Monday, April 02, 2007

திருமலையில் புத்தரின் பெயரால்!!!

திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தீர்த்தத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. வழமையாக அம்பாள் அலயத்தில் இருந்து வித்தியாலயம் வீதி, வித்தியாலயம் ஒழுங்கை, பிரதானவீதி, கடற்படைத்தளவீதி. கோட்டை வீதி வழியாக சமுத்திரத்திற்கு செல்வது வழக்கம். இம்முறை பாதுகாப்பு என்ற போர்வையில் பொலிசார் புத்தர் சிலை அமைந்த பகுதி ஊடாக செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனை ஆலய நிர்வாகத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.

எக்காரணம் கொண்டும் வழமையான பாதையை மீறி அம்பாள் செல்லக்கூடாது என்று திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் பொலிசாருக்கு விடுத்த வேண்டுதலையும் மீறி இச் செயற்பாடு அமைந்துள்ளது. ஆலய ஆதீனகர்த்தா எவ்வித பிரச்சனைகளும் இன்றி தீர்த்தம் நடக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவினை ஏற்றுக் கொண்டு பொலிசாரக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

அம்பாள் ஆலயத்தில் இருந்து வித்தியாலயம் வீதி, வித்தியாலயம் ஒழுங்கை இடது புறம் பிரதான வீதி, இராஜவரோதயம் வீதி. மத்திய வீதி, மணிக்கூண்டுக் கோபுரம், கோட்டை வீதி வழியாக சமுத்திரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

2005ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி சட்டரீதியற்ற முறையில் ஆக்கிரமிப்பு முயற்சியாக திருக்கோணமலையில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்த திருக்கோணமலை மாவட்டத்தின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்து.

புத்தர் சிலை அமைந்த பிரதேசமூடாக ஊர்வலங்கள் செல்வதற்கு படையினர் பல்வேறு தடைகளை தற்போது ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த வருடம் வழமை போன்று இவ்வீதிவழியாகவே அம்பாள் சமுத்திரத்திற்கு தீர்த்தத்திற்கு செனற்மை இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

1 comment:

Anonymous said...

தமிழர்களை மட்டுமல்ல இந்துமதத்தை அழிப்பதும் சிங்களத்தின் குறிக்கோள்.