Saturday, December 01, 2007

நூற்றுக்கணக்கில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சிறிலங்காவில் திடீர் கைது- தனி முகாமில் அடைக்க மகிந்த உத்தரவு- உறவுகளின் கதறலைக் கேட்கவும் மகிந்த மறுப்பு

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பல இடங்களிலும் கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கதறல்களுக்கு மத்தியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் அனைவரும் பூசா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

200-க்கும் அதிகமானோர் பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனும் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை காவல்துறையின் பிரிவில் நேற்று கைது செய்யப்பட்ட 132 பேரில் 100 பேர் இன்று பிற்பகல் எதுவித விசாரணைகளும் நடைபெறாத நிலையில் இரண்டு பேரூந்துகளில் ஏற்றப்பட்டு பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பூசாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர் என்ற தகவல் பரவியதும் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோரும், உறவினர்களும் இன்று முற்பகலில் கொட்டாஞ்சேனை காவல்நிலையம் முன்பாக திரண்டனர்.
அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் உத்தரவிட்ட போதும் அவர்கள் அங்கிருந்து அகலவில்லை. அங்கு குழுமி நின்றவாறே தமது பிள்ளைகளினதும், உறவினர்களினதும் விடுதலையை வலியுறுத்தினர். பலர் கைது செய்யப்பட்டவர்களின் அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஆவணங்களை கொண்டுவந்து காட்ட முயற்சித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அங்கு திரண்டிருந்த பெற்றோர் பலர் அழுது குழறிய வண்ணமிருந்தனர். பலர் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தனர்.

இதனால் அந்தப் பகுதி பெரும் பரபரப்பாக இருந்தது.

பூசாவுக்கு கொண்டு செல்லாமல் கொழும்பில் உள்ள ஓரிடத்தில் வைத்தே கைது செய்யப்பட்வர்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு காவல்துறையினரிடம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

எனினும் அதற்கு காவல்துறை அதிகாரிகள் உடன்படவில்லை.

எனினும் கைது செய்யப்பட்டவர்களை பூசாவுக்கு பேரூந்துகளில் ஏற்றிச்செல்ல இடமளிக்காத வகையில் பெற்றோரும், உறவினர்களும் முன்வாசலிலேயே திரண்டு நின்றனர்.

இதனால் கைது செய்யப்பட்டவர்களை பூசாவுக்கு கொண்டு செல்வதற்காக பேரூந்துகளில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து இரண்டு பேரூந்துகளை காவல் நிலையத்தின் பின்பக்க வாசலுக்கு கொண்டு வந்து அந்த வாசல் ஊடாக கைது செய்யப்பட்வர்களை பேரூந்துகளில் ஏற்றிய காவல்துறையினர் அங்கிருந்து சடுதியாகச் சென்றனர்.

கைது செய்யப்பட்வர்களை ஏற்றிச்சென்ற பேரூந்துகளுக்கு படையினரின் இரண்டு வாகனங்கள் பாதுகாப்பு வழங்கிச் சென்றன.

கொட்டாஞ்சேனைப் பிரிவில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேர் தொடர்ந்தும் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கல்கிசை, வெள்ளவத்தை, தெகிவளை, கொகுவெல, நுகேகொட, பேலியகொட, கோட்டை காவல் நிலையப் பிரிவுகளில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பூசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசின் உயர்பீடம் உத்தரவு

கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா அரசின் உயர்பீடத்தின் உத்தரவின் பேரில் பூசா சிறைச்சாலைக்கு அனுப்பியதாக கொட்டாஞ்சேனை காவல் நிலையப் பொறுப்பதிகாரி நிரஞ்சல அபேவர்தன தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

கொழும்பின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல இடங்களிலும் தேடுதல்களை மேற்கொண்டோம். தமது அடையளங்களை உறுதிப்படுத்தாதவர்களையும் சந்தேகத்திற்கு இடமானவர்களையும் கைது செய்தோம்.

கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்களும் 2 பெண்களும் பூசாவுக்கு விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அரசாங்க உயர்மட்டத்தினரின் உத்தரவுக்கு அமையவே நாங்கள் கைது செய்யப்பட்டவர்களை பூசா முகாமுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

சந்திக்க மகிந்த மறுப்பு
கொழும்பில் கைது செய்யப்பட்டு இன்று பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோரைச் சந்திக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மறுத்ததால் அவர்கள் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்தனர்.

தமது பிள்ளைகளை பூசாவுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கொட்டாஞ்சேனையில் இருந்து அலரி மாளிகை நோக்கி இரண்டு பேரூந்துகளில் இன்று பிற்பகல் புறப்பட்டனர்.

அதற்கான ஏற்பாடுகளை பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனும், நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனும் செய்திருந்தனர்.

தனியாரின் இரண்டு பேரூந்துகளில் 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அலரி மாளிகை நோக்கிப் புறப்பட்டனர்.

அவர்கள் பயணித்த இரண்டு பேரூந்துகளையும் ஹில்டன் ஹோட்டல் முன்பாக வழிமறித்த படையினர் பாதுகாப்பு காரணங்களுக்காக பேரூந்துகளில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்று தடுத்தனர்.

இதனால் ஹில்டன் ஹோட்டல் பகுதியில் இருந்து கால்நடையாகவே அலரி மாளிகை நோக்கி அவர்கள் அனைவரும் சென்றனர்.

எனினும் தாஜ் ஹோட்டலுக்கு சமீபமாக காலிமுகத்திடல் சுற்றுவட்டப் பகுதியில் மீண்டும் வழிமறித்த படையினர் அதற்கு மேல் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தனர்.
இதனையடுத்து மலையக மக்கள் முன்னணியின் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனும் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனும் மகிந்த ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டு பூசாவுக்கு கொண்டு செல்லப்படுபவர்களின் பெற்றோர் உங்களைச் சந்திப்பதற்காக காத்து நிற்கின்றனர் என்று தெரிவித்தனர்.

எனினும் தனக்கு தற்போது நேரம் இல்லை என்று கூறி பூசாவுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோரைச் சந்திப்பதற்கு மகிந்த ராஜபக்ச மறுத்து விட்டார்.
அத்துடன் தனக்கு இந்த விடயத்தில் நெருக்கடி தர வேண்டாம் என்றும் இங்கே குண்டுகள் வெடிப்பதால் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை பூசாவுக்கு கொண்டு செல்லாமல் அந்தப் பேரூந்துகளை திருப்பிக்கொண்டு வந்து இங்குள்ள ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் கோரிக்கை விடுத்த போதும் அதனை அவர் ஏற்கவில்லை என்று தெரியவருகிறது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனை மட்டும் தனியாக இன்று மாலை 5:00 மணியளவில் சந்திப்பதற்கு வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அந்த அழைப்பை நிராகரித்த தி.மகேஸ்வரன், மக்களைச் சந்தித்தால் மட்டுமே தான் சந்திப்பேன் என்று கூறியதாக தெரியவருகிறது.

இதனையடுத்து அங்கு குழுமியிருந்த பெற்றோரை கலைந்து செல்லுமாறு கூறிய படையினரும், காவல்துறையினரும் அந்தப் பகுதிக்கு இரண்டு காவல்துறை பேரூந்துகளை வரவழைத்து அவற்றில் அவர்களை ஏற்றி மீண்டும் கொட்டாஞ்சேனை காவல்நிலையம் முன்பாக கொண்டுவந்து விட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை நிலையத்திற்கு முன்பாக மீண்டும் திரண்ட அவர்கள் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு மன்றாடிய போதும் அந்த மன்னறாட்டங்கள் எதுவும் பலனிக்காது ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o Cresce.Net(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. If is possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll, I thank. Good bye friend.