த வானொலியின் 5 அலைவரிசை ஒலிபரப்புகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. ஏன்?

அரச தலைவர் ராஜபக்சவின் சொந்த கிராமத்துக்கு அருகே உள்ள ராமினிதன்னா என்னும் கிராமத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்ற செய்தியை ஒலிபரப்பியதற்காக இந்த நடவடிக்கை. இவை நேரடியாக ஒடுக்குமுறைக்கு சில உதாரணங்கள்.

மறைமுகமான அடக்குமுறைகளுக்கும் பல சான்றுகள் உண்டு.

உதாரணமாக,

எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் வெளியிட்ட "ஜனஹதா" "டி.என்.எல்" "ரதுயிரா" உள்ளிட்ட தொலைக்காட்சி ஒளிபரப்புகள் அரசின் பல ஒடுக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் "நேரடி விவாதங்கள்" நிகழ்ச்சிகளை, பெருமளவில் மக்கள் பார்க்கிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக, இந்த விவாதங்களில் பங்கேற்க எதிர்க்கட்சியினரை அழைக்கக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் மிரட்டி வருகிறது.

கடந்த காலங்களில் புதிய இடது முன்னணி (என்.எஸ்.பி.பி.) கட்சியின் பொதுச்செயலாளருக்கு இந்த விவாதங்களில் பலமுறை பங்கேற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கம் பற்றிய விமர்சனங்களை அவர் முன்வைத்தார். உண்மைகள் மக்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக, என்.எஸ்.எஸ்.பி கட்சிப் பிரதிநிதிகளை அழைக்கக் கூடாது என்று மகிந்த அரசு மிரட்டிவிட்டது.

அதே போல் இந்த நேரடி விவாதங்களில் பங்கேற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ரவிராஜ், ஐக்கிய தேசியக் கட்சியின் மகேஸ்வரன் போன்றோர் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக மறைமுகத் தடை விதித்தது. அந்தத் தமிழர்களின் பிரதிநிதிகள் அழகாக சிங்கள மொழியில் பேசக் கூடியவர்கள். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் நியாயங்களை சிங்கள மொழியில் அவர்கள் எடுத்து வைத்தார்கள். இந்த நியாயங்களை சிங்களவர்கள் உணர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், சிறிலங்கா அரசு அவர்களின் கருத்துரிமையைப் பறித்தது. ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமைகளைப் பறித்தது மட்டுமல்ல- அவர்களின் உயிர் வாழும் உரிமைகளே பறிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்தப் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அரசாங்கத்தை எதிர்த்தவர்கள், அரசு அடக்குமுறையைக் கண்டித்தவர்கள்தான் படுகொலைக்கு உள்ளாகிறார்கள்.

இது யுத்தத்தின் கொள்கைகளில் ஒன்றாக ஏற்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள்.

அரசை விமர்சிக்கிற திரைப்படங்கள் கூட அடக்குமுறைகளைச் சந்திக்கின்றன. அந்தத் திரைப்படங்களை வெளியிடுவதற்கு திரையரங்கங்கள் மறுக்கப்படுகின்றன. தொழிற்சங்கங்களும் சுதந்திரமாக செயல்பட முடியாது. சிறிலங்கா அரசாங்கமானது நேரடியாகவும் மறைமுகமாவும் பல்வேறு சட்டங்களின் வழியாக ஒடுக்கி வருகிறது.

தலைமை நீதிமன்றமும் ஏனைய நீதித்துறை நிறுவனங்களும் தொழிற்சங்க உரிமைகளுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

சிறிலங்காவின் சில அமைச்சர்களே, கருத்துரிமைக்கு எதிராக களத்தில் இறங்கி செயற்படுகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம், சிறிலங்காவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மெர்வின் சில்வ, அரசாங்கம் நடத்தும் "ரூபவாகினி" தொலைக்காட்சி நிலையத்துக்குள் நுழைந்து, செய்தி ஆசிரியரைத் தாக்கினார். அவரது செய்தியை "ரூபவாகினி" ஒளிபரப்புவதில்லை என்பதே காரணம். ஆத்திரமடைந்த தொலைக்காட்சி நிiலாய் ஊழியர்கள், அமைச்சரைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்ட்னார். தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் அறைக்கு ஓடிப்போய் அமைச்சர் பதுங்கிக் கொண்டார். பிறகு இராணுவமும் காவல்துறையினரும் வந்து அமைச்சரை விடுவித்தனர். எதிர்த்து நிற்ன்ற தொலைக்காட்சி ஊழியர்கள், செதியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் இப்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தாக்குதலுக்கு வந்த அமைச்சர், அவர் தாக்குதலுக்கு அழைத்து வந்த குண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதான் எங்கள் சிறிலங்கா நாட்டினது நிலை. அங்கு நிலைமை மிக மிக மோசமானதாக பயங்கரமாக உள்ளது. இந்த நிலையில் சர்வதேச சமூகம், இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பாக, இந்தியா- சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துத் தலையிட்டு கண்டிக்க வேண்டும். மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்ட எங்களுக்காக- சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக -இந்தியா தலையிட வேண்டும்.

எங்களின் நண்பர்களாக- தோழர்களாக இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரி அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் ஊடகங்களும் இந்திய அரசுக்கு இதற்கான அழுத்தத்தை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கோரிக்கை மிகமிக அவசியமானது. அவசரமானது. காரணம் எங்கள் சிறிலங்கா நாட்டில், கருத்துரிமைகளை நேரடியாகவும்- மறைமுகமாகவும் ஒடுக்கி வரும் மகிந்த அரசாங்கத்துக்கு பேராதரவு தந்து வருவது- இந்திய அரசுதான்.

"பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற முழக்கத்தோடு இந்தியா தனது ஆதரவை சிறிலங்காவுக்கு தந்து வருகிறது.

நான் ஒன்றை இங்கே திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிங்கள பௌத்த பிக்குகளின் இனவெறியும் பயங்கரவாதமும்தான் விடுதலைப் புலிகளை ஆயுதம் தூக்க வைத்தது.

அந்த இனவெறி பௌத்த பிக்குகள் மற்றும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்கான எதிர்வினைதான் விடுதலைப் புலிகள் நடத்தும் யுத்தம்.

எனவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டும் தனிமைப்படுத்தி பயங்கரவாத முத்திரை குத்தக் கூடாது-

தமிழர்களின் நியாயமான உரிமைகளை சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் ஒடுக்கியதால் எழுந்த போராட்டம்தான் விடுதலைப் புலிகள் நடத்தும் போராட்டம்.

தோழர்களே!

ஒரே ஒரு கேள்வியோடு நான் என் உரையை நிறைவு செய்கின்றேன்.

இடதுசாரிகளும் தொழிற்சங்கங்களும் குறிப்பாக இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகள்- சிறிலங்காவின் ஒடுக்குமுறைக்கு எதிராக -இந்தியா தலையிட வேண்டும் என்று ஏன் வற்புறுத்தாமல் ஒதுங்கி நிற்கிறீர்கள்? கருத்துரிமைப் பறிப்புகளை ஏன் கண்டிக்கத் தயங்குகின்றீர்கள்?என்றார் அவர்.
நன்றி>புதினம்.

Friday, January 25, 2008

கருணாவிற்கு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை - அரசு, கோத்தபாய மீது கருணா குற்றச்சாட்டு!!!

சிறீலங்கா படைகளுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு லண்டனிலுள்ள ஐல்ஸ்வோத் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இராச தந்திரிகளுக்குரிய பெயரில், பொய்யான கடவுச்சீட்டில் பிரித்தானிவிற்கு நுழைந்ததற்காக மட்டுமே தற்பொழுது இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், சிறீலங்கா அதிபரின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஸவுமே போலியான கடவுச்சீட்டை தயாரித்து தன்னை பிரித்தானியாவிற்கு அனுப்பி வைத்திருப்பதாக நீதிமன்றில் கருணா கூறியதாகத் தெரிகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) இது பற்றிக் கருத்துக் கூறிய சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லகம, தமது அரசு கருணாவிற்கான போலியான இராசரீக கடவுச்சீட்டை வழங்கவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்ததுடன். மூன்றாவது சக்தியொன்றின் பின்னணி இதில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

சிறீலங்கா படைகளுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக போரியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தொடர வேண்டுமென மனித உரிமை அமைப்புகளும், அனைத்துலக நிறுவனங்களும் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், அவ்வாறான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிய வரவில்லை.

கருணாவிற்கு அதிகூடிய தண்டனையாக 24 மாதங்கள் சிறைத்தண்டனையும், பண அபராதமும் விதிக்கப்படும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
நன்றி>பதிவு.

Thursday, January 24, 2008

புலிகளின் போராட்டம் நியாயமானது! முன்னாள் அமெரிக்கசட்டமா அதிபர் வாதம்!!!

சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையே ஆதரிக்கிறது என்கிறார்
அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பணியகம் (எவ்.பி.ஐ.) சமீபத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விடுத்த அறிக்கை பிழையாக வழிநடத்துவது, ஆதாரமற்றது என்று கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் உதவிப் பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன், விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் சுதந்திரக்கொள்கை பிரகடனத்தின்படியும், சர்வதேச சட்டங்களின் கீழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனிநாட்டை அமைப்பதற்கான உரிமையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியாகவும் இருக்கும் புருஸ் பெய்ன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

எவ்.பி.ஐயின் அறிக்கையில் கடந்த இரு வருட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் நாலாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்த எண்ணிக்கை எவ்வாறு கணக்கிடப்பட்டதெனவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் தமிழர்கள். நம்பகத்தன்மை மிக்க வட்டாரங்களின் படி இவர்களின் எண்ணிக்கை ஐயாயிரமாகும்.
விடுதலைப் புலிகளே உலகில் மிகவும் ஆபத்தானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் அமெரிக்கர் ஒருவரைக் கொலைசெய்துள்ளனரா அல்லது அச்சுறுத்தியுள்ளனரா என்று தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்கர் ஒருவரை அச்சுறுத்தினாலோ, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தாலோ மாத்திரமே வெளிநாட்டுப் பயங்கரவாத பட்டியலில் அமைப்பொன்றைச் சேர்க்கலாம் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வாறு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. மாறாக இலங்கை அரசோ அமெரிக்காவின் எதிரிகளுடன் நட்புறவு வைத்துள்ளது. ஈரானின் சர்வதேச பயங்கரவாதத்திற்கு அது ஆதரவு வழங்குகின்றது. கியூபாவுடன் நட்புறவு பாராட்டுகிறது.

விடுதலைப் புலிகள் இரு உலகத் தலைவர்களைக் கொன்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிரூபிப்பதற்கான தடயங்கள் முன்வைக்கப்படவில்லை.

மேலும் இது பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகளால் அமெரிக்காவிற்கு தற்போதுள்ள அபாயம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் தமிழ் புலிகளின் தலைவரை சமாதான பேச்சுகளின் போது கடத்திக் கொல்வதற்கு ராஜீவ்காந்தி உத்தரவிட்டார் எனவும் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

1977இல் தமிழ் தேசமொன்றை உருவாக்குவதற்கு தமிழர்கள் ஒருமித்த குரலில் ஆதரவளித்தனர். ஆனால் தமிழர்கள் ஒருபோதும் சிங்களவர்களின் இறைமையை நிராகரித்தவர்கள் அல்லர்.

இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ பதவி வகித்ததில்லை. இராணுவத் தளபதியாக இருந்ததில்லை.

தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்படவில்லை. புறக்கணிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இனப்படுகொலைக்காக சிங்களவர்கள் எவரும் தண்டிக்கப்படவேயில்லை.

மேலும் எவ்.பி.ஐ. தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.

இலங்கை அரசில் பணிபுரியும் நிரந்தர அமெரிக்கப் பிரஜையொருவர் அமெரிக்கக் குற்றவியல் சட்டத்திற்கு மாறாக சித்திரவதை , மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், சட்டவிரோத படுகொலைகள் என்பவற்றில் தொடர்புபட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் அரச சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டமைக்கும் இலங்கை அரசே காரணம்.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவு வழங்கும் ஈரானிற்கு இலங்கை சார்பாக உள்ளது. அதனால் இலங்கை அரசை வெளிவிவகார அமைச்சின் சர்வதேச பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும். என்று உள்ளது.(உ)
http://www.sudaroli.com/pages/news/today/02.htm

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள உரிமைகளை வலியுறுத்தவே கருத்துரிமை மீட்பு மாநாடு: தொல். திருமாவளவன்!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் உண்டா இல்லையா என்பதன் அடிப்படையில்தான் சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (25.01.08) "கருத்துரிமை மீட்பு மாநாட்டை" நடத்துகிறோம் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு தொலைபேசியூடாக இன்று வியாழக்கிழமை (24.01.08) அவர் அளித்த நேர்காணலின் எழுத்து வடிவம்:

கேள்வி: "கண்டனமும் இரங்கலும் தேசத்துரோகமா?" என்ற தலைப்பில் கருத்துரிமை மீட்பு மாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை சென்னையில் நடத்த உள்ளதாக அறிகிறோம். இத்தகையதொரு மாநாட்டை நடத்த வேண்டிய அவசிய சூழல் என்ன?

பதில்: 17 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜீவ் தமிழ்நாட்டில் மரணமடைய நேரிட்டது. அந்த ஒரு சம்பவத்துக்காக தமிழ்நாட்டில் தமிழீழத்தை ஆதரித்துப் பேசுவது- அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது இந்திய அரசுக்கு எதிரான குற்றம் என்று பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு வருகின்றனர். கருத்தைச் சொல்லுவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஏனெனில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகள்-ஆகவே தமிழீழத்தைப் பற்றியே தமிழகத்தில் பேசக்கூடாது. அப்படிப் பேசுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கே அ.தி.மு.க.. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுகவின் தலைவர் வைகோ, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலரை கைது செய்து விடுதலைப் புலிகளைப் பற்றி பேசியதே இந்திய அரசுக்கு எதிரான குற்றம் என்று பொடா சட்டத்தில் சிறைப்படுத்தினார்கள்.

பிறகு பொடாச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கான குழு தமிழகம் வந்தது. பொதுக்கூட்டங்களில் அவர்கள் அவ்வாறு பேசியது குற்றம் இல்லை- தன்னுடைய கருத்துகளைக் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது என்று அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது கூட, திறந்தவெளி நீதிமன்றத்தில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதனைப் பற்றி கருத்துச் சொல்லக்கூடாது என்பது முறையல்ல. ஆதரித்தோ மறுத்தோ பேசலாம் என்று நீதிபதி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு இருக்க, தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதனை அரசியலாக்க ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகவும் இத்தகைய எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிற இயக்கங்களாக இருந்தாலும் தமிழீழத்துக்கு அல்லது விடுதலைப் புலிகளுக்கு தார்மீகமான ஆதரவைத்தான் வழங்க முடியுமே தவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு பொருளாதார உதவிகளோ ஆயுத உதவிகளோ அல்லது எரிபொருள், மருந்து பொருள், உணவுப் பொருள், உடைகள் போன்ற வகையிலான உதவிகளைச் செய்ய முடியாது. யாரும் செய்யவும் இல்லை. ஆகவே தார்மீகமான முறையிலான ஆதரவைத் தெரிவிப்பது, கருத்து தெரிவிப்பது கூட குற்றம் என்றும் தேசத்துரோகம் என்றும் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் உண்டா இல்லையா என்பதன் அடிப்படையில் இந்த மாநாட்டை கூட்டியுள்ளோம்.

கேள்வி: தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் தோழமைக் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. அப்படியான நிலையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞரிடம் இது பற்றி நீங்கள் எடுத்துக் கூறியுள்ளீர்களா?

பதில்: முதல்வரிடம் இதனைப் பற்றி நாங்கள் விரிவாகப் பேசவில்லை. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணிப் பொறுப்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்டு விடுதலை ஆன பின்னர் தமிழக முதல்வரைச் சந்தித்தோம்.

அப்போது "இந்திய அரசியல் சூழலுக்கு ஏற்ப நாம் எல்லாம் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. தமிழர்கள் மீது- ஈழத்தின் விடுதலையின் மீது எல்லோருக்கும் ஈடுபாடு இருக்கிறது என்பதனை யாரும் மறுத்துவிட முடியாது. சூழலுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர் எல்லாவற்றையும் அறிந்தவர். அவருக்கு நாங்கள் எதனையும் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி: இந்த மாநாடு யாருக்கு எதிராக?

பதில்: இந்த மாநாடு தமிழக அரசுக்கு எதிராக ஒருங்கிணைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசுக்கு எதிராகவும் இந்த மாநாட்டை நாங்கள் நடத்தவில்லை. ஈழத்தைப் பற்றியோ புலிகளைப் பற்றியோ இங்கே வாயே திறக்கக்கூடாது என்று சில அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயத்துக்காக திசை திருப்ப முயற்சிக்கின்றன. அதனை முறியடிப்பதற்காகவே இந்த மாநாட்டை நடத்துகின்றோம்.

கேள்வி: இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் போன்றவர்கள் புலிகள் நடமாட்டம் இல்லை என்ற கூறியபோதும் அண்மையில் புலிகள் கைது என பல்வேறு செய்திகள் தொடர்ந்து வருகின்றன. இது பற்றி?

பதில்: இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனும், தென்னக இராணுவ தளபதி நோபுள்தம்புராஜூம் தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் இல்லை என்பதனை தெளிவுபடுத்தியிருக்கின்றனர். ஆனாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கக்கூடிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் மறுபடியும் மறுபடியும் புலிகள் நடமாட்டம் இங்கிருக்கிறது என்று அவர் அறிக்கை விடுகிற காரணத்தால், இங்கே அது அரசியலாக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டு உளவுத்துறை மட்டுமின்றி மத்திய அரசாங்கத்தின் உளவுத்துறையும் பெருமளவில் தவறான செய்திகளை- திசை திருப்பும் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறது. காரணம் எதிர்வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள விடுதலைப் புலிகள் மீதான தடையை மறுபடியும் நீட்டிக்க வேண்டும் என்ற தேவை இருப்பதால் இங்கே புலிகள் நடமாட்டம் இருப்பதாக வதந்தியைப் பரப்பி உண்மை என்று நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.

அதற்காகத்தான் அப்பாவி ஈழத்து இளைஞர்களை- அகதிகளாக வந்திருப்பவர்களைப் பிடித்து அவர்கள் எல்லாம் புலிகள்தான் என்று பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: புலிகள் மீதான தடையை நீட்டித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தேவை இன்னமும் உள்ளதா?

பதில்: இதற்கு அடிப்படையான இரண்டு காரணங்கள் இருப்பதாக அறிகின்றோம்.

1. தமிழீழம் என்கிற தனிநாடு உருவாகவே கூடாது என்ற அரசியல் கொள்கை. அப்படித் தனித் தமிழீழம் உருவானால் இந்திய நாட்டில் வாழ்கிற தமிழர்களும் தனிநாடு கோரிக்கையை நகர வாய்ப்பிருக்கின்றது என்றும் அது இந்திய ஒருமைப்பாட்டு எதிரான சிக்கலை உருவாக்குவதாக அஞ்சுவதாக நாம் அறிகிறோம்.

2. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் அமெரிக்க வல்லரசு முன்னெடுத்திருக்கின்றது. அமெரிக்க வல்லரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதனை தனது கடமையாக இந்திய அரசு கருதுகின்றது. உலக நாடுகள் எல்லாம் அமெரிக்க அரசின் முடிவுகளை ஆதரிக்கக் கூடிய வகையில் அச்சுறுத்தப்படுகின்றனர். அந்த வகையில் இந்திய அரசும் அமெரிக்க அரசாங்கத்தின் பிடியிலே சிக்கி உள்ள காரணத்தால் அமெரிக்க அரசாங்கத்துக்கு ஒத்து ஊதக் கூடிய வகையிலே விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டித்துக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி: நாளைய மாநாட்டிற்கு யேர்மனிய பேராசிரியர், சிறிலங்காவின் புதிய இடதுமுன்னணி கட்சியின் நிர்வாகி, ஈழத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் என முற்றிலும் வெளிநாட்டவரையே அழைத்துள்ளமைக்கு ஏதாவது குறிப்பிடும்படியான காரணம் உண்டா?

பதில்: தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்களை வைத்து பல கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியிருக்கின்றோம். மறுபடியும் அவர்களை வைத்தே- எங்களுக்கு கருத்துரிமை உண்டு என்று சொல்வதனை தமிழக ஊடகங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது. வழக்கம் போல் ஆதரிப்பவர்கள் ஒன்று கூடி பேசியிருக்கிறார்கள்- கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்று உதாசீனப்படுத்திவிடுவார்கள் எனக்கருதிய காரணத்தால் உண்மையிலேயே அனைத்துலக அளவில் மனித உரிமைகள் மீதும் கருத்துரிமை மீதும் நம்பிக்கை வைத்து அதற்காக வாதாடக் கூடியவர்களை அழைத்து கருத்துரிமையை வலியுறுத்த வேண்டியது அவசியம் எனக் கருதிய காரணத்தால் அவர்களை மட்டும் அழைத்திருக்கின்றோம். ஆனாலும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

கேள்வி: தமிழ்நாடு சட்டப்பேரவை தற்போது நடைபெறுவதாக நாங்கள் அறிகின்றோம். அதில் கருத்துரிமை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்களா?

பதில்: கட்டாயமாக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் பேசுவார்கள்.

கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பாக பல்வேறு பொய்ச் செய்திகளை தமிழக ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிடும் நிலையில் தமிழ்நாட்டு மக்களினது உணர்வுகள் எப்படியாக உள்ளது?

பதில்: இந்த மாதிரி பலமுறை பொய்யான செய்திகளை தமிழக ஊடகங்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 1989 இல் ஒருமுறை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று சொன்னார்கள். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது அவர் இறந்துவிட்டார். ஆனால் மூடி மறைக்கிறார்கள் என்று சிங்களவர்கள் பரப்பிவிட்டனர். அதன் பின்னர் அடுத்தடுத்து இம் மாதிரியான பொய்ச்செய்திகள்- வதந்திகளை பரப்புகின்றனர்.

இம் மாதிரியான பொய்ச்செய்திகளை- வதந்திகளை தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. திடீரென்று பிரபாகரன் குண்டுவீச்சில் காயம்- அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளார் என்றெல்லாம் கட்டுக்கதைகளை கட்டிவிட்டார்கள். அது ஒன்றுமே உண்மையில்ல என்பது புலிகளின் மறுப்புச் செய்திகள் மூலமாக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெல்ல வேண்டும்- தமிழீழம் வெல்லப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு- அதற்கான பேராதரவு தமிழக மக்களிடம் வலுவாக உள்ளது.

கேள்வி: எத்தனையோ இடர்களுக்கு மத்தியில் எங்கள் தாயக விடுதலைக்காக தார்மீக ஆதரவளித்து வரும் தாங்கள், தமிழீழத் தாயகம் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன?

பதில்: தமிழீழத் தாயகத்தைச் சேர்ந்த மக்கள், உலக நாடுகளில் பல்வேறு துருவங்களில் புலம்பெயர்ந்து சிதறிக் கிடக்கிறார்கள். தமிழீழம் என்றைக்கு மலரும்- மறுபடியும் தாயகம் என்றைக்கு திரும்புவோம் என்கிற ஏக்கத்தோடு எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களின் கனவு நனவாகக் கூடிய வகையில் மேதகு பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் கடுமையான விடுதலைப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மேதகு பிரபாகரனின் வேண்டுகோளை அல்லது கட்டளையை நிறைவேற்ற முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தமிழீழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கையோடு பொருளாதார அடிப்படையிலான முழுப் பங்களிப்பு அவசியம் தேவை என்றார் தொல். திருமாவளவன்.

சிங்கள அரசுக்கு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, ஈரான், இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகள்- அதுவும் அரசுகள் உதவி செய்கின்றன.

ஆனால் சிங்கள அரசை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிற விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்கு உலகில் எந்த நாடும் அரசும் இல்லை. இருக்கிற ஒரே மூலாதார சக்தி புலம்பெயர் தமிழர்கள்தான். கடந்த 25 ஆண்டுகளாக நீங்கள் தொடர்ந்து உதவி வருவதைப் போல் தொடர்ந்து உதவ வேண்டும்- ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழீழத் தாயக மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாம் விடுக்கிற வேண்டுகோள்.
நன்றி>புதினம்.

Wednesday, January 23, 2008

தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது.

இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது,

தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவுவதால், இனிமேல் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பதிலாக (அதாவது சித்திரை மாதத்தின் முதல் நாள்) பொங்கல் தினம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாக கொண்டப்படும்.

இதன் மூலம் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடலாம்.

அனைத்து கட்சிக்குழுவின் முயற்சி தோல்வி!!! மகிந்தவால் தன்னிச்சையான தீர்வு யோசனை முன்வைப்பு !!!

கிழக்கில் மாகாண சபைத் தேர்தல்- வடக்கிற்கு இடைக்கால நிர்வாக சபை: மகிந்தவால் தன்னிச்சையான தீர்வு யோசனை முன்வைப்பு.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் அனைத்து கட்சிக்குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது தன்னிச்சையான தீர்வு யோசனையை முன்வைத்திருக்கின்றார்.

கிழக்கில் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, அதன்பின்னர் வடக்கில் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை உருவாக்குவதே மகிந்த ராஜபக்ச தன்னிச்சையாக முன்வைத்திருக்கும் தீர்வு யோசனையில் உள்ள முக்கிய விடயமாகும் என்று அனைத்து கட்சிக்குழுவின் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து கட்சிக்குழுவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து கட்சிக்குழுவினரை அரச தலைவர் அலுவலகத்திற்கு அழைத்து அங்கு நடத்திய கூட்டத்தில் உரையாற்றும்போது மகிந்த ராஜபக்ச தனது இந்த தன்னிச்சையான தீர்வு யோசனை குறித்த விபரங்களை வெளியிட்டார்.

எனினும் அனைத்த கட்சிக்குழுவினரை தொடர்ந்தும் செயற்பட்டு தனது தீர்வுத்திட்டம் குறித்த மேலதிக பரிந்துரைகளை முன்வைக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
மகிந்த ராஜபக்சவின் தன்னிச்சையான இந்த தீர்வுத்திட்டத்தால் அனைத்து கட்சிக்குழுவின் இதுவரை கால முயற்சிகள் பயனற்றுப் போய் இருப்பதாக அனைத்து கட்சிக்குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ்க்கட்சி ஒன்றின் முக்கிய பிரமுகர் விசனம் தெரிவித்துள்ளார்.

தனக்கு மிகவும் நெருங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (வரதர் அணி) சிறீதரன் ஆகியோரையும் இந்த கூட்டத்திற்கு அழைத்திருந்த மகிந்த ராஜபக்ச, அவர்களை முன்னிலைப்படுத்தியே தனது தீர்வு யோசனையை முன்வைத்திருப்பதாகவும் அந்த முக்கிய பிரமுகர் விசனம் தெரிவித்தார்.

இதேவேளை அனைத்து கட்சிக்குழுவை நேற்று மாலை கூட்டி அங்கு உரையாற்றிய மகிந்த ராஜபக்ச தனது தீர்வு யோசனை குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:

அனைத்து கட்சிக்குழுவைக் கலைந்து செல்லுமாறு நான் கூறவில்லை. அது இயங்கட்டும். அது தனது தீர்வு யோசனையை முன்வைக்க நான் எந்தவித காலக்கெடுவையும் விதிக்கவில்லை. வேண்டுமானால் அந்த குழுவில் உள்ளவர்கள் தமக்கு தாமே காலவரையறையை நிர்ணயித்து செயற்பட்டும்.

அனைத்து கட்சிக்குழுவின் தீர்வு யோசனைகள் இழுபறிப்படுகிறது என்பதற்காக நான் காலம் தாழ்த்த முடியாது. தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டியது எனது கடமை. அதனை நான் செய்ய தீர்மானித்து விட்டேன். எனக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் அழுத்தங்கள் வந்துகொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இனப்பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்க திட்டமிட்டுள்ளேன். எனது இந்த தீர்வு யோசனையின் பிரகாரம் கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும், வடக்கில் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை நிறுவவும் திட்டமிட்டுள்ளேன்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை பகிர்வது என்ற சரத்தின் பிரகாரமே எனது இறுதித் தீர்வுத்திட்டம் அமையும்.
எனது இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை. ஆகையால் அனைத்து கட்சிக்குழு இந்த தீர்வு யோசனை குறித்து இனி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை அனைத்து கட்சிக்குழுவுடன் இன்று மாலை 4:00 மணிக்கு இடம்பெறும் கூட்டத்தில் தனது தீர்வுத்திட்டம் குறித்து மகிந்த ராஜபக்ச மேலும் விளக்கங்களை அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சிக்குழுவின் தலைவர் போராசிரியர் திஸ்ஸ விதாரன இதுவரை காலமும் அனைத்து கட்சிக்குழுவினர் இணக்கப்பாடு கண்ட விடயங்கள் குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி>புதினம்.

Monday, January 21, 2008

அன்பான தமிழ்மக்களுக்கு ஓர் வேண்டுகோள்!



பிரான்ஸ் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி எமது மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க தேசவிரோதசக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன.

இதன் ஒருவடிவமாக T.T.N எனும் பெயருடன் ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கு எமது அமைப்பின் ஆதரவு இருப்பதாகவும் கூறி பொருளாதார உதவியையும், ஆதரவையும் கோரி எமது மக்களை குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கின்றன.

தேசவிரோத சக்திகளின் இப்பொய்யான பரப்புரைகளை நம்பி இம்முயற்சிகளுக்கு உதவிகளையோ, நிதி உதவியோ வழங்கவேண்டாம். எனவே! விழிப்புடன் செயற்பட்டு தேசவிரோத சக்திகளின் முயற்சிகளை வேரோடு அழித்து எமது விடுதலையை வென்றெடுக்க அனைவரும் செயற்படுவோம்

நன்றி
ரி.ரி.என்
நிர்வாகம்
நன்றி>பதிவு.

Friday, January 18, 2008

790 பள்ளிப் பிள்ளைகளைக் கொல்லும் சிறீலங்கா விமானப்படையின் திட்டம் முறியடிப்பு!!!



கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பள்ளிகளை இலக்கு வைத்து குண்டு மழை பொழிய வந்த விமானங்களை விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு படைப்பிரிவினர் அவற்றின் இலக்கை அடையாது, விரட்டி அடித்துள்ளனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி பள்ளிப் பிள்ளைகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.



புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவின் தாக்குதலில் இருந்து தப்பிப் பறக்கும் விமானம்.

பல சுற்று விமானக் குண்டுகளை இலக்கு நோக்கி வீச முனைந்த சிறீலங்கா வான்படையின் அதி வேக விமானங்களை எதிர்த்து புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவு நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து அவை இலக்கை அடையா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளன.


இதன் காரணமாகவும் பதுங்குகுழிகளில் அடைக்கலம் பெற்றதன் காரணமாகவும் சுமார் 790 பள்ளிப் பிள்ளைகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

தமது நாசகார நோக்கத்துக்கான இலக்குகளை அடைய முடியாத விமானிகள்.. இலக்குகளைச் சுற்றிய பகுதிகளில் குண்டுகளைப் போட்டு விட்டு விமானங்கள் தப்பிப் பறந்துள்ளன. இதனால் ஒருவர் பலியாகி 7 பேர் காயமடைந்துள்ளனர்.




விமானத் தாக்குதல் வலிந்து ஓய்வுக்குக் கொண்டு வரப்பட்ட பின் மக்கள் பாதுகாப்பிடங்களை நோக்கி ஓடும் பதட்டமிகு காட்சி.



விமானப்படை வீசிய குண்டுகளில் ஒன்று நிலத்தை ஊடுருவி வெடித்ததில் ஏற்பட்ட 20 அடி ஆழமான குழி.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24320

எமது தலையீட்டை சிறிலங்காவில் உள்ள சிலர் விரும்புவதில்லை: பிரித்தானியா!!

எமது தலையீட்டை சிறிலங்காவில் உள்ள சிலர் விரும்புவதில்லை. அமைதியை எவ்வாறு முன்நகர்த்துவது என்பது தொடர்பாகவே எமது தலையீடுகள் இருக்கும். அதில் எமக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் போது உரையாற்றிய பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சரும், மேற்கு ஆசியப் பிராந்தியத்திற்கான அமைச்சருமான ஹிம் ஹாவெல் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அனைத்துலக சமூகம் இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகளை நிறுத்தி அமைதிக்கான சூழலை உருவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிரை சிறிலங்கா அரசாங்கம் இணைத்துக் கொள்ளாதது கவலை தருகின்றது.

போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்துள்ளதனால் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கே உண்டு. மகாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்விற்கு அப்பால் செயலாற்றி அனைத்து கட்சிக் குழு சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

எனது பார்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அனைத்து கட்சிக்குழுவில் பங்குபற்ற அழைக்காதது மிகப் பெரும் தவறு.

அனைத்து கட்சிக்குழு தனது இறுதியான பரிந்துரைகளை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க உள்ளது. அந்த பரிந்துரைகள் மாகாண மட்டத்திலான அதிகாரங்களைத் தாண்டி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். தீர்வுக்கான முயற்சிகளை அரச தலைவர் துணிச்சலுடன் மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஐக்கிய இலங்கைக்குள் எல்லா மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் தீர்வு காணப்பட வேண்டும். அனைத்துலக சமூகம் அதனை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். மற்றுமொரு பின்னடைவை பார்க்க நாம் விரும்பவில்லை.

சிறிலங்காவின் இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை காண முடியாது என்பதனை சிறிலங்கா அரசாங்கத்திற்கான செய்தியாக நாம் கூறிக்கொள்கின்றோம். விடுதலைப் புலிகளுக்கும் அது பொருந்தும்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை இணைந்த இலங்கைக்குள் பெறுவது கடினமானது. எனவே தான் விடுதலைப் புலிகள் சுயாட்சி முறையை முன்வைத்து வருகின்றனர் என்று சில தமிழ் மக்கள் வாதிடுகின்றனர். எனவே அரசாங்கம் இந்த அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் தீர்வைக்காண விரைவாக முன்வர வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து இதயச் சுத்தியுள்ள நடவடிக்கைகளை நாம் எதிர்பார்க்கின்றோம். தமிழ் மக்களின் சுயாட்சி உரிமைக்கு மாற்றீடான எந்த தீர்வுத்திட்டத்தையும் அரசாங்கம் முன்வைக்கத் தயாராக வேண்டும். நம்பிக்கைகளும், உறுதியும் உருவாகாது எதுவும் நிகழாது.

செயற்திறன் மிக்க மனித உரிமை கண்காணிப்புக்குழுவினை இலங்கையில் அமைப்பதற்கான கோரிக்கைக்கு பிரித்தானியா ஆதரவை வழங்கும். தற்போது போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வெளியேறிய நிலையில் அது முக்கியமானது.

தொடர்ச்சியான வன்முறைகளின் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்பதனை மோதலில் ஈடுபடும் தரப்புக்கள் உணரும் வரை அமைதி உருவாகாது. எமது தலையீட்டையும் சிறிலங்காவில் உள்ள சிலர் விரும்புவதில்லை. அவர்கள் யதார்த்தத்தை உணராதது எமக்கு கவலை தருகின்றது. எமது தலையீடுகள் அமைதியை எவ்வாறு முன்நகர்த்துவது என்பது தொடர்பாகவே இருக்கும். அதில் எமக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது.

நாம் தற்போதும் சிறிலங்காவின் அமைதி முயற்சிகளுக்கு உதவுவதற்கு தயாராகவே உள்ளோம் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

வன்னியில் "உரிமைக்குரல்" எழுப்பிய எம்ஜிஆரின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உரிமைக்குரல் எழுப்பி வந்தரான தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும், 91 ஆவது பிறந்த நாள் நிகழ்வும் கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு கிளிநொச்சி பாரதிபுரத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மாணிக்கம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பொதுச்சுடரினை போராளி காக்கா ஏற்றினார்.

ஈகச்சுடர்களை கிளிநொச்சி மாவட்ட எம்ஜிஆர் சங்கத் தலைவர் நா.வேலாயுதம், "புலிகளின் குரல்" செய்தியாளர் ந.கிருஸ்ணகுமார் ஆகியோர் ஏற்றினர்.

எம்ஜிஆர் அவர்களின் படத்திற்கு பாரதி வித்தியாலய முன்னாள் முதல்வர் கனகரத்தினம் சுடரேற்றினார்.

மலர்மாலையினை "இசைவிழி" வாணிபப் பொறுப்பாளர் கானொளியன் சூட்டினார்.

நினைவுரைகளை எம்ஜிஆர் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் இ.செல்வக்குமார், நா.வேலாயுதம் ஆகியோர் நிகழ்த்தினர்

நிகழ்வில் தமிழ் அரங்கக் கல்லூரியின் இசை நிகழ்ச்சியுடன் புதுவை அன்பனின் "ஒரு தாயின் கதை" ஆற்றுகையும், எம்ஜிஆர் நடித்த இரு படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
நன்றி>புதினம்.

Thursday, January 17, 2008

லூய்ஸ் ஆர்பரின் கருத்தினை நிராகரித்தது சிறிலங்கா!!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் கருத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதையிட்டு லூய்ஸ் ஆர்பர் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில்,

சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதால் இலங்கையில் மிக மோசமான வன்முறைகள் இடம்பெறும் என்றும் அதனைக் கட்டுப்படுத்தாவிடின் அது போர்க் குற்றமாகவே கருதப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று அறிக்கையினை வெளியிட்டிருக்கின்றார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கம் மிகவும் ஆழமாக ஆராய்ந்ததன் பின்னரே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டது.

போர் நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் அந்த ஒப்பந்தத்தை முறையாகக் கடைப்பிடிக்காததுடன் பேச்சுவார்த்தைகளிலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதிலும் அவர்கள் நாட்டம் காட்டவில்லை. இதனால் பேச்சுக்கான அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின.

இந்நிலையில் விடுதலைப் புலிகளை அடியோடு வேரறுப்பதனை விட அரசாங்கத்திற்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

விடுதலைப் புலிகளை அழிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தீவிரம் காட்டினாலும் மனித உரிமைகளையும் அரசு மதித்தே வருகின்றது.

இந்நிலையில் லூய்ஸ் ஆர்பரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை பொருத்தமற்ற ஒன்றாகவே உள்ளது. லூய்ஸ் ஆர்பரின் அறிக்கையிலுள்ள கருத்துக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.

அத்துடன் படையினரோ அல்லது காவல்துறையினரோ மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படுவதனை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. குறிப்பாக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 16, 2008

மனித உரிமை மீறல்கள் தொடர்வதானது அனைத்துதுலக போர்க்குற்றமாகக் கருதப்படும்: லூய்ஸ் ஆர்பர்!!!

மனித உரிமை மீறல்கள் தொடர்வதானது அனைத்துதுலக போர்க்குற்றமாகக் கருதப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் உயரதிகாரி லூய்ஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் சிறிலங்கா சென்றிருந்து லூய்ஸ் ஆர்பர், பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்த பின்னர் ஜெனீவாவில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், ஜனவரி 16 ஆம் நாள் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வரும் நிலையில், அனைத்துலக விதிமுறைகளின் படி, மனித உரிமை தொடர்ந்தும் மதிக்கப்பட வேண்டும்.

போரை மேலும் உக்கிரமாக்கும் முயற்சி, அந்நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பினரின் மனித உரிமை தொடர்பில் மேலும் மோசமான சூழ்நிலையையே உருவாக்கும்.

பொதுமக்கள் பாதுகாப்பையும் இன ஒடுக்குமுறையற்ற சூழலையும், வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமைகளையும் அனைத்துலக விதிமுறைகளுக்கமைய மதிப்பளித்து நோக்குவது அவசியம்.

பொதுமக்களின் வாழ்வுரிமையைப் பறிப்பது, கட்டாயமாகத் தடுத்து வைப்பது, திட்டமிட்ட இடப்பெயர்வை உருவாக்குவது, கடத்திச் செல்வது, மனிதாபிமானமற்ற ரீதியிலும் மனிதத்திற்குப் புறம்பான வகையிலும் மக்களை வன்முறைக்குள்ளாக்குவது, கொடுமைப்படுத்தி வன்முறையைத் திணிப்பது மற்றும் தேவையற்ற தண்டனைகளை வழங்குவது உட்பட, சிறுவர்களை போருக்குப் பயன்படுத்துவது போன்ற அனைத்தும் அனைத்துலக போர்க்குற்றமாகக் கருதப்படுகின்றன.

இத்தகைய குற்றங்களை எந்தவொரு பகுதியும் மீறும் பட்சத்தில், அவை அனைதத்துலக குற்ற விதிமுறைகளின் கீழ், போர்க்குற்றமாகக் கருதப்படும். அதிகாரத்தை வைத்திருப்போரும் கட்டளைகளைப் பிறப்பிப்போரும், இந்த போர்க்குற்ற விதிகளின் கீழ் நோக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Tuesday, January 15, 2008

தமிழர் புத்தாண்டு தினமான தைத்திருநாளில், தமிழர் தாயகத்தில் நடைமுறைக்கு வந்தது "நல்லளிப்பு"

தமிழ் மக்களின் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15.01.08) நல்லளிப்பு என்ற கைவிசேடம் வழங்கும் நடைமுறை தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆரிய அடிப்படையிலான சித்திரைப் புத்தாண்டு தமிழரின் புத்தாண்டு என்று கருதப்பட்டு அதில் கைவிசேடம் வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது.

தமிழ் மக்களின் நடைமுறையில் உள்ள வழுக்களை களையும் வகையில் கைவிசேடம் எனப்படுவது தமிழரின் உண்மை புத்தாண்டான தைப்பொங்கல் நாளான புத்தாண்டு அன்று "நல்லளிப்பு" என்று வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்கம் இன்று கிளிநொச்சியில் உள்ள தமிழீழ வைப்பகத்தில் தொடங்கி வைக்கப்பட்டதுடன் தனியார் மற்றும் அரச நிறுவனங்களிலும் நல்லளிப்பு வழங்கப்பட்டது.
நன்றி>புதினம்.

Thursday, January 10, 2008

விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் முட்டாள் கருணாநிதி--சுப்பிரமணியம் சுவாமி!!!

வைக்கோவும் நெடுமாறனும் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கவில்லை: என்கிறார் சுப்பிரமணியம் சுவாமி

பாதுகாப்பு காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோன் சிங் அவர்களின் சிறீலங்காவிற்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டது எனத் தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கள் பின்வருமாறு:

விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் இந்திய பிரதமரின் பெயரும் அடங்கியிருக்கின்றது. இந்தியாவின் பிராந்திய செயற்பாட்டை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை.

அதேவேளை சிறீலங்கா அரசு தமிழ் மக்களை பாகுபாடாக நடத்தும் அணுகுமுறையை கைவிடவேண்டும். சிறீலங்கா அரசினது தற்போதைய தவறான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாதபட்சத்தில், அரசு தனிமைப்படுத்தும் அபாயத்தை எட்டும். கடந்த காலம் போன்று இனவாத தளத்திலிருந்தே சிறீலங்கா அரசு செயற்படுகின்றது.

அதேசமயம் இந்தியா தமிழ்மக்களின் பிரச்சனைக்கான தீர்வை விரும்புகின்றது. ஆனால் விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. இந்தியாவின் நிலைப்பாட்டில் எப்பொழுதும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

துரதிஷ்டவசமாக விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் முட்டாள் கருணாநிதி மீது மத்திய அரசு எதுவித சட்ட நடவடிக்கையையும் எடுக்காமால் இருக்கின்றது. வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோரின் எதிர்ப்புக் காரணமாக இந்திய பிரதமர் சிறீலங்காவுக்கான விஜயத்தை இரத்துச் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>பதிவு.

Monday, January 07, 2008

விடுதலைப் புலிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்!!!

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஸ்லோவேனியன் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரசு போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியது உக்கிர மோதல்களுக்கே வழிவகுக்கும். இந்த மோதல்களில் பெருமளவான மக்கள் கொல்லப்படலாம். விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசு தனது அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.

பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டதும், சிறிலங்கா அரசு குறிப்பிடத்தக்க அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் தீர்வுத்திட்டத்தை விரைவாக முன்வைக்க வேண்டும். இருதரப்பும் அரசியல் தீர்வை நோக்கி செயலாற்ற வேண்டும் அதுவே சிறிலங்காவில் நிரந்தர அமைதியைக் கொண்டு வரும்.

போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசின் தன்னிச்சையான வெளியேற்றம் மோதல்களை தீவிரமடைய செய்யும். இது எற்கனவே மோசமடைந்துள்ள மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்களை மேலும் மோசமடைய செய்யும்.

போர் நிறுத்தம் முறிந்து போனது பேச்சுவார்த்தைக்கான வழிகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. போர் நிறுத்த கண்காணிப்புக்குழு வெளியேறுவதும் கவலை அளிக்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

புலிகளுக்கு தனி நாட்டை பெற்றுக்கொடுப்பதற்கு, அரசினால் எடுக்கப்பட்ட அபாயகரமான முடிவு!!!

வீரகேசரி நாளேடு - ஐ.தே.க. எச்சரிக்கை;

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியவேண்டிவரும் என்கிறது 2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவு புலிகளுக்கு தனி நாட்டை பெற்றுக்கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட அபாயகரமான முடிவாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக புலிகளை நாம் சர்வதேச வலைக்குள் சிக்கவைத்திருந்தோம். எனினும் அதனை அரசாங்கம் நாசமாக்கிவிட்டது. எதிர்காலத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகிகொள்வதாக எடுத்துள்ள முடிவு தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுதி விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக மக்களுக்கு உறுதியளித்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது யுத்தநிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதகாக எழுத்து மூலமாக உறுதியளித்திருந்தது.2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய தேசியக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்காகவும் அரசியல் தீர்விற்காகவும் பொறுப்புடன் செயற்படுவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. உடன்படிக்கை சட்டரீதியானது யுத்த நிறுத்த உடன்படிக்கை சட்டரீதியிலானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.இவ்வாறான பின்னணியில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் அவசரமாக தீர்மானத்தை எடுத்து அத்தீர்மானத்தை ஜனவரி மாதம் 3 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக நோர்வே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக 2005 ஆம் ஆண்டும் அரசியல் தீர்விற்காக உழைப்பதாக 2006 ஆம் ஆண்டும் மக்களுக்கு உறுதிமொழி வழங்கிய அரசாங்கம் 3 வருடங்களுக்கு பின்னர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிகொள்வதற்கு முடிவெடுத்தது ஏன்? என்ற சந்தேகம் இன்று வலுப்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைசாத்திடப்படுகின்ற போது நாடு யுத்தத்திற்கு முகம் கொடுத்து கொண்டிருந்ததுடன் பொருளாதாரம் சீரழிந்திருந்தது.இலங்கை படையினரின் பிரதான முகாம்கள் பல புலிகள் வசமிருந்தன. கட்டுநாயக்க விமான நிலையம் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி இருந்தது. துறைமுகங்கள் போன்ற பொருளாதார மத்திய நிலையங்கள் பலவற்றின் செயற்பாடுகள் புலிகளின் தாக்குதல்களால் செயலிழந்திருந்தன நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து பொருளாதார வளர்ச்சி மறை() வரையிலும் குறைந்திருந்தன. சர்வதேசத்தால் ஏற்கப்பட்ட உடன்படிக்கை

இவ்வாறான பின்னணியில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும் மற்றும் தேசிய இறைமையை பாதுகாப்பதற்காகவுமேயாகும். வெளிநாடுகள் மற்றும் 67 சர்வதேச அமைப்புகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக இறைமை ஒருமைப்பாட்டை பாதுகாக்க மற்றும் அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தன.பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்க்கை சுமை அதிகரித்திருந்த நிலையில் டொலரின் பெறுமதி 93 ரூபா வரை சக்திபடைத்து நாட்டினது நிலைமையை முன்னகர்த்தி முதலீட்டார்கள் அதிகளவாக வருகைதந்ததன் மூலமாக புதிய தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டன. அமெரிக்க மிலேனியம் வெலஞ் நிதியம் இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. டோக்கியோ உதவி மாநாட்டில் 45 ஆயிரம் கோடி டொலர் நிதியுதவியை நமக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா யுத்த கப்பலை இலவசமாக வழங்கியது வருடக்கணக்கில் இருந்த ஆயுத தடையை நீக்குவதற்கு அமெரிக்கா, இந்தியா,மற்றும் ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு இராணுவ பயிற்சி , ஆலோசனை மற்றும் ஆயுதங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தன. பயங்கரவாத நடவடிக்கையை ஒழிப்பதற்காக சர்வதேச புலனாய்வு பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இதன் பயனாக அமெரிக்காவின் யுத்தக்கப்பல் இலவசமாககிடைத்தது.

அவ்வாறு நாட்டை சக்திபடைத்து கொண்டு நாம் அரசியல் தீர்வொன்றிற்காக பேச்சுவார்த்தையை முன்னகர்த்திக்கொண்டு சென்றோம். ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் போது தனிஇராச்சியத்திற்கு பதிலான மாற்றுத்திட்டங்களை முன்வைப்பது தொடர்பாக பேசுவதற்கு புலிகளை இணங்க வைப்பதற்கு எங்களுக்கு முடிந்தது. இனங்கள் ஐக்கியப்படுத்த முடிந்தது

இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்பட்டது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் வடக்கு மற்றும் தெற்கிற்கு பயணிப்பதற்கு சர்ந்தர்ப்பம் கிடைத்ததுடன் சகலரும் இலங்கையர்கள் என்ற உணர்வும் ஏற்படுத்தப்பட்டது. புலிகள் அமைப்பு ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வை நோக்கி சென்றுகொண்டிருந்த பாதையை விட்டு விலகி 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிச்சென்றனர். பேச்சுவார்த்தை மேசையிலிருந்து புலிகள் விலகிநிற்பதற்கு புலிகள் தீர்மானித்திருந்த போதும் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தனர். 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியமை மிகவும் குறைவாகவே இருந்தது. எனினும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் கலைக்கப்பட்டதனால் அரசியல் தீர்விற்கான பாதை மூலமாக முன்னோக்கி செல்வதற்கு சந்தர்ப்பம் இல்லாதொழிந்தது.புலிகளை சர்வதேச வலைக்குள் சிக்கவைத்திருந்தோம் சர்வதேச சமூகத்தினரால் மதிக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் வலைக்குள் தாம் சிக்கவைக்கப்பட்டதாக புலிகள் பலமுறை குற்றஞ்சாட்டினர். இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிசென்ற புலிகள் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி சென்றால் சர்வதே சமூகத்தின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக அதிலிருந்து விலகிக்கொள்ள முடியாதிருந்தது.இன்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிகொண்டமைக்கான முழு பொறுப்பையும் இலங்கை அரசாங்கம் தனது தோளில் சுமந்து கொண்டது. இதன் மூலமாக இலங்கை சர்வதேசத்தின் விமர்சனங்களுக்கு உள்ளாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேசம் கண்டித்துவருகின்றதுயுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவை சர்வதேச சமூகம் கண்டிக்கக்தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நட்புறவு நாடுகளும் சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கண்டித்துள்ளன. நிதியுதவிகளை வழங்குகின்ற நாடுகளும் கண்டித்துள்ளன. அதிகாரத்தை பகிர்வதற்கான தீர்வு திட்டத்தை விரைவில் முன்வைப்பதாக இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல தடவைகள் முன்மொழிந்ததன் பின்னர் இவ்வாறானதொரு முடிவை எடுத்தமையினால் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது கடும் அதிருப்தியினை கொண்டிருக்கின்றது.

வெளிநாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் இறுதி கோட்டை இலங்கை அரசாங்கத்தினாலேயே கீறப்பட்டுவிட்டது. இதன் பெறுபேறாக சர்வதேச சமூகத்தின் ஆதரவு நாட்டிற்கு கிடைக்காமல் போய்விடும் என்பதுடன் இலங்கைக்காக செயற்பட்ட நாடுகளின் அழுத்தங்கள் குறைந்து விடும். அச்சுறுத்தல் கொண்ட நாடாகும்

யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலகியதிலிருந்து சிவில் யுத்தம் இடம்பெறுவதற்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாக சில நாடுகள் இலங்கையை மீண்டும் பெயர்குறிப்பிட்டுள்ளன.

எமக்கு கிடைக்கின்ற நிதியுதவி குறைந்து முதலீட்டாளர்களின் வருகை குறைந்து செல்லும். வந்திருக்கின்ற முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.யுத்த உதவிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவது நிறுத்தப்படும். இதன் பொதுவான பெறுபேறாக சர்வதேச மட்டத்தில் இலங்கை பலவீனம் புலிகள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அதிகளவாக சக்தியடைவார்கள்.

அதுமட்டுமல்லாது யதார்த்தம் இன்னும் இன்னும் அபாயகரமானது யுத்த நிறுத்த ஒப்பந்தம் வேறு நாடுகளில் செய்துக்கொள்ளப்பட்டதை போலன்றி விசேடமானதாகவே கணிக்கப்பட்டது. வேறு நாடுகளில் சண்டையிட்டுக்கொள்ளகின்ற இரண்டு தரப்பின் படையினரையும் ஒரேமட்டத்தில் வைத்துகொண்டே இவ்வாறான ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகின்றது. எனினும் இந்த ஒப்பந்தத்தின் 1;3 பிரிவின் பிரகாரம் இலங்கையின் இறைமை ஒருமைப்பாடை தொடர்ந்து பாதுகாப்பதற்கான பொறுப்பு இலங்கை ஆயுத படையினருடைய பொறுப்பாகும். இந்த உரிமையை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

யுத்த நிறுத்தத்தை முன்னிலைப்படுத்தி சமாதானபேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுகின்ற போது புலிகள் இலங்கை ஆயுத படைகளின் உரிமையை ஏற்றுக்கொண்டு அதற்கிணங்க செயற்படவேண்டிய நிலை ஏற்படும். மோசமான நிலைக்கே வழிவகுக்கும் வெளிவிவகார மற்றும் ஊடக அமைச்சர்கள் கூறுவதைப்போல யுத்த நிறுத்த ஒப்பந்தம் இன்றி மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயார் என்றும் அவ்வாறான தொரு நிலை ஏற்பட இலங்கை முன்பிருந்த நிலையினை விடவும் மோசமான நிலைக்கே முகம் கொடுக்க வேண்டியநிலை ஏற்படும். பேச்சுவார்த்தை மேசையில் இலங்கை ஆயுதப் படையை உயர் மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இந்த அரசாங்கத்தினால் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல எதிர்காலத்தில் சர்வதேச சமூகம் மற்றும் புலிகளுக்கு இலங்கை படையினரின் பரம உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும். இன்று பழைய யூகோஸ்லாவிய யுகமே உருவாகியுள்ளது. இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைக்குச் சென்றால் இலங்கை படையினரும் புலிகளின் படையினரும் சமமானவர்கள் என்ற கணிப்பீட்டின் அடிப்படையிலேயே செல்லவேண்டியிருக்கும். இது அபாயகரமானது. இந்த அபாயகரத்தை இலங்கை அரசாங்கமே ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

இராணுவத்திற்கே படையினருகோ நன்மையில்லை யுத்த நிறுத்தத்திலிருந்து விலகிகொண்டமையினால் தேசிய ரீதியில் எமக்கு எவ்விதமான நன்மையும் இல்லை. இலங்கை படையினரின் உரிமையை ஏற்றுக்கொள்வதை அரசாங்கத்தின் மூலமாகவே மீறப்பட்டு விட்டது. இதனால் இராணுவத்திற்கோ படையினருக்கோ எவ்விதமான நன்மையோ சக்தியோ இல்லை. அரசாங்கத்தின் இந்த முடிவினால் இலங்கையின் எதிர்காலம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் மட்டுமல்லாது பேச்சுவார்த்தை மேசையில் நாம் பலமிழந்த நிலையிலேயே இருக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தின் முடிவு அமைந்துள்ளது.புலிகளே பலம்பெற்றுள்ளனர்அரசாங்கத்தின் இந்த முடிவின் மூலமாக புலிகள் பலம்பெற்றுள்ளனரே தவிர அதன் மூலமாக நாட்டிற்கோ மக்களுக்கோ எவ்விதமான நன்மையும் இல்லை அரசாங்கதின் இந்த முடிவு புலிகளின் தனிநாட்டு கோரிக்øகக்கு சர்வதேச வாய்ப்பான சூழலை ஏற்படுத்தி கொடுத்தமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யுத்த மற்றும் இரத்த வெள்ளத்தில் மிதந்த நிர்வாகிகளுக்கு யதார்த்தம் பற்றி தெரியாது என்பதுடன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலக்கமின்மையே எடுத்துக்காட்டுகின்றது.வைராக்கியத்துடன் வைராக்கியமாக செயற்படகூடாது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வின் மூலமாக இந்தநாட்டிற்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே ஐக்கிய தேசியக்கட்சியின் விசுவாசமாகும் ஜனநாயகவாதிகளாக நாம் செயற்பட்டால் மட்டுமே பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடிக்கமுடியும். வைராக்கியத்துடன் வைராக்கியமாகவோ, பயங்கரவாதத்துடன் பயங்கரவாதமாகவோ தோல்வியடையச்செய்ய முடியாது என்பதை இன்றைக்கு 2550 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கற்றுக்கொண்டுள்ளோம். எனினும் இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மற்றும் இணக்கப்பாட்டின் மூலமாகவே தீர்வு காணமுடியும். உலகத்திலுள்ள பல நாடுகளும் இவ்வாறான முறையின் மூலமாகவே பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கின்றது. அவ்வாறான தீர்விற்காக எமது ஆதரவை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் .எனினும் அதிகாரத்தை பாதுகாத்து கொள்வதற்காக நாட்டின் எதிர்காலத்தை அடகுவைக்கும் தீர்மானத்திற்காக நாம் மௌனமாக இருக்கமுடியாது. அரசாங்கத்தின் இந்த முடிவு புலிகளுக்கு வேறு இராஜ்ஜியத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முக்கியமான தீர்மானமாகும் .நாடு தேசியம் மற்றும் இனம் எதிர்காலம் யாவுமே அபாயகரமானது. அதிஷ்டமில்லாதது. இழுத்து வீசி யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகிக்கொண்டமை ஏன்? இவ்வாறான அதிஷ்டமில்லாத போது அரசாங்கத்தினால் எவ்வாறு அரசியல் தீர்வை நோக்கி செல்ல முடியும். இந்த பயங்கரமான பிரச்சினைக்கு அரசாங்கத்திடமிருந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் தேவை.

Sunday, January 06, 2008

சிறிலங்கா அரசின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மேலும் அதிகரிக்கலாம்: "சண்டே ரைம்ஸ்"

சிறிலங்கா அரசாங்கத்தின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகள் பலவீனமாகி விட்டதாக படை அதிகாரிகளும், அரச தலைவர்களும் அண்மைய மாதங்களில் தெரிவித்து வருகின்றனர். கிழக்கு முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் அங்கு சிறு, சிறு மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. விடுதலைப் புலிகளின் பத்து கப்பல்களை அழித்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காயமடைந்துள்ளதாகவும் படை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

வன்னியில் முடக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை முறியடிக்கப் படையினர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது வான்படையினரும் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

படை அதிகாரிகளின் தகவல்களின் படி கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையிலும் 2,100 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 1300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் விடுதலைப் புலிகளின் பலம் 3,500 உறுப்பினர்களே என்று புதிதாக ஆரம்பித்துள்ள வார ஏடு ஒன்றிற்கு கடந்த ஆண்டு படைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

அவரது கூற்று உண்மையானால் இறந்தவர்கள் போக 1,400 விடுதலைப் புலிகளே தற்போது எஞ்சியிருக்க வேண்டும். அவர்களில் 1,300 பேர் காயமடைந்திருந்தால் தற்போது 100 பேரே எஞ்சியிருக்க வேண்டும்.

மற்றுமொரு புலனாய்வுத் தகவல் விடுதலைப் புலிகளின் பலம் 7,500 பேர் என தெரிவித்துள்ளது. இந்த தகவல் உண்மையானால் இறந்ததும் காயமடைந்ததுமாக 3,400 பேர் போக தற்போது 4,100 பேரே எஞ்சியிருக்க வேண்டும்.

ஆனால் இலங்கையில் பொது மக்களுக்கு உண்மை நிலமைகளை தெரிவிப்பதில் ஊடகத்துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. முன்னர் நடைபெற்ற எல்லா ஈழப்போர்களும் நீண்டகால ஊடகத்தணிக்கை மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழே நடைபெற்று வந்தன.

மோதல்கள் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது. அரசு ஒழுங்கு செய்யும் போது தான் செல்ல முடியும்.

எனவே மோதல்கள் தொடர்பாக வெளியிடப்படும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை சுயாதீனமாக உறுதிப்படுத்துவது கடினமானது. பிரகடனப்படுத்தப்படாத நாலாம் கட்ட ஈழப்போரில் ஊடகத்தடைகள் கொண்டுவரப்படாத போதும், ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்களும், மிரட்டல்களும் மோசமானவை. ஜனவரி 16 ஆம் நாளுக்குப் பின்னர் அது பிரகடனப்படுத்தப்பட்ட போராகி விடும். எனவே நிபந்தனைகள் மிகவும் சிக்கலாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விடுதலைப் புலிகள் பலவீனமாக இருந்தால், அவர்களின் கப்பல் பலம் அழிக்கப்பட்டிருந்தால், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காயமடைந்திருந்தால் போர் நிறுத்தத்த்தில் இருந்து வெளியேறுவதற்கான காரணத்தை அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

போர் நிறுத்த உடன்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்தார். 2005 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அவர் அறிவித்திருந்தார்.

எனினும் அவர் பதவியில் அமர்ந்த ஒரு வருடங்களில் அமைதி பேச்சுக்களை ஆரம்பிக்கும் பொருட்டு நோர்வேக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Saturday, January 05, 2008

சிறீலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்த விலகலுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!!!

ஏறக்குறைய 6 ஆண்டுகாலமாக சிறீலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சிறீலங்கா அரசு விலகியமைக்கும், மனித உரிமைகளைப் பேண சிறீலங்கா அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரான்ஸ் அரசு உத்தியோக பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற் கூறப்பட்ட கருத்துக்களை, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டு உதவி அமைச்சர் ராம யாடே அவர்கள், இயற்கை அழிவுகள் மற்றும் மனித உரிமைகள் துறை சார் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசு சனநாயக கோட்பாடுகளை கடைப்பிடிக்க முன் வரவேண்டும் என்பதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயற்பாடுகளுக்கு சிறீலங்கா அதிகாரவர்க்கம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் ராம யாடே அம்மையார் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் மனித உரிமை செயற்பாட்டாளர் படுகொலை செய்யப்பட்டமைக்கான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

Friday, January 04, 2008

அனைத்துலக சமூகத்தில் இருந்து சிறிலங்கா மேலும் தனிமைப்படுத்தப்படும்: "ரொய்ட்டர்ஸ்"

சிறிலங்கா மீது மேற்குலக நாடுகள் அதிருப்தியைக் கொண்டுள்ளன. எனவே தான் சிறிலங்கா ஆசியப் பிராந்தியத்தில் தனது இராஜதந்திர நடவடிக்கைகயை தற்போது அதிகரித்துள்ளது. எனினும் போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறியது அரசை மேலும் தனிமைப்படுத்தும் என "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்திற்கு எழுதிய ஆய்வுப்பத்தியில் பீற்றர் ஆப்ஸ் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்சின் தமிழக்கம் வருமாறு:

ஏற்கனவே நெருக்கடியில் இருந்த போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒரு தலைப்பட்சமாக சிறிலங்கா வெளியேறியது. அதனை அனைத்துலக சமூகத்தில் இருந்து அதிகளவில் தனிமைப்படுத்தலாம். எனினும் அது முதலீடுகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இரு தசாப்தங்களாக நடைபெற்று வந்த இனப்போரை நோர்வேயின் அனுசரணையுடன் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும், 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அது முறிவடைந்தது. தமிழ் மக்கள் வாழும் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட போர், சிறிலங்காவின் தலைநகரில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கள் அதற்கான காரணங்கள்.

எனினும் கடந்த புதன்கிழமை அரசு ஒருதலைப்பட்சமாக வெளியேறுவதாக அறிவிக்கும் வரையிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் காகிதத்தில் மட்டுமே இருந்தது. போர் நிறுத்தம் முடிந்து விட்டது என்பது எமக்கு முன்னரே தெரியும் எனப் பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட தென்னாசியப் பிராந்திய ஆபத்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஜெனீபர் ஹர்பிசன் தெரிவித்துள்ளார். இது மிகவும் விசித்திரமானது. எனினும் பெரும் அது வேறுபாடுகளை ஏற்படுத்தப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும், அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா அரசின் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், மகிந்த அரசு பேச்சுக்களின் மூலம் தீர்வைக்காணும் என்பதில் தான் நம்பிக்கை கொள்ளவில்லை என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் தனிநாட்டுக்கான தனது கோரிக்கையைத்தான் புதுப்பிக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். போர் நிறுத்த உடன்பாடானது அதிகாரபூர்வமாக முறிந்துபோவது மோதல்களை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் என ஆய்வாளர்களும், இராஜதந்திரிகளும் தெரிவித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உக்கிரமடைந்த போரில் 5,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது போரில் உயிரிழந்தோரின் தொகையை 70,000 ஆக உயர்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு கொழும்பு பங்குச்சந்தை 6.7 விகித இழப்பை சந்தித்துள்ளது. அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கையீனமே இதற்கான காரணம். ஏற்கனவே வீழ்ச்சி அடைந்து வரும் அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்காவின் ரூபாயும் ஒரு விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆனால் 26 பில்லியன் டொலர் பொருளாதாரத்தின் 2008 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7 விகிதமாக இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்து வருகின்றது. கடந்த ஒக்ரோபர் மாதம் அரசு ஐரோப்பிய பிணை மூலம் 500 மில்லியன் டொலர்களை பெற்று தன்னை வலுப்படுத்த முயற்சித்திருந்தது.

போரானது தென்னிலங்கையின் செயற்பாடுகளில் சிறிதளவான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது எனப் பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் எண்ணவில்லை. ஆனால் தற்போதைய நிலையே எதிர்காலத்திலும் தொடரலாம் என புரோகெரேஜ் எக்ஸ்ரோட்டிக்ஐ சேர்ந்த வியூகவியலாளர் ஸ்ருவாட் கிளவர்கவுஸ் தெரிவித்துள்ளார்.

குறுகிய கால விளைவாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்களின் நிர்வாகப் பகுதியான வடபகுதியில் மோதல்கள் அதிகரிப்பதுடன், தெற்கிலும், கிழக்கிலும் குண்டுத்தாக்குதல்களும் நிகழலாம் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கொழும்பில் தாக்குதல்கள் தீவிரமடைந்தால் அது நாட்டின் உல்லாசப்பயணத்துறையைப் பாதிக்கலாம். 2004 ஆம் ஆண்டு எற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் மற்றும் தொடர்ச்சியான மோதல்களில் அது எற்கனவே அதிக சேதங்களை சந்தித்துள்ளது.

போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறுவதாக அரசு நோர்வே அனுசரணையாளர்களுக்கு அறிவிப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. பல வருடங்களாக சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வந்த அமைதி முயற்சிகளுக்கு அனுசரணைகளை வழங்கி வந்த நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிற்கு கூட அரசின் இந்த நடவடிக்கையை ஊடகவியலாளர்களே தெரிவித்திருந்தனர்.

இதனை நாம் எவ்வாறு அனுகூலமான வழிகளில் பயன்படுத்த முடியும் என்பது மிகவும் கடினமானதாக உள்ளது. அமைதி முயற்சிகள் நீண்டகாலத்திற்கு முன்னரே செயலிழந்து விட்டது என மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் சிறிலங்கா மீது தனிப்பட்ட முறையிலும், வெளிப்படையாகவும் அதிருப்திகளை கொண்டுள்ளன. அதனை தொடர்ந்து சிறிலங்கா ஆசியாவையும் அதனை அண்டிய பகுதிகளிலும் தனது இராஜதந்திர நடவடிக்கைகயை அதிகரித்துள்ளது.

ஈரான், பாகிஸ்தான், மியான்மார் போன்ற நாடுகளுக்கு உயர்மட்ட பயணங்களையும் அரச தலைவர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக இது அனைத்துலகத்தில் இருந்து சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றது.

விடுதலைப் புலிகள் சிறிய கடற்படையையும், இலகுரக வானூர்திகளை கொண்ட வான்படையையும் கொண்டுள்ளனர். எனினும் ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்களை தடை செய்துள்ளன.

ஆனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அதன் நற்பெயருக்கு நீண்டகாலத்தில் பாதிப்புக்களை உண்டுபண்ணும் காரணிகளில் போர் அல்லாத காரணிகளும் அடங்கும்.

டிசம்பர் மாதம் சிறிலங்கன் ஏயர்லைன் வானூர்தி நிறுவனத்தின் தலைவரான பிரித்தானியாவைச் சேர்ந்த அதிகாரியின் வேலை அனுமதிப்பத்திரத்தை சிறிலங்கா அரசு இரத்துச் செய்துள்ளது. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்தவிற்கு ஆசனம் ஒன்றை ஒதுக்க மறுப்பு தெரிவித்ததற்காகவே அவரின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டது. தனிப்பட்ட பயணமாக பிரித்தானியாவுக்குச் சென்றிருந்த மகிந்த நாடு திரும்பிய வேளை இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆனால் விடுமுறைக் காலத்தில் வானூர்தியின் எல்லா ஆசனங்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததனால் தான் அவ்வாறான நிலமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடுதியாக அரசு மேற்கொள்ளப்படும் முட்டாள்த்தனமான நடவடிக்கையின் அளவை இது காட்டுகின்றது. சிறிலங்காவில் நடைபெறும் குண்டுத்தாக்குதல்களை விட அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தான் வர்த்தக துறையினரை அதிக கவலை கொள்ள செய்கின்றது என ஹர்பிசன் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Thursday, January 03, 2008

சிறீலங்காவிற்கான ஆயுத ஏற்றுமதிக்கு தடை - அமெரிக்கா!!!

சிறீலங்கா அரசிற்கான ஆயுத ஏற்றுமதி அனுமதிப் பத்திரத்திற்கான தடை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

ஆனால் படைத்துறை தொழில்நுட்ப தகவல்கள், கடல், மற்றும் ஆகாய பாதுகாப்பு தொடர்பான தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் என்பவற்றுக்கான அனுமதிப்பத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், தேவையின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் ஆயுத ஏற்றுமதிக்கான இணையத்தளத்தில் சிறீலங்கா அரசுக்கான இந்த அனுமதிப்பத்திரத்தடை தொடர்பான அறிவித்தல் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் முதல் அமுலுக்கு வரும்வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்க செனட்டர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு, அமெரிக்க அதிபர் ஜேர்ர்ஜ் புஷ்ஷிளால் கையெழுத்திடப்பட்டுள்ள கொங்கிரஸின் 110வது அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள சிறீலங்கா அரசிற்கான ஆயுதத்தடையின் ஒரு அங்கமாக இந்த அனுமதிப்பத்திர தடை பற்றிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நன்றி<பதிவு.

சிறீலங்காவின் நடவடிக்கையால் நம்பிக்கையை இழந்துவிட்ட முதலீட்டாளர்கள்.-ரொய்ட்டஸ்!!!-

சிறீலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இவ் அறிவிப்பானது, சிறீலங்காவில் முதலீடு மேற்கொள்ளவிருந்த வர்த்தக சமூகங்களின் நம்பிக்கையை இழக்க வைத்திருப்பதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு தலைப்பட்சமாக சிறீலங்கா அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதால் அனைத்துலக சமூகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை கொண்டிருப்பதாக மேலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோர்வே நாட்டின் அனுசரணையுடன் 2002ம் ஆண்டு சிறீலங்கா தரப்புக்கும், தமிழ்த்; தரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும், 2005ம் ஆண்டு ஆரம்பப் பகுதியிலிருந்து யுத்த மீறல் சம்பவங்கள், குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் பாரிய அளவில் ஏற்பட்டுள்ளன.

’போர்நிறுத்தம் ஏற்கனவே முறிவடைந்துவிட்டது என்பது நமக்குத் தெரியும். இருந்தும் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தாம் அதிகாரப்பூர்வமாக விலகப்போவதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. இவ் அறிவித்தலானது பெரியதொரு வேறுபாட்டை கொண்டுவரப்போவதில்லை’ என லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் தென் ஆசிய பிராந்தியத்திற்கான பாதுகாப்பு ஆலோசகர் ஜெனிபர் ஹார்பிசன் தெரிவித்துள்ளார்.

மேற்கு நாடுகள் சிறீலங்கா அரசைத் தனிமைப்படுத்த முயற்சிக்குமேயாயின், சிறீலங்கா அரசு ஈரான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுடன் நட்புறவைப் பலப்படுத்தும் எனவும் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

போர் நிறுத்தத்தில் இருந்து சிறீலங்கா விலகல் - உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!!!

சிறீலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக, சிறீலங்கா அரசு இன்று (வியாழக்கிழமை) மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையின் நடுநிலையாளரான நோர்வே அரசுக்கு சிறீலங்கா அரசு தனது முடிவை உத்தியோகபூர்வமாக எழுத்தில் கொடுத்திருக்கின்றது.

சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ரோர் ஹற்ரறெம்மிடம் (Tore Hattrem) தமது அரசின் நிலைப்பாடு தொடர்பான எழுத்துமூலக் கடிதத்தை இன்று மாலை கையளித்திருப்பதாக தூதரகம் தெரிவித்தது.

போர்; நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாயின் இரண்டு வாரங்கள் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இம்மாதம் 16ஆம் நாளுடன் சிறீலங்கா தரப்பு போர்; நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுகின்றது.

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைவாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவால் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் விடுதலைப் புலிகளுடன் செய்யப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டு, அது பெரும்பகுதியினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் உரையில், அமைதி வழிக்கான கதவுகளை மூடியுள்ள ராஜபக்ஸ அரசாங்கம், தமிழர்களை போரில் வெற்றிபெற்று விடலாம் என அதீத நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
நன்றி>பதிவு.

Wednesday, January 02, 2008

ஆலயத்தில் மகேஸ்வரன் கொல்லப்பட்டமை இந்துக்களின் உணர்வுகளுக்கு அடிக்கப்பட்ட சாவுமணி: இந்து மாமன்றம் கண்டனம்!!!

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டமைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் கொடூரமான வகையில் கொலை செய்யப்பட்டதையும் இந்த நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியை கடந்த நூற்றாண்டில் ஏற்படுத்திய பெரியார் சேர்.பொன்.இராமநாதனால் கட்டுவிக்கப்பட்ட புனித திருத்தலமான கொழும்பு சிறீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இந்த கொடூர சம்பவம் நடத்தப்பட்டிருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திருத்தலத்தின் புனிதத்தன்மைக்கு மாசு கற்பிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் நடந்துள்ள இந்து மக்களின் உணர்வுகளுக்கு சாவுமணி அடிக்கும் இத்தகைய கொடூரமான செயலுக்குப் பொறுப்பானவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை சகலரும் வற்புறுத்த வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கடந்த வாரம் நடைபெற்ற அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வருடாந்தக் கூட்டத்தில், இலங்கையில் நாலாபகுதிகளிலிருந்தும் வந்து கலந்துகொண்ட, அங்கத்துவ சங்கங்களின் பேராளர்களால் இராணுவ நடவடிக்கைகளையும் பலத்தகாரச் செயல்களையும் கண்டித்து ஒருமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அது மாமன்றத்தின் பகிரங்க வேண்டுகோளாக விடுக்கப்பட்ட ஒரு சில நாட்களில் இத்துர்ப்பாக்கிய நிகழ்வு பிரபல்யமான இந்து ஆலயமொன்றில் நடந்திருப்பது உலகெங்கும் வாழும் இந்து மக்களுக்கு ஆழ்ந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு மதத்தினரின் வழிபாட்டு தலத்தின் உள்ளே எவரும் ஆயுதபாணிகளாக செல்லக்கூடாது. அப்படிச் செல்வதை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கமும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு பொறுப்பானவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சகல வழிபாட்டுத் தலங்களின் புனிதமும் பேணிப் பாதுக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.