Monday, July 02, 2007

இந்திய இராணுவம் செய்ய முடியாததை சிறிலங்கா இராணுவம் செய்துள்ளது!!!

இந்திய அமைதிப் படையால் முடியாததை சிறிலங்கா இராணுவப் படையினர் செய்துள்ளனர் என்று கிழக்குப் பிரதேச இராணுவ நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


வடக்கு - கிழக்கு பாதுகாப்புத் தொடர்பாக பௌத்த சமய மத குருக்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் கோத்தபாய ராஜபக்ச பேசியதாவது:

பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்காக இராணுவத்தினரும், காவல்துறையினரும் மிகவும் புத்திசாதுரியமாகச் செயற்பட்டு வருகின்றனர். புத்திசாதுரியமான செயற்பாடுகளினால் கிழக்கில் படையினர் பாரிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர். புலிப் பயங்கரவாதிகளைப் பலவீனப்படுத்தாமல் எந்த வகையிலும் அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தையை நடத்த முடியாது.

இந்திய அமைதிப் படையால் முடியாததை சிறிலங்கா இராணுவப் படையினர் செய்துள்ளனர். தொப்பிக்கலப் பகுதியைத் தவிர கிழக்கு மாகாணத்தின் முழுப் பகுதியையும் படையினர் தம்வசப்படுத்தி, அப்பிரதேசப் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

புலிகளுடனான படையினரின் வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது. படையினரால் பெறப்பட்ட வெற்றியை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம். பயங்கரவாதத்தை இந்தச் சந்ததியுடன் தோற்கடிக்க வேண்டும். அதனை அடுத்த தலைமுறையினருக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்றார் கோத்தபாய ராஜபக்ச.
நன்றி>புதினம்.

No comments: