Tuesday, February 06, 2007

இலங்கையில் மனித உரிமைகள்:சர்வதேசத்தின் பரிசீலனையில்!

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர் பான விவகாரம் சர்வதேச ரீதியில் ஒலிக்கும் கவனிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ஐ. நா. பாதுகாப்புக் கவுன்ஸிலின் செயலணிக் குழு ஒன்று நாளை மறுதினம் கூடி இலங்கை விவ காரம் குறித்து ஆராயஇருக்கின்றது.

அதேசமயம் அடுத்த மாதத்தில் கூடவிருக் கும் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட் டத் தொடரிலும் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங் களில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் விவகாரம் விரிவாக ஆராயப்படவிருப்பதாக விடய மறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக் கின்றன. மேற்படி கவுன்ஸிலின் ஆவணங்களின் படி கூட்டத் தொடரின் நான்காவது அமர்வின் போது மார்ச் 12 ஆம் திகதிக்கும் ஏப்ரல் 5ஆம் திகதிக்கும் இடையில் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை விவகாரம் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.

சட்டவிரோதமான விசாரணைகள் மற்றும் சட்ட முரணான மரணதண்டனைகள் போன்றவை தொடர்பான ஐ. நாவின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன் 2005ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைக்கு வந்து, இலங்கை நிலைமை குறித்து நேரில் கண்டறிந்துள்ளார். அவர் மேற்படி ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் தமது அறிக்கையைச் சமர்ப்பித்துப் பிரதான உரை ஒன்றை ஆற்றவிருக்கிறார்.

கடந்த வருடம் இலங்கை நிலைமை குறித்து அல்ஸ்டன் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருந்தார். அதில் 2006 ஓகஸ்டில் மட்டும் பெருமளவு மனித உரிமைகள் மீறப்பட்ட துன்பியல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன என அவர் சுட்டிக்காட்டி யிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. முக்கியமாக தமிழ் புத்திஜீவிகள் பலர் படுகொலை செய்யப்பட் டமை, யாழ்ப்பாணத்தில் ஆள்கள் காணாமற் போகின் றமை முக்கியமாக வண. பிதா ஜிம் பிறவுண் வடக்கில் காணாமற் போனமை மூதூரில் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17பேர் படுகொலை போன்ற மனித உரிமைகளை மலினப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்ற மையை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

அதேபோல ஆயுதப் பிணக்குகளில் சிக்குண் டுள்ள சிறார்கள் தொடர்பான விடயங்களைக் கையாளும் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியும் அடுத்த மாதம் நடைபெறும் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து கருத்துகளை முன்வைக்க உள்ளார்.

ஏற்கனவே இவ்விடயத்தில் ஐ. நா. செயலா ளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியான ராதிகா குமாரசுவாமியின் சார்பில் அவரது தூதுவர் அலன் றொக் இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறிந்த பின்னர் இங்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பான தனது பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில், சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் நடவடிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளும், கருணா குழுவினரும் ஈடுபடுகின்றனர் என்றும், இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பிர தேசத்தில் கருணா குழுவினர் சிறுவர்களை வலோற் காரமாகப் படைக்குச் சேர்ப்பதற்கும், அவர்களுக் குப் பலவந்தமாக ஆயுதப்பயிற்சி கொடுப்பதற்கும் அரச படைகள் நேரடியாகவே உதவி செய்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை இலங்கையில் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருப் பதும் தெரிந்ததே.

சிறுவர்களைப் படைக்குத் திரட்டும் தரப்பு களுக்கு எதிராக கிரிமினல் குற்றங்களுக்கான சர்வ தேச நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவேண் டும் என்றும் ராதிகா குமாரசுவாமியின் அலுவலகம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந் தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் ஐ. நா. மனித உரிமை கள் கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பான ராதிகா குமாரசுவாமியின் உரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் முக்கியமாக வன்முறைகள் தொடர் பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனா திபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் முன் னேற்றம் காணப்படாதவிடத்து, ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கை நிலைமை தொடர்பாக விசேட பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கு ஐரோப்பிய யூனியனும் ஆயத் தமாகி வருகின்றது. இவ்விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் கடந்த மாதங்களில் எடுத்த முன் நடவடிக்கைகள், சற்றுக் கால அவகாசம் வழங்கும் விதத்தில் அப்போது ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இப்போது ஐரோப்பிய யூனியன் இதில் மும்முர மாக இருப்பதாகத் தெரிகின்றது.

ஐரோப்பிய யூனியனும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலில் தனது பிரேரணையை முன்வைத்து காய் நகர்த்துமானால், அக்கூட்டத் தொடரில் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை விவகாரம் விரிவாக ஆராயப்படும் சாத்தியம் உருவாகும்.
இதேசமயம், நாளை மறுதினம் இடம்பெறவிருக் கும் ஐ. நா. பாதுகாப்புக் கவுன்ஸிலின் செயலணிக் கூட்டத்திலும் அலன் றொக் இலங்கை நிலைமை தொடர்பான தனது விவரமான அறிக்கையைச் சமர்ப்பித்து விளக்கமளிக்கவிருக்கிறார். இக்கூட்டத் தில் இவ்விடயம் தொடர்பாக எட்டப்படவிருக் கும் முடிவுகள், சிபார்சுகள், பரிந்துரைகள் என்பன ஐ. நா. பாதுகாப்புக் கவுன்ஸிலின் கவனத்துக் கும், பரிசீலனைக்கும், உரிய நடவடிக்கைக்கும் சமர்ப்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நகர்வுகள் இலங்கையில் குறிப்பாகத் தமி ழர் தாயகத்தில் மனித உரிமைகள் பேணப்படும் நிலைமையை மேம்பாடடையச் செய்யுமா? இதுதான் மக்களின் ஆதங்கம்மிக்க கேள்வி. விடையைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நன்றி>சுடர் ஒளி

No comments: