Monday, August 06, 2007

வான்புலிகள்-சிங்கள அரசு நடுக்கம், திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை!!!

தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கையின் முக்கியமான ஒரு நட்பு நாடு (இந்தியாவாக அல்லது அமெரிக்காவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது) இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளது. தனது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினால் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த இரகசிய அறிக்கையை குறிப்பிட்ட அந்த நேச நாடு தயாரித்திருந்ததாக கூறப்படுகின்றது.

தற்பொழுது இலங்கையின் படைத் துறை தளபதிகள் மத்தியிலும், ஒரு சில முக்கிய அமைச்சர்கள் மத்தியிலும் பரபரப் பாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக இந்த அறிக்கை மாறிவிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றில் முக்கியமான இரண்டு விடயங்கள்தான் இலங்கைத் தரப்பின் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

முதலாவது அதிர்ச்சி
அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கும் முதலாவது விடயம்: விடுதலைப் புலிகள் வசம் குறைந்தது பத்து வான் கலங்களாவது இருக்கலாம்; அவற் றில் ஜெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வான்கலங்களும் அடக்கம்" என்பதுதான்.

இலங்கைப் படைத்துறைத் தலைமையினை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ள முதலாவது முக்கிய விடயம் இதுதான். ஏனெனில் வான் புலிகள் வசம் அதிகபட்சமாக சுமார் ஆறு வான் கலங்கள் வரையில்தான் இருக்கும் என்றும் அவற்றில் இரண்டு அல்லது மூன்று வான்கலங்கள் மாத்திரமே தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய அளவிற்கு தரம் வாய்ந்தவை என்று தான் இலங்கை படைத்துறைத் தலைமை கணக் கிட்டிருந்தது. கொழும்பிலும், பலாலியிலும் வான் தாக்குதல்களை மேற்கொண்ட வான் புலிகளின் அணிகளில் இரண்டு விமானங் கள் இருந்ததாகவே தெரிவிக்கப் பட்டிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் புத்தளம் வழியாக விடுதலைப் புலிகளின் மூன்று விமானங்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் அந்த மூன்றில் ஒன்று சர்வதேச பயணிகள் விமானம் என்று இலங்கையின் வான்படை அறிவித் திருந்தது. கொழும்பை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த வெளிநாட்டு விமானத்தை பின் தொடர்ந்து, வான் புலிகளின் இரண்டு விமானங்கள் கொழும்பில் தாக்குதல் நடத்தச் சென்றதாக, பின்னர் இலங்கை படைத்தரப்பால் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதாவது புலிகள் வசம் மூன்று விமானங்கள் இருப்பதாக சிங்களத் தலைமை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

அப்படி இருக்கின்ற நிலையில் விடுதலைப்புலிகள் வசம் பத்திற்கும் அதிகமான விமானங்கள் இருப்பதான தகவல் அவர்களைப் பலத்த அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

அதற்கும் மேலாக விடுதலைப் புலிகள் வசம் ஜெட் எஞ்சின்கள் பொருத்தப் பட்ட வான்கலங்கள் சிலவும் இருப்பதாகக் கூறப்பட்டதானது, அவர்களை அதிர்ச்சி யின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. விடுதலைப் புலிகளின் விமானங்கள் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட வான் தாக்குதல்கள் பற்றியும் இலங்கை அமைச்சர்கள் பலரும் மலினப்படுத்தப்பட்ட செய்திகளையே வெளியிட்டிருந்தார்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்த்து ஆச்சரியப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவர்கள் வெறும் அரசியல்வாதிகள். இராணுவ விவகாரங்கள் பற்றி எதுவும் அறிந்திருக்காத அவர்கள் அரசியலுக்காக அப்படித்தான் கருத்துக் கூறவேண்டும். ஆனால் சிங்கள இராணு வத்தின் தளபதி திரு. சரத் பொன்சேகா முன்னர் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். "பறக்கும் பொம்மை விமானத்தில் இருந்து கைக்குண்டு போன்ற பொருட்களை வீசியெறிவதையெல்லாம் ஒரு வான் தாக்குதல் என்று கருதிவிட முடியாது" என்று ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். விடுதலைப் புலிகளிடம் ஜெட் இயந்திரங் கள் பொருத்தப்பட்ட விமானங்களும் இருப்பதான செய்தி வெளியானதைத் தொடர்ந்து பாரிய அச்சம் அவரைத் தற்பொழுது சூழ்ந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பொழுது அவர் வாயே திறப்பதில்லை. விடுதலைப் புலிகள் தம்மிடம் உள்ள பத்திற்கும் அதிகமான விமானங்களைப் பயன்படுத்தி சமகாலத்தில் பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் என்ன செய்வது என்பதுதான் தற்பொழுது அவர்களுக்குள்ள பெரிய கவலை.


இரண்டாவது அதிர்ச்சி

அந்த இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது முக்கிய விடயம், இலங்கை படைத்துறைத் தலைமையை மட்டுமல்ல வான் புலிகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அந்த இரகசிய அறிக்கையைத் தயாரித்த நாட்டை யும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்துவதாகவே இருக்கின்றது.

வான்புலிகளின் இரண்டாவது வான் தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து இலங்கைப் படைத்துறைத் தலைமைக்கு ஒரு உண்மை நன்றாக விளங்கி இருந்தது. அதாவது தம்மிடம் இருக்கின்ற விமானங் களை வைத்துக்கொண்டோ, அல்லது தம் வசம் இருக்கின்ற விமான எதிர்ப்பு சாதனங்களை வைத்துக்கொண்டோ வான் புலிகளின் விமானங்களை வானில் வைத்து சுட்டு வீழ்த்த முடியாது. ஒரு பாரிய மரத்தை வீழ்த்துவதானால் அதன் வேரை வெட்ட வேண்டும். அதாவது விடுதலைப்புலிகளின் வான் கலங்கள் தரித்து நிற்கும் இடத்தில் வைத்து அவற்றை அழித்துவிடவேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். இலங்கை வான் படையினரிடம் உள்ள கிபீர் மற்றும் மிக் ரக விமானங்களினால் இந்தக் காரியத்தை இலகுவாகச் செய்துவிட முடியும். தரையில் நிற்கும் வான்புலிகளின் விமானங்களை மட்டுமல்ல அந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்ப தாகக் கருதப்படும் பிரதேசத்தையே முற்றாக அழித்துச் சாம்பலாக்கிவிடக்கூடிய அளவிற்கு இலங்கை வான்படையில் உள்ள விமானங்களால் முடியும்.

ஆனால் அவர்களுக்கு ஒரு சிறிய சிக்கல் இருந்தது. அதாவது, வான்புலிகளின் விமானங்கள் எங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்வதில்தான் அவர்களுக்குச் சிக்கல் இருந்தது.

ஏனெனில் வான் புலிகள் தங்கள் விமானங்களை எங்கு நிறுத்தி வைத்திருக் கின்றார்கள் என்று எவருக்குமே தெரியாது. வான் புலிகளது விமானங்களின் ஓடுபாதை எங்கிருக்கின்றது என்றும் எவருக்கும் தெரியாது. இரணைமேடு, மல்லாவி உட்பட வேறு சில இடங்களில் விமான ஓடு பாதைகள் இருந்ததை இலங்கை வான் படையினரின் ஆளில்லா வேவு விமானங் கள் படம் பிடித்துக் காண்பித்திருந்தன. விமான ஓடுபாதைகள் இருந்தால் அந்த இடங்களுக்கு அருகில்தான் வான் புலிகளின் விமானங்கள் நிச்சயம் தரித்திருக்கும் என்ற அடிப்படையில், புலிகளின் வான்கலன்களை அழிப்பதற்கான பல முயற்சிகளில் இலங்கை வான்படை ஈடுபட்டிருந்தது. இருந்தபோதிலும் அது கைகூடவில்லை. வன்னியின் பல பிரதேசங்களிலும் விடுதலைப் புலிகளால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள விமான ஓடு பாதைகள் போலியானவைகள் என்பதுடன், இலங்கை வான் படையினரைத் திசை திருப்பி ஏமாற்றுவதற்காகவே விடுதலைப் புலிகள் அவற்றை நிர்மாணித்திருந்தார்கள் என்ற உண்மை அவர்களுக்குப் பின்னரே விளங்கியிருந்தது. வான் புலிகள் தமது வான் கலங்களை அடர்ந்த காடுகளின் மத்தியில் நிலத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ள தரிப்பிடங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளதாகவும், வான் புலிகளின் நிஜமான ஓடுபாதைகள் உருமறைப்பு செய்யப்பட்டு, எவருமே கண்டுபிடிக்காத வகையில் பேணப்பட்டு வருவதாகவும் இலங்கைப் படைத் தரப்பிற்குத் தெரியவந்துள்ளது.
வான் புலிகளின் விமானங்களை அதன் தரிப்பிடங்களில் வைத்துத் தாக்கி அழிக்கும் தனது திட்டத்தை நடைமுறைப் படுத்த, வான்புலிகளின் விமானங்கள் தரையில் இருந்து புறப்படுவதை அல்லது தரை இறங்குவதை அவதானிப்பதன் மூலம்தான் அதன் இருப்பிடங்களை அறிந்துகொள்ள முடியும் என்று இலங்கை விமானப் படை திட்டமிட்டது.

வன்னி வான்பரப்பில் இலங்கை யின் விமானங்களோ, அல்லது வேவு விமானங்களோ பறந்துகொண்டு கண் காணிப்பை மேற்கொள்ளும் சந்தர்ப்பங் களில், வான்புலிகள் தமது விமானங்களை வெளியே எடுக்கமாட்டார்கள். அதற்கு மேலாக, 24 மணி நேரமும் வான்பரப்பில் தொடர் பறப்புக்களை மேற்கொண்டபடி இருப்பதும் சாத்தியமில்லாத ஒரு விடயம். எனவே இலங்கைப் படைத் துறைத் தலைமை ஒரு முடிவிற்கு வந்தது. நட்பு நாடொன்றிடம் இந்த உதவியைக் கோருவது என்று அது தீர்மானித்தது. அதாவது சாட்டிலைட் ஊடான கண்காணிப்பை மேற்கொண்டு வான் புலிகளது விமானங்களின் தரிப்பிடங்களை அறிந்து கொள்வது என்ற முடிவிற்கு வந்தது. வான் புலிகளின் விமானங்கள் அடிக்கடி பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். தாக்குதலுக்கு என்றும், புதிய விமானிகளைப் பயிற்று விப்பதற்காகவும், விமானங்களைப் பரீட்சிப்பதற்காகவும் வான்புலிகள் தமது விமானங் களை மேலெழுப்பியாக வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் பல நூறு மைல்களுக்கப்பால் விண்ணில் நகரும். "ஹப்பிள் ஸ்பேஸ்" என்ற தொலைநோக்கிகள் பொருத்தப் பட்ட நவீன தொழில் நுட்பத் துடன் கூடிய செய்மதிகளினால் வான்புலிகளது விமானங்களின் இருப்பிடங்களை இலகுவாக அடையாளம் கண்டுவிடமுடியும். இந்த எதிர்பார்ப்பில் இலங்கை அரசாங்கம் தனது நட்பு நாடொன்றிடம் செய்மதித் தகவல்களைத் தந்துதவுமாறு கோரியிருந்தது. ஆனால், தனது செய்மதிகள் சேகரித்த துல்லியமான புகைப்படங்களை அந்த நாடு பார்த்தபோது, அதற்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது, குறிப்பிட்ட அந்தச் செய்மதிகள் வன்னிப் பிரதேசத்தில் தமது கழுகுப் பார்வையைச் செலுத்தும் நேரங்களைத் துல்லியமாகக் கணிப்பிட்டு அந்த நேரங்களில் தமது அனைத்து பறப்பு நடவடிக்கைகளையும் வான்புலிகள் கவனமாகத் தவிர்த்திருந்தது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, செயற்கைக் கோள் ஒன்று வன்னிக்கு மேலாக ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டுமே பறப்பையும், கண்காணிப்பையும் மேற்கொள்ளும், குறிப்பிட்ட இந்த நேரத்தில் எடுக்கப்படும் படங்களை அடிப்படையாக வைத்தே விடுதலைப் புலிகளின் விமானங்களின் தரிப்பிடங்களை அறிவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், வான் புலிகள் தம்மைக் கண்காணிக்கும் பணியில் எந்தெந்தச் செய்மதிகள் ஈடுபடுகின்றன, அந்தச் செய்மதிகள் எந்தெந்த நேரங் களில் வன்னியைக் கடந்து தமது பறப்புகளை மேற்கொள்கின்றன போன்ற விவரங்களைக் கணினி மூலம் துல்லியமாகக் கணிப்பிட்டு, குறிப்பிட்ட அந்த நேரங்களில் தமது பறப்புகளைத் தவிர்த்து, எதிரியை வியப்பில் ஆழ்த்தி யுள்ளார்கள். உண்மையிலேயே பாரிய தொழில்நுட்ப வசதி களும், நுண்ணறிவும் இருந்தால் மாத்திரமே ஒரு அமைப்பால் இவற்றைச் செய்யமுடியும். விடுதலைப் புலிகள் தரப்பில் இப்படியான ஒரு பலம் இருப்பது என்பது, நான்காம் கட்ட ஈழ விடுதலை யுத்தத்தைப் பொறுத்த வரையில் சிங்களப் படை யினருக்கு மிகமிகப் பாதகமான ஒரு அம்சம் என்று அந்த இரகசிய அறிக்கையில் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளதாம்.

இலங்கைப் படைத்துறைத் தலைமைக்கு அதிர்ச்சி ஏற்பட்ட தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

நன்றி>தென் செய்தி

2 comments:

நண்பன் said...

தகவல்களுக்கு நன்றி, ஈழபாரதி.

இரண்டாவது விடயமாக நீங்கள் குறிப்பிட்ட, விண்கலங்கள் கடந்து செல்லும் நேரங்களை அவதானித்து, அந்த நேரங்களைத் தவிர்த்துக் கொள்வது முன்னர் இந்தியா தனது அணுகுண்டுகளை வெடிக்கும் பொழுது கடை பிடித்த உத்தி தான்.

அந்த உத்தியைப் பின்பற்றுவது என்றாலும், அதற்கான தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்வது என்பது பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி தான். சமீபத்தில் சில முன்னாள் ராணுவத் தளபதிகள், யுத்த நடவடிக்கைகளினால் எந்த ஒரு முடிவும் கிட்டாது. பதிலாக, அரசியல் ரீதியாக தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று அரசை வற்புறுத்தி இருக்கிறார்கள்.

ஒருவேளை, இந்த செய்தியை அறிந்து தானோ?

Anonymous said...

yaavum karpanaiyee.....