Tuesday, December 05, 2006

வாகரையில், 40 படையினர் பலி- 75 பேர் படுகாயம்.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான படை நடவடிக்கைக்கு எதிராக, விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் நேற்று திங்கட்கிழமை காலை முதல் டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக, வாகரைப் பிரதேசத்தின் மேற்கே உள்ள காட்டுப்பகுதியை அண்டிய கட்டுமுறிவுக்கு ஊடாக நகர்வை மேற்கொண்டிருந்தனர்.
இந்நகர்வு முயற்சி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

திருகோணமடு, கரடிக்குளம் படை முகாம்களிலிருந்தே படையினர் இந்நகர்வை ஆரம்பித்திருந்தனர்.

இந்நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதலை நடத்தியிருந்தனர்.
நேற்று அதிகாலை முதல் நேற்று இரவு வரை இக்கடும் மோதல் நடைபெற்றது.
இம் மோதல்களில் படைத்தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

படைத்தரப்பினர் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

பெரும் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்ற படையினர் இன்றும் பொதுமக்கள் குடியிருப்புக்களையும் ஏ-15 வீதியை இலக்கு வைத்தும் படையினர் எறிகணைத் தாக்குதலை பரவலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்களும் முற்பகல் 10.30 மணியளவில் பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தின.

நேற்றைய இம் மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
நன்றி>புதினம்.

No comments: