Thursday, February 08, 2007

ஐ.நாவில் இன்று சிறீலங்கா தொடர்பான விவாதம்.

சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியான அலன் றொக் கடந்த ஆண்டு சிறீலங்காவிற்கு மேற்கொண்ட 10 நாள் விஜயம் தொடர்பான அறிக்கையை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபையின் செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

றொக்கின் சிறீலங்கா விஜயத்தின் போது சிறீலங்கா அரசின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் படைக்கு சிறுவர்களை சேர்ப்பதாகவும். அதற்கு அரசு ஆதரவு வழங்கிவருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். சிலசமயங்களில் அரச படைகள் கருணா குழுவினருக்கான சிறார்படை சேர்ப்பில் நேரடியாக பங்குபற்றியதாகவும் அவர் கூறியிருந்தார்.

சிறீலங்காவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதில் உள்ள தடைகளை நீக்குதல், போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான உறுதிப்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் இருந்து கோருதல் அல்லது குறிப்பிட்ட தரப்புக்கள் மீது சில தடைகளை கொண்டுவர சிபார்சு செய்தல் என்பன இந்த அறிக்கையில் இருக்கலாம் என பாதுகாப்புச் சபைத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் றொக்கின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்படும் வாரத்தில் சிறீலங்கா அரசு ஏனைய 60 நாடுகளுடன் இணைந்து சிறுவர் படைச்சேர்ப்பை முடிவுக்கு கொண்டுவருதல் மற்றும் படைகளில் உள்ள சிறுவர்களை விடுவித்தல் என்னும் ஆவணத்தை பிரான்ஸ் இல் நடைபெற உள்ள கூட்டத்தில் தயாரிக்க உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நாவின் அமைப்பு மற்றும் யுனிசெப்ஃ ஆகியவற்றை அண்மையில் தொடர்பு கொண்ட கருணா தாம் தமது படைகளில் சிறுவர்களை சேர்ப்பதை நிறுத்துவதாகவும், படைகளில் உள்ள சிறுவர்களை விடுவிக்கப்போவதாகவும் தெரிவித்ததாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் கீழ் சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நா அமைப்பில் பணிபுரியும் ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: