Wednesday, May 09, 2007

தமிழக மீனவர்களை படுகொலை செய்தது சிறிலங்கா கடற்படைதான்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி குற்றச்சாட்டு!!!

தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை தொடர்ந்து படுகொலை செய்கிறது என்றும் 1991 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதி வரை 77 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி குற்றம்சாட்டியுள்ளார்.


இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் உறுப்பினர் சி.பெருமாள் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ஏ.கே. அந்தோணி அளித்துள்ள பதில்:

அண்மைக்காலமாக சிறிலங்கா கடற்படையால் பெருந்தொகையாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு வருவதனை மத்திய அரசாங்கம் அவதானித்து வருகிறது. பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் அண்மைக்காலமாக இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்திய மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்பரப்பான பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் இந்திய கற்படை தொடர்ச்சியான சுற்றுக்காவல் மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வானிலிருந்தும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரையிலான காலப் பகுதியில் 77 தமிழ்நாடு மீனவர்கள் இத்தகைய சம்பவங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் குடும்பங்களுக்கான நிதி உதவியை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கி வருகிறது. மீனளத்துறை அமைப்புகளின் உதவியும் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது என்றார் அந்தோணி.
நன்றி>புதினம்.

No comments: