Saturday, May 12, 2007

மேலோங்கும் பிள்ளையானின் கரங்கள்: நாட்டை விட்டுத் தப்ப கருணா திட்டம்?

பிள்ளையானுடன் ஏற்பட்ட உட்கட்சி மோதலைத் தொடர்ந்து பலவீனமடைந்துள்ள கருணாவும் அவருக்கு நெருக்கமான சிலரும் தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது யுத்தம் தொடரும் அதேவேளையில், கருணாவுடன் எதிர்காலத்தில் சமரசரத்துக்கான சாத்தியக்கூறுகள் இல்லையென பிள்ளையான் அறிவித்திருக்கும் நிலையிலேயே கருணா தனக்கு நம்பிக்கையான சகாக்கள் சிலருடன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் திட்டமிடடுவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இது கருணா குழுவுக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதலில் பிள்ளையானின் கைகள் மேலோங்கியிருப்பதைப் புலப்படுத்துவதாக இருக்கின்றது. கருணா குழுவின் இராணுவப் பொறுப்பாளராகச் செயற்பட்ட பிள்ளையான், அக்குழுவுக்குள் எற்பட்ட உள்மோதலையடுத்து பெரும்பாலானவர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

"கருணாவுடன் நாம் மீண்டும் இணையந்து செயற்படும் சாத்தியக்கூறுகள் இல்லை" எனத் தெரிவித்திருக்கும் பிள்ளையான் குழுவின் பேச்சாளர் ஒருவர், "கருணா குழுவில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் எம்முடன் உள்ளனர். கருணாவுடன் அவருக்கு விசுவாசமான ஒரு சிலர் மட்டும்தான் இருக்கின்றனர். கருணா குழுவின் இராணுவத்தரப்பு எமது முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது. எமது குழுவின் தலைவர் கருணா என்ற நிலை தற்போது மாறியுள்ளது" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

கருணா குழுவிலிருந்த சிரேஷ்ட இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் பிள்ளையானுடனேயே இருப்பதாகவும் தெரிவித்த அவர், திருமலையில் உள்ள தமது முகாமில் 350 போராளிகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

கருணா குழுவில் முக்கிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களாகவிருந்த ஜெயம், மாக்கன், தூயவன், ஈழமாறன், பிரதிப் மாஸ்ரர், சுரங்கா ஆகியோர் பிள்ளையான் தரப்பில் இணைந்து செயற்படும் அதேவேளையில், சின்னத்தம்பி, பாரதி, திலீபன், ஜீவேந்திரன் ஆகியோர் தொடர்ந்தும் கருணாவுடனேயே இருந்து செயற்படுகின்றார்கள். அத்துடன், பிள்ளையான் தரப்பு திருமலையில் உள்ள இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியிலும், கருணா தரப்பு மட்டக்களப்பில் உள்ள இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் நிலைகொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமது குழுவுக்குள் தோன்றியுள்ள மோதல்களைத் தொடாந்து கருணா தனக்கு நெருக்கமான சிலருடன் நாட்டை விட்டு தப்பியோட முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணா குழுவின் பிரதித் தலைவராகவும், இராணுவப் பொறுப்பாளராகவும் இருந்த பிள்ளையான் குழுவின் பெரும்பாலானவர்களை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதால் தன்னுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலிருப்பதாக கருணா கருதுவதாகத் தெரிகின்றது.

இருந்த போதிலும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் கருணாவை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்திய படைத்தரப்பினர் கருணா நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இரு தரப்பினருக்குமிடையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்காக படையினர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், உட்கட்சி மோதல்களால் இதுவரையில் கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் சிலர் உட்பட சுமார் எட்டுப் பேர் இருதரப்பிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
நன்றி>புதினம்.

3 comments:

Anonymous said...

அது சரி இது பற்றி ஏன் மாற்றுக்கருத்து காரரின் இணையங்கலில் எதுவும் வரவில்லை, இதுதான் அவர்களின் நடுநிலையோ,

அது சரி தேனியை ஏன் பூட்டி விட்டார்கள்?

Anonymous said...

கிடைத்த தகவலொன்றின்படி அசாத் மௌலானா, கருணா ஒட்டுக்கும்பலினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

Anonymous said...

பிரபாகரன் மற்றும் கருணாவுக்கு எதிராகப் போராடுவோம் பிள்ளையான் சூளுரைப்பு....