Monday, February 12, 2007

'ஒரு தரப்பின் இராணுவ வெற்றி இனப்பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்தாது': பிரித்தானியா.

"ஒரு தரப்பால் எட்டப்படும் இராணுவ வெற்றிகள் இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வை கொண்டுவர மாட்டாது"

என்று பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அண்மைக்கலமாக பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடம்பெற்று வரும் மோதல்களின் விளைவுகளை ஆராய்வதற்கும் மற்றும் அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு செல்வது தொடர்பில் மேற்படி அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

இது தொடர்பில் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம்:

"பிரித்தானியா சிறிலங்காவின் நீண்டகால நண்பன். இந்த நட்பு எமது நல்லெண்ணங்களை பகிர்ந்து கொண்டது, தொடர்ச்சியான தொடர்பாடல்களை மேற்கொண்டதன் மூலம் விருத்தியடைந்துள்ளது. பெருமளவான சிறிலங்கா மக்கள் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியதனால் அல்ல.

ஆனால் சிறிலங்கா அரசு இனப்பிரச்சனைக்கு ஒரு அமைதி வழியிலான தீர்வைக்காண வேண்டும் என்பதை விட சிறிலங்கா மீதான பிரித்தானியாவின் மிகப்பெரும் விருப்பம் வேறொன்றுமில்லை. இந்த தீர்வின் மூலம் சிறிலங்கா மக்களும், அதன் சமூகங்களும் சுதந்திரமான வாழ்க்கையை உணரவேண்டும், மேலும் அவர்களின் ஆளுமை, உடல்நலம், அறிவாற்றல் என்பன அதன் மூலம்; அபிவிருத்தியடைய வேண்டும்.
தற்போதைய மோதல்கள் நீடிக்குமாயின் அது சிறிலங்காவின் அபிவிருத்திப் பணிகளை பின்நோக்கி நகர்த்துவதுடன், நாட்டின் ஜனநாயகத்தையும் சீரழித்துவிடும். அது சிறிலங்கா தொடர்பான அனைத்துலகத்தின் நன்மதிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சிறிலங்கா மக்களினால் மட்டும் தான் அவர்களின் பிரச்சனையை தீர்க்க முடியும். ஆனால் பிரித்தானியாவும் ஏனைய அனைத்துலக சமூகமும் அதற்கு உதவ மட்டும் தான் முடியும். பல நாடுகளும், அனைத்துலக அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் அமைதிச்சூழல் ஏற்படுவதற்குரிய நிபந்தனைகளை ஏற்படுத்தவும், நீண்டகால அபிவிருத்தியை ஏற்படுத்தவும் சிறிலங்கா அரசுடன் இணைந்து ஏற்கனவே பணியாற்றிக் கொண்டு இருக்கின்றன.

சிறிலங்காவை பொறுத்தவரை அவர்களின் பணி மிகவும் பெறுமதி வாய்ந்தது என நான் நம்புகிறேன். சிறிலங்காவிற்கான பிரித்தானியாவின் அபிவிருத்தி மற்றும் அரசியல் உதவிகள் அமைதி முறையில் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு உதவுதல் என்னும் ஒரு நோக்த்திற்காகவே வழங்கப்படுகின்றன.

வட அயர்லாந்து பிரச்சனைக்கு தீர்வை எட்டியதில் நாம் சில முன் அனுபவங்களை பெற்றுள்ளோம். அந்த மாகாணம் தற்போது அமைதியாக உள்ளது. இந்த நிலையை அடைவதற்கு எமக்கு 30 வருடங்கள் எடுத்திருந்தன. பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையான விளைவுகளையே தரும் என்பதை நாம் உணர்ந்தவர்கள். அதே போலவே நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் அமைதி முயற்சியை முன்னகர்த்த விரும்பினால் மோதல்களை தணிவுக்கு கொண்டுவர வேண்டும்.

கடந்த வருடம் பிரித்தானியாவின் பிரதமர் ரொனி பிளேயர், இந்த அனுபவங்களை சிறிலங்கா அரசுடனும் அதன் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனும் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கியிருந்தார் என வடஅயர்லாந்தின் முன்னாள் வெளிவிவகாரத்துறை பிரதிநிதியான போல் மோர்ஃபி தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வன்முறைகளால் அமைதி ஏற்படப்போவதில்லை என மோதல்களில் ஈடுபடும் தரப்புக்கள் உணர்ந்து கொள்ளும் வரை அமைதி ஏற்படப்போவதில்லை இது நாம் வட அயர்லாந்து பிரச்சனையில் கற்ற பாடம்.
நான் ஒன்றை இங்கு சொல்வது பொருத்தமானது, ஒரு தரப்பினால் ஈட்டப்படும் இராணுவ வெற்றிகள் ஒருபோதும் அரசியல் தீர்வைத் தரப்போவதில்லை. இதனால் மிகக் கடுமையான வன்முறைகள் தான் விளைவாகப் பெறப்படும். இதன் விளைவாக மக்கள் தான் கடும் துன்பத்தை அனுபவிப்பார்கள். மனித உரிமைகள் கடுமையாக மீறப்படும், மனிதாபிமானப் பணிகள் பாதிக்கப்படும், மொத்தத்தில் இரு சமூகங்களுக்கும் இடையிலான வேற்றுமைகள் மேலும் அதிகரிக்கும். இது உலகத்தில் உள்ள சிறிலங்கா தொடர்பான நல்ல அபிப்பிராயங்களை பாதிப்படையச் செய்யும்.
சிறிலங்காவில் நடைபெற்று வரும் அமைதி முயற்சிகளை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்காக இங்கு போர்நிறுத்தம் அமுலில் உள்ளது என நாம் அறிந்துள்ளோம். ஆனால் அமைதி முயற்சிகளை மேம்படுத்த பல விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டும் என்பதை அரசியல்வாதிகள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வன்முறைகள் குறைந்து அமைதி உருவாக அது அவசியமானது.

2002 ஆம் ஆண்டு நோர்வே தலைமையில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், இடம்பெற்று வந்த போருக்கு ஓரு மூச்சுவிடும் கால இடைவெளியை வழங்கியிருந்தது. புதிய அமைதி முயற்சிகளுக்கும் அது ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்திருந்தது.

மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்புக்களும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ளும் நிலைக்கு வரவேண்டும். அதுவே அவர்களின் எதிர்கால உடன்பாடுகள் தொடர்பாக ஒரு பொதுவான புரிந்துணர்வுக்கு அவர்களை இட்டுச்செல்லும்.

வன்முறைகளும், பயப்பிரமைகளும் உள்ள சூழலில் நம்பிக்கை வளரப்போவதில்லை. பரந்த அரசியல் கொள்கைகள் அமைதி வழித் தீர்வுக்கு முக்கியமானது. புதிய கூட்டணி அரசு எல்லா கட்சிகளுடனும் இணைந்து நாட்டின் பொதுப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

நான் சிறிலங்காவிற்கு பயணிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இது எனது இரண்டாவது பயணம். எனது இந்தப் பயணம் அங்கு இடம்பெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர காத்திரமாக உதவவேண்டும் என்பதே எனது அவா". என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தென் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்த்தான் போன்ற நாடுகளுக்கு கொமன்வெல்த் மற்றும் வெளிவிவகாரத்துறை அதிகாரியாக ஹிம் ஹாவெல் பணியாற்றியதுடன் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, பயங்கரவாத தடுப்புப்பிரிவு, அணுவாயுதத் தடுப்புப்பிரிவு, ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றிலும் அதிகாரியாக பணியாற்றி இருந்தார்.

வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சராக இவர், 2005 ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: