Tuesday, April 24, 2007

விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதல்: பலாலியில் குண்டு மழை - 6 பேர் பலி!!! ஆயுதக்களஞ்சியம் எரிந்து நாசம்!!!



யாழ்ப்பாணம்: விடுதலைப் புலிகள் மீண்டும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். பலாலி விமான தளம் மீது விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்கள் சரமாரியாக குண்டுகளைப் பொழிந்து நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் இலங்கை படையினருடன் போராடி வந்த விடுதலைப் புலிகள் தற்போது வான் பலத்தையும் பெற்றுள்ளனர். கடந்த மாதம் 26ம் தேதி கொழும்பு அருகே உள்ள காட்டுநாயகே விமானப்படை தளம் மீது அதிகாலையில் நடத்திய விமானத் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

உலக அளவில் வேறு எந்த போராளி அமைப்பிடமோ அல்லது தீவிரவாத அமைப்பிடமோ விமான பலம் இல்லை என்பதால் புலிகளின் இந்த புதிய பலம் அனைவரையும் அதிர வைத்தது.

கொழும்பு தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்தே இலங்கை அரசு இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஒரு விமான தாக்குதலை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பலாலி விமானப்படை தளத்தில் இன்று அதிகாலை புலிகள் தங்களது இலகு ரக விமானத்தால் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரமாரியாக குண்டு மழை பொழிந்து இந்த விமானங்கள் நடத்திய தாக்குதலால் விமானப்படை தளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் நிலை குலைந்தனர்.

புலிகளின் தாக்குதலில் 7 பேர் பலியானதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 17 பேர் காயமடைந்தனர். வான் வழித் தாக்குதலின்போது பீரங்கித் தாக்குதலையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் விமான படைத் தளத்தில் உள்ள ராணுவ முகாம் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விமானப் படைத்தளத்திலும் கணிசமான அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் இந்த இரண்டாவது விமானத் தாக்குதல் இலங்கையில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி>தற்ஸ் தமிழ்

2 comments:

Osai Chella said...

அடேங்கப்பா! தமிழன் கடலை வசப்படுத்தியது சோழர்காலம்! வானை வசப்படுத்தியது (கரிகால்) சோழனின் வான்படைகள்! .. இது தற்காலம்!

Thamizhan said...

சிங்கள இனஒழிப்பு அரசு என்ன கொடுமைகளை தமிழினத்திற்குச் செய்தாலும் கரிகால் சோழன் சிங்கள பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்தாமல் சிங்களப் படைமீது மட்டும் தாக்குதல்கள் நடத்துவதை உலகம் கவனித்துத்தான் ஆகவேண்டும்.
தமிழினம் படும் பாட்டில் பொறுமை கடைபிடிக்கும் தலைமையைப் பாராட்டாமல் யாரும் இருக்க முடியாது?
யார் பய்ங்கர வாதிகள்?அப்பாவி பொது மக்களைக் கொல்லும் அரசுதான் என்பதை வெளி உலகம்,போப்பாண்டவர் அனைவரும் உணர்கின்றனர்.