Sunday, December 23, 2007

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன ஆயுதங்கள்- அதிர்ச்சியில் சிறிலங்கா படை!!!

சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சிறிலங்காப் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது என்று தென்னிலங்கை வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது.
"லக்பிம"வின் ஆங்கிலப் பதிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது:

அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மிகப்பெரும் கேள்விகளை படை அதிகாரிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் மிகவும் நவீன ஆயுதங்களை இந்த தாக்குதலில் பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் சில ஆயுதங்களை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதில்லை.

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆர்பிஜி உந்துகணை செலுத்திகளில் அமெரிக்கா தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் (EOtech HOLOsight holographic Target Acquisition Systems) சாதனங்கள் பெருத்தப்பட்டிருந்தன.

இந்த சாதனங்கள் தாக்குதல் இலக்குகளை விரைவாக கண்டறியக் கூடியதுடன் எந்த வெளிச்சத்திலும் இலக்குகளை கண்டறியக்கூடியது. மேலும் இந்த சாதனமானது எந்த கோணத்திலும் இலக்கின் மையத்தை குறிவைக்கக்கூடியதுடன், கடும் சமரின் போதும் மாற்றமடையாதது.

அவர்கள் பயன்படுத்திய சில ரைப்-69 (Type 69-1) ரக உந்துகணை செலுத்திகள் சீனத தயாரிப்பான இரவு பார்வை சாதனங்களையும் கொண்டதாக அமைந்திருந்தன.

இந்த சாதனங்கள் புறஊதா கதிர்களின் தொழிற்பாடுடையவை. மற்றுமொரு விடுதலைப்புலி உறுப்பினர் சிங்கப்பூர் தயாரிப்பான சிஜஎஸ்-40 ரக எறிகுண்டு செலுத்தியை பயன்படுத்தியிருந்தார்.

பெரும்பாலான ஆயுதங்களில் அமெரிக்கத் தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. சிங்கப்பூர் தயாரிப்பான சிஜஎஸ்-40 ரக எறிகுண்டு செலுத்தி சீனத் தயாரிப்பாகும்.

இவை தவிர ரைப்-69-1 சீனத் தயாரிப்பு ஆர்பிஜி-7, ஆர்பிஜி ரைப்-61, ரெக்கரேவ் ஒலிஅமுக்கி (Type 85 silenced with Tokarev) பொருத்தப்பட்ட ரைப்-85 தாக்குதல் துப்பாக்கி, ரைப்-82 உப இயந்திர துப்பாக்கி, கியூபி இசற்-97 ரக உப இயந்திர துப்பாக்கி போன்றவையும் இதில் அடங்கும்.

இந்த ஆயுதங்களில் பெரும்பாலனவை சீனாவின் நொறிங்கோ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டவை. இந்த நிறுவனமே பர்மிய அரசிற்கான பிரதான ஆயுத விநியோகிப்பாளருமாகும்.

விடுதலைப் புலிகளின் இந்த நவீன ஆயுதப் பாவனை படை அதிகாரிகளின் மத்தியில் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கத் தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் சாதனங்கள் தொடர்பான விசாரணைகளை அமெரிக்கப் படை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அனுராதபுரம் வான்படைத் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த சாதனங்களை அமெரிக்க அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

இதனிடையே அனுராதபுரம் வான்படைத் தளத்தில் நிறுவப்பட்டிருந்த எல்-70 ரக 40 மி.மீ வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தாக்குதல்களை நடத்தியது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நவீனரக இந்த வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியை விடுதலைப் புலிகள் எவ்வாறு இயக்க முடிந்தது என்பது தொடர்பான கேள்விகள் படைத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளன.

விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியை சேர்ந்த கப்டன் ஈழப்பிரியாவே இந்த பீரங்கியை கைப்பற்றி தாக்குதல்களை நடத்தியிருந்தார்.

இந்தப் பீரங்கியை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதை தளத்தில் இருந்த படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் அதனை இயக்குவதற்கு கடுமையான பயிற்சிகள் தேவை. எனவே எல்-70 வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை பயன்படுத்த விடுதலைப் புலிகள் எவ்வாறு கற்றுக்கொண்டனர் என்பது தொடர்பான பலமான கேள்விகள் படை அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: