Friday, December 01, 2006

அரசபத்திரிகைக்கு, நோர்வே விளக்கம்கேட்டு கடிதம்.

விடுதலைப் புலிகளுக்கு நோர்வே உதவி என்பது அப்பட்டமான பொய்: நோர்வே வெளியுறவு அமைச்சகம் அறிக்கை.

விடுதலைப் புலிகளுக்கு நோர்வே உதவி செய்கின்றது என்று சிறிலங்க அரசின் ஊடகமான டெய்லி நியூஸ் நாளேடு கடந்த திங்கட்கிழமை (27.11.06) செய்தி வெளியிட்டதோடு, நோர்வே தொடர்பாகவும், சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தொடர்பாகவும் உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமையால் நோர்வே வெளியுறவு அமைச்சகம் கடும் சீற்றம் அடைந்துள்ளது.
விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட கருணா வழங்கிய நேர்காணல் மூலமே மேற்படி அவதூறானதும் விசமத்தனமானதுமான தகவல்களை டெய்லி நியூஸ் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.

நோர்வே தொடர்பாகவும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தொடர்பாகவும் டெய்லி நியூஸ் வெளியிட்டுள்ள செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்து நோர்வே வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளதோடு, டெய்லி நியூஸ் ஆசிரியர் குழுமத்திடம் விளக்கம் கோரி கடிதமும் அனுப்பியுள்ளது.

நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு வீடு வாங்குவதற்கு விடுதலைப் புலிகள் நிதி உதவி செய்தனர், விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு 16 மில்லியன் குரோணர்கள் சொல்ஹெய்மினால் வழங்கப்பட்டது மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விலை மதிப்புள்ள தொலைக்காட்சியை சொல்ஹெய்ம் பரிசளித்தார் என்பன சிறிலங்காவின் டெய்லி நியூஸ் நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.

இவை தவிர எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது, ஆட்சி செய்வது என்பது தொடர்பாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொல்ஹெய்ம் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் பாரதூரமானதும் அப்பட்டமான பொய்களெனவும் நோர்வேயின் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இச்செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மற்றும் சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை இணையத்தளங்களிலும் மீள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, நோர்வே அரசாங்கத்தினால் அப்பட்டமான பொய்யென்று நிராகரிக்கப்படும் தகவல்களை, சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருப்பதானது பாரதூரமான விடயமாகவே தம்மால் நோக்கப்படுவதாகவும் நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான முன்னெடுப்புக்களில் நோர்வே பக்கச்சார்பற்ற அனுசரணையாளராக செயற்படுவதில்; நோர்வே உறுதியுடன் உள்ளதாக மேலும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: