Monday, June 25, 2007

மூதூர் படுகொலையில் மறைக்கப்பட்ட மிக முக்கிய "சாட்சி ஆவணம்": அம்பலப்படுத்துகிறது அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம்!

மூதூர் படுகொலையில் முக்கியமான "சாட்சி ஆவணம்" ஒன்றை நீதிமன்றில் சிறிலங்க அரசாங்கம் மறைத்ததனை அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது.


பிரித்தானிய சட்ட வல்லுநர் மைக்கேல் பிரின்பௌம் அந்த ஆணையத்திடம் மூதூர் படுகொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை கையளித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் உடல்களை பரிசோதனை செய்த அவுஸ்திரேலியாவின் மல்கொல்ம் டொட் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த ஒக்ரோபர் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டோரின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன.

7 பேரின் உடல்களிலிருந்து மொத்தம் 8 துப்பாக்கிக் குண்டுகள் எடுகப்பட்டன.

சிறிலங்கா அரசாங்க பரிசோதனை நிபுணர் மருத்துவர் வைதரட்ன மற்றும் அவுஸ்திரேலியாவின் டொட் ஆகியோரின் அறிக்கைகளை ஒப்பிடுகையில் 8 துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று 5.56 கலிபர் என்று அவுஸ்திரேலிய வல்லுநர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக அனைத்துமே 7.62 கலிபர் என்று சிறிலங்கா வல்லுநர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 5.56 கலிபர் குண்டை கந்தளாய் நீதிமன்றில் மார்ச் 7 ஆம் நாள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தாக்கல் செய்த சாட்சி ஆவணங்கள் பட்டியலிலிருந்தும் நீக்கிவிட்டு வேறு ஒரு வகை குண்டை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் 5.56 கலிபர் குண்டுகளானது எம்-16 வகை ரைபிள்களுக்குரியன.

இந்த எம்-16 வகை ரைபிள்கள்தான் சிறிலங்கா இராணுவம் மற்றும் கடற்படையில் உள்ள அதிரடிப்படை மற்றும் சிறப்புப் படையணிகளில் பயன்படுத்துவர் என்பது அனைவரும் அறிந்தது. இந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மற்றவர்களால் திருடப்பட்டோ அல்லது விலைக்கு வாங்கப்பட்டோ இருக்கலாம். 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் தொடக்கத்தில் மூதூரில் எம்-16 ரைபிள்களுடன் தான் கடற்படையின் சிறப்புப் பிரிவினர் இருந்தனர்.

இந்நிலையில் சிறிலங்காவின் அரச தலைவர் விசாரணை ஆணையமானது அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட விடயத்தில் முழு அளவிலான விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: