Tuesday, February 12, 2008

சிறிலங்கா மீதான தடைகளுக்கு ஜேர்மனி முயற்சி!!!

போரை நிறுத்தி அரசியல் தீர்வினைக் காணும் முகமாக சிறிலங்காவுடனான அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவர ஜேர்மனி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் சிறிலங்காவிற்கு சென்று அங்கே உள்ள தற்போதைய நிலை தொடர்பாக ஆராய உள்ளனர். அதன் போது போரில் இருந்து விலகி அரசியல் தீர்வை காணுமாறு அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின கேட்டுக்கொள்வார்கள்.

எனினும் ஜேர்மனி கடுமையான நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கமானது போரை தொடருமாக இருந்தால் சிறிலங்காவுடன் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இருந்து அதன் பணியாளர்களில் அரைவாசி பேரை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், கொழும்பில் உள்ள ஜேர்மனி அபிவிருத்தி வங்கியை மூடுவதற்கும் ஜேர்மனி தீர்மானித்துள்ளது.

ஜேர்மனியின் இந்த கடுமையான நிலைப்பாடு அதன் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சர் ஹெடிமேரி வியக்சொரக் சோல் வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜேர்மனியிலிருந்து வெளிவரும் "தஜேஸ் ஸ்பைகல்" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

போரை நிறுத்தி இருதரப்பும் அரசியல் தீர்வை காண்பதற்கு அனைத்துலக சமூகம் தமது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். தொடர்ந்து இராணுவத்தீர்வு முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடுமானால் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கத்துடன் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களில் இருந்து வெளியேற வேண்டும்.

இந்த நடவடிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் மீது பொருளாதார அழுத்தங்களை கொண்டுவர உதவும். ஐரோப்பிய ஒன்றியம் தற்போதைய நிலமைகளை ஏற்றுக்கொள்ளுமாயின் இந்த ஒத்துழைப்புக்களில் பயன் இருக்காது.

புடவைப் பொருட்களையே சிறிலங்கா பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது. சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புடவைகளின் பெறுமதி ஆண்டுக்கு 1.2 பில்லியன் டொலர்களாகும். இவை தவிர அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளும் உண்டு.

இது தொடர்பில் நாம் அமெரிக்காவுடனும் கலந்தாலோசிக்க வேண்டும். கடந்த வாரங்களில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவும் தீவிரமான போக்கை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு வருடங்களில் சிறிலங்காவுடன் ஒத்துழைப்புக்களுக்கான உடன்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அதற்குரிய நிதியான 38 மில்லியன் ஈரோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையிலும் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பன் கீ மூன் சிறிலங்காவின் நிலைமைகளை ஆராய சிறப்புத் தூதுவரை அனுப்ப வேண்டும்.

சிறிலங்காவில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்து வருவதை தொடர்ந்தே நாம் அங்குள்ள ஜேர்மனி அபிவிருத்தி வங்கிகளை மூடவும், பணியாளர்களை வெளியேற்றவும் தீர்மானித்துள்ளோம் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: