Sunday, October 29, 2006

சிறிலங்கா மீது நம்பிக்கை இல்லை!!!

தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று சிறு அளவில் கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். ஜெனீவாவில் அது நிரூபணமாகியிருக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாப் பேச்சுக்கள் - 02 முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:
மனிதாபிமான அவலத்தை வெளிப்படுத்தவே ஜெனீவா பேச்சுக் களத்தை பயன்படுத்துவோம் என்று நாம் தெரிவித்திருந்தோம். உலகத்தின் மனிதாபிமான மையமான மனித உரிமைகளின் மையமான ஜெனீவாவின் மையத்தில் நின்று கொண்டு எம்மக்களினது மனிதாபிமான வேண்டுகோளை விடுத்திருக்கிறோம். அந்த வகையில் எம்முயற்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எமது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவுக்கு நாங்கள் வரும்போது தெட்டத்தெளிவாக என்கருத்தை முன்வைத்துவிட்டுத்தான் வந்தோம். தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய எந்த ஒரு சிறுவிட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று நாம் நம்பவில்லை. முழுமையாக சர்வதேச சமூகத்தை நம்பியே அவர்களினது அழைப்புக்கு மதிப்பளித்து நாம் வந்தோம் என்று கூறியிருக்கிறோம். சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று சிறு அளவில்கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். அது இங்கே நிரூபணமாகியிருக்கிறது. தனது முகத்தை சிறிலங்கா அரசாங்கம் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் தெளிவாக புரிந்திருக்கும்.

சர்வதேச சமூகம் எம்மை ஒரு நம்பிக்கையோடு அழைத்துக் கொண்டு வந்தது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் முரண்டுபிடித்து தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டி எங்களுடைய மக்களின் பேரவலத்துக்கு தீர்வேற்படுத்தும் ஒரு மிகச் சிறிய நடவடிக்கையான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலே உள்ள நடைமுறையான 6 இலட்சம் மக்களுக்கான முக்கிய தரை வழிப்பாதையாக உள்ள ஏ-9 பாதையை திறப்பதை மறுத்துவிட்டது. இதனால் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சியை முடக்கியிருக்கின்றார்கள். இந்தப் பழியை சிறிலங்கா அரசாங்கமே ஏற்க வேண்டும்.

இருநாட்கள் நாங்கள் எடுத்த முயற்சிகளில் எந்த விதமான இணக்கப்பாட்டுக்கும் விட்டுக்கொடுப்புக்கும் சிறிலங்கா அரசாங்கம் முன்வரவில்லை. சிறிலங்கா அரசாங்கம் அமைதி வழியில் எமது மக்களுடைய மனிதாபிமான பிரச்சனைகளுக்கோ அரசியல் கோரிக்கைகளுக்கோ அரசியல் தீர்வு முயற்சிகளுக்கோ எந்த விதத்திலும் அனுசரித்துப் போகும் தன்மையை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் யுத்த வெறிப் போக்கையும் ஒரு வன்முறைச் செய்தியாக தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கும் இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குமான ஒரு வெளிப்பாட்டைத்தான் காட்டிக் கொண்டுள்ளனர். நிச்சயமாக இது தமிழ் மக்களை மட்டுமல்ல- சிறிலங்காவையே ஒரு பேரழிவுக்குள்ளுள் தள்ளுகிற முயற்சியாக சிறிலங்கா பேரினவாத தலைமைகள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சிறிலங்கா அரசாங்கத்தின் அநீதியான-கொடூரமான செயற்பாடுகளை முறியடிக்க முன்வர வேண்டும்.

உலகம் இதனை வெகுவிரைவில் புரியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். எடுக்கும் நிலை உருவாகும்.

சிங்கள இனவாதத்தலைவர்களை ஒரு வழிக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகம் பெருமுயற்சி எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

வலிந்த தாக்குதல்களை இருதரப்பும் மேற்கொள்ளாது என்று நோர்வே அனுசரணையாளர்கள் சொல்லியிருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே பேச்சுவார்த்தை அரங்கில் இருக்கும்போதே தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வலிந்த தாக்குதல் முயற்சிகளை நாம் எடுத்துக் கூறினோம். ஆனால் இதற்கான எந்த ஒரு ஆக்கப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கமானது கண்காணிப்புக்குழுவின் செயற்பாட்டை பொய்யான காரணங்களைக் கூறி முடக்கிவிட்டு மீண்டும் மீண்டும் எமது மக்கள் மீது இன அழிப்பு யுத்தத்தை கட்டவிழ்த்துவிடத்தான் போகிறார்கள். இதிலிருந்து எமது மக்கள் விடுதலை பெற- சுதந்திரத்துக்கான போராட்டத்தை தொடர எமது தலைவரின் வழியில் நின்று போராடுவார்கள்.

புலம்பெயர் வாழ் எம்மக்கள் என்றுமில்லாத வகையில் முழுமையான ஆதரவை வழங்குவர். ஏனெனில் மனிதாபிமானம் பேசப்படுகிற ஜெனீவாவின் தலைநகரில் நாங்கள் வந்து நின்று கொண்டு எம்மக்களின் மனிதாபிமானப் பிரச்சனையை முன்வைத்தோம். ஆனால் நிராகரிக்கப்பட்டுள்ளதால் எம்மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளனர். அவமானப்படுத்தியுள்ளனர். ஆகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அணிதிரள வைக்கின்ற ஏற்பாட்டையே இப்போது சிறிலங்கா அரசாங்கம் ஜெனீவாவிலிருந்து செய்துவிட்டுப் போகிறது.

தமிழ் மக்களை அனைத்து வகைகளிலும் அழித்தொழிக்க கொன்றொழிக்க சிறிலங்கா அரசாங்கம் முயன்று கொண்டிருக்கிறது. இராணுவ நடவடிக்கை, கொடிய பயங்கரவாத நடவடிக்கை, எம்மக்களைத் தாங்கி நிற்கும் புலம்பெயர் மக்கள் அளிக்கின்ற உதவிகளை கொண்டு சேர்க்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் ஆகியவற்றின் மூலம் இத்தகைய கொடூரத்தை நிகழ்த்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது. தாயகத்திலே சர்வதேச மனிதாபிமான அமைப்புகளைக் கூட முடக்கியுள்ளனர். அவர்களின் அனைத்து நடவடிக்கைளையும் பலவீனப்படுத்தியுள்ளனர். இதனை சர்வதேச அமைப்புகள் கண்டித்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரங்கள் இதுமட்டுமல்ல. இனியும் வரும்.

எங்களுடைய மக்களுக்கு நன்மையளிக்கக் கூடியவகையில் தேவையும் சூழலையும் கருதி எங்களது உத்திகளை தலைமைப்பீடம் எடுக்கும். எமது தேசியத் தலைவரின் வருடாந்திர கொள்கைப் பிரகடனமானது மிக மிக முக்கியமானது. மிகவும் எதிர்பார்க்கப்படுகிற- எதிர்பார்க்கப்படும் விடயமாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் எமது மக்கள் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்க விடயங்கள் தொடர்பாகவும் எமது தேசியத் தலைவரின் அந்த கொள்கைப் பிரகடன உரை வரும் என்று நினைக்கின்றேன். நிசச்யமாக நாங்களும் அந்த உரையை ஆவலாக எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்கா அரசாங்கமானது பேச்சுக்களுக்கான நாட்கள் தீர்மானிக்கப்பட நிலையிலும் மிகப் பிரம்மாண்டமான ஒரு படையெடுப்பை எமது தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டது. அதனை எம் மக்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது உலகறிந்த உண்மை.

எமது மக்களின் நெற்றியிலே துப்பாக்கிகளை நீட்டி வைத்துக்கொண்டு எங்களை அழிக்க ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்போது எம்மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழியைத் தவிர வேறு வழியில்லை.
ஆகவே சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கை மற்றும் படையெடுப்புகளை எதிர்கொண்டு அதனை வெற்றி கொள்ள- தங்களைப் பாதுகாக்க- தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் வழிதான் தமிழ் மக்களுக்கான வழி. அந்த இறுதிக்கட்டத்தைப் புறந்தள்ள முடியாது. போர்மீது எம் மக்கள் விருப்பமின்றி இருந்தாலும் துரதிர்ஸ்டவசமாக மக்கள் எதிர்கொள்வர். நீதியும் நியாயமும் தர்மமும் எம் பக்கமே உள்ளது. அதுவே வெற்றி பெறும் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன

சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்த இதர கருத்துகளின் தொகுப்பு:
பிரபாகரனுக்கு பின்னரான தலைமை குறித்து?
காலம் காலமாக சிறிலங்கா அரசாங்கத்தால் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட எம்மக்களினது உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவுமான போராட்டத்தின் தலைவராக- ஒடுக்கப்பட்ட அடக்குமுறைகளுக்குள்ளான தேசிய இனத்தின் தலைவராக- எம்மக்களை வழிநடத்திச் செல்லக்கூடிய சக்திமிக்க தலைவராக- அனைத்து மக்களாலும் மதிக்கப்படக்கூடிய கௌரவிக்கப்படக்கூடிய தலைவராக தலைவர் பிரபாகரன் தான் எங்கள் தேசிய இனத்தில் தோன்றிய தலைவர். அழிந்துபோகும் நிலையில் இருந்த மக்கள் அவருடைய காலத்தில்தான் இன்று உலகத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். அவரால்தான் எம்மக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் சக்தியைப் பெற்றுள்ளனர்.

ஆகவே அவரது காலத்தில்தான் நாம் விடுதலை பெற வேண்டும் என்பதுதான் உலகத்தில் வாழ்கின்ற அத்தனை தமிழ் மக்களினது வேண்டுகையாக உள்ளது. ஆகவே அடுத்த தலைமைகளைப் பற்றி எமது தமிழ்த் தேசிய இனம் சிந்திக்க வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை. ஆப்பிரிக்க மக்களுக்கு ஒரு நெல்சன் மண்டேலா- அமெரிக்க மக்களுக்கு ஜோர்ஜ் வாசிங்ரன்- கியூபா மக்களுக்கு பிடல் காஸ்ட்ரேப- சீன மக்களுக்கு மா-சேதுங் இப்படி பல்வேறு நாடுகளில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தேசியத் தலைமை சுதந்திரத்தை வழிநடத்திச் செல்லுகிற உறுதிமிக்க தலைமைதான் வழிகாட்டியிருக்கிறது.

அதேபோல்தான் எங்கள் தேசத்துக்கும் வழிகாட்ட வழிநடத்த எங்களது தேசியத் தலைவர் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் மக்களையும் தேசத்தையும் நேசிக்கிற தலைவராக உள்ளதால் எங்களது மக்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார்கள்.

அன்ரன் பாலசிங்கம் பங்கேற்காமை ஏன்?
கலாநிதி அன்ரன் பாலசிங்கம் உடல்நலக் குறைவாக இருப்பதால் பயணிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பயணிக்க முடியாத நிலையில் இருப்பதால் அவர் இப்பேச்சுக்களில் பங்கேற்கவில்லை.

இந்தியா தொடர்பிலான நிலைப்பாடு என்ன?
இந்தியா தொடர்பான எமது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக எமது தேசியத் தலைவர் அவர்கள் பல வழிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் வாழுகிற பல கோடி தமிழ் மக்களின் அபிலாசைகளையும் இந்தியா புரிந்திருக்கிறது. பிராந்திய நாடு என்ற வகையில் இந்தியாவும் வன்முறைக்கு முடிவு கட்டி சமாதான வழியில் அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் ஏற்பாட்டில் நடைமுறையிருந்தல் வடக்கு-கிழக்கு இணைப்பை சிறிலங்கா அரசாங்கம் இப்போது சட்டவிரோதமாக்கியிருக்கிறது. இதன் மூலம் அரசியல் வழித்தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் முடக்கிவிட்டுத்தான் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு மேசைக்கு வந்தது. அரசியல் தீர்வு பற்றிப் பேசுவோம் என்று சொல்கிறார்களே தவிர அவர்களிடம் அரசியல் தீர்வு எதுவுமே இல்லை என்பதைத்தான் அறிய முற்பட்டும் அறிய முடியாமல் போன விடயம்.

ஐரோப்பியத் தடை பற்றி?
எம் மக்கள் மீதான தடைதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை. அது சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பரப்புரைகளால் ஏற்படுத்தப்பட்ட தடை.

ஐக்கிய இலங்கைக் கட்டமைப்புக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எரிக் சொல்ஹெய்ம் கருத்து குறித்து?
எரிக் சொல்ஹெய்ம் அவர்களும் சர்வதேச சமூகமும் அண்மைக்காலமாக சமரச வழியில் அண்மைத்தீர்வை எட்ட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ சாதாரணமான மனிதாபிமான பிரச்சனைகளுக்கே தீர்வைக்காண முடியாத அரசாங்கமாக உள்ளது. அப்படியான அரசாங்கம் எப்படி எமது தமிழ் மக்களின் அபிலாசைகளையும் அரசியல் கோரிக்கைகளையும் உரிமைகளையும் மதித்து தீர்வை முன்வைக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியான விடயம்.

அண்மையில் வடக்கு-கிழக்கைப் பிரித்து தமிழர் தாயகத்தை- தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து அவர்களுடைய மனங்களை நோகடித்து அரசியல் தீர்வுக்கான வழிகளையே சீர்குலைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுடைய நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் எவ்வளவு தூரம் கணக்கில் எடுக்கப் போகிறார்கள் என்பது இப்போதைய கேள்வி. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த உதாசீனப்போக்கு- சர்வதேசத்தை மதிக்காத இந்தப் போக்கு- தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை- தமிழர்களின் அபிலாசைகளை புறந்தள்ளி தமிழ் மக்களின் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிடுகிற இந்தப் போக்கை தமிழ் மக்கள் இனி ஒருபோதும் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். தமிழ் மக்கள் தங்களது தலைவிதியைத் தாங்களே நிர்ணயம் செய்யும் நிலையை நோக்கி தாங்களே தள்ளப்பட்டிருக்கின்றனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையேயான ஒப்பந்தம் தொடர்பில்?
சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையேயான ஒப்பந்தமானது ஒரு சந்தர்பவாதக்கூட்டா? தங்களுடைய சுயநலம் நோக்கம் கொண்ட கூட்டா? உண்மையாகவே தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கும் வழங்குவதற்குமான கூட்டா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்த்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் கூட்டை உருவாக்கியுள்ள அதே நேரத்தில் சிறிலங்கா அரசாங்கமானது ஒரு மனிதப் பேரவலத்தை எமது மண்ணில் உருவாக்கி- நிலைமைகளை மோசமாக்கி- யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைத்து- மனிதாபிமான நெருக்கடிகளை ஏற்படுத்தி- களநிலையில் மிக மோசமான சூழ்நிலையை உருவாக்க முயன்றனர். எந்த ஒரு சூழ்நிலையிலும் இது ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான கூட்டாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. இந்தக் கட்டத்தில் ஒரு சாதாரண விடயத்துக்குத் சிறிய தீர்வைத் தந்து நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கலாம். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதனைக்கூட விரும்பவில்லை என்கிறபோது அவர்களின் கூட்டில் எங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டாக இருக்கலாம் என்றுதான் நாங்கள் நம்புகிறோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

No comments: