Wednesday, November 12, 2008

இலங்கைக் கடற்படை நடுக்கடலில் வெறியாட்டம் தமிழக மீனவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை - இந்திய இணையத்தளம் தகவல்!!!

கச்சதீவு அருகே இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் வாள் மற்றும் துப்பாக்கியால் அரக்கத்தனமாக - கண்மூடித்தனமாக - விலங்குகளைவிடக் கொடூரமான முறையில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் -

"இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் தங்களைத் திட்டி - நிர்வாணப்படுத்தி - சித்திரவதை செய்து - மூர்க்கத்தனமாகத் தாக்கினர் - என்று கரை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார் என்றும் இந்திய இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வருமாறு-

இராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மாலை 5 மணியளவில் கச்சதீவு அருகே சில மீனவர்கள் 10 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது இலங்கைக் கடற்படையினர் 5 கப்பல்களில் அங்கு ரோந்து வந்தனர். தமிழக மீனவர்களைப் பார்த்ததும் சற்றி வளைத்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் படகுகளில் ஏறினர். மீனவர்களை வாள் மற்றும் துப்பாக்கி முனைகளால் தாக்கி அவர்களை நிர்வாணப்படுத்தினர்.

மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படகில் இருந்த ஜோதிபாச (வயது-21), வினிஸ்டன், கார்பசேவ் மற்றும் இன்னொரு படகில் இருந்த கிங்ஸ்டன் ஆகியோரை அடித்து உதைத்தனர். துப்பாக்கி முனையால் அவர் களைத் தாக்கியதில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
பின்னர் படகில் இருந்த ஐஸ் பெட்டி, மரப்பலகைகள் ஆகியவற்றை கடலுக்குள் தூக்கி வீசியதுடன், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்களிடம் இருந்து தப்பி நேற்றுக்காலை மீனவர்கள் கரைசேர்ந்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் கியூப் பிரிவுப் பொலி ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களைக் கடந்த 2 மாதங்களில் நடுக்கடலில் இவ்வாறு தாக்குவது இரண் டாவது முறையாகும். முன்னதாக 25 படகுகளைச்சற்றிவளைத்து தாக்கியதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில்,
"இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் திட்டினர் எனக் கூறினர். மீண்டும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளமையால் தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நன்றி:-உதயன்

Friday, August 29, 2008

கருணை மனு!!!

உங்களை விட்டால் எங்களுக்கு ஆர் இருக்கினம், புலம்பெயர்தமிழரே.......

Wednesday, May 28, 2008

உயிரம்புகள் திரைப்பட காட்சிகள்.

உயிரம்புகள் திரைப்படத்தில் சில காட்சிகளை இங்கு பாருங்கள்.


Wednesday, May 07, 2008

இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்!!!

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்.

புதுதில்லியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``தமிழர்களுக்கு எதிராகக் கொடுப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள். அது வியாபார ரீதியாகக்கூட இருக்கலாம்’’ என்றார்.

``சீனாவையும், பாகிஸ்தானையும் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள இலங்கை விரும்புகிறது. அது நடக்கக்கூடாது என்று இந்தியா கருதுகிறது. அதுதான் அங்கிருக்கும் சின்னச் சின்னப் பிரச்சினைகள். அதனால், அதுபற்றி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் விஜயகாந்த்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

தகவல் பீபீசி தமிழோசை.

Tuesday, May 06, 2008

போராளிக் குழுக்களின் மோதலுக்கு இந்திய அரசே காரணம்! உண்மைகளை மறைக்க முயல வேண்டாம்!! முதல்வருக்கு வேண்டுகோள்!!!

- பழ. நெடுமாறன்

தமிழக சட்டமன்றத்தில் இலங்கை இனப் பிரச்னை குறித்து பா. ம. க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போது முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே போராளிகளுக்குள் போராடுவது என இந்தப் போராளி களுக்குள்ளே நடந்த போராட்டம்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலேயே அவர்களுக்காகப் பரிந்துரை பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் இடைக்காலத்திலே நான் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்பதுதான்.

அந்தப் போராளிக் குழுக்கள் ஒரே போராளிக் குழுவாக இருந்து ஒற்றுமையோடு இலங்கையிலேயே நடை பெறுகிற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும். தமிழர்களுக்குள்ள உரிமைகளை பெற வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்பட்டதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குழுவை இன்னொரு குழு வீழ்த்த வேண்டும். ஒரு குழுவை இன்னொரு குழு மாய்க்க வேண்டும். ஒரு குழுவுக்கு செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முறையிலேதான் ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் அங்கே கொல்லப்பட்டார்கள். வெட்டப்பட்டார்கள். சுடப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்து விடக் கூடாது. இப்படிப் பல போராளிகள் அவர்களுக் குள்ளே அடித்துக் கொண்டு, சுட்டுக் கொண்டு செத்திருக்கிறார்கள். இவைகள் எல்லாம் தான் இந்தப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தியது. இத்தகைய விடுதலைப் போராட்டம் எல்லா இடங்களிலும் வெற்றிப் பெற்றிருக்கும் போது இந்த சின்னஞ்சிறு நாடான இலங்கையிலே வலுவிழந்ததற்கு காரணம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாததுதான். நாம் வலுவிழந்து போய் பகைவர்களுக்கு இடம் கொடுத்து விட்டோம். ஆனால் இதிலே இந்திய அரசை குறை கூறிப் பயனில்லை.’ - என்று கூறியுள்ளார்

சட்டமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் தமிழர்கள் அனைவராலும் வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டிய தீர்மானமாகும். ஆனால் இந்த தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மையில் வருந்தத்தக்கவையாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அந்தப் போராட்டத்திற்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை மறைத்து நியாயப்படுத்தும் விதத்திலும் அவருடைய கருத்துக்கள் அமைந்துவிட்டன. வரலாற்றைத் திட்டமிட்டு மறைப்பதற்கு முதலமைச்சர் கருணாநிதி முயலுகிறார்.

தமிழீழப் போராளிக் குழுக்கள் ஒன்றுபட்டு செயலாற்றாததால்தான் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன என முதலமைச்சர் கூறியுள்ள கருத்து சரியானதுதானா? அந்தக் கூற்றில் சிறிதளவேனும் உண்மை உள்ளதா?

1985-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் நாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத்தலைவர் சிறீ சபாரத்தினம், ஈ. பி. ஆர். எல். எப். இயக்கத்தலைவர் பத்மநாபா, ஈரோஸ் இயக்கத்தலைவர் பாலகுமார் ஆகியோர் ஒன்று கூடிப் பேசி கீழ்க்கண்ட கூட்டறிக்கையை வெளியிட்டார்கள்.

‘புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையைத் தழுவி களத்தில் போராடும் இந்த நான்கு விடுதலை இயக்கங்கள் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டமை எமது விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். ஈழத்தமிழரின் சுதந்திரப் போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ள இந்நிகழ்ச்சி புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்து ஆயுதப் போராட்டத்தை ஒருமுகப்படுத்தி வலுப்படுத்த வழிகோலியுள்ளது. இராணுவ பயங்கரவாத அட்டூழியங்களையும், இனக் கொலையையும் எதிர் நோக்கி தாங்கொணாத் துன்பத்தை அனுபவித்து வரும் மக்களுக்கு எமது விடுதலை அணிகள் ஒன்றுபட்ட செய்தி பெரு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிப்பதோடு அவர்களது ஆன்ம உறுதியையும் விடுதலை உணர்வையும் பலப்படுத்தும் என்றே கருதுகிறோம்.

இந்த நான்கு இயக்கங்களின் கூட்டமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணி கீழ்க்கண்ட அரசியல் ரீதியான அடிப்படை கொள்கைகளில் ஒன்றுபட்டு செயல்பட தீர்மானித்துள்ளது.

1. சிங்கள ஆதிக்கத்திலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் வென்றெடுத்தல்.

2. இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டுகின்ற தனி அரசைத் தவிர்த்த வேறு எந்த குறைந்த பட்ச சமரசத் திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை.

3. பரந்து பட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகு ஜன ஆயுதப் போராட்டத்தை எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.

4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்து சுதந்திர தாய்நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புதல்.

5. உலக ஏகாதிபத்திய நவ காலனித்துவ பிடியிலிருந்து எமது தேசத்தை பூரணமாக விடுவித்து அணி சேராக் கொள்கையை கடைப்பிடித்தல்.

தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட குறைந்தப்பட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முக்கிய அரசியல் பிரச்னைகள் குறித்து ஒன்று கூடி கலந்தாலோசித்து முடிவெடுப்பதெனவும் சிங்கள அரசப் படைகளுக்கு எதிரான எமது ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை ஒன்றுபடுத்திச் செயல்படுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.

எமது இந்த ஒருமைப்பாடு விரிவுப்பட்டு வலுப்பெற ஒத்துழைப்பும் ஆதரவும் தருமாறு எமது மக்களின் விடுதலையில் அபிமானம் கொண்ட சகல தமிழ் மக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.’

போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட இந்த அறிக்கை கண்டு தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு பிரச்னைகளில் போராளிக் குழுக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டன.

1985-ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பூட்டான் தலைநகரான திம்புவில் இந்திய அரசின் முயற்சியின் பேரில் கூட்டு மாநாடு ஒன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் மேற்கண்ட நான்கு இயக்கங்கள் மட்டுமல்ல, மற்றொரு போராளி இயக்கமான பிளாட் இயக்கமும், ஜனநாயக அரசியல் இயக்கமான தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து நின்று குறைந்த பட்சத் திட்டமொன்றினை திம்பு மாநாட்டில் அளித்தன. சிங்கள அரசு பிரதிநிதிகள் இதை ஏற்க மறுத்தனர். இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி தமிழர் பிரதிநிதிகளை சிங்கள அரசுடன் இணக்கமாகப் போகுமாறு வெளிப்படையாகவே நிர்ப்பந்தித்தார்.

திம்பு மாநாட்டில் சமரச முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இலங்கைத் தமிழர் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்து தமிழர் பிரதிநிதிகள் மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

அனைத்துப் போராளி இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதை கண்டு வெகுண்டெழுந்த இந்திய அரசின் வெளியுறவுத் துறைச் சொலாளர் ரொமேஷ் பண்டாரி அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்தார். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், டெலோ இயக்கத்தைச் சேர்ந்த சத்தியேந்திரா மற்றும் சந்திரகாசன் ஆகிய மூவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த இந்திய அரசு ஆணைப் பிறப்பித்தது.

இந்திய அரசின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் தி. மு. க. தலைவர் கருணாநிதி தலைமையில் இயங்கிய டெசோ அமைப்பு போராட முடிவு செய்தது. இந்த அமைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் நண்பர் கி. வீரமணி அவர்களும் நானும் அங்கம் வகித்தோம். நாங்கள் மூவரும் ஒன்றுகூடித்தான் தமிழகமெங்கும் போராட்டம் நடத்துவதென முடிவு செய்தோம். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதன் விளைவாக நாடு கடத்தும் உத்தரவை இந்திய அரசு இரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அனைத்துப் போராளிக் குழுக்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து செயல் படுவதற்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட நாடு கடத்தும் உத்தரவிற்கு எதிராகத்தான் அன்றைக்கு டெசோ அமைப்பு போராடியது என்பதை அன்றைய டெசோ அமைப்பின் தலைவரும் இன்றைய முதல்வருமான கருணாநிதி அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக தற்காலிகமாக இந்திய அரசு பின் வாங்கிய போதிலும் தனது திட்டத்தைக் கைவிடவில்லை. போராளிக் குழுக்களை பிளவுப் படுத்தும் சதித்திட்டத்தை இந்திய ரா உளவுத்துறை வகுத்தது.

1986-ஆம் ஆண்டு மதுரையில் மே 5-ஆம் தேதி அன்று டெசோ அமைப்பின் சார்பில் தமிழீழ ஆதரவாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக நான் இருந்தேன். இம்மாநாட்டிற்கு தி. மு. க. தலைவர் கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார். ஆந்திர முதல்வர் என். டி. ராமாராவ், பா. ஜ. க தலைவர் வாஜ்பாய், லோக்தளத் தலைவர் பகுகுணா உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிலும் அனைத்துப் போராளிக் குழுக்களின் பிரதிநிதிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஆனால் மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரும் 1985-ஆம் ஆண்டு தமிழீழத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது எனக்குப் பாதுகாப்பாக வந்த படைக்குத் தலைமை தாங்கியவருமான காப்டன் லிங்கம் டெலோ இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது. இதைத் தொடர்ந்து டெலோ இயக்கத்திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே மோதல்கள் நடந்தன.

இது குறித்து 1986-ஆம் ஆண்டு மே மாதம் 14-ஆம் தேதி சென்னையில் பிரபாகரன் அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது இந்த மோதல்களின் பின்னணி குறித்து எனக்கு விரிவாகக் கூறினார்.

‘லிங்கத்தின் சாவுச் செய்தி வந்த போது நானே கொதிப்படைந்தேன். தளத்திலிருந்த எங்கள் தோழர்கள் எவ்வளவு பெரிய கொதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். தங்கள் படையின் காப்டன் லிங்கத்தை படுகொலை செய்ததை கண்டிக்கவும் கைதான இரு வீரர்களை விடுவிக்கவும் அவர்கள் உடனடித் தாக்குதல் தொடங்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள். எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. ஏனெனில் லிங்கத்தின் படுகொலையும் எங்களின் முக்கியத் தோழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்ச்சியாக நாங்கள் கருதவில்லை. ஆழமான சதியின் விளைவாக இவை நிகழ்ந்தன என்று கருதுகிறோம். ரா உளவு அமைப்பின் தூண்டுதலின் பேரிலேயே சிறீ சபாரத்தினம் இங்கே வந்து முகாமிட்டு இருக்கிறார் என்பதும் எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான சாட்சியங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.’

டெலோ இயக்கத்தைத் தொடர்ந்து 1986-ஆம் ஆண்டின் இறுதியில் ஈ. பி. ஆர். எல். எப் இயக்கமும் ‘ரா’வின் வலையில் விழுந்து விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தது. எனவே வேறு வழியில்லாத நிலையில் ஈ. பி. ஆர். எல். எப் இயக்கத்தினரிடமிருந்த ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் களையப்பட்டன. ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் ஈ. பி. ஆர். எல். எப் இயக்கத்தை விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கி அவரவர் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினர்.

இராஜீவ் - ஜெயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தான பிறகும் கூட தனது சீர்குலைவு வேலைகளை ரா நிறுத்தவில்லை. ஒப்பந்தப்படி ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக காட்சித்தரும் வேளையில் அவர்களை ஒழித்துக்கட்ட போட்டி இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய இராணுவ விமானங்களின் மூலம் இலங்கை கொண்டு வந்து இறக்கியது. அவர்களில் முக்கியமானவர் ஈ. பி. ஆர். எல். எப் இயக்கத் தளபதியான டக்ளஸ் தேவானந்தா ஆவார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவரை படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா ரா உளவுத் துறையின் உதவியுடன் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டு போய் சேர்க்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு பிற போராளி இயக்கங்களை ரா உளவுத் துறை பயன்படுத்தி வருவது குறித்து மனம் வருந்திய பிரபாகரன் அவர்கள் தங்களோடு இணைந்து போராட முன் வருமாறு பிற போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் அறிக்கை ஒன்றினை 25-9-1987 அன்று வெளியிட்டார்.

‘அன்றும் சரி இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்த சக்தி பின்னணியிலிருந்து இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன். இந்திய அரசின் அங்கமாக உள்ள ரா உளவுத் துறையின் நாசகார நடவடிக்கைகள் குறித்து தமிழீழ மக்கள் நன்கு அறிவார்கள். தமிழீழ இலட்சியத்தில் உறுதிப்பாடும் இயக்கக் கட்டுப்பாடும் உடைய ஒரு தேசிய இயக்கம் தோன்றுவதை இந்த சக்தி அன்றிலிருந்து எதிர்த்து வருகிறது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் வளர்வது கண்டு அஞ்சிய இந்திய உளவுத் துறை ஏனைய அமைப்புகளை வளர்த்துவிட்டு இயக்க மோதல்களை உருவாக்கி எம்மை அழிக்க முயன்றது. ஆனால் மக்கள் பலம் எமக்கு பக்கபலமாக இருப்பதால் எம்மை அழிக்க முடியவில்லை. தமிழினத்திற்கு ஏற்பட்ட இந்த அளப்பறிய இழப்பிற்கு இந்திய உளவுத்துறை மட்டும் காரணமல்ல. இந்த உளவுத் துறையின் நயவஞ்சக சூழ்ச்சிக்கு பலியாகிய ஏனைய அமைப்புகளின் தலைமைகளும் இதற்கு காரணமாவர். பதவி வெறிப் பிடித்த அந்த தலைமைகள் இந்திய உளவுத் துறையின் அய்ந்தாம் படையாக இயங்கினார்கள். இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.’ – என்று கூறிய பிரபாகரன் பிற இயக்கங்களில் உள்ள தோழர்களை இலட்சியப் போராட்டத்தில் இணைய முன் வருமாறு அன்பழைப்பும் விடுத்தார்.

மெற்கண்டவை எல்லாம் வரலாற்று ரீதியான ஆதாரப் பூர்வமான உண்மைகளாகும். போராளிக் குழுக் களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மோதல்களைத் தூண்டிய ரா உளவுத் துறை தனது முயற்சியில் தோல்வி கண்டது. பிற போராளி இயக்கங்கள் புலிகளிடம் மோதி தோற்றப் பிறகு புலிகள் இயக்கத்தையே பிளவு படுத்தவும் ரா உளவுத் துறை முயன்றது.

1992-ஆம் ஆண்டு மாத்தையா, 2004-ஆம் ஆண்டில் கருணா ஆகியோர் ரா உளவுத் துறையின் வலையில் வீழ்ந்து புலிகள் இயக்கத்தை பிளவுப் படுத்த முயற்சி செய்து, அம்முயற்சியில் படு தோல்வி அடைந்தனர்.

ஆக, தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தவும், பிளவுப்படுத்தி பலவீனப்படுத்தவும் இந்திய அரசின் ரா உளவுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத ஆதாரப் பூர்வமான உண்மைகளாகும்.

இந்த சூழ்நிலையிலும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்து வருகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனி போன்ற உண்மையாகும்.

அண்மையில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு 400 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இந்த பணம் ஆயுதம் வாங்கவே பயன்படும் என்பதும் அந்த ஆயுதங்கள் தமிழர்களை கொன்று குவிக்கவே பயன்படும் என்பதும். எல்லோரும் அறிந்த உண்மைகளாகும்.

ஆனால் மேற்கண்ட உண்மைகள் எல்லாவற்றையும் மூடி மறைத்து இந்திய அரசின் தவறான செயல்களை கண்டிப்பதற்கு பதில் அந்த அரசுக்கு வக்காலத்து வாங்கி போராளிக் குழுக்களிடையே உள்ள மோதல்தான் இந்திய அரசின் போக்கிற்கு காரணம் என நிறுவவதில் முதலமைச்சர் கருணாநிதி தனது பேச்சு வன்மையைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்திய அரசின் தகாத செயல்களை சுட்டிக்காட்டி அதனை பகைத்துக் கொள்ள அவர் விரும்பாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் முற்றிலும் பொய்யான செய்திகளை கூறுவதற்கு எவ்வித நியாயமும் இல்லை.

இலங்கை இனப்பிரச்னையை தீர்க்க இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தைத் தொடங்க இந்திய அரசு முன் வர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே காலக்கட்டத்தில் சிங்கள அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாய்களை இந்திய அரசு வழங்கயிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. சட்டமன்ற தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கும் போது அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு உண்டு. இந்திய அரசின் மேற்கண்ட நடவடிக்கை தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் முன் மொழிந்த தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, அத்தீர்மானத்தை கொஞ்சமும் மதிக்க இந்திய அரசு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கும் இந்த செயல் தமிழக முதலமைச்சரை மட்டுமல்ல தமிழக சட்டமன்றத்தையே அலட்சியப் படுத்தி அவமானப் படுத்தும் செயலாகும்.

-தென் செய்தி

Thursday, May 01, 2008

இந்தியப் புலனாய்வுதுறையினரால், ஈழத்தமிழர்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கிற தமிழகத்தலைவர்களை என்கெளவுண்டரில போட்டுத்தள்ளத் திட்டமா?

தமிழகத் தலைவர்களை கடத்தி புலிகள் மீது பழிபோட கருணா குழு தமிழகத்தில் ஊடுருவல்: இந்திய அரசு "திடீர்" எச்சரிக்கை!!!

பழிபோடுவதற்காக சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவான கருணா குழு தமிழ்நாட்டில் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் "தினத்தந்தி" நாளேட்டில் இன்று வியாழக்கிழமை (01.05.08) வெளியாகியுள்ள செய்தி:

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினர் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவ முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்தி கலங்கடித்து வருகிறார்கள். இந்தப் போரில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பேர்கள் மடிகிறார்கள். பொதுவாக இலங்கையில் போர் பெரிய அளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
அகதிகள் அதிக அளவில் வரும்போது, அவர்களோடு சேர்ந்து விடுதலைப் புலிகளும் ஊடுருவ வாய்ப்புக்கள் உண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர். கடலிலும் கடலோரப் பாதுகாப்பு படையினர் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்குள் வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய உளவுப்பிரிவு காவல்துறையினர் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக காவல்துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்தத் தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுதலைப் புலிகள் மீது இந்தப் பழியைப் போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப, இந்த சதிச் செயலை அரங்கேற்றலாம், என்று எச்சரிக்கைத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தகவலையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு சுற்றுக்காவல் பணியில் காவல்துறையினர் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், வாகன சோதனை தீவிரமாக இருக்க வேண்டும், விடுதிகளில் சோதனை கடுமையாக இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 24, 2008

முகமாலை வெற்றி.

Wednesday, April 23, 2008

150 ராணுவம் பலி, 400 ராணுவம் காயம், கானொளியில்.







Sunday, April 20, 2008

NESoHR Chairman Fr. Karunaratnam killed in DPU attack


http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25355

Sunday, April 13, 2008

நோர்வேயில் வை.கோ அவர்களின் பேச்சு.


நோர்வேயில் வை.கோ அவர்கள் ஆற்றிய உரை.


Saturday, April 05, 2008

பிரபாகரன் படம்-சென்னையில் சிங்கள இயக்குநருக்கு அடி!!! கானொளியில்.

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.



Monday, March 31, 2008

"இது தமிழர்களை இழிவு படுத்தும் படம்" - படம் பார்த்து விட்டுச் சீறிய தமிழ் ஆர்வலர்கள்!!!


விடுதலைப்புலிகளை எதிர்த்து ஒரு சினிமா. சூடேறும் இலங்கை அரசியல்!’ என்ற தலைப்பில் கடந்த 13.02.08 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வளவு விறுவிறு சம்பவங்கள் நடக்கும் என்று நாமே எதிர்பார்க்கவில்லை.

அந்தப் படத்தின் பெயர் மட்டும்தான் ‘பிரபாகரன்’. ஆனால், அது முழுக்க முழுக்க இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு, புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட படம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே பலருக்கு இருந்தது. அந்தப் படத்தை இயக்கிய சிங்கள இயக்குனர் துவாசா பெரிஷ§க்கு ரொம்பத்தான் துணிச்சல். படத்தின் இறுதி எடிட்டிங்கை முடித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிண்டுகளைப் போட அவர் தேர்ந்தெடுத்த இடம் தமிழர்களின் தலைநகரமான சென்னை.

பெரிஷின் சென்னைப் பயணம் படுரகசியமாக வைக்கப்பட்டிருந்தும், அந்தத் தகவல் விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் தரப்புக்கு எப்படியோ கசிந்து விட்டது. வி.சி.களின் ஊடகப்பிரிவு பொறுப்பாளரான வன்னியரசு தலைமையில் ஒரு குழு சுற்றித்திரிந்து, ‘பிரபாகரன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் ‘லேப்’பில் நடப்பதைக் கண்டுபிடித்தது. அந்தத் தகவல் தமிழ் ஆர்வலர்கள் பலருக்கும் பறந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், சுப. வீரபாண்டியன், இயக்குனர் சீமான், வன்னியரசு போன்ற தமிழ் ஆர்வலர்கள் கொண்ட டீம் ஜெமினி கலர் லேப்பை முற்றுகையிட்டது. அங்கிருந்து தப்பியோட முயன்ற இயக்குனர் பெரிஷை இவர்களுடன் சென்ற தமிழ் ஆர்வலர்கள் போட்டு நையப்புடைத்தனர். ‘‘எங்கள் இனத்துக்கு எதிராகப் படம் எடுத்து, அதை எங்கள் மண்ணிலேயே பிரிண்ட் எடுக்க வந்தாயா? என்ன துணிச்சல் உனக்கு? தமிழ்இனத்தின் உணர்வு செத்துப் போகாதுடா’’ என்று சொல்லிச் சொல்லி விழுந்தது அடி. பெரிஷின் சட்டை எல்லாம் கிழிந்து கந்தர்கோலமாகி விட, கடைசியில் சுபவீ, சீமான் ஆகியோர் தலையிட்டு அவரைக் காப்பாற்றி புதிய டீஷர்ட் வாங்கித் தர வேண்டியதாயிற்று.

அதைத் தொடர்ந்து போலீஸ§ம் வந்துவிட ஓர் ஒப்பந்தம் ரெடியானது. ‘பிரச்னைக்குரிய ‘பிரபாகரன்’ படத்தை 27_ம்தேதி காலையில் டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன் உள்பட தமிழ் ஆர்வலர்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும். அந்தப் படம் தமிழினத்துக்கு எதிரானது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டால், இயக்குனர் பெரிஷ் படப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கொழும்புக்கு நடையைக் கட்ட வேண்டும். படத்தில் வில்லங்கம் இல்லாவிட்டால், படத்தை இறுதி எடிட் செய்து பிரிண்ட் போட்டுக் கொள்ளலாம்.’ இதுதான் அந்த ஒப்பந்தம். இதற்கு பெரிஷ் ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

அன்றிரவு தனியறையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த பெரிஷை நாம் சந்தித்துப் பேசினோம். மிரண்டு போய் இருந்தார் அவர். ‘என் படத்தைத் தப்புத்தப்பாக இங்கே புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர் தரப்பு நியாயத்தைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன். தமிழர்களுக்கு எதிரான படமில்லை இது’’ என்றார் அவர். ‘‘சிங்கள அரசின் நிதியுதவியுடன் எடுத்த படமா இது?’’ என்று கேட்டபோது ‘‘ஆமாம்’’ என்றார்.

எதுவாக இருந்தாலும் 27_ம்தேதி காலையில் தெரிந்து விடும் என்ற எண்ணத்தில் நாமிருந்தபோது, மறுநாளே மத்திய உளவுப்படை மற்றும் தமிழக உளவுப்பிரிவினர் உதவியுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பெரிஷ் தலைதெறிக்க கொழும்புக்கு ஓடிவிட்டார் என்பது நமக்குத் தெரிய வந்தது.

27_ம்தேதி காலை, தி,நகரில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில் ‘பிரபாகரன்’ படத்தைப் போட்டுப் பார்க்க ஏற்பாடானது. போலீஸார் குவிந்ததைக் கண்டு அந்த தியேட்டர்காரர்கள் கடைசி நேரத்தில் கைவிரித்துவிட, கோடம்பாக்கம் எம்.எம்.பிரிவியூ தியேட்டரில் படத்தைத் திரையிட்டுப் பார்க்க முடிவானது.

டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் இருந்து வர தாமதமானதால் பா.ம.க. துணைத்தலைவர் முத்துக்குமாரை அனுப்பி வைத்தார். பழ.நெடுமாறன் வெளியூரில் இருந்ததால் வரவில்லை. சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன், இயக்குனர்கள் தங்கர் பச்சான், சீமான், கௌதம், நடிகர் சத்யராஜ், கவிஞர் மேத்தா உள்ளிட்ட பலரும் வந்துசேர கடைசியாக வந்து சேர்ந்தார் திருமாவளவன்.

பத்திரிகையாளர்கள் யாரும் தியேட்டருக்குள் வரவேண்டாம் என்று தங்கர்பச்சானும், ஜெமினி பட லேப் நிர்வாக அதிகாரி பாரதியும் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு படம் திரையிடப்பட்டது. படம் முடிந்தபின் அந்தப் படத்தைப் பற்றி தமிழ் ஆர்வலர்கள் தங்களுக்குள் பதினைந்து நிமிடம் கூடிப்பேசி விட்டு வெளியே வந்தார்கள். அவர்களது முகத்தை ஆவலுடன் பார்த்தனர் பத்திரிகை நிருபர்கள். அப்போதே ரிசல்ட் தெரிந்து விட்டது.

படம் பற்றி பா.ம.க.துணைத்தலைவர் முத்துக்குமார், ராமநாதன், திருமாவளவன் ஆகியோர் நிருபர்களிடம் பேசினார்கள். ‘எங்கள் கருத்து ஒரே கருத்துதான். ஒரே முடிவுதான்’ என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

‘‘என்ன முடிவு? என்ன கருத்து?’’ என்று சுபவீயிடம் முதலில் கேட்டோம். ‘‘பொதுவாக சிங்களப்படம் என்றால் மிஞ்சிமிஞ்சிப் போனால் ஐந்து பிரதிகள் (பிரிண்ட்கள்)தான் எடுப்பார்கள். ஆனால் ‘பிரபாகரன்’ என்ற இந்தத் தமிழ்ப்படத்தை அறுபது பிரிண்ட்கள் வரை எடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இதைத் திரையிட்டு தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் திட்டம் இது. போராளிக்குழுக்களை இந்த அளவுக்கு கொச்சையாக எந்தப்படத்திலும் சித்திரித்தது இல்லை. இந்தப் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம்’’ என்றார் அவர்.

அடுத்து சீமானிடம் பேசினோம். ‘‘சுபவீ அண்ணன் சொன்ன அதே கருத்துதான் எனக்கும். இந்த மாதிரி மோசமான, கற்பனைக்கு ஒவ்வாத, ‘கலப்பட’ படத்தை இங்கே மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையிலும் திரையிட அனுமதிக்க மாட்டோம்’’ என்றார் சீமான். ‘‘நீங்களும் ஓர் இயக்குனர்தானே? ஒரு படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று நீங்கள் சொல்வது படைப்புச் சுதந்திரத்தைப் பாதிக்காதா?’’ என்று நாம் கேட்டபோது பொங்கியெழுந்து விட்டார் அவர்.

‘‘ ‘காற்றுக்கென்ன வேலி?’ ‘ஆணிவேர்’ போன்ற படங்களை இங்கே நமது சகோதரர்கள் எடுத்தபோது அந்தப்படங்களை புலிகள் ஆதரவுப்படங்கள் என்று சொல்லி, சென்சார் என்ன பாடுபடுத்தியது? அப்போது உங்கள் படைப்புச் சுதந்திரம் எங்கே போனது?’’ என்று திருப்பிக் கேட்டார் அவர்.

கடைசியாக திருமாவளவனிடம் பேசினோம்.

‘‘இலங்கை ராணுவத்துக்கும், அதன் தளபதிகளுக்கும் நன்றி’ என்று டைட்டில் கார்டு போட்டுத்தான் இந்தப் படமே ஆரம்பிக்கிறது. புலிகள் பள்ளிச் சிறுவர்களை மட்டுமே கடத்திச் சென்று அவர்களை மட்டுமே போராளிகளாக்குவதாக படத்தில் சித்திரித்திருக்கிறார்கள். அதில் பிரபாகரன் என்ற சிறுவன், ‘அப்பாவி (சிங்கள) மக்களைக் கொல்லமாட்டேன், ரத்தக்களறி எனக்குப் பிடிக்கவில்லை’ என்று கூறி ஒரு சிறுவர் கூட்டத்துடன் புலிகள் இயக்கத்திலிருந்து தப்பிச் செல்ல முயல்கிறான். அப்போது அந்தச் சிறுவர் கூட்டத்தைப் புலிகள் குண்டுவீசி அழிப்பது போலக் காட்டியிருக்கிறார்கள். ‘இதுதான் புலிகள் இயக்கம்’ என்பது போல பதிய வைக்கிறார்கள்.

பிரபாகரனின் அக்கா கமலி ஒரு சிங்களவரை மணந்து கர்ப்பிணியாகிறாள். அந்தச் சமயத்தில் புலிகள் அவளை மனிதவெடிகுண்டாக மாறும்படி வற்புறுத்துகிறார்கள். மனிதவெடிகுண்டாகப் போகும் அவள், பிறக்கப்போகும் தன் பிஞ்சுக்குழந்தையின் மேலுள்ள ஆசையால் கடைசி நேரத்தில் பின்வாங்கி விடுகிறாள். இதனால் எரிச்சலாகி விடும் புலிகள், ஒரு காரில¢ வந்து கமலியைப் பார்த்து ஒரு வெடிகுண்டு பார்சலைத் தந்து வீட்டில் வைத்திருக்கச் சொல்கிறார்கள். அது தன்னைத் தீர்த்துக் கட்டப் பார்க்கும் சதி என்பதைப் புரிந்து கொள்ளும் கமலி, புலிகள் ஏறிவந்த காரின் பின் சீட்டிலேயே அவர்களுக்குத் தெரியாமல் அதை மறைத்து வைக்கிறாள். புலிகள் அந்த காரோடு சிதறுகிறார்கள். கர்ப்பிணிப் பெண் கமலி தன் கணவனோடு நடக்கிறாள். அதோடு படம் முடிகிறது.

‘புலிகள் கர்ப்பிணிப் பெண்ணைக்கூட மனிதவெடி குண்டாகப் போகச்சொல்லும் இரக்கமற்ற அரக்கர்கள்’ என்பது போல இந்தப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. மற்றவர்களுடன் கலந்து பேசி சட்டப்படி என்ன நடவடிக்கையோ அதைச் செய்ய இருக்கிறோம். அதற்காக ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ அனைவருடனும் பேசி ஒன்று திரண்டு போராடும்’’ என்றார் அவர்.

‘பிரபாகரன்’ திரைப்படம் ஒரு பிரளயத்தைக் கிளப்பி இருக்கிறது. இப்போது இந்தப் பிரச்னையில் இடைவேளை. இதற்குமேல் என்ன நடக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

படங்கள்: நாதன்
பா. ஏகலைவன்
குமுதம் ரிப்போர்ட்டர், 03 -04- 2008

Friday, March 28, 2008

சிங்களப் படத்துக்குத் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு!!!


தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் சிங்களப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பிரபாகரன்" என்ற சிங்கள மொழித் திரைப்படத்தை இன்று வியாழக்கிழமை பார்த்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தப் படம் கலர்ப்படம் அல்ல. கலப்படம். படத்தின் தலைப்பே சரியில்லை. தமிழர்களை அவமானப்படுத்தக் கூடியது. திரையிடுவதை வெளியிடுவது பற்றி யோசித்தே முடிவு செய்வோம் என்றார் அவர்.

நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவிக்கையில், தமிழர்களை அவமதிக்கும் படம் இது. வன்மையாக இப்படத்தை கண்டிக்கிறோம் என்றார்.

பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கூறியதாவது: படத்தின் தொடக்கத்தில் சிறிலங்கா அரசுக்கும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சுக்கும் நன்றி என்று இடம்பெறுகிறது. அத்துடன் படத்தில் ஒரு காட்சியில் கூட ஒரு சிங்கள படைத் தளபதியோ படையைச் சேர்ந்தவரோ இடம்பெறாமையிலிருந்தே இந்தப் படத்தின் நோக்கம் தெரிய வருகிறது.

இலங்கையில் தமிழர்களை சிறிலங்காப் படைதான் ஒடுக்கி அடக்கி வருகிறது. ஆனால் வரலாற்றையே தலைகீழாய் மாற்றி சிங்கள மக்கள் பாதிக்கப்படுவது போல் சித்தரிப்பது ஒரு பெரிய மோசடி.

மேலும் சமாதான நடவடிக்கைகளை போலி சமாதானம் என்று இப்படத்தில் நிராகரித்திருப்பதன் மூலம் படம் எடுத்தவரின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்: தமிழின மக்களை இழிவு செய்து எடுக்கப்பட்ட ஒரு படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை தமிழ்நாட்டிலே வந்து செய்து கொண்டிருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டு எதிர்ப்புத் தெரிவித்தோம். தமிழினத்தை இழிவு செய்வதை மானமுள்ள தமிழர்கள் பொறுத்துக் கொள்ள முடியாது- பொறுத்தும் கொண்டிருக்க முடியாது.

இப்படி இழிவு செய்கிறவர்கள் இனித் தமிழ்நாட்டில் அப்படிச் செய்ய இயலாது என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறோம். தமிழ் மக்கள் வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்தால் சாகிறவர்கள் இல்லை.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இல்லாமல்- மானமுள்ளவர்கள் ஒரு பகுதியினராவது இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளோம். கருத்துரிமை என்பது வேறு. இனத்தை இழிவு செய்வது என்பது வேறு.

கற்பனை- புனைவு என்பதில் கருத்துச் சொல்வது வேறு.

ஒரு வரலாற்றைப் படைக்கின்றபோது திரித்தும் மாற்றியும் சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

தமிழீழ மக்கள் அனைவரும் கொடுமையானவர்கள்- சிங்கள மக்கள் அனைவரும் கருணையே உருவானவர்கள் என்று சொல்வது ஒரு வரலாற்றுத் திரிபு. கருத்துரிமை உரிமை அல்ல என்றார்.

இயக்குனர் சீமான்: தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் சிங்களப் படத்தைத் தடுக்கின்றபோது படைப்புச் சுதந்திரம் பற்றி சிலர் பேசுகின்றனர். காற்றுக்கென்ன வேலி திரைப்படம் தடுக்கப்பட்டபோது படைப்புச் சுதந்திரம் பற்றி பேசினார்களா? தமிழர்களை இழிவுபடுத்தும்போதுதான் படைப்புச் சுதந்திரம் பற்றி பேசுவார்களா? என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா, கவிஞர்கள் மு.மேத்தா, பொன். செல்வகணபதி, தமிழ் முழக்கம் சாகுல் அமீது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் முன்னிலையில் இப்படம் காண்பிக்கப்பட்டது.

நேற்று சென்னையில் வைத்து தாக்கப்பட்ட இயக்குனர் மேலதிக சிகிச்சைகளிற்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பிரபாகரன் என்ற பெயரில் திரைப்படம் இயக்கிய இலங்கையை சேர்ந்த இயக்குனர் துஷார பீரிஸ் நேற்று சென்னையில் வைத்து தாக்கப்பட்டார்.

சிங்கள மொழியில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளுக்காக சென்னை சென்ற வேளையிலேயே இச்சமபவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளிற்க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி>தமிழ்வின்

Thursday, March 27, 2008

தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் சிங்களத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்!!!

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் சிங்களத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

"பிரபாகரன்" என்ற பெயரில் சிறிலங்காவில் சிங்கள மொழியில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

அப்படத்தை தமிழ்நாட்டில் தமிழில் வெளியிடும் முயற்சிகளை சிங்கள இயக்குநர் மேற்கொண்டிருந்தார்.

இதற்கு தமிழ் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இயக்குநர் சீமான், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வன்னியரசு, சட்டவாளர் ஆர்வலன் உள்ளிட்ட பலரும் அப்படத்தை தமிழ் வெளியிட முயற்சித்த நிறுவனத்துக்கு நேரில் சென்று கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். சிங்கள இயக்குநர் கடும் காயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்.

மேலும் தமிழின உணர்வாளர்களுக்குத் திரைப்படத்தை காண்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோடம்பாக்கம் எம்.எம்.திரையரங்கில் இன்று வியாழக்கிழமை காலை அத்திரைப்படம் தமிழின உணர்வாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் முத்துக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணன், நடிகர் சத்யராஜ், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் அப்படத்தைப் பார்த்தனர்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறியதாவது:

இத்திரைப்படம் முழுமையாக தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிற படம்.

இப்படிக் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும். சட்டம் ஒழுங்கு கெடும்.

இது தொடர்பில் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் முறைப்பாடு செய்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்தை மீறி அப்படச் சுருள்கள் வெளியே போகக் கூடாது.

இப்படத்தை வெளியிடாமல் தடுக்க நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் தொல். திருமாவளவன்.


நன்றி>புதினம்

சிங்களத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட சென்னை சிறிலங்கா துணைத் தூதரகம் தீவிர முயற்சி!

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் சிங்கள மொழித் திரைப்படமான "பிரபாகரன்" திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட சிறிலங்கா துணைத் தூதரகம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தெரிகிறது.

"பிரபாகரன்" என்ற பெயரில் சிறிலங்காவில் சிங்கள மொழியில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
அப்படத்தை தமிழ்நாட்டில் தமிழில் வெளியிடும் முயற்சிகளை சிங்கள இயக்குநர் மேற்கொண்டிருந்தார்.

இதற்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இயக்குநர் சீமான், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வன்னியரசு, ஆர்வலன் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். சிங்கள இயக்குநர் கடும் காயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்.
மேலும் தமிழின உணர்வாளர்களுக்குத் திரைப்படத்தை காண்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோடம்பாக்கம் எம்.எம்.திரையரங்கில் இன்று வியாழக்கிழமை காலை அத்திரைப்படம் தமிழின உணர்வாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இதனிடையே சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகமானது அப்படத்தை வெளியிடும் பொறுப்பை தாங்கள் ஏற்பதாக சிங்கள இயக்குநரிடம் உறுதியளித்திருப்பதாக உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சா, சிங்கள இயக்குநருடன் விவாதித்ததாகவும் இந்திய மத்திய அரசு நிர்வாகத்திடம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக புதுடில்லி தூதரகத்துக்கு தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும் அந்த இயக்குநரிடம் கூறியுள்ளார்.

மேலும் எமது தூதரகத்தை அகற்ற வேண்டும் என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினர் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்- அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு இது என்றும் அம்சா கூறியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழகக் காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மூலமும் அம்சா செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தனது இஸ்லாமியாத் தொடர்புகள் மூலமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சென்னை பிரமுகர் சபீர் அலி மூலமாக இன்று சென்னை காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒரு முறைப்பாட்டு மனு கையளிக்கப்பட்டுள்ளது.

அதில் "பிரபாகரன்" படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அண்மையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் றிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில், தமிழ்நாட்டில் தாயக விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளை இஸ்லாமியத் தமிழரான அம்சா, தமிழின எதிர்ப்பு ஊடகங்களின் துணையுடன் மேற்கொண்டு வருகிறார் என்பதை அம்லப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Monday, February 18, 2008

ஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்!!!






கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.

சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்.

"சுதந்திர கொசோவோ" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.

சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப் பிரகடனத்தினை கண்டித்துள்ளன.

கொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப் படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

படங்கள்: ஏபி, ஏ.எஃப்.பி., ரொய்ட்டர்ஸ்
நன்றி>புதினம்.

Wednesday, February 13, 2008

உள்ளூர் தயாரிப்பு இராட்சத ஷெல், "சமாதானம் 2005" புலிகள் பாவிப்பு!

பேரழிவு தரக்கூடிய ஷெல் அல்லது பீரங்கி வகையைச் சேர்ந்த இராட்சத ஏவு வெடி கருவி ஒன்றை மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் அரசுத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது.

"சமாதானம் 2005' என நாமம் சூட்டப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கருவி முன்னர் புலிகள் தாங்களே தயாரித்துப் பயன்படுத்திய "பஸிலன்' ஷெல் வகையை ஒத்ததாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.

"சமாதானம் 2005' என்ற இந்தப் பெயர் இதற்கு புலிகள் சூட்டியதா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அந்தப் பெயரில் அக்கருவியை இனங்கண்டு குறிப்பிடுகின்றதா என்பதை அறியமுடியவில்லை.

இந்தக் குண்டு சுமார் முந்நூறு கிலோ வெடிப் பொருளுடன் சுமார் ஐந்நூறு கிலோ எடையுடையதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ள புலனாய்வு வட்டாரங்கள் அது வந்து விழுந்து வெடிக்கும் பிரதேசத்தில் 50 மீற்றர் முதல் நூறு மீற்றர் வரையுள்ள சுற்றுப் பகுதியில் பேரழிவையும் பெரு நாசத்தையும் ஏற்படுத்தும் என்றும் கருதுகின்றனர் எனத் தெரிகின்றது.
இந்த மோட்டார் அல்லது ஷெல்லின் ஏவு வீச்சு எவ்வாறு என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அத்துடன், ஏவுகணைப் பொறிமுறையை அல்லது பீரங்கிப் பொறிமுறையை அல்லது இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தி இதனை ஏவுவதற்கான ஓர் உத்தியை தொழில்நுட்ப ரீதியில் புலிகள் உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
90 களில் "பஸிலன்' என்ற உள்ளூர் தயாரிப்பு பாரிய ஷெல் மூலம் யுத்த முனைகளில் புலிகள் பெரும் சேதத்தையும் படையினருக்குப் பீதியையும் விளைவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கடத்திவர முடியாத முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் புலிகள், தாமே தங்களுக்குரிய இத்தகைய ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு அரச உயர்மட்டத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
http://www.sudaroli.com/pages/news/today/04.htm

Tuesday, February 12, 2008

சிறிலங்கா மீதான தடைகளுக்கு ஜேர்மனி முயற்சி!!!

போரை நிறுத்தி அரசியல் தீர்வினைக் காணும் முகமாக சிறிலங்காவுடனான அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவர ஜேர்மனி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் சிறிலங்காவிற்கு சென்று அங்கே உள்ள தற்போதைய நிலை தொடர்பாக ஆராய உள்ளனர். அதன் போது போரில் இருந்து விலகி அரசியல் தீர்வை காணுமாறு அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின கேட்டுக்கொள்வார்கள்.

எனினும் ஜேர்மனி கடுமையான நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கமானது போரை தொடருமாக இருந்தால் சிறிலங்காவுடன் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இருந்து அதன் பணியாளர்களில் அரைவாசி பேரை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், கொழும்பில் உள்ள ஜேர்மனி அபிவிருத்தி வங்கியை மூடுவதற்கும் ஜேர்மனி தீர்மானித்துள்ளது.

ஜேர்மனியின் இந்த கடுமையான நிலைப்பாடு அதன் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சர் ஹெடிமேரி வியக்சொரக் சோல் வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜேர்மனியிலிருந்து வெளிவரும் "தஜேஸ் ஸ்பைகல்" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

போரை நிறுத்தி இருதரப்பும் அரசியல் தீர்வை காண்பதற்கு அனைத்துலக சமூகம் தமது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். தொடர்ந்து இராணுவத்தீர்வு முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடுமானால் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கத்துடன் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களில் இருந்து வெளியேற வேண்டும்.

இந்த நடவடிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் மீது பொருளாதார அழுத்தங்களை கொண்டுவர உதவும். ஐரோப்பிய ஒன்றியம் தற்போதைய நிலமைகளை ஏற்றுக்கொள்ளுமாயின் இந்த ஒத்துழைப்புக்களில் பயன் இருக்காது.

புடவைப் பொருட்களையே சிறிலங்கா பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது. சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புடவைகளின் பெறுமதி ஆண்டுக்கு 1.2 பில்லியன் டொலர்களாகும். இவை தவிர அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளும் உண்டு.

இது தொடர்பில் நாம் அமெரிக்காவுடனும் கலந்தாலோசிக்க வேண்டும். கடந்த வாரங்களில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவும் தீவிரமான போக்கை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு வருடங்களில் சிறிலங்காவுடன் ஒத்துழைப்புக்களுக்கான உடன்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அதற்குரிய நிதியான 38 மில்லியன் ஈரோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையிலும் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பன் கீ மூன் சிறிலங்காவின் நிலைமைகளை ஆராய சிறப்புத் தூதுவரை அனுப்ப வேண்டும்.

சிறிலங்காவில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்து வருவதை தொடர்ந்தே நாம் அங்குள்ள ஜேர்மனி அபிவிருத்தி வங்கிகளை மூடவும், பணியாளர்களை வெளியேற்றவும் தீர்மானித்துள்ளோம் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

Sunday, February 10, 2008

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த எம்.ஜி.ஆரை மிரட்டினார் ராஜீவ்: புலவர் புலமைப்பித்தன!!!


இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். எதிர்த்ததால் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் மிரட்டப்பட்டார் என்று அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளியாகும் "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் இடம்பெற்றுள்ளதாவது:

"புலிகள் நடமாட்டம்" தொடர்பாக சட்டமன்றத்தில் ஜெ. எழுப்பிய சர்ச்சை, காங்கிரஸ் நடத்திய வெளிநடப்பு, முதல்வரின் மறுப்பு என்று தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், "ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்" என்ற ஈழ ஆதரவுப் புத்தகத்தை எழுதி பரபரப்பைப் பாய விட்டிருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம்.

"அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாயமல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல" என்கிறீர்களே. எப்படி?

"மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடி கோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தம்பியிடம் (பிரபாகரனிடம்) "ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டார். தம்பி கொஞ்ச நேரம் யோசித்து "நூறு கோடி தேவைப்படும்" என்றார். "சரி பார்க்கலாம்" என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர்.

அந்த மாமனிதரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க.வின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஏன் புலிகளை எதிர்க்கிறார்? புலிகளை அவர் ஆதரிக்க வேண்டாம். சட்டமன்றத்தில் அவர்களுக்கு எதிராக, தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பாமலாவது இருக்கலாமே. ஒரு காலத்தில் ஜெ.வும் புலிகளை ஆதரித்தவர்தான். 1989 ஆம் ஆண்டு லண்டனில் நடக்க இருந்த தமிழ் ஈழ விடுதலை மாநாட்டில் நானும் கலந்துகொள்ள வேண்டுமென்று மறைந்த தம்பி ஜொனியை பிரபாகரன் என்னிடம் அனுப்பி வைத்தார்.

ஒருநாள் நான் புரட்சித்தலைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது, இதைச் சொல்லி "நான் லண்டன் போய் வரட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆமாம். ஜொனி என்னைக்கூட வந்து பார்த்தார். நீங்கள் போவதென்றால் மகிழ்ச்சி, போய் வாருங்கள்' என்றார். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது ஏன் அப்படி மாறிப்போனார் என்பது புரியவில்லை. நான் மீண்டும் அவருக்குச் சொல்கிறேன். நீங்கள் ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருங்கள்.

இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்டிருப்பார்கள். காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து "ஒரு கொலையை" மட்டும் வைத்துக்கொண்டு, தமிழர்களை அழிப்பதற்குத் துணை போகாதீர்கள். ஒரே சரக்கை எத்தனை காலத்துக்குத்தான் விற்பனை செய்வது?"

தமிழ் ஈழத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஆதரித்தார்? முரண்பாடாக இருக்கிறதே?

"அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் என்பதால், "ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டால் நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வேறு ஒருவரைத் தேர்வு செய்யுங்கள்" என்று ராஜீவ் காந்தி நெருக்கடி கொடுத்தார். ஏன்? மிரட்டினார் என்றுகூடச் சொல்லலாம். அந்த நிலையில் வேறு வழியில்லாமல்தான் எம்.ஜி.ஆர். அதை ஆதரித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜூலை 29 ஆம் திகதி கையெழுத்தானது. அதைக் கொண்டாட சென்னையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஒரு பாராட்டு விழாவை ராஜீவ் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருதிய எம்.ஜி.ஆர்., ஜூலை 31 ஆம் திகதியே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாரானார். அன்று மாலை 5:00 மணியளவில் இராமாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அவர் தாமஸ்மலை வரை வந்தபோது எம்.ஜி.ஆரின் கார் டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் வழிமறிக்கப்பட்டது. "அமெரிக்காவுக்குப் போகக்கூடாது. விழாவில் பங்கேற்கவேண்டும்" என அறிவுறுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் அவர் தோட்டத்துக்குத் திரும்பினார். விழாவிலும் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் ராஜீவ் காந்தியின் கையோடு எம்.ஜி.ஆர். கரம்கோத்துத் தூக்காமல் இருந்த நிலையில் ராஜீவ் காந்தியே அவரது கையைப் பிடித்துத் தூக்கிய காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது. இந்திய இராணுவத்தால் ஈழப் பெண்கள் கற்பழிக்கப்படுவது பற்றி ராஜீவ் காந்தியிடம் பொன்மனச்செம்மல் அழாத குறையாக முறையிட்டார்.

அதற்கு ராஜீவ் காந்தி கூறிய பதிலை நான் இங்கே கூற விரும்பவில்லை.

அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தி விட முடியுமா?

"நான் ராஜீவ் கொலையை இரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்சே, அவனது கையில், "இஸ்மாயில்" என்று பச்சை குத்திக்கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்சேயின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்ததே. அதை காங்கிரசால் ஏன் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்படவில்லை?

இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த்சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரசாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை.

அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா? மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை, "உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?" என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. "நீ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய் விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால், நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு" என்று அறிவுறுத்துவாள். நானும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் ராஜீவ் காந்தியின் உடலுக்காகவா அழுகிறீர்கள்? இல்லை, உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். அப்படியானால் எங்கள் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் உயிர்களுக்காகவும் அழுங்கள். அழ மாட்டீர்களா? அழ வேண்டாமா?"

ஒரு காலகட்டத்தில் ராஜீவ் காந்தியே புலிகளுடன் சமரசம் செய்ய முன்வந்தார் என்கிறார்களே?

"உண்மைதான் அது. இந்திய இராணுவம் புதைமணலில் காலை விட்டு மாட்டிக்கொண்டது என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து, புலிகளோடு சமரசம் செய்து கொள்ள ராஜீவ் விரும்பினார். ஒருநாள் என் நண்பர் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் அழைப்பையேற்று மந்தைவெளியில் உள்ள அவரது அலுவலகத்துக்குப் போனேன். புலிகளுடன் ராஜீவ் போர்நிறுத்தம் செய்ய விரும்புகிறார். இதுபற்றி டெல்லியில் ராஜீவ் காந்தியோடு சிதம்பரம் பேசிவிட்டு, எஸ்.ஜி.வினாயகமூர்த்திக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். நீங்கள் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த இயக்கத்தின் சார்பில் நீங்கள் பேச முடியுமா?" என்றார்.

நான் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டு உடனே திருவான்மியூருக்குச் சென்றேன். அங்கே வீட்டுக்காவலில் இருந்த தம்பி கிட்டு, கோலை ஊன்றியபடி வந்து நலம் விசாரித்தார். போர் நிறுத்த கோரிக்கை பற்றி கிட்டுவிடம் கூறினேன். "அண்ணே! உங்களுக்குத் தெரியாதா? இந்தியாவை எந்தக் காலத்திலாவது நாம் எதிர்க்க நினைத்திருப்போமா? இந்தப் போரை நாம் விரும்பியா ஏற்றுக் கொண்டோம்? இது நம்மீது திணிக்கப்பட்ட போர்" என்று வருத்தப்பட்டார்.

"சரி. இயக்கத்தின் சார்பில் நான் டெல்லி சென்று சமரசப் பேச்சில் கலந்து கொள்ள முடியுமா?" என்றேன். கிட்டு உடனே உள்ளே சென்று வவுனியாவில் இருந்த தம்பியிடம் (பிரபாகரனிடம்) பேசி அனுமதி பெற்றார். "இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கை இணைத்து "தமிழீழத் தாயகம்" என அறிவிக்க வேண்டும். ஈழப்பகுதிகளில் உள்ள இருநூறு சிங்கள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த வேண்டும். தமிழர் மறுவாழ்வு நிதியாக நூறு கோடி ரூபாய் நிதி தரவேண்டும் என்று கோரிக்கைகளை கிட்டு எழுதித் தந்தார். முக்தா சீனிவாசனிடம் போய்ச் சொன்னேன். அவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

இரண்டு நாள் கழித்து ஒரு நாள் மாலை டெல்லி புறப்படத் தயாரானேன். அன்று பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2:30 மணிக்கு வீடு வந்தேன். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் மனைவி தமிழரசிக்கு நெஞ்சுவலி ஏற்பட, அவரை உடனே விஜயா மருத்துவமனையில் சேர்த்து நான்கைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன். ஒத்திவைத்த டெல்லிப் பயணம் இரத்தானது. ஒரு சம்பவம் தவறிப்போனதால் ஒரு சரித்திரமே தவறிப்போனதே என்று வேதனையடைந்தேன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு முக்தாவே சாட்சி. பழங்காலத்தில் மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது புலவர்கள் சந்து (சமரசம்) செய்ததுபோல இந்த ஏழைப்புலவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தும் அது கைநழுவிப்போனது."

புலிகளைக் காரணம் காட்டி காங்கிரசார் தி.மு.க. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்களே?

"பாவம். காங்கிரஸ்காரர்களுக்கு நீண்டகாலமாக ஆட்சிப்பசி, அதிகாரப்பசி இருக்கிறது. நாற்பத்தியொரு ஆண்டுகாலமாக தமிழகத்தில் நாட்டாமை செய்யும் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள். இப்போது கூடு விட்டுக் கூடு பாய (கூட்டணி மாற)த் துடிக்கிறார்கள். அதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? அந்த வகையில் விடுதலைப் புலிகள் அவர்களுக்கு உதவி இருக்கிறார்கள். காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிற பாசமிகு தோழர்களே! நீங்கள் சத்தியமூர்த்தி பவனை யுத்த பூமியாக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்."
நன்றி>புதினம்.

Wednesday, February 06, 2008

எமது போராட்டம் புதுடில்லியில் ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியிருக்கின்றது: கொளத்தூர் தா.செ.மணி!!!


இந்திய அரசே! இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடில்லியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் கனடிய தமிழ் வானொலியில் (CTR) ஒலிபரப்பாகும் "வணக்கம் ரொறன்றோ" நிகழ்ச்சியில் இன்று புதன்கிழமை தொலைபேசியூடாக பங்கேற்று கொளத்தூர் மணி தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:

பெரியார் திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் தமிழீழச் சிக்கல் குறித்து எமக்கு பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.

இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு "இந்திய அரசே! இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே!" என்ற ஒற்றைக் கோரிக்கையை மட்டும் முன்வைத்து தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெறப்பட்ட ஏறத்தாழ 7 லட்சம் கையெழுத்துகள் கொண்ட கையெழுத்துப் படிவங்களை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிக்கச் செல்வதற்கு முன்பாக அதனை ஜனநாயக முற்போக்குச் சக்திகளின் கவனத்தை ஈர்க்க மக்கள் மத்தியில் ஒரு பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.

எமது ஒற்றைக் கோரிக்கை இந்திய அரசே! இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே என்பதுதான்.

புதுடில்லியிலிருந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய நிகழ்வில் பங்கேற்றனர்.

மராட்டிய மாநிலம் மும்பையிலிருந்தும் கர்நாடகம் மாநிலம் பெங்களுரிலிருந்தும் பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு ஏறத்தாழ புதுடில்லி வாழ் பொதுமக்கள் என்கிற அளவில் 50 பேர் கலந்து கொண்டனர்.

இன்று முற்பகல் 11:30 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக் குழுவில் இருக்கின்ற வழக்கறிஞர் துரைசாமி முதலில் தொடக்க உரை நிகழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோரும் தமிழ்நாடு மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக நான் உரையாற்றினேன். அதன் பின்னர் பேரணி தொடங்கியது. பேரணி தொடக்கத்தின் முன்பாக

இந்திய அரசே! இந்திய அரசே!
இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே!
எங்கள் தமிழரைக் கொல்லாதே!

எங்கள் வரிப்பணத்தில்
எங்கள் தமிழர்களைக் கொல்ல
ஆயுதம் கொடுக்காதே!

கொடுக்குது கொடுக்குது
காந்திதேசம் கொடுக்குது!

கொல்லுது கொல்லுது
புத்ததேசம் கொல்லுது!

அங்கே எம்
தமிழர்களைக் கொல்லுது!

இலங்கையிலே நடக்கிற கொடுமைகளை
உலக நாடெல்லாம் கண்டிக்குது
இந்தியாவோ ஆயுதம் கொடுக்குது
உடனே அதனை நிறுத்திடு!

ஆகிய முழக்கங்கள் தமிழில்- ஆங்கிலத்தில்- ஹிந்தியில் எழுப்பப்பட்டன.

இந்தியத் தலைமை அமைச்சரான பிரதமரிடம்தான் அந்தக் கையெழுத்துப் படிவங்களை கையளிக்க இருந்தோம். ஆனால் அவரைச் சந்திப்பதற்கு எமக்கு நேரம் ஒதுக்கித் தருவதில் சிக்கல்கள் இருந்த காரணத்தால் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். இன்று மாலை 4:30 மணிக்கு அவர் நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால் வேறு சில சிக்கல்கள் காரணமாக நாளை முற்பகல் 10:00 மணி முதல் 10:15 வரை இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்தில் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள். தேவைப்பட்டால் நேரத்தை கூட்டிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் கையெழுத்துப் படிவங்களை கையளிக்கின்ற போது, புவியல் சார் இந்தியாவின் அரசியல் நலன்களைக் கருத்தில் கொண்டு நாங்கள் உதவி செய்வதாக அவர் கூறும் நிலையில் இந்தச் சிக்கலில் சிறிலங்காவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் உதவுகிற நிலைமையைக் கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளோம்.

அதேபோல். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த இந்திரா காந்தி மேற்கொண்ட நிலைப்பாடுகளையும் எடுத்துக்காட்டி தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிராக சிறிலங்காவிற்கு ஆயுதங்களைக் கொடுப்பதன் மூலமாக் ஒரு காலத்தில் அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்த இந்தியா, வழிதவறப் போய்க்கொண்டிருப்பதாக உலக நாடுகள் எண்ணிக் கொண்டிருப்பதனையும் நாம் சுட்டிக்காட்ட எண்ணிக்கொண்டு இருக்கின்றோம்.

இந்திய அரசின் கவனத்துக்கு நாம் கொண்டு சென்றிருப்பதன் மூலமாக ஒரு பெரும் கொள்கை மாற்றத்தை- தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று நாம் உறுதியாக நம்பவில்லை.

ஆனால் இப்படிப்பட்ட எந்தக் கோரிக்கையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படவில்லை.

தமிழ் மண்ணைத் தவிர வேறு பகுதிகளில் இது தொடர்பிலான கவன ஈர்ப்பு- கருத்து ஈர்ப்பு செயற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதனை மாற்றுகின்ற ஒரு புதிய தொடக்கமாக மட்டுமே இந்த நிகழ்வு அமையும் என்று நாம் நம்புகின்றோம்.

இதன் தொடர்ச்சியாக புதுடில்லியில் உள்ள முற்போக்கு சக்திகள்- புரட்சிகர அரசியல் எண்ணம் கொண்ட சக்திகள் -மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களிடமும் இந்தப் பிரச்சனையை விளக்கி புரியவைத்து அவர்களுடைய தலையீட்டையும் கொண்டுவருவதற்கு ஒரு பெரும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதின் தொடக்கமான இதனை நாம் கருதுகிறோம்.

பொதுவாக இந்திய நாடாளுமன்றத்தைச் சுற்றி உள்ள பகுதிகள் ஏறத்தாழ ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியாகத்தான் காணப்படுகின்றது.

அலுவலர்களும் உணவு விடுதிக்காரர்களும்தான் பெரும்பாலும் இருக்கின்றனர்.

ஆனாலும் கூட அந்த நேரத்தில் முதலில் எங்கள் தோழர்களின் குழந்தைகள்- பெண்கள் ஈழத்தில் நடைபெறுகின்ற தாக்குதலை நினைவூட்டும்படியாக காயக்கட்டுகளை தங்களது தலையில் நெற்றியில் பதியவைத்துக் கொண்டு- கால்கள் பாதிக்கப்பட்டவரைப் போலவும் சதைகள் பிய்ந்து தொங்குவது போலவும் தங்களை காட்டிக்கொள்வதற்கான முயற்சிகளோடு வந்தனர்.

அதனை அவர்கள் கண்டபோதுதான் எங்கள் பக்கம் வந்தனர். அப்போது எங்கள் முழக்கங்கள் அவர்களிடத்திலே சென்றடைந்திருக்கின்றது.

கோரிக்கைகள் தொடர்பான பதாகைகள்- ஈழத்தில் நடைபெறுகின்ற படுகொலைகள் தொடர்பிலான படங்களைக்கொண்ட பதாகைகளும் எடுத்து வரப்பட்டன.

அவை ஒரு புதிய எண்ணத்தை உண்டாக்கியிருக்கக்கூடும்.

இந்நிகழ்வுக்குப் பின்னர் புதுடில்லியில் கல்லூரியில் கல்வி கற்கக்கூடிய தமிழரல்லாத பிறமொழி பேசும் மாணவர்கள் தொடர்ந்தும் எங்களுடன் பேசி வருகின்றனர். ஒரு கிளர்ச்சியை இங்கு உருவாக்கியிருக்கின்றது என்று சொல்லலாம்.

புதுடில்லியில் உள்ள செய்தி நிறுவனங்கள் இந்தச் செய்திகளைப் பதிவு செய்து சென்றிருக்கின்றனர். நாளை அவை வெளியாகக் கூடும்.

தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகள் எல்லாம் இந்த ஊர்வலத்தை விரிவாகக் காட்டிக் கொண்டிருப்பதாக தமிழ்நாட்டிலிருந்து எங்களுக்கு தொலைபேசிச் செய்திகள் வருகின்றன.

எனவே ஒரு சிறு தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றது- ஒரு சிறு பொறியை உண்டாக்கியிருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம்.

இந்த மாத இறுதியில் நாடாளுமன்றம் கூடுகின்றபோது இந்தப் பகுதியில் ஒருவார காலமாவது தங்கியிருந்து இதில் தொடர்புள்ள அறிஞர்களையும் அழைத்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் இதனை விளக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருக்கின்றோம். அது ஒருவேளை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

தமிழக நிலைமை

பொதுவாக, ஈழச் சிக்கல் என்பது தமிழ்நாட்டில் விவாதிக்கப்படுகின்ற போது அதனைத் தீர்த்து வைக்கின்ற நோக்கம் இருக்காது. தங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம்தான் இருந்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இது.

தங்களுக்குப் பேச செய்தி கிடைக்காத காங்கிரஸ் கட்சியினர் இதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களது அரசியல் துணை தேவை என்று கருதுகின்ற அரசு அதற்கு கொஞ்சம் தலையாட்டி சம்மதித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிற சூழல் உள்ளது.

ஆனால்

ஈழத் தமிழர்களுக்காக பட்டினிப் போராட்டம் நடத்தினால் கூட ஏதோ தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக நடத்துகின்றார்கள் என்று கூறி தடை செய்ய வேண்டும் என்று கேட்கிற காங்கிரஸ் கட்சி-

அதனைத் தடை செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கின்ற காங்கிரஸ் கட்சி

இப்போது டில்லியில் அந்தக் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் பகுதிகளில்- நாட்டின் தலைநகரில் ஊர்வலம் நடத்த அனுமதித்திருக்கும் நிலையில்

தமிழ்நாட்டில் இனி அப்படிப்பட்ட எதிர்ப்புக்குரல் எழுப்பமாட்டார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.

தமிழ்நாடு அரசும் இதனை சுட்டிக்காட்டி அவர்களுக்கு மறுப்புக்கூற ஒரு வாய்ப்பாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.

இந்தியாவின் தற்போதைய நிலைமையும் எதிர்காலமும்

இந்தியா- இந்தியாவை இப்போது வழிநடத்துகிற அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் இந்த சிக்கல் குறித்து முடிவெடுக்கின்ற உரிமையை தங்கள் கையில் வைத்துக் கொள்ளாமல்- அதிகார வர்க்கத்தின் கையில் விட்டிருப்பதுதான் பேரவலமாக இருக்கிறது.

அதனை மாற்றி அரசியல் தலைவர்கள் அந்த அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும்

தமிழர் சிக்கல் என்கிறபோது தமிழ்நாட்டுத் தலைவர்களினது கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற போக்கே காணப்படாமல் இருப்பதும்

தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதில் உறுதியாக இருந்து கூட்டணியில் இருக்கின்ற தலைவர்களும் உறுதியாக வலியுறுத்தாத சூழலும்தான் இப்போது உள்ளது. உண்மைதான்.

ஆனால்

இது எப்போதும் மாறாதது என்று சொல்ல முடியாது.

காரணம் இப்போது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியாக இருக்கிற அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் எடுத்திருக்கின்ற நிலைப்பாடுகள் இறுதியில் இந்தியாவின் கழுத்தை நெறிக்கும் என்பதனை உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.

அந்தச் சூழலில் நாங்கள் எடுக்கின்ற போராட்டங்கள் ஒரு தாக்கத்தை ஒரு திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றோம் என்றார் அவர்.
நன்றி>புதினாம்.

சிறிலங்காவுக்கான ஆயுத உதவியைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான ஆர்ப்பாட்டம்!!!

சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்திய நாடாளுமன்றம் முன்பாக இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுடில்லி வாழ் தமிழர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுப்பினர்.

பேரணி நடைபெற்ற பகுதி எங்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தினது இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் பதாகைகளாக தொங்க விடப்பட்டிருந்தன.

இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து-

இனப்படுகொலைக்குத் துணை போகாதே!

ஆயுத உதவி வழங்காதே!

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை ஒரு பாரிய கவன ஈர்ப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெருந்திரளாக அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.

சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை இந்திய அரசாங்கம் வழங்கக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ள படிவங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் பெரியார் திராவிடர் கழகத்தின் இன்று மாலை 4:00 மணியளவில் நேரில் கையளிகக் உள்ளனர்.

இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:

- தமிழீழ நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.

- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை இந்திய அரசிடம் நாங்கள் முன்வைக்க வேண்டியுள்ளது.

இருப்பினும் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்காதே என்ற ஒற்றைக் கோரிக்கையையே இப்போது நாம் வலியுறுத்துகின்றோம்.

இந்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்கு எதிராக இந்திய அரசே இராணுவ வழித் தீர்வுக்காக இராணுவ உதவிகளை வழங்கும் முரண்பாட்டை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழ்நாட்டினது அனைத்து கட்சியினரும்- மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட- தமிழ்நாட்டு அமைச்சர்கள்- தமிழகத்தின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்துத் தரப்பு தமிழ்நாட்டு மக்களும் இந்த கோரிக்கைகாக கையெழுத்திட்டுள்ளனர். இந்த கையெழுத்தியக்கத்தை முன்னெடுத்தது பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதும் இந்தக் கோரிக்கை இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கை என்றார் அவர்.

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில், அமைதி வழித் தீர்வை வலியுறுத்திக் கொண்டே இராணுவ வழித் தீர்வுக்கான ஆயுத் உதவிகளை செய்யக் கூடாது என்று நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். சிறிலங்கா அரசுக்கான ஆயுத உதவிகளை தொடர்ந்தும் மத்தியிலே ஆளும் காங்கிரசு அரசாங்கம் வழங்குமேயானால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்பது வேரடி மண்ணோடு வீழ்ந்துபோய்விடும் என்று புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு நாம் சொல்லவும் விரும்புகிறோம் என்றார்.
நன்றி>புதினம்.

Monday, February 04, 2008

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி!!! கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் !!!

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி: முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர!!!

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காங்கிரசார் அவ்வப்போது புகார் கூறிவரும் நிலையில், முதல்வர் கருணாநிதி, அவையெல்லாம் வீண்பழியென்றும், இப்படியெல்லாம் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் என்று இப்போது கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டது என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து அரசு மீது அபாண்டமாக குற்றச்சாட்டுககள் வீசப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனமாக இருந்திருககிறார்கள், இதெல்லாம் தனக்கு மிகுந்த மனவருத்தத்தினை அளிப்பதாகவும் கருணாநிதி கூறியிருககிறார்.

கடந்த வாரம் சட்டமன்றத்தில் சட்டஅமைச்சர் துரைமுருகன் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுககப்படும் என எச்சரித்திருந்தார். இருந்தும் தொடர்ந்து காங்கிரசார் இவ்வாறு குறைகூறுகின்றனர், இதற்குமேலும் இப்பிரச்சாரம் தொடர்ந்தால் பதவியிழக்கவும் தயார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

காங்கிரஸ் தரப்பில் முதல்வரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் தயங்குகின்றனர். சிறிதுநேரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் தெரிவிப்பது போன்று நாகர்கோவிலில் எதையும் அவர்கள் பேசவில்லையென்றும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுககு ஆதரவாக எவரும் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.

தொடர்ந்து கருணாநிதி பேசியது குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நன்றி>BBC

Sunday, February 03, 2008

சிறீலங்காவின் 60வது சுதந்திர நாளை தமிழீழ மக்கள் துக்க நாளாக் கடைப்பிடிக்க முடிவு!!!

சிறீலங்காவின் சுதந்திர நாள், வரும் திங்கட்கிழமை உலகெங்கும் வாழும் தமிழீழ மக்களால் துக்க நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. அன்று தமது இல்லங்களில் இருந்து வெளியில் செல்லும் ஒவ்வொரு புகலிட தமிழீழ மக்களும், கறுப்புப் பட்டிகளை அணிவதற்கு முடிவு செய்திருப்பதோடு, பரவலாக எதிர்ப்பு போராட்டங்களையும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இருக்கின்றனர்.
நன்ரி>பதிவு.

Friday, February 01, 2008

பாடசாலைச் சிறாரின் பேருந்து மீது சிறிலங்கா அரசின் இனவெறியாட்டம், கானொளியில்.

மன்னாரில் நடைபெற்ற, பாடசாலைமாணவரின் பேருந்துமீதான கிளைமோர் குண்டுத்தாக்குதல்.

Thursday, January 31, 2008

கடலுக்குள் கண்ணி வெடி! - ரவிக்குமார் எம்.எல்.ஏ.




- யூனியர் விகடன் -

'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு' என்று வாழும்
மீனவ மக்களின் பிழைப்பில் இப்போது நெருப்பை அள்ளிப்போட்டிருக்கிறது
இலங்கை அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில்
கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடலில் கண்ணி வெடிகளை இலங்கைக்
கடற்படை இப்போது மிதக்கவிட்டிருக்கிறது. பாதுகாப்பு நோக்கத்தில்
செய்யப்பட்டதாக அதை இலங்கை அரசு வர்ணித்தாலும், உண்மையில் தமிழக
மீனவர்களைப் படுகொலை செய்யவும் பயமுறுத்தவும்தான் இந்தக் காரியத்தை
இலங்கைக் கடற்படை மேற்கொண் டிருக்கிறது என மீனவர்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்புதான் இலங்கை அரசு தமிழர் பிரச்னைக்கு சமாதானத்
திட்டம் ஒன்றைத் தயாரித்திருப்பதாக அறிவித்தது. அனைத்துக் கட்சிப்
பிரதிதிகள் குழுவால் (APRC) முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ராஜபக்ஷே அரசு
ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் செய்திகள் வந்தன. கடந்த பதினெட்டு மாதங்களாக
அறுபத்து மூன்று முறை கூடிப்பேசி, வெறும் மூன்று பக்கங்களைக் கொண்ட
அறிக்கை ஒன்றை அந்த அனைத்துக் கட்சிக்குழு சமர்ப்பித்திருந்தது!
அதிலும்கூடப் புதிதாக எதுவும் இல்லை. 1987--ம் ஆண்டு போடப்பட்ட இந்திய-
இலங்கை ஒப்பந்தத்தின் வழிகாட்டு தலின்படி இலங்கை அரசியலமைப்புச்
சட்டத்தில் செய்யப்பட்ட பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிக் குழுவின் 'அரிய'
ஆலோசனையாகும்.

மாகாணக் கவுன்சில்களை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க
வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற பேச்சுக்கள் பலமாக அடிபட்டன. இந்தப்
பிரதிநிதிகள் குழுவில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய
கட்சியும் (யு.என்.பி.), ஜனதா விமுக்தி பெரமுனாவும் (ஜே.வி.பி.) கலந்து
கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சியினரும் அதில்
பங்கேற்கவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளால்
புறக்கணிக்கப்பட்ட அந்தக் குழுவின் பரிந்துரைகளை இலங்கையில் எவரும்
மதிக்கவில்லையென்பதே உண்மை.

போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட ராஜபக்ஷேவின்

கொடுநெறிப் போக்கை உலக நாடுகள் கண்டித்து வந்த வேளையில், அதிலிருந்து
தப்பிப்பதற்காக ராஜபக்ஷே ஆடும் நாடகம்தான் இது என்று எல்லோருக்குமே
தெரிந்துவிட்டது. அதனால்தான், சிங்கள அரசின் சமாதானத் திட்டத்தை எவரும்
'சீரியஸாக' எடுத்துக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தக்
கண்ணிவெடி சமாசாரம் இப்போது வெளியே தெரிய வந்திருக்கிறது.

1974--ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த
இந்திரா காந்தியும் இலங்கை பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகாவும்
செய்து கொண்ட ஒப்பந்தம்தான் முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய-இலங்கைக்
கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின்
அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின்
மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த நாடுகளின் கப்பல்கள் ஒன்று
மற்றொன்றின் எல்லைக்குள் சென்று வரும் உரிமை தொடர்ந்து காக்கப்படும்
எனக்கூறிய அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், 'இந்திய மீனவர்களும்,
யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு
இலங்கையிடம் அனுமதி பெறத்தேவையில்லை' எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1974-க்குப் பிறகு 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள்
இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான்
அது. இந்தியா சார்பில் கேவல்சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி.
ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு
ஒப்பந்தங்களிலோ... இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22-ம் தேதி
கையெழுத்தான இலங்கை, இந்தியா, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான
முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ... கச்சத்தீவு பகுதியில் தமிழக
மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. இந்த
ஒப்பந்தங்களுக்குப் பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான்
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்தார்கள் என்று
கூறப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று
ஓய்வெடுக்கவும், அங்கே தமது வலைகளை உலர்த்த வும், அங்கே இருக்கும் புனித
அந்தோணியார் கோயில் திருவிழாவுக்குச் செல்லவும் தொடர்ந்து உரிமை
பெற்றிருந்தார்கள்.

1983-ம் ஆண்டுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவர்கள் மீன்பிடித்
தொழிலைச் செய்து வந்தனர். 83-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தைத் தொடர்ந்து
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது.
அந்தத் தடை 2003 வரைதொடர்ந்தது.

தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலை
களும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும்
தொடர்கதையாயின. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால்
சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படித் தமிழக மீனவர்கள்
பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட
முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதுவரை துப்பாக்கியால்
சுட்டவர்கள் இப்போதோ கண்ணிவெடிகளை மிதக்க விட்டுவிட்டார்கள்.
கடல் கண்ணிவெடி என்பதுநிலத்தில் பயன்படுத்துவதைவிடவும் சக்தி
வாய்ந்ததாகும். 'டார்பிடோக்கள்'என அழைக்கப்பட்ட பழைய காலத்து கடல்
கண்ணிவெடிகள் பதினாறாம் நூற்றாண்டி லேயே புழக்கத்துக்கு வந்துவிட்டன.
கடல் கண்ணி வெடிகள் நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கக் கூடியவை
என்கிறார்கள். முதலாம் உலகப் போரின் போது பாரசீக வளைகுடாவில் ஈரானால்
மிதக்க விடப்பட்ட கடல் கண்ணிவெடி, 1988-ம் ஆண்டில் அமெரிக்கக் கப்பல்
ஒன்றைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதே 'நீண்ட ஆயுளுக்கான' உதாரணம்
ஆகும்.

கடல் கண்ணிவெடிகளில் இப்போது பலரகங்கள் வந்து விட்டன. இலக்கைத்
துல்லியமாகத் தாக்கி அழிக்கும்படி அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கடலில்
வெவ்வேறு ஆழங்களில் அவற்றை மிதக்கவிட முடியும். கடல் கண்ணிவெடி
போடப்பட்டிருப்பதை எளிதாகக் கண்டறிய முடியாது. எனவே, அப்பாவி மீனவர்கள்
அதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். அதனால்தான் இலங்கைக் கடற்படை
கண்ணிவெடி போட்ட செய்தி தெரிந்ததற்குப் பிறகு தமிழக மீனவர்கள் தொழிலுக்கே
போகவில்லை.

யுத்தகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சர்வதேச அளவில்
பல்வேறு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஆனால், கடல் கண்ணிவெடிகளை எப்படிக்
கையாள வேண்டும் என்பதை 1907-ம் ஆண்டு இயற்றப்பட்ட 'ஹாக் கன்வென்ஷன்'
மட்டும்தான் வரையறுத்துள்ளது. அது இப்போது அவ்வளவாகப் பயன்படுவதில்லை.
எனவே, 1994-ம் ஆண்டு 'சான் ரெமோ கையேடு' என ஒன்றை நிபுணர்கள்
தயாரித்தார்கள். அதில் கடல் கண்ணிவெடிகளைக் கையாளுவது பற்றிய
வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

'பொதுவான கடல் பகுதிகளில் கண்ணிவெடிகளை போடக் கூடாது. சர்வதேச கடல்
பகுதியிலோ, பொதுவான கடல் பகுதியிலோ கப்பல்கள் செல்வதை தடுக்கக்கூடாது,
அதோடு கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும்.
அப்படி, வழி ஏற்படுத்தித் தராதுபோனால் கடல் கண்ணிவெடிகளை எவரும்
மிதக்கவிட அனுமதி கிடையாது' என 'சான் ரெமோ கையேடு' குறிப்பிட்டுள்ளது.
இப்போது இலங்கை அரசு செய்திருக்கும் காரியம், மேலே சொல்லப்பட்ட சர்வதேச
விதிகளுக்குப் புறம்பானதாகும். எனவே, இலங்கை அரசு உடனடியாகக் கடல்
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

கடல் கண்ணி வெடிகளைக் கண்டறிவதற்கு இப்போது நவீன கருவிகள் வந்து விட்டன.
ஆனால், அவை மிகவும் செலவு பிடிக்கக் கூடியவையாகும். சோனார்(Sonar) கருவி
பொருத்தப்பட்ட கப்பலை கண்ணிவெடி போடப்பட்டுள்ள இடத்தை நோக்கிச் செலுத்தி
அந்த வெடிகள் எங்கு உள்ளன என்பதை ஆராய லாம். மற்றொரு நடைமுறை -
ஹெலிகாப்டரில் அந்தக் கருவியைப் பொருத்தி, அதைக் கண்ணிவெடி போடப்
பட்டிருக்கும் கடற்பரப்பில் இழுத்துச் செல்வதாகும். இப்போது ரோபோக்களை
இப்படியான வேலையில் பயன்படுத்துகிறார்கள். எப்படியானாலும் அதற்கு ஆகும்
செலவு மிகமிக அதிகம்.

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத்
தீர்ப்பதற்காக இந்திய-இலங்கை அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. 'கூட்டு
நடவடிக்கைக் குழு' என ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் மட்டத்தில்
பேச்சுவார்த்தைகளும் நடந்தன. 2006-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்புவில்
நடந்த 'கூட்டு நடவடிக்கைக் குழு' கூட்டத்தில் சில முடிவுகளும்
எடுக்கப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து ஐந்து கடல் மைல் வரையிலான
தூரத்துக்குள் சென்று மீன் பிடித்த மீனவர்களைக் கைது செய்வதில்லை எனவும்,
இரு நாடுகளின் சிறைகளிலும் வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது
எனவும் அந்த 'கூட்டு நடவடிக்கைக் குழு' முடிவெடுத்தது. அதற்கு மாறாக
இப்போது கண்ணிவெடிகளைப் போட்டிருப்பது மேலே கண்ட கூட்டு நடவடிக்கைக்
குழுவின் முடிவுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதையும்
எடுத்துக்காட்டுகிறது.

சேது கால்வாய் திட்டம் சுற்றுச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் என்ற
அச்சம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறியிருப்பதையும், இப்போது
கண்ணிவெடி போடப்பட்டுள்ள நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால்,
சேதுக்கால்வாய் திட்டத்தை ஒரேயடியாக ஒழிப்பதற்காகத்தான் இலங்கை அரசு இந்த
நடவடிக்கையை எடுத்துள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி சர்வதேச
நெறிமுறைகளுக்கும், தானே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களுக்கும் எதிராகச்
செயல்பட்டுவரும் ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகளை 'போர்க்காலக் குற்றச்
செயல்களாகக்' (War Cerimes) கருதுவதில் தவறில்லை.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகம் இலங்கை மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டும். தனது குடிமக்களின் மீது
அக்கறையிருந்தால், தமது இறையாண்மையைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணினால்
இதைச் செய்வதற்கு இந்தியா தயங்கக்கூடாது.

இலங்கை கடற்படை கண்ணிவெடிகளைப் போட்டுவிட்டு செய்தி அனுப்பியதும், இந்திய
கடற்படை அதிகாரிகளோ நமது மீனவர்களைத் தடுத்து நிறுத்தி கைது
செய்கிறார்கள்! இலங்கைக் கடற்படை போட்டிருப்பது என்ன வகையான கண்ணிவெடி?
அது நீரின் ஓட்டத்தில் இந்தியப் பகுதிக்குள் வரக்கூடிய ஆபத்து
இருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா? அந்தக் கண்ணிவெடிகளை மனித
நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் போட்டிருக்கிறோம் எனச் சொல்கிறது
இலங்கைக் கடற்படை. அப்படி இருக்கும்போது ஏன் தமிழக மீனவர்களை இந்திய
கடற்படையினர் கைது செய்ய வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு நமது
அதிகாரிகள் பதிலெதையும் இதுவரையில் கூறவில்லை.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியபோது
வெகுண்டெழுந்த முதல்வர் கலைஞர், ''மீனவர்களின் கைகள் இனி மீன்களை மட்டுமே
பிடித்துக் கொண்டிருக்காது'' என எச்சரித்தார். இலங்கை அரசு மட்டுமல்ல...
இந்திய அரசும் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.
- யூனியர் விகடன்

Sunday, January 27, 2008

பிரித்தானியாவில், கருணாமீது தாக்குதல் நடாத்தபட்டு,சுடுநீர் ஊற்றாப்பட்டது.

பிரித்தானிய சிறையில் கருணா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான த நேசன் தெரிவித்துள்ளது.

போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடிய சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுக்களின் முன்னாள் தலைவரான கருணாவுக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:9 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள கருணா மீது சிறையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகம் உள்ள சிறையிலேயே கருணா அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அரசியல் கைதியாகவே வைக்கப்பட்டுள்ளார். அந்தச் சிறையில் இரு தமிழ்க் கைதிகளும் உள்ளனர். அவர்கள் வேறு குற்றங்களுக்காக அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள தமிழ்க் கைதிகள் கருணா மீது வெந்நீரைக் கொட்டியதுடன், ஆயுதங்கள் கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கருணாவுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே கருணா தனது சிறைவாசத்தை நிறைவு செய்த பின்னர் அவர்மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

கருணா தனது சிறைவாசத்தை அங்கு கழித்த பின்னர் அவர் சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும். ஆனால் அவர் மீதான போர்க்குற்றங்களை பிரித்தானியாவில் விசாரணை செய்யுமாறு அனைத்துலக மன்னிப்புசபை, மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன பிரித்தானியா அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

சித்திரவதைகள், சிறார் படைச்சேர்ப்பு, கடத்தல், படுகொலைகள் போன்ற அவர் மீதான போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கருணா மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>லங்காசிறீ

சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்கான எதிர்வினைதான் விடுதலைப் புலிகளின் யுத்தம்: ரணத் குமாரசிங்க!!!



இலங்கையில் இனவெறி கொண்ட பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகள் மற்றும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினது எதிர்வினைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்துகிற யுத்தம் என்று சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் சிறிலங்காவின் புதிய இடதுமுன்னணியின் மத்திய குழு உறுப்பினரான சிங்களவரான ரணத் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "கண்டனமும் இரங்கலும் தேசத்துரோகமா?" என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் கருத்துரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் ரணத் குமாரசிங்க ஆற்றிய உரையின் தமிழாக்கம்:

ஆறு ஆண்டுகளாக நார்வே சமரசத்தால் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த ஜனவரி 2ஆம் நாள் மகிந்த ராஜபக்ச, ஒருதலைபட்சமாக முறித்துக் கொண்டுவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்த ஒப்பந்தம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே இருவரும் கைச்சாத்திட்டு ஏற்றுக் கொண்ட ஒப்பந்தம் ஆகும்.

இப்படி தமிழர்களோடு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை சிறிலங்கா ஒருதலைப்பட்சமாக முறித்துக் கொள்வது இது முதல் முறையல்ல. பல முன்னுதாரணங்கள் உண்டு.

1958ஆம் ஆண்டில் சிறிலங்கா அரச தலைவர் பண்டாரநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்குமிடையே உருவான ஒப்பந்தமும்

டட்லி சேனநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையே 1966இல் உருவான ஒப்பந்தமும் இப்படித்தான் முறிக்கப்பட்டது.

தமிழர்கள், இனி ஒப்பந்தங்களைப் போட்டுப் பயனில்லை என்று முடிவெடுத்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க முடிவெடுத்ததற்கு காரணமே -ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களை இப்படி சிறிலங்கா மதிக்காமல் செயற்பட்டதுதான்.

அதன்பிறகுதான் தமிழர்கள் தங்களின் பாரம்பரிய பிரதேசத்துக்கு சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

இந்த யுத்தத்தினால் எங்கள் நாட்டில் கருத்துரிமை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. தமிழர்களின் கருத்துரிமை மட்டுமல்ல- சிங்களவர்- முஸ்லிம்களின் கருத்துரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது. ஒருநாட்டில் ஜனநாயகம் வளர்கிறது என்பதற்கான அடையாளமே கருத்துரிமைதான்.

யுத்தத்தில் முதல் பலிகடாவாவது கருத்துரிமைதான் என்று பல சிந்தனையாளர்கள் கூறியுள்ளனர். கருத்துரிமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு சர்வதேச உரிமை.

இனம், மொழி, மதம் என்று பாகுபாடுகாட்டாமல் அனைவருக்கும் கருத்துரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் எங்கள் நாட்டில், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. சுதந்திரத்துக்கான உரிமை இல்லை- தகவல்களை அறியக் கூடிய உரிமைகள் இல்லை.

அதுவும் ஒடுக்குமுறை யுத்தம் என்று வந்துவிட்டால் பொய்யும், திரிபும் இல்லாமல் அதனை நடத்தவே முடியாது.

எனவே ஒடுக்குமுறைகள் வெளி உலகுக்கு தெரிவதும் இல்லை. தமிழ்ப் பகுதியில் மக்களின் அவலங்கள் வெளியே தெரிவதில்லை.

தமிழ்ப் பகுதியில் மட்டுமல்ல- இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏதோ, சுதந்திரம் இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறதே தவிர உண்மையில் அங்கும் சுதந்திரம் வீசவில்லை. கொழும்பில் ஊடக மையங்கள் இயங்குகின்றன. சில ஊடகங்களை அரசே நேரடியாக நடத்துகிறது. பல ஊடகங்களைத் தனியார் நடத்துகின்றனர்.

அவற்றில் சுதந்திரமாக செயல்படும் ஊடகங்களுக்கு அரசை ஆதரித்து செயல்படும் ஊடகங்களும் உண்டு.

ஆனால், இந்த ஊடகங்களுக்கு முழு உரிமை கிடையாது. கடும் கட்டுப்பாடுகளுடன்தான் அவைகள் செயல்படுகின்றன. அரசு தனது அரசுக்குரிய அதிகாரத்தை மட்டுமல்ல, பொருளாதார அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஊடக உரிமைகளை ஒடுக்குகிறது.

அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டால், அரசு விளம்பரங்களும் அரசு வழங்கும் சலுகைகளும் நிறுத்தப்பட்டு விடுகின்றன.

தனக்குச் சாதகமாக செயல்படும் ஊடகங்களுக்கு அரசு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. ஒடுக்குமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசே கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

நேரடியாக சிறிலங்கா அரசாங்கம் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

கடந்த ஆண்டு பல ஊடகவியலாளர்களை சிறிலங்கா அரசு கைது செய்தது. கடந்த ஆண்டில் மட்டும் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.

லீடர் என்ற பத்திரிகைக் குழுமத்தின் அலுவலகம் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. இந்தப் பத்திரிகை அரசை எதிர்த்து வந்ததுதான் காரணம். இந்தப் பத்திரிகை அலுவலகமானது சிறிலங்காவின் விமானப் படைத்தளத்துக்கு மிக அருகில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் அடையாளம் தெரியாத நபர்கள் உள்நுழைந்து தீ வைத்தனர்.

ஏபிசி என்ற வானொலி தனது ஒலிபரப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் தகவல் ஒலிபரப்புத்துறை உத்தரவிட்டது. அந்த வானொலியின் 5 அலைவரிசை ஒலிபரப்புகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. ஏன்?

அரச தலைவர் ராஜபக்சவின் சொந்த கிராமத்துக்கு அருகே உள்ள ராமினிதன்னா என்னும் கிராமத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்ற செய்தியை ஒலிபரப்பியதற்காக இந்த நடவடிக்கை. இவை நேரடியாக ஒடுக்குமுறைக்கு சில உதாரணங்கள்.

மறைமுகமான அடக்குமுறைகளுக்கும் பல சான்றுகள் உண்டு.

உதாரணமாக,

எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் வெளியிட்ட "ஜனஹதா" "டி.என்.எல்" "ரதுயிரா" உள்ளிட்ட தொலைக்காட்சி ஒளிபரப்புகள் அரசின் பல ஒடுக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் "நேரடி விவாதங்கள்" நிகழ்ச்சிகளை, பெருமளவில் மக்கள் பார்க்கிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக, இந்த விவாதங்களில் பங்கேற்க எதிர்க்கட்சியினரை அழைக்கக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் மிரட்டி வருகிறது.

கடந்த காலங்களில் புதிய இடது முன்னணி (என்.எஸ்.பி.பி.) கட்சியின் பொதுச்செயலாளருக்கு இந்த விவாதங்களில் பலமுறை பங்கேற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கம் பற்றிய விமர்சனங்களை அவர் முன்வைத்தார். உண்மைகள் மக்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக, என்.எஸ்.எஸ்.பி கட்சிப் பிரதிநிதிகளை அழைக்கக் கூடாது என்று மகிந்த அரசு மிரட்டிவிட்டது.

அதே போல் இந்த நேரடி விவாதங்களில் பங்கேற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ரவிராஜ், ஐக்கிய தேசியக் கட்சியின் மகேஸ்வரன் போன்றோர் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக மறைமுகத் தடை விதித்தது. அந்தத் தமிழர்களின் பிரதிநிதிகள் அழகாக சிங்கள மொழியில் பேசக் கூடியவர்கள். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் நியாயங்களை சிங்கள மொழியில் அவர்கள் எடுத்து வைத்தார்கள். இந்த நியாயங்களை சிங்களவர்கள் உணர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், சிறிலங்கா அரசு அவர்களின் கருத்துரிமையைப் பறித்தது. ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமைகளைப் பறித்தது மட்டுமல்ல- அவர்களின் உயிர் வாழும் உரிமைகளே பறிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்தப் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அரசாங்கத்தை எதிர்த்தவர்கள், அரசு அடக்குமுறையைக் கண்டித்தவர்கள்தான் படுகொலைக்கு உள்ளாகிறார்கள்.

இது யுத்தத்தின் கொள்கைகளில் ஒன்றாக ஏற்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள்.

அரசை விமர்சிக்கிற திரைப்படங்கள் கூட அடக்குமுறைகளைச் சந்திக்கின்றன. அந்தத் திரைப்படங்களை வெளியிடுவதற்கு திரையரங்கங்கள் மறுக்கப்படுகின்றன. தொழிற்சங்கங்களும் சுதந்திரமாக செயல்பட முடியாது. சிறிலங்கா அரசாங்கமானது நேரடியாகவும் மறைமுகமாவும் பல்வேறு சட்டங்களின் வழியாக ஒடுக்கி வருகிறது.

தலைமை நீதிமன்றமும் ஏனைய நீதித்துறை நிறுவனங்களும் தொழிற்சங்க உரிமைகளுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

சிறிலங்காவின் சில அமைச்சர்களே, கருத்துரிமைக்கு எதிராக களத்தில் இறங்கி செயற்படுகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம், சிறிலங்காவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மெர்வின் சில்வ, அரசாங்கம் நடத்தும் "ரூபவாகினி" தொலைக்காட்சி நிலையத்துக்குள் நுழைந்து, செய்தி ஆசிரியரைத் தாக்கினார். அவரது செய்தியை "ரூபவாகினி" ஒளிபரப்புவதில்லை என்பதே காரணம். ஆத்திரமடைந்த தொலைக்காட்சி நிiலாய் ஊழியர்கள், அமைச்சரைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்ட்னார். தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் அறைக்கு ஓடிப்போய் அமைச்சர் பதுங்கிக் கொண்டார். பிறகு இராணுவமும் காவல்துறையினரும் வந்து அமைச்சரை விடுவித்தனர். எதிர்த்து நிற்ன்ற தொலைக்காட்சி ஊழியர்கள், செதியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் இப்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தாக்குதலுக்கு வந்த அமைச்சர், அவர் தாக்குதலுக்கு அழைத்து வந்த குண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதான் எங்கள் சிறிலங்கா நாட்டினது நிலை. அங்கு நிலைமை மிக மிக மோசமானதாக பயங்கரமாக உள்ளது. இந்த நிலையில் சர்வதேச சமூகம், இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பாக, இந்தியா- சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துத் தலையிட்டு கண்டிக்க வேண்டும். மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்ட எங்களுக்காக- சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக -இந்தியா தலையிட வேண்டும்.

எங்களின் நண்பர்களாக- தோழர்களாக இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரி அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் ஊடகங்களும் இந்திய அரசுக்கு இதற்கான அழுத்தத்தை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கோரிக்கை மிகமிக அவசியமானது. அவசரமானது. காரணம் எங்கள் சிறிலங்கா நாட்டில், கருத்துரிமைகளை நேரடியாகவும்- மறைமுகமாகவும் ஒடுக்கி வரும் மகிந்த அரசாங்கத்துக்கு பேராதரவு தந்து வருவது- இந்திய அரசுதான்.

"பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற முழக்கத்தோடு இந்தியா தனது ஆதரவை சிறிலங்காவுக்கு தந்து வருகிறது.

நான் ஒன்றை இங்கே திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிங்கள பௌத்த பிக்குகளின் இனவெறியும் பயங்கரவாதமும்தான் விடுதலைப் புலிகளை ஆயுதம் தூக்க வைத்தது.

அந்த இனவெறி பௌத்த பிக்குகள் மற்றும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்கான எதிர்வினைதான் விடுதலைப் புலிகள் நடத்தும் யுத்தம்.

எனவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டும் தனிமைப்படுத்தி பயங்கரவாத முத்திரை குத்தக் கூடாது-

தமிழர்களின் நியாயமான உரிமைகளை சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் ஒடுக்கியதால் எழுந்த போராட்டம்தான் விடுதலைப் புலிகள் நடத்தும் போராட்டம்.

தோழர்களே!

ஒரே ஒரு கேள்வியோடு நான் என் உரையை நிறைவு செய்கின்றேன்.

இடதுசாரிகளும் தொழிற்சங்கங்களும் குறிப்பாக இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகள்- சிறிலங்காவின் ஒடுக்குமுறைக்கு எதிராக -இந்தியா தலையிட வேண்டும் என்று ஏன் வற்புறுத்தாமல் ஒதுங்கி நிற்கிறீர்கள்? கருத்துரிமைப் பறிப்புகளை ஏன் கண்டிக்கத் தயங்குகின்றீர்கள்?என்றார் அவர்.
நன்றி>புதினம்.

Friday, January 25, 2008

கருணாவிற்கு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை - அரசு, கோத்தபாய மீது கருணா குற்றச்சாட்டு!!!

சிறீலங்கா படைகளுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு லண்டனிலுள்ள ஐல்ஸ்வோத் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இராச தந்திரிகளுக்குரிய பெயரில், பொய்யான கடவுச்சீட்டில் பிரித்தானிவிற்கு நுழைந்ததற்காக மட்டுமே தற்பொழுது இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், சிறீலங்கா அதிபரின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஸவுமே போலியான கடவுச்சீட்டை தயாரித்து தன்னை பிரித்தானியாவிற்கு அனுப்பி வைத்திருப்பதாக நீதிமன்றில் கருணா கூறியதாகத் தெரிகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) இது பற்றிக் கருத்துக் கூறிய சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லகம, தமது அரசு கருணாவிற்கான போலியான இராசரீக கடவுச்சீட்டை வழங்கவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்ததுடன். மூன்றாவது சக்தியொன்றின் பின்னணி இதில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

சிறீலங்கா படைகளுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக போரியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தொடர வேண்டுமென மனித உரிமை அமைப்புகளும், அனைத்துலக நிறுவனங்களும் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், அவ்வாறான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிய வரவில்லை.

கருணாவிற்கு அதிகூடிய தண்டனையாக 24 மாதங்கள் சிறைத்தண்டனையும், பண அபராதமும் விதிக்கப்படும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
நன்றி>பதிவு.

Thursday, January 24, 2008

புலிகளின் போராட்டம் நியாயமானது! முன்னாள் அமெரிக்கசட்டமா அதிபர் வாதம்!!!

சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையே ஆதரிக்கிறது என்கிறார்
அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பணியகம் (எவ்.பி.ஐ.) சமீபத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விடுத்த அறிக்கை பிழையாக வழிநடத்துவது, ஆதாரமற்றது என்று கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் உதவிப் பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன், விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் சுதந்திரக்கொள்கை பிரகடனத்தின்படியும், சர்வதேச சட்டங்களின் கீழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனிநாட்டை அமைப்பதற்கான உரிமையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியாகவும் இருக்கும் புருஸ் பெய்ன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

எவ்.பி.ஐயின் அறிக்கையில் கடந்த இரு வருட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் நாலாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்த எண்ணிக்கை எவ்வாறு கணக்கிடப்பட்டதெனவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் தமிழர்கள். நம்பகத்தன்மை மிக்க வட்டாரங்களின் படி இவர்களின் எண்ணிக்கை ஐயாயிரமாகும்.
விடுதலைப் புலிகளே உலகில் மிகவும் ஆபத்தானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் அமெரிக்கர் ஒருவரைக் கொலைசெய்துள்ளனரா அல்லது அச்சுறுத்தியுள்ளனரா என்று தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்கர் ஒருவரை அச்சுறுத்தினாலோ, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தாலோ மாத்திரமே வெளிநாட்டுப் பயங்கரவாத பட்டியலில் அமைப்பொன்றைச் சேர்க்கலாம் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வாறு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. மாறாக இலங்கை அரசோ அமெரிக்காவின் எதிரிகளுடன் நட்புறவு வைத்துள்ளது. ஈரானின் சர்வதேச பயங்கரவாதத்திற்கு அது ஆதரவு வழங்குகின்றது. கியூபாவுடன் நட்புறவு பாராட்டுகிறது.

விடுதலைப் புலிகள் இரு உலகத் தலைவர்களைக் கொன்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிரூபிப்பதற்கான தடயங்கள் முன்வைக்கப்படவில்லை.

மேலும் இது பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகளால் அமெரிக்காவிற்கு தற்போதுள்ள அபாயம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் தமிழ் புலிகளின் தலைவரை சமாதான பேச்சுகளின் போது கடத்திக் கொல்வதற்கு ராஜீவ்காந்தி உத்தரவிட்டார் எனவும் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

1977இல் தமிழ் தேசமொன்றை உருவாக்குவதற்கு தமிழர்கள் ஒருமித்த குரலில் ஆதரவளித்தனர். ஆனால் தமிழர்கள் ஒருபோதும் சிங்களவர்களின் இறைமையை நிராகரித்தவர்கள் அல்லர்.

இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ பதவி வகித்ததில்லை. இராணுவத் தளபதியாக இருந்ததில்லை.

தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்படவில்லை. புறக்கணிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இனப்படுகொலைக்காக சிங்களவர்கள் எவரும் தண்டிக்கப்படவேயில்லை.

மேலும் எவ்.பி.ஐ. தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.

இலங்கை அரசில் பணிபுரியும் நிரந்தர அமெரிக்கப் பிரஜையொருவர் அமெரிக்கக் குற்றவியல் சட்டத்திற்கு மாறாக சித்திரவதை , மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், சட்டவிரோத படுகொலைகள் என்பவற்றில் தொடர்புபட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் அரச சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டமைக்கும் இலங்கை அரசே காரணம்.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவு வழங்கும் ஈரானிற்கு இலங்கை சார்பாக உள்ளது. அதனால் இலங்கை அரசை வெளிவிவகார அமைச்சின் சர்வதேச பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும். என்று உள்ளது.(உ)
http://www.sudaroli.com/pages/news/today/02.htm