Sunday, July 01, 2007

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்கு பணம் தருகிறது: ஈ.பி.டி.பி. டக்ளஸ் ஒப்புதல்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்குப் பணம் தருகிறது- இது அனைவரும் அறிந்த வெளிப்படையான உண்மை என்று பல்வேறு ஆட்கடத்தல், படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது:

ஈ.பி.டி.பிக்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சுதான் தருகிறது என்பது ஒவ்வொருவரும் அறிந்த வெளிப்படையான உண்மை. எங்களுக்கான ஒரு பகுதி தொகையைத்தான் பாதுகாப்பு அமைச்சு தருகிறது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்புக்கு நான் வந்தபோது மைய அரசியலில் இருந்த கட்சிகளிடையே (விடுதலைப் புலிகளைத் தவிர) புரிதல் இருந்தது. பணத்தை நாங்கள் பெற்றுக்கொண்டோம். மற்றொரு பகுதி தொகையானது முதலீடுகள் அல்லது சொத்துக்கள் அல்லது ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் மூலமானது. எமது நடவடிக்கைகளுக்கு உறுப்பினர்களும் பங்களிப்பு செய்கின்றனர்.

நாங்கள் ஒருபோதும் ஒரு சதம் கூட நன்கொடை பெறவும் இல்லை கொள்ளையும் அடித்ததும் கிடையாது என்றார் அவர்.

யாழ். தீவகப் பகுதிகளில் நடந்த பல்வேறு படுகொலைச் சம்பவங்களிலும் கொழும்பு மற்றும் யாழ். குடாநாட்டு ஆட்கடத்தல் சம்பவங்களிலும் ஈ.பி.டி.பி. க்கு தொடர்பிருப்பதாக அனைத்துலக அமைப்புகளாலும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினராலும் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

அத்தகைய குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் இந்தத் துணை இராணுவக் குழுவினர் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பணத்தில்தான் இயங்குகிறோம் என்று பகிரங்கமாக முதல் முறையாக ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

-Puthinam-

No comments: