Wednesday, May 02, 2007

இந்தியாவை குழப்ப இலங்கை அரசு நடத்திய சதி நாடகம் : பலிகாட ஆக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள்!!!

கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்க நமது மீனவர்கள் 12 பேர் மார்ச் 6---&ம் தேதி கடலுக்கு சென்றவர்கள் இதுவரை திரும்பவில்லை .

அதே கன்னியாகுமரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த மார்ச் 29ம்தேதி நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இரண்டு நிகழ்வுகளுமே தமிழர்களை அதிர்ச்சியூட்டி யுள்ள செயல்தாம். 5 மீனவர்களை சுட்டதும், 12 மீனவர்களை கடத்தியதும் விடுதலை புலிகள்தான் என்பதை தமிழகத்தின் காவல்துறை தலைவரும் சட்ட மன்றத்தில் முதல்வரும் கூறுகின்றனர். இதில் நமக்கு எழும் சந்தேகங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

- 5 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவர்களுடன் சென்று உயிருடன் திரும்பிய 3 மீனவர்கள், அவர்களுடைய சகாக்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் அல்லர் என்பதை நிருபர்களிடம் தெள்ளத் தெளிவாய் எடுத்துரைத்துள்ளனர். - இந்திய கடற்படைத் தளபதி 5 பேரை சுட்டது, இலங்கை கடற்படை இல்லையென் கிறார். இவர் இலங்கை கடற்படை உயர் அதிகாரிகளிடம் பேசியதன் அடிப்படையிலேயே இதை கூறுகிறார்.

- ஏப்ரல் 11&ந்தேதி இந்திய கடற்படையிடம் நடுக்கடலில் சிக்கிய 12 மீனவர்களுள் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் அவர்களுடன் இருந்த மற்றவர்களும், விடுதலைப் புலிகளின் பிரிவான கடற்புலிகள் என்று தமிழக ‘க்யூ’ பிரிவு காவல்துறை தெரிவித்ததோடு மட்டுமல்லாது பிடிப்பட்ட கடற்புலிகளை விசாரணைக்குட்படுத்திய பின்னர் சிறைக்கு அனுப்பினர். ஒன்றாய், ஒரே படகில் இந்திய கடற்படையால் பிடிக்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 6 மீனவர்களை காவல்துறை எந்தவித விசாரணைக்கும் உட்படுத்தாமல் ஏன் விடுதலை செய்தது?

- 5 பேர் சுடப்பட்டது ‘மரியா’ என்று பெயரிடப்பட்ட கப்பலை பயன்படுத்திய வர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. ஏப்ரல் 11&ம் தேதியன்று பிடிபட்ட படகும் ‘மரியா’ என்று பெயர் பொரிக்கப்பட்டிருந்ததாம். மரியா என்ற பெயர் தாங்கிய படகு ஒன்று மட்டும்தான் உள்ளதா?

- காவல்துறையினரின் வேலை குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவது மட்டுமே. அவரவர்களின் யூகங்களுக்கு ஏற்ப குற்றம் சாட்டுவது சரியாய் அமையாது. அதற்கு நீதிமன்றம் உள்ளது. ஒரு காவல்துறைத் தலைவரே நீதிபதியைப் போன்று தமிழக மீனவர்களை சுட்டதும், கடத்தியதும் விடுதலைப் புலிகள்தான் என்பது ஏற்க முடியாத ஒன்று. அதேபோல் தமிழக முதல்வரும் காவல்துறை செய்தியின் அடிப்படையில் சட்டமன்றத்திலேயே விடுதலைபுலிகளை குற்றம் சாட்டுவதும் ஏற்க முடியாத ஒன்று. ஏனெனில் மேற்குறிப்பிட்ட கடற்படைத் தளபதி, தமிழக காவல் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் அனைவருமே இரு தரப்பு கருத்துக்கள் அல்லது விசாரணையை மேற்கொள்ளவில்லை. இந்த நிகழ்வில் மற்றொரு தரப்பாய் கருதப்படுகின்ற விடுதலைப் புலிகளின் கருத்துக்களைக் கேட்காமலேயே ஒரு தலைப்பட்சமாய் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

இந்நிலையில் 30.04.2007 அன்று விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிக்கையில் தாங்கள் தமிழக மீனவர்களை சுடவோ, கடத்தவோ இல்லை என மறுத்துள்ளனர். இலங்கை அரசு பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக இந்தியாவை குழப்ப, இலங்கை அரசே இம்முறையை கையாண்டு இருக்கும் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இப்படி உயர்நிலையில் உள்ளோர் யூகங்களின் அடிப்படையில் கருத்தைத் தெரிவித்தால், வழக்கின் திசை மாறுவது மட்டு மல்லாது, மக்களிடமும் ஊடகங்களிடமும் தவறான பரப்புரை ஏற்பட வாய்ப்பாய் அமையும்.

- மதிப்பு - மனித உரிமை மாத இதழ்

1 comment:

RANJITH - NOTHING BUT KALAKKAL... said...

எனக்கு ஒரு சந்தேகம், புலிகள் எங்காவது உயிருடன் பிடிபட்டதுண்டா? புலிகள் தன் இயக்க எதிரியிடம் பிடிபடும் தருவாயில் சைனைடு அருந்தி இறப்பதுதானே வழக்கம். அப்படி இருக்கையில் தமிழ காவல் துறையிடம் எப்படி பிடி பட்டனர்?

அப்படி பிடிபட்டாளும் தான் தமிழிழ புலிதான் என்பதை ஒத்துக்கொள்வானா?

தங்கள் படகு பழுதடைந்தனால் தமிழக மீனவர்கள் படகில் ஏறி ஏன் அவர்கள் தமிழகம் வரவேண்டும் ? புலிகள் நினைத்திருந்தால் மீனவர்களை கொன்றுவிட்டு (தமிழக டீ.ஜி.பி கருத்துப்படி புலிகள் தமிழ் உறவுகளை கொல்வர்யாயின் இதுவும் சாத்திய்மே!)ஈழத்திற்கே திரும்பியிருக்கலாமே?


இது முழுக்கமுழுக்க இந்திய உளவுத்துறை மற்றும் இலங்கை அரசின் கூட்டுநாடகம்தான் என்றுதான் தோன்றுகிறது. இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவி புரிய தடையாய் இருப்பது தமிழக மக்களும் தமிழக அரசும்தான். தமிழகத்தின் ஆதரவை பெறாமல் இந்திய அரசு இலங்கைக்கு உதவமுடியாது. ஏன் எனில் தமிழக மக்களின் ஆதரவை பெறாமல் எந்த ஒரு கட்சியும் ஆட்சியில் அமரமுடியாது. எனவே இந்திய மத்திய அரசாங்கம் புலிகளுக்கான தார்மீக ஆதரவை தமிழக்த்தில் குறைத்து தமிழக ஆதரவுடன் இலங்கை அரசுக்கு உதவ எந்தனிக்கிறது என்பது என் ஐயப்பாடு.

இந்த சித்து விளையாட்டுக்கு தமிழக மக்கள் எமாறமாட்டார்கள் என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை.