Sunday, October 29, 2006

இராணுவத்தரப்பில் 613 பேர் பலி- 2,956 பேர் படுகாயம்.

சிறிலங்கா இராணுவத் தரப்பில் கடந்த யூலை 31 ஆம் நாள் முதல் ஒக்ரோபர் 18 ஆம் நாள் வரையிலான மோதல்களில் மட்டும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 613 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 2,956 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

யூலை 31 ஆம் நாள் காலை 6 மணி முதல் ஒக்ரோபர் 12 ஆம் நாள் (முகமாலை, ஹபரணை, காலி சேர்க்காமல்) காலை வரையிலான 74 நாட்கள் வரையிலான விவரங்கள்:

யாழ்ப்பாணம்:
யாழ். இராணுவத் தலைமையகக் குறிப்புக்களின் படி 62 நாட்களில் அதாவது ஓகஸ்ட் 11 ஆம் நாள் முதல் ஒக்ரோபர் 12 ஆம் நாள் காலை 6 மணிவரை 29 அதிகாரிகள் மற்றும் 333 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 92 அதிகாரிகள் மற்றும் 1,718 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழில் ஓகஸ்ட் 11 ஆம் நாள் முதல் செப்ரெம்பர் 6 வரை 19 அதிகாரிகள் மற்றும் 202 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 49 அதிகாரிகள் மற்றும் 851 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

செப்ரெம்பர் 6 ஆம் நாள் இரவு 6 மணி முதல் செப்ரெம்பர் 9 ஆம் நாள் இரவு 7 மணி வரையில் 2 அதிகாரிகள் மற்றும் 32 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 9 அதிகாரிகள் மற்றும் 188 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

செப்ரெம்பர் 9 ஆம் நாள் இரவு 7 மணி முதல் ஒக்ரோபர் 11 ஆம் நாள் காலை 6 மணி வரையில் 46 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 அதிகாரிகள் மற்றும் 188 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒக்ரோபர் 11 ஆம் நாள் காலை 6 மணி முதல் ஒக்ரோபர் 12 ஆம் நாள் காலை 6 மணிவரை 8 அதிகாரிகள் உட்பட 53 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒக்ரோபர் 11 ஆம் நாள் முகமாலை சமர் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ விவரங்கள் யாழ். தலைமையகத்தில் வெளிப்படுத்தப்படவில்லை.

கட்டைப்பறிச்சான்- மகிந்தபுர- சேருனுவர பிரதேசங்கள்:
ஓகஸ்ட் 2 முதல் ஓகஸ்ட் 30 வரை: 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 7 அதிகாரிகள் மற்றும் 94 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.

மாவிலாறு:
யூலை 31 ஆம் நாள் முதல் ஓகஸ்ட் 25 வரை 2 அதிகாரிகள் மற்றும் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 8 அதிகாரிகள் மற்றும் 106 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
செப்ரெம்பர் 9 ஆம் நாளன்று 7 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். மொத்தம் 113 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பூர்:
யூலை 31 ஆம் நாள் முதல் செப்ரெம்பர் 26 வரை 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 11 அதிகாரிகள் மற்றும் 156 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
74 நாட்களில் ஒரு அதிகாரி உட்பட 10 இராணுவத்தினர் காணவில்லை.

ஒக்ரோபர் 11-க்குப் பின்னர்.....

முகமாலை சமர்:
முகமாலை சமரைப் பொறுத்த வரையில் சிறிலங்காவின் தேசிய ஊடக சபையின் அறிக்கையின்படி 18 அதிகாரிகள் மற்றும் 128 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 616 பேர் படுகாயமடைந்தனர். 6 யுத்த டாங்கிகள் இழக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு சிதைவடையச் செய்யப்பட்டதை இராணுவ முன்னரங்க நிலைகளிலிருந்து பார்க்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இயங்கு நிலையில் ஒரு டாங்கி இருப்பதை சிறிலங்கா புலனாய்வுத்துறை உறுதி செய்துள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு டாங்கியும் ரூ. 10 மில்லியன் மதிப்பிலானது. அப்படியான நிலையில் முகமாலை சமரில் மட்டும் ரூ. 60 மில்லியன் இழக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடம் 3 டாங்கிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹபரணைத் தாக்குதலில் 116 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 130 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காலி தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த ஒருவரும் பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். 8 போராளிகள் உடல் கிடைத்துள்ளதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் அந்த ஊடகம் கூறியுள்ளது.

கொல்லப்பட்டோர் மொத்த எண்ணிக்கை:
ஆக முகமாலை சமர் இழப்பைச் சேர்க்கும் போது (18 அதிகாரிகள் மற்றும் 128 இராணுவத்தினர்) மொத்தம் 496 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ஹபரனையில் 116 கடற்படையினர் மற்றும் காலியில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை சேர்க்கும் போது 613 ஆகவும் அதிகரிக்கிறது.

மொத்தமாக யூலை மாதம் முதல் காலி தாக்குதல் வரை கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கையானது 613.

படுகாயமடைந்தோர் மொத்த எண்ணிக்கை:
யூலை 31 ஆம் நாள் காலை 6 மணி முதல் ஒக்ரோபர் 12 ஆம் நாள் காலை 118 இராணுவ அதிகாரிகளும் 2,081 இராணுவத்தினரும் படுகாயமடைந்துள்ளனர் என்பது உத்தியோகப்பூர்வ தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதனுடன் முகாமாலையில் 616- ஹபரணையில் 130 மற்றும் காலியில் 11 கடற்படையினர் காயமடைந்துள்ளதை சேர்க்கும்போது மொத்தமாக 2,956 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.
- 72 நாட்களை கணக்கிட்டுப் பார்த்தால் சராசரியாக ஒருநாளைக்கு 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 41 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.
- இந்த எண்ணிக்கையானது இராணுவம் மற்றும் கடற்படையினர் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பிலானவை மட்டுமே. இதர சம்பவங்களையும் கணக்கிட்டால் எண்ணிக்கை உயரும்.

- மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் எனவும் கொழும்பு ஊடகம் கூறியுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: