Monday, October 29, 2007

கோவையில் மகிந்த ராஜபக்ச நிர்வாண கொடும்பாவி எரிப்பு முயற்சி: 30 பெரியார் தி.க.வினர் கைது!!!







அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தமிழ்நாட்டின் கோவையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நிர்வாணக் கொடும்பாவியை எரிக்க முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் முன்பாக இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் மகிந்தவின் நிர்வாணக் கொடும்பாவியை எரிக்க முயற்சித்தனர்.

ஆனால் அங்கு பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் கொடும்பாவியை எரிக்க விடாமல் தடுத்து பறித்துச் சென்றனர். கொடும்பாவியை எரிக்க முயற்சித்ததாக பெரியார் திராவிடர் கழகத்தினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறிலங்காவின் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டித்து அப்போது கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னையில்...
சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று மாலை 4:30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் கேசவன், அன்பு தனசேகரன், தபசி குமரன் மற்றும் தமிழக மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பாலன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
நன்றி>புதினம்.

Sunday, October 28, 2007

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர்: இக்பால் அத்தாஸ்





அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் 27 பேர் கொண்ட அணி தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

கட்டடையாக தலைமுடி வெட்டிய ஆண்களும், பெண்களுமான கரும்புலிகள், இராணுவ உடையை அணிந்திருந்தனர். அவர்கள் தற்கொலை குண்டு அங்கிகளையும் அணிந்திருந்தனர்.

கனரக ஆயுதம் தரித்த அந்த அணியினர் இராணுவ அதிகாரி ஒருவருக்கு சொந்தமான கைவிடப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்தனர். இது அனுராதபுரம் தளத்திற்கு அண்மையாக இருந்தது.

முகாமின் வேலிகளை நோக்கி திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் அதிகாலை 3:00 மணிக்கு ஊர்ந்து சென்றனர். பின்னர் அவர்கள் வேலிகளை வெட்டி ஒவ்வொருவராக உள்ளே புகுந்தனர். வானூர்தி ஓடுபாதை வடகிழக்காகவும், தென்மேற்காகவும் அமைந்திருந்தது. அதனை விரிவாக்கும் வேலைகளும் நடைபெற்று வந்தன. விடுதலைப் புலிகள் 300 மீற்றர் தூரம் ஓடுபாதைக்கு குறுக்காக நடந்து வானூர்தித் தரிப்பிடத்தை அடைந்தனர். அது திறந்த பகுதி அங்கு எதிர்ப்புக்கள் இருக்கவில்லை.

அங்கு பாவனையில் உள்ள மற்றும் பாவனையில் அல்லாத வானூர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஆர்பிஜி உந்துகணை செலுத்திகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு உந்துகணை செலுத்திகள் ஆகியவற்றின் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடங்கினர்.

அது முகாமின் அமைதியை குலைத்தது. எனினும் தம்மை தயார்படுத்திக்கொண்டு தமது நிலைகளுக்கு செல்ல ஆரம்பித்த வான் படையினரை அங்கு நிலை எடுத்திருந்த விடுதலைப் புலிகள் தாக்கினர்.

பல வான் படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி வீழ்ந்தனர். தளத்தில் பெரும் வெடியோசைகளும், தீப்பிழம்புகளும் எழுந்தன. அனுராதபுரத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான தொலைபேசி இணைப்புக்கள் மிகவும் வேகமாக இயங்கின. தாக்குதல் செய்தி எல்லா இடமும் பரவியது. செய்தி உலகெங்கும் பரவியது. அனைத்துச் செய்தியாளர்களும் கெரில்லாக்கள் முதற் தடவையாக வான், தரைத் தாக்குதல்களை இணைத்து மேற்கொள்வதாக பேசிக்கொண்டனர். விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டதாக அரசு தெரிவித்து வந்த சூழலில் இது நடைபெற்றுள்ளதாக சில ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள வான் படையினரின் நடவடிக்கை தலைமையகம் வேகமாக செயற்பட்டது. அனுராதபுரம் தளத்தில் உள்ள சில வானூர்திகளையாவது பாதுகாப்பாக நகர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளில் உயரதிகாரிகள் இறங்கினர். இது இரு நோக்கங்களைக்கொண்டது. ஒன்று வானில் எழும் வானூர்திகள் மூலம் விடுதலைப் புலிகளை தாக்குவது. இரண்டாவது தரையில் உள்ள வானூர்திகளைப் பாதுகாப்பது. ஆர்பிஜி மற்றும் ஏனைய ஆயுதங்களின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தன. வவுனியா வான் படைத்தளத்தில் இருந்து உதவிகளை பெறுவதற்கும் அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.

எனினும் அரை மணிநேரத்திற்குப் பின்னர் வவுனியாவில் இருந்து பெல்-212 ரக உலங்குவானூர்தி புறப்பட்டுச் சென்றது. இரு வானோடிகளையும் இரு துப்பாக்கிதாரிகளையும் கொண்ட இந்த உலங்குவானூர்தி மிகிந்தலைப் பகுதியில் உள்ள டொரமடலாவா பகுதியில் சூட்டுக்கு இலக்காகி வீழ்ந்து நொறுங்கியுள்ளது. அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

வான் படைத்தளத்தின் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட மற்றும் தரிப்பிடங்களில் நிறுத்தப்பட்ட வானூர்திகள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன. தாக்குதல் அணியானது வன்னியில் உள்ள கட்டளை மையத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வந்திருந்தது. தாக்குதல் தொடர்பான தகவல்களையும் வழங்கிக்கொண்டிருந்தனர். தாக்குதல் தொடங்கிய 45 நிமிடங்களில் விடுதலைப் புலிகளின் இரு சிலின்-143 வானூர்திகள் வந்து மூன்று குண்டுகளை வீசின.

விடுதலைப் புலிகளின் வானூர்தி வந்து குண்டு வீசிவிட்டுச் சென்றதனை வவுனியாவில் இருந்த படையினரும், காவல்துறையினரும் கண்டனர். எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்கச் சென்ற உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கி விட்டது. ஆனால் எவ்வாறு இது நிகழ்ந்தது என்பது தொடர்பாக குழப்பங்கள் தோன்றியுள்ளன. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அது வீழந்ததா? அப்படியானால் மற்றைய உலங்குவானூர்தியை அனுப்புவது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுகின்றது.

இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற படையினர், வான் படையினருடன் இணைந்து விடுதலைப் புலிகளை முறியடிக்கும் தாக்குதலில் ஈடுபட்டனர். சில விடுதலைப் புலிகள் தமது தற்கொலை அங்கிகளை வெடிக்க வைத்து இறந்தனர். சிலர் படையினருடனான மோதல்களில் இறந்தனர். தளத்தை முற்றாகக் கைப்பற்றி தமிழீழக் கொடியை ஏற்றும் விடுதலைப் புலிகளின் திட்டத்தை முறியடிப்பதற்காக படையினர் கடும் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர்.

முற்பகல் 9:00 மணியளவில் எஞ்சியிருந்த ஒன்று அல்லது இரண்டு விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் கொகொம்பா மரத்தில் ஏறி அதன் மூலம் வானூர்தி தரிப்பிடத்தின் கூரையில் ஏறி படையினர் மீது தாக்குதலை நடத்தினர். இச்சமரின் போது ஒரு சமயத்தில் கவச வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கவச வாகனத்தின் சக்கரம் சேதமடைந்ததால் அது செயலிழந்தது. எனினும் பின்னர் கூரையில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் 20 சடலங்களை கைப்பற்றியதாக படைத்துறைப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால் 21 விடுதலைப் புலிகள் பங்குபற்றியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். எனவே கொல்லப்பட்ட எண்ணிக்கையில் ஒருவர் வேறுபடுகின்றார். விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் தாக்குதலாளிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அமர்ந்திருப்பது வெளியிடப்பட்டிருந்தது. இது தாக்குதலில் பங்குபற்றிய சில உறுப்பினர்கள் பாதுகாப்பாக திரும்பும் பொருட்டு புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. குறைந்தது ஒன்று அல்லது இரண்டு விடுதலைப் புலிகளாவது தளம் திரும்பும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இத்தாக்குதலில் 27 விடுதலைப் புலிகள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 5:00 மணியளவில் இரு குழுக்களாக தாக்குதலாளிகள் வெவ்வேறு இடைவெளிகளில் தளத்தை விட்டுச்சென்றதை கண்டதாக தளத்திற்கு அருகில் வசிக்கும் சில கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருந்தனர். அது சரி எனில் தாக்குதலில் பங்குபற்றியதாக கூறப்படும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் நிலை தொடர்பான விளக்கமே தரப்படவில்லை.

மூன்று வானூர்திகள் சேதமடைந்ததாக வான் படைப் பேச்சாளர் அஜந்தா சில்வா ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் 7 வானூர்திகள் அழிக்கப்பட்டதாகவும், பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியதாகவும் பிரதமர் ரட்ணசிறீ விகிரமநாயக்க கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பில் உள்ள வான்படை தலமையகத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள், அனுராதபுரம் படைத்தளத்தில் உள்ள அதிகாரிகள் ஆகியோருடன் நான் மேற்கொண்ட உரையாடல்களில் இருந்து தாக்குதல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டேன்.

தாக்குதல் நடைபெற்ற போது தளத்தில் 27 வானூர்திகள் தரித்து நின்றன. அவற்றில் சில சேவையில் ஈடுபட முடியாதவை. எனவே சேதமடைந்த வானூர்திகளின் விபரம் வருமாறு:

வான் படைத் தரிப்பிடத்தில் வைத்து அழிக்கப்பட்ட வானூர்திகள்:

ஆளில்லாத உளவு வானூர்திகள் - 02 இவை மிகவும் புதியன, வான் படையினரின் ஆவணங்களில் கூட இன்னும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இஸ்ரேலின் புளு ஹரிசோன் நிறுவனத்திடம் இருந்து பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக கொண்டுவரப்பட்டிருந்தன.

எம்ஐ-17 துருப்புக்காவி உலங்குவானூர்தி - 01 இது எரிந்து சாம்பலாகி விட்டது.

சீனத் தயாரிப்பு பிரி-6 பயிற்சி வானூர்திகள் - 04

வானூர்தி ஓடுபாதைக்கு அருகில் வைத்து அழிக்கப்பட்ட வானூர்திகள்:

அமெரிக்க தயாரிப்பான பீச்கிராஃப் 200 வானூர்தி - 01 இது முக்கிய பிரமுகர்களின் பயணத்திற்கு என 1985 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது. பின்னர் 1995 ஆம் ஆண்டு கண்காணிப்பு வானூர்தியாக மாற்றப்பட்டதுடன், அதிக பெறுமதியுள்ள ஒளிப்படக்கருவி உட்பட பல சாதனங்களும் பொருத்தப்பட்டன. இதன் இழப்பு ஆழ்கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

சீனத் தயாரிப்பு கே-8 பயிற்சி வானூர்தி - 01

எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி - 01

இவை முற்றாக அழிந்து போனவை. இவை தவிர சேவையில் ஈடுபடும் மற்றும் சேவையில் ஈடுபடாத பல வானூர்திகளும் சேதமடைந்துள்ளன. அவற்றில் சிலவற்றையே மீண்டும் பயன்படுத்த முடியும் என வான் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சேதமடைந்த வானூர்திகளை வான் படை பதிவு புத்தகத்தில் இருந்து அகற்றுவதற்கான அனுமதிக்காக வான் படைத்தளபதி பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் எழுதும் வரையிலும் இழக்கப்பட்ட வானூர்திகளின் எண்ணிக்கை யாருக்கும் தெரியவில்லை.

அதன் தகவல் வருமாறு:

வான் படைத் தரிப்பிடத்தில் சேதமடைந்த வானூர்திகள்:

வான் படைக்குச் சொந்தமான ஆளில்லாத உளவு வானூர்தி - 01

பிரி-6 பயிற்சி வானூர்திகள் - 03

கே-8 பயிற்சி வானூர்திகள் - 05 இந்த வானூர்திகள் சிலவற்றின் கண்ணாடி கூரைகள் உருகிப் போனதுடன், உலோகப்பகுதிகளும் சிதைந்து போயுள்ளன. அவற்றில் சில கைவிடப்பட்டுள்ளதுடன், அதன் பாகங்கள் தான் பயன்படுத்த முடியும்.

சியாமாசெற்றி வானூர்திகள் - 04 (சேவையில் ஈடுபடுவதில்லை)

ஓடுபாதையில் சேதமடைந்த வானூர்திகள்:

எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி - 01

சேதமடையாத வானூர்திகள்:

எம்ஐ-17 உலங்குவானூர்திகள் - 03 இவை தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

வான் படைத்தளத்திற்கு ஏற்பட்ட சேதம் 30 மில்லியன் டொலர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை ஒரு வருடத்திற்கு முன்னர் கணிக்கப்பட்ட விலைகள். ஆனால் மீளக் கொள்வனவு செய்யும் விலைகள் மிகவும் அதிகமானவை. வான் கலங்களின் விலைகள் உயர்ந்து செல்வதுடன், டொலரின் பெறுமதியும் அதிகரித்து செல்கின்றது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக இரு காரணிகள் நோக்கத்தக்கது. முகாமின் ஒவ்வொரு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர்கள் தகவல்களை உடனுக்குடன் பெற்று வந்திருக்கின்றனர். அது உள்வீட்டுத் தகவல்களாகும். அவற்றின் உதவியுடன் அவர்கள் வன்னியில் மாதிரி வடிவங்களை அமைத்து கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். விடுதலைப் புலிகள் எவ்வாறு இத்தகவல்களை பெற்றார்கள் என்பது தான் முக்கிய கேள்வி.

தளத்தின் வானூர்தி ஓடுபாதையின் விரிவாக்கம் காரணமாக அதன் பாதுகாப்புக்களில் சில மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை தனியார் ஒப்பந்தகாரருக்கு வழங்கப்பட்டிருந்தது. தினமும் கட்டப் பொருட்களுடன் பெருமளவான பாரஊர்திகள் அங்கு செல்வதுண்டு.

முகாம் தாக்குதல் தொடர்பாகவும், பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரு குழுக்கள் அமைக்கப்பட்டள்ளன. இவற்றில் ஒன்று குற்றப்புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படுவது முக்கியமானது.

காவலரண்களில் இருந்து எந்தவித எதிர்ப்புக்களும் இன்றி விடுதலைப் புலிகள் கம்பி வேலியை வெட்டி உட்புகுந்தது வெட்கக்கேடானது. கடந்த கால அனுபவங்களில் இருந்து கூட படையினர் பாடங்களை கற்கவில்லை. இதே போன்றே விடுதலைப் புலிகள் 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கட்டுநாயக்க வான் படைத்தளம் மீதான தாக்குதலின் போதும் உள்நுழைந்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சப்புகஸ்கந்தவில் உள்ள எரிபொருள் சேமிப்பு களஞ்சியத்தின் கம்பி வேலியை வெட்டி விடுதலைப் புலி உறுப்பினர் உட்புக முயற்சித்திருந்தார். அதற்கு அண்மையில் ஒரு சடலம் காணப்பட்டது. புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவரை பாம்பு கடித்திருந்ததாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. காவல்துறையினர் சில ஆவணங்களையும் கைப்பற்றியிருந்தனர். அவர் எரிபொருள் சேமிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலுக்கான ஆரம்பகட்ட புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பின்னர் அறியப்பட்டது.

கட்டுநாயக்க தாக்குதலில் வான்படையினர் 8 வானூர்திகளை இழந்திருந்தனர். ஆனால் அனுராதபுரம் தாக்குதலில் அதிக வானூர்திகள் இழக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலில் வானூர்தி தரிப்பிடங்களில் இருந்த வானூர்திகள் தாக்கப்படவில்லை. ஓடுபாதையில் நின்ற வானூர்திகளே தாக்கப்பட்டன. ஆனால் அனுராதபுரத்தில் தாக்குதலாளிகள் தரிப்பிடங்களுக்குள் சென்று தாக்கியுள்ளனர்.

யால வனவிலங்கு சரணாலயத்தில் தாக்குதல் நடைபெற்ற ஒரு வாரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்க றெஜிமென்டை சேர்ந்த 12 ஆவது பற்றாலியன் துருப்புக்களின் உதவியுடன் தற்போதும் அங்கு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் நாள் உரைக்கு 30 நாட்கள் இருக்கையில் இந்த இரு தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி<புதினம்

Saturday, October 27, 2007

"" உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்"".... தேசியத்தலைவர்.


அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளை அழைத்த தமிழீழத் தேசியத் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று அறிமுகப்படுத்தியதாக தூயவன் அரசறிவியல் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான கலைக்கோன் தெரிவித்துள்ளார்.
21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

தாக்குதல் தொடங்குவதற்கு முதல் நாள் தலைவர் அனைத்துப் பொறுப்பாளர்களுடனுமான தனது வழமையான சந்திப்புக்களை நிறுத்தி அந்தப் போராளிகளைப் பற்றிய நினைவுகளில் முழுமையாக மூழ்கியிருந்தார். அன்று நள்ளிரவில் தளபதிகளை அழைத்திருந்தார். அவர்களிடம் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று கூறினார். தலைவர் அவ்வாறு கூறிய ஒரு சிலமணி நேரத்தில் இளங்கோவிடமிருந்து "நாங்கள் இறுதி நகர்வை ஆரம்பிக்கப் போகின்றோம்" என்ற செய்தி வந்தது.

தலைவர் பெரும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் அந்தப் பெரும் வெற்றிச் செய்திக்காகக் காத்திருந்தார். சென்றிருந்த ஒவ்வொரு போராளிகளிடத்திலும் தலைவர் அதிக நம்பிக்கையுடனும் பற்றுடனும் இருந்தார்.

அந்த அணிக்குத் தளபதியாகச் சென்றவர் இளங்கோ, 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலை அமைப்பில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் பல்வேறுபட்ட சிறப்புப் பயிற்சிகளையும் பெற்றதோடு கைத்துப்பாக்கிப் பயிற்சி ஆசிரியராகவும் அடிப்படைப் பயிற்சி முகாம் பொறுப்பாளராகவும் இருந்தார். இவற்றுக்கு அப்பால் சிறப்புப் புலனாய்வுப் பணிகள், சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு போராளி. 14-க்கும் மேற்பட்ட களங்களைக்கண்ட ஒரு வீரன். இவரின் போரிடும் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்ட களமாக இத்தாவில் சமர்க்களம் அமைந்திருந்தது. அவர் விக்டர் கவச எதிர்புப்படையணியின் அணியொன்றுக்குத் தலைமை தாங்கிச் சென்றிருந்தார். அங்கு எமது அணிகளின் காப்பரண்களுக்குள் எதிரியின் கவசப்படையணி உள்நுழைந்த போது அவரது அணியைச் சேர்ந்த போராளிகள் இரு டாங்கிகளைத் தகர்த்து அழிக்க இளங்கோ தனது கையிலிருந்த ஆர்.பி.ஜி. மூலம் ஒரு பவள் கவச வாகனத்தை நோக்கி மிக வேகமாக ஓடிச்சென்று அதன் மீது ஏறித் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த எதிரியைச் சுட்டுவீழ்த்தி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை எடுத்து அதனைப் பயன்படுத்தித் தாக்குதலை மேற்கொண்டார். இதன் மூலம் எமக்குப் பெரும் நெருக்கடியாகவிருந்த இத்தாவில் களமுனையை முற்றுமுழுதாக எமது பக்கம் திருப்பித்தந்த ஒரு பெரும் வீரன். அதற்குப்பின்னரும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின் குறித்த சில காலம் எமது தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணியில் மிக முக்கியமான ஒரு பணியைப் பொறுப்பேற்று மிக நேர்த்தியாகச் செய்து முடித்திருந்தார்.

இளங்கோ தான் கரும்புலியாகச் செயற்படவேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைவருக்குத் தொடர்ச்சியாகக் கடிதம் வரைந்து கொண்டே இருந்தார். ஆனாலும் அவரது கடமைகளின் முக்கியத்துவம் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தை வழங்குவதில் சற்றும் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 10 ஆண்டுகளாக இளங்கோ சுமந்து வந்த அந்த உணர்வைப் புரிந்து கொண்ட தலைவர் 2006 ஆம் ஆண்டு அவருக்குக் கரும்புலிகள் அணியில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினார்.

இளங்கோவின் தலைமையில் புறப்படுகின்ற அணியில் இரண்டாவது பொறுப்பாளராக வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

அவரின் செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்களை தற்போது வெளியிட முடியாதுள்ளது. திரியாயைப் பிறப்பிடமாகக்கொண்ட வீமன் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்து புதுக்குடியிருப்பில் வசித்து வந்த காலத்தில் விடுதலை புலிப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். மிகச்சிறிய வயதில் அன்று அவர் அமைப்பில் இணைந்ததனால் படையணிகளுக்கு இணைக்கப்படாமல் படைத்துறைப் பள்ளியில் சில காலம் கற்று வந்தார். அதன்பின் குறித்த வயதை எட்டியதும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றார். பின் அவரும் தலைவரின் மெய்பாதுகாப்பு அணிக்கு உள்வாங்கப்பட்டார். அதில் அதியுச்ச நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். அப்பணியில் மிக இரகசியமான பல்வேறுபட்ட கடமைகளை மிக நேர்த்தியாகச் செய்தார். அதேவேளை "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாயகத்திற்குப் பயணிக்கும் போது அவருடைய பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பையும் தலைவர் வீமனிடமே ஒப்படைத்திருந்தார்.

ஈழப்பிரியா மிகுந்த ஆளுமை மிக்க ஒரு போராளி. அவர் பயிற்சியின் போது மிக உற்சாகமாகச் செயற்பட்டார். அவர்கள் பெற்ற பயிற்சி என்பது சாதாரணமான பயிற்சி அல்ல. அவர்கள் தாக்குதலுக்குச் செல்லும் போது உதவி அணிகள் செல்லப்போவதில்லை. எனவே தாக்குதலுக்குத் தேவையான முழு வெடிபொருட்களையும் சுமந்து கொண்டு நீண்டதூரம் பயணிக்க வேண்டும். அந்தளவு மிகக்கடினமான பயிற்சியைப் பெற்றவர்தான் ஈழப்பிரியா.

இளம்புலி மிக உற்சாகமான போராளி எல்லோரையும் நகைச்சுவையாக வைத்திருக்கக்கூடிய ஒரு போராளி. அவர் இறுதியாகச் செல்லும் நேரத்தில் தலைவரிடம் எமது தேசியக்கொடியைக் கொண்டு செல்ல அனுமதி கேட்டிருந்தார். ஏனெனில் இத்தாக்குதல் ஒரு இரகசியமான தாக்குதலாக இருக்காது என்பதை உணர்ந்த அவர் முகாமை அழித்து விட்டுத் தொடர்புக் கோபுரத்தில் ஏறி எமது கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று அவர் அந்த அனுமதியைக் கேட்டிருந்தார். அதற்கு அமைவாக அவர் தேசியக் கொடியினையும் கொண்டு சென்றிருந்தார்.

பஞ்சீலன் மட்டக்களப்பிலிருந்து மிகச் சிரமங்களுக்கு மத்தியில் கால்நடையாக இங்கு வந்து மிகக் கடுமையாகப் பயிற்சிகளைப் பெற்றவர். சமாதான காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பிற்குள் எதிரியின் ஊடுருவலைத் தடுப்பதற்காகத் தீவிரமாகச் செயற்பட்ட வீரன். அதற்கான பெரும் அணியொன்றினைப் பொறுப்பெடுத்து செய்து வந்த வீரன்.

இவ்வாறு தான் ஒவ்வொரு வீரர்களும் ஒரு அணியாக நின்று மிகக்கடுமையான பயிற்சிகளைப் பெற்ற பெரும் வீரர்கள். ஒவ்வொரு போராளிகளும் தங்களது உணர்வுகளைத் தலைவரிடம் பல ஆண்டுகளாகத் தெரியப்படுத்தி வந்தனர். தலைவரும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அப்போராளிகளைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தார். அன்று தொடக்கம் அவர்கள் உச்ச இலக்கொன்றைத் தாக்கி அழிப்பதற்கான முறையில் மிகக்கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த அணிதான் அன்று அனுராதபுரம் வான் படைத்தளத்திற்குள் நுழைவதற்கான இறுதி நகர்வை தொடங்கிக் கொண்டிருந்தது.

அன்று தலைவர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தார். அதிகாலை 3:20 மணிக்கு இளங்கோ அறிவிக்கின்றார். "நான் சண்டையைத் தொடக்கப் போகின்றேன். சண்டை தொடங்கியதும் மிகுதி விடயங்களை அறிவிக்கின்றேன்" என்று கூறிச் சமரை ஆரம்பித்தார்.

அனுராதபுரம் வான் படைத்தளம் என்பது ஒரு சாதாரண வான் படைத்தளம் அல்ல. வடபகுதியில் இருக்கின்ற அனைத்து இராணுவத் தளங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதும் வடபகுதியில் ஒரு இராணுவ நடவடிக்கையைச் செய்வதானால் அதற்கு இதயமாகச் செயற்பட வேண்டிய தளமாகவும் இருந்தது.

அது மட்டுமல்ல, வடபகுதியில் அனைத்து இராணுவச் செயற்பாடுகளுக்குமான ஒரு மையத்தளமாக அனுராதபுரம் வான் படைத்தளம் இருந்தது. இலங்கையில் உள்ள அனைத்து தளங்களிலும் இத்தளம் மிக வித்தியாசமானது. ஏனெனில் ஏனைய தளங்களில் மக்களின் போக்குவரத்திற்கும் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் முற்றுமுழுதாக இராணுவத் தேவைகளுக்காகவே ஒதுக்கப்பட்ட தளம் அனுராதபுரம் தளம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு பொதுமகனும், ஊடகவியலாளரும் கூட உள்நுழைய முடியாதளவுக்கு மிக இறுக்கமான பாதுகாப்பைப் பேணிவந்த தளம் தான் அத்தளம்.

3 கிலோ மீற்றருக்கு மேலான நீளமும் 2 கிலோ மீற்றருக்கு மேலான அகலமும் கொண்ட ஒரு பெரும் தளம். அதற்குள் தான் இந்த வீரர்கள் உள்நுழைந்தார்கள். 3:20 மணிக்குத் தாக்குதல் தொடங்குகின்றது. மிக வேகமாகத் தாக்குதலை நடத்தி தமக்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்து அங்கிருந்த வானூர்திகளைத் தகர்த்து முடித்தார்கள்.

சிங்களம், அனுராதபுர வான் படைத்தளத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது. அத்தளம் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்ருக்கின்றது. மிகையொலி வானூர்திகளை நிறுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் பல தாக்குதல் வானூர்திகளையும் நிறுத்தி வைக்கப் பாதுகாப்பான தளம் எனவும் கருதி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதேவேளை முற்று முழுதாக சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட பகுதி. அதற்குள் ஊடுருவுவது என்பது மிகக் கடினமான விடயம். சிங்களம் பெரும் மமதையுடன் இருந்த அக்கோட்டைக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் 20 நிமிடத் தாக்குதலுக்குள் அத்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள்.

அந்த நிலையில் இளங்கோ மீண்டும் தொடர்பு கொண்டு கதைத்தார். நான் காலில் காயமடைந்து விட்டேன் தொடை எலும்பு முறிந்துவிட்டது. எனவே இந்த இடத்தில் அமர்ந்து கொண்டே கட்டளைகளை வழங்குகின்றேன் எனக்கூறி அவர் கட்டளைகளை வழங்கினார். இதேவேளை வீமனின் கட்டளையும் கட்டளைப்பீடத்துடன் தொடர்புபட்டிருந்தது. வீமன் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். எம்ஐ-24 ரக உலங்குவானூர்தியையும், எம்ஐ-17 ரக உலங்குவானூர்தியையும் அழித்துவிட்டு கட்டளைப்பீடத்திற்கு அறிவித்தார். எனக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் நான் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார்.

பல நூற்றுக்கணக்கான படையினரால் பாதுகாக்கப்பட்டிருந்த அம் முகாம் எதிரியால் கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு அதி உக்கிரமாகவும், வேகமாகவும் அந்த வீரர்கள் தாக்குதலை நடத்தி வந்தார்கள். தாக்குலில் உக்கிரமாக ஈழப்பிரியா செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் எதிரியின் பிரதானமான வானூர்திகளுக்கு அப்பால் வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தன. அதனை எடுத்து இயக்கித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார். தளத்திற்குள் நூறு மீற்றர் நீளமான ஒரு கட்டடத்திற்ள் பல வானூர்திகள் நின்றிருந்தன. அறிவுமலரும் இன்னுமொரு போராளியும் அதற்குள் நுழைந்து தாக்குதலை நடத்திக் கொண்டு அறிவித்தார்கள். இங்கு நிறைய வானூர்திகள் நிற்கின்றன. பல வானூர்திகள் எரிந்து கொண்டிருக்கின்றன. உள்ளே சென்று பார்க்க முடியாமல் உள்ளது. ஆனாலும் எல்லாவற்றையும் அடித்து அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்று எரிந்து கொண்டிருக்கும் வானூர்திகளின் இலக்கத்தைக் கூடக் கூறிக் கொண்டு வானூர்திகள் எரியும் போது அவர்கள் மகிழ்ச்சியில் சிரித்து ஆரவாரித்தவாறு தாக்குதலில் ஈடுபட்டார்கள். தாக்குதல் தொடங்கி சில மணிநேரத்தில் தளத்தைக் கைப்பற்றுவதற்காகத் தளத்தின் வாசலில் படையினர் குவிக்கப்படுகின்றனர். அப்போது பல போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். பலர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ஒருவர் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையிலும் தனது ஆயுதத்தால் வந்த படையினர் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எமது வானூர்திகள், படையினர் மீது தாக்குதல் நடத்தின. அதனால் படையினர் சிதறி ஓட அதனையும் அவர் அங்கிருந்து கொண்டு அறிவித்துக்கொண்டிருந்தார்.

பின்னர், தீயணைப்புக் கருவிகளுடன் இராணுவத்தினர் வர அவர்கள் மீதும் அப்போராளிகள் தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் அங்கிருந்த எல்லா வானூர்திகளும் அழித்து முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் வேவு வானூர்திகள் மட்டும் அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். பின் மறைவான இடமொன்றில் அவை நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு விட்டார்கள். அப்போது வீமனுக்கு இளங்கோ கட்டளையிட வீமன் படுகாயமடைந்த நிலையிலும் தனது டொங்கானால் அவற்றைத் தாக்கினார். தாக்கிவிட்டு அவை வெடித்துக் சிதறுகின்ற ஒலியை அனுப்பிவிட்டு மகிழ்ச்சியில் சிரித்தார். அவ்வாறு அத்தளத்தில் ஒரு பொருளையும் மிஞ்சவிடாது தளத்தையே துவம்சம் செய்துவிட்டுத்தான் அந்த வீரர்கள் வீரச்சாவடைந்தார்கள்.

இன்று நாங்கள் பெரிய வெற்றியொன்றின் மிதப்பில் நிற்கின்றோம். மாபெரும் மனக்கோட்டை கட்டிவந்த சிங்களம் இந்த 21 வீரர்களின் வீரத்திலும் அர்ப்பணிப்பிலும் அனைத்தையும் போட்டு உடைத்துள்ளது. இருந்த போதும் எங்களுக்கு நிமிர்வைத் தந்த வீரர்களின் நினைவுகள் எம் ஒவ்வொருவரது இதயத்தையும் பாறாங்கல்லாக அழுத்தத்தான் செய்கிறது. அந்த வீரர்களைப் பொறுத்தவரை அவர்கள் 21 பேரும் எம்மிடம் ஒன்றைத்தான் எதிர்பார்த்தார்கள். தலைவர் கவனம், அவரது கரத்தைப் பலப்படுத்துங்கள். அதன்மூலம் எமது மக்களை அவலத்தில் இருந்து மீட்டு எடுங்கள். நீங்கள் அனைவரும் ஒன்றாக எழுந்தால் அது முடியும் என்றார் அவர்.
http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e

Friday, October 26, 2007

புதிய இராணுவத் தளபாடங்கள் கொள்வனவு செய்ய இந்தியா உதவி?

அனுராதபுரம் வான் படைத்தளத்தில் புலிகளால் சிறிலங்காவின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய வானூர்திகள், உலங்குவானூர்திகள் உள்ளிட்ட தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு பசில் ராஜபக்ச அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது:

அனுராதபுரம் வான் படைத்தளத்தில் திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அனைத்து வானூர்திகளும் உலங்குவானூர்திகளும் அகற்றப்பட்டு "நட்பு நாடுகளின்" உதவியுடன் விரைவில் சீரமைக்கப்படும்.

இது விடயத்தில் உதவுவதற்காக பல நாடுகள் எம்மைத் தொடர்பு கொண்டுள்ளன. "வெளிப்படையான சில காரணங்களால்" அந்த நாடுகளின் பெயர்களை நாம் வெளியிட இயலாது.

அரசாங்கத்தின் அனைத்து அலுவல்களையும் விட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விடுதலைப் புலிகள் தங்களது இலக்கை அடைவதற்காக உணர்வுபூர்வமான இடங்களில் மேலதிக தாக்குதல்களை நடத்தக்கூடும். விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடிக்கும் வரை இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க முடியாது.

பொதுமக்கள் இதனை உணர்ந்து அனைத்து நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அனுராதபுரம் தாக்குதலுக்கு பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் உதவியிருக்கிறார்களா என்பது குறித்த உள்ளக விசாரணைகள் முன்னேற்றமடைந்துள்ளன. காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் பசில் ராஜபக்ச.

சிறிலங்காவுக்கு அனைத்துலக நாடுகள் பலவும் வெளிப்படையாக உதவி வருகின்றன. ஆனால் 7 கோடித் தமிழர்கள் வாழும் இந்தியாவின் தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளால் இந்திய அரசாங்கத்தால் வெளிப்படையாக சிறிலங்காவுக்கு இராணுவ உதவி செய்யாமல் மறைமுகமாக செய்து வருகிறது.

இந்நிலையில் பசில் ராஜபக்சவும், "வெளிப்படையான சில காரணங்களால்" உதவ முன்வந்துள்ள நாடுகளின் விவரங்களைத் தர முடியாது என்று கூறியுள்ளதானது "இந்தியாவை"த்தான் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்கு இரகசிய ஆயுத உதவியை இந்தியா செய்து வருவதாக அண்மையில் இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான "ரைம்ஸ் ஓஃப் இந்தியா" அம்பலப்படுத்தியமையையும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனிடையே கொழும்பில் கடந்த புதன்கிழமை கூடிய சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபையானது சிறிலங்கா வான் படைக்கான புதிய போர் வானூர்திகளைக் கொள்வனவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வான் படைத்தளபதி றொசான் குணதிலக்க, உயர் இராணுவ அதிகாரி டொனால்ட் பெரேரா, காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஏற்படுத்தப்பட்ட இழப்புக்கள் குறித்த விரிவான அறிக்கையை வான் படைத்தளபதி அக்கூட்டத்தில் தாக்கல் செய்தார்.

கண்காணிப்பு வானூர்திகளின அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வான் படைத்தளங்களில் மேலதிக பாதுகாப்புக்கள் தொடர்பாகவும் அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்"




அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார்.
அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

கிழக்கு மாகாணத்தை விடுவித்து விட்டோம், விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழித்து விட்டோம், விடுதலைப் புலிகளை வன்னிக்குள் முடக்கி விட்டோம், வடக்கு - கிழக்கிற்கு வெளியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிறுத்தி விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை 21 கரும்புலிகளும், இரட்டை இயந்திரங்களை கொண்ட இரு வானூர்திகளும் ஒரு இரவினில் மாற்றி விட்டன.

மிகவும் பாதுகாப்பான அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை மிகவும் அதிர்ச்சிகரமான தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர். கொமோண்டோத் தாக்குதல் பாணியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

வான் படைத்தளத்தை 7 மணிநேரம் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன், தளத்தில் இருந்த 80 விழுக்காடு வான் கலங்களையும் அழித்துள்ளனர். இதில் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீச்கிராஃப் கண்காணிப்பு வானூர்தியும் அடங்கும்.

வட களமுனையில் அனுராதபுர தளமே பிரதான பங்கை ஆற்றி வந்தது. அனுராதபுரம் நகரில் இருந்து 4 கி.மீ தொலைவில் நுவரேவேவா குளத்திற்கு அருகில் வான்தளம் அமைந்துள்ளது. வட போர்முனையின் வழங்கல்களில் இத்தளம் பிரதான பங்கை வகித்து வருகின்றது. சிறிலங்காவில் உள்ள மிகவும் பலப்படுத்தப்பட்ட தளங்களில் இதுவும் ஒன்று.

சிறிலங்கா வான் படையின் பிரதான பயிற்சி கல்லூரி அங்கு அமைந்துள்ளது. 9 ஆவது தாக்குதல் உலங்குவானூர்தி பிரிவு (ஸ்குவாட்றன்), 6 ஆவது உலங்குவானூர்தி பிரிவு, 1 ஆவது பயிற்சி வானூர்திப் பிரிவு, 7 ஆவது உலங்குவானூர்திப் பிரிவு, 11 ஆவது ஆளில்லாத உளவு வானூர்திப்பிரிவு என்பவற்றின் தளமும் அதுவாகும்.

ஆளில்லாத உளவு வானூர்தி, பீச்கிராஃப் எனப்படும் கண்காணிப்பு வானூர்தி போன்றவற்றில் உள்ள நவீன புகைப்பட மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்படுவதனால் இத்தளம் வான் படை மற்றும் கடற்படையினருக்கான புலனாய்வுத் தகவல்களை வழங்கும் மையமாக செயற்பட்டு வந்தது.

புதிய உத்திகளை உடைய பயிற்சிகளை வழங்கும் பொருட்டு இத்தளத்திற்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் வந்து செல்வது வழக்கம்.

"கஜபா சுப்பர் குறஸ் - 2007" எனப்படும் விழா தாக்குதலுக்கு முன்னைய இரவு நடைபெற்றது. சாலியபுர விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த விழாவில் படைத்துறையில் உள்ள பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். சாலியபுர இராணுவ முகாம் அனுராதபுரம் வான் படைத்தளத்திற்கு அண்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தளத்தில் இருந்த பெரும்பாலான படையினர் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். ஏனையோர் அதனை கேட்டுக்கொண்டிருந்தனர். இக் கவனக்குறைவுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் முகாமிற்கு அருகில் உள்ள தென்னந்தோப்பில் தங்கியிருந்தனர்.

அவர்கள் கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் உத்தரவுக்காக காத்திருந்தனர். ஆனால் முகாமின் செயற்பாடுகள் அமைதியாகவே இருந்தன.

இந்த அணியினர் ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 7 செய்மதி தொலைபேசிகள், கத்திகள் என்பவற்றை வைத்திருந்தனர். இந்த அணியில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததுடன், 3 பெண் புலிகளும் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம் - நெலுங்குளம் வீதியைக் கடந்த பின்னர் தளத்தின் வடக்குப் பகுதியினூடாக உள்நுழைந்துள்ளது. அதிகாலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த முதலாவது முட்கம்பி வேலியை வெட்டி தளத்தின் வெளிப்பகுதிக்குள் நுழைந்தனர். இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில் மற்றுமொரு கம்பி வேலி சமாந்தரமாக போடப்பட்டிருந்தது.

இந்த இரு வேலிகளுக்கும் இடையில் மின்சார வேலி ஒன்று சிறிதாக அமைக்கப்பட்டிருந்த போதும் அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே விடுதலைப் புலிகள் இலகுவாக உள்நுளைய அது அனுகூலமாக இருந்தது. தற்போதைய முக்கிய கேள்விகள் என்ன எனில், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன? யார் இதற்கு பொறுப்பு? இது சில நோக்கங்களோடு செய்யப்பட்டதா? என்பவை தான்.

விடுதலைப் புலிகளின் அணி உள்நுழைந்ததும், வானூர்தி ஓடுபாதைக்கும் வேலிக்கும் இடையில் புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். அருகில் இருந்த பதுங்குகுழிகளுக்கு குறுக்காக இக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால் பாதையின் இருபுறமும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் மிகவும் நேர்த்தியாக சத்த வெடிகளை அகற்றியதுடன், முதலாவது பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை அடைந்திருந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர். பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி சத்தமின்றி ஊர்ந்து செல்ல தொடங்கினர்.

இரண்டாவது குழுவினர் பதுங்குகுழியின் மற்றய முனையை அடைந்து இரு பதுங்குகுழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக நகரத் தொடங்கினர். எனினும் 3 விடுதலைப் புலிகள் பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர்.

நகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத் தாக்குவதே அவர்களின் திட்டம். இதில் ஆச்சரியம் என்னவெனில் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை. தற்போதைய விசாரணைகளில் அவர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

முதலாவது அணியில் 14 விடுதலைப் புலிகள் இருந்தனர். அவர்களின் பணி உலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை அழிப்பதுவே.

இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை அழிப்பதற்கு காத்திருந்தது.

முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது.

அங்கு தான் எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும் பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்து 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர். பதுங்குகுழிக்குள் இருந்த படையினரை கொன்ற பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து கொண்டனர்.

அப்போது நேரம் அதிகாலை 3:20 மணி.

துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் தாக்குதலுக்கு உட்படுவதை அறிந்த படையினர் முகாமை முழுமையான உசார் நிலைக்கு கொண்டுவந்தனர்.

தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து விட்டனர். எனவே வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக இருந்து வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை.

கோபுரத்திற்கு அருகில் 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை இருந்தது. சில நிமிடம் நடைபெற்ற கடும் தாக்குதலுக்கு பின்னர் அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத்தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

இதற்கு முன்னர் அவர்கள் வான் பாதுகாப்பு பொறுப்பதிகாரியான பிளைட் லெப். றுவான் விஜரட்ன உள்ளிட்ட பல வான் படையினரை சுட்டுக்கொன்றனர்.

விஜயரட்ன கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அருகில் வீழ்ந்து கிடந்தார். அவர் தனது துப்பாக்கி நிலையை அடைய முற்பட்ட போது வயிற்றில் சுடப்பட்டார். பின்னர் அதிக இரத்தப் போக்கினால் அவர் மரணமடைந்தார்.

இதனிடையே வவுனியா மற்றும் கட்டுநாயக்க வான் படைத்தளங்களில் உள்ள ராடாரில் வவுனியாவை நோக்கி இரு பொருட்கள் செல்வது அவதானிக்கப்பட்டது. அது விடுதலைப் புலிகளின் வானூர்திகள்தான் என உறுதிப்படுத்தப்பட்டதும் வவுனியா, அனுராதபுரம், கொழும்பு பகுதிகளின் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதிகாலை 4:10 மணியளவில் அந்த இரு வானூர்திகளும் வவுனியாவுக்கு மேலாக அனுராதபுரம் நோக்கிச் சென்றன.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் இயங்கிய போதும் வானூர்தி அனுராதபுரம் தளத்தை அடைந்து 3 குண்டுகளை வீசின. அவற்றில் ஒரு குண்டு உலங்குவானூர்திகளின் தரிப்பிடத்திற்கு அருகிலும், இரண்டாவது குண்டு சாலியபுர இராணுவ முகாமிற்கு அருகிலும், மற்றைய குண்டு விவசாயப் பண்ணையிலும் வீழ்ந்தன. பண்ணையில் வீழ்ந்த குண்டினால் அங்கு நின்ற 12 எருமை மாடுகள் உயிரிழந்தன.

கொழும்பில் வான் படைத்தளபதி றொசான் குணதிலக்கவும், நடவடிக்கை பணியகப் பணிப்பாளர் ஏயர் கொமோடோர் கர்சா அபயவிக்கிரமாவும் வான் படைத் தலைமையகத்தின் நடவடிக்கை அறையில் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதும் அவற்றைத் தாக்கும் படி வவுனியா வான் படைத்தளத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.

ஸ்குவாட்றன் லீடர் அமிலா மொகொரி, பைலட் அதிகாரி ஏ.பி.எம் டி சில்வா ஆகியோர் இரு துப்பாக்கிதாரிகளுடன் பெல்-212 ரக உலங்குவானூர்தியில் புறப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்குவதே அவர்களின் பிரதான நோக்கம். பெல்-212 ரக உலங்குவானூர்தி அனுராதபுரம் நோக்கிச் சென்ற போது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அனுராதபுரம் வான் பிதேசத்தில் பிரவேசித்து விட்டன.

அப்போது வவுனியா மற்றும் அனுராதபுரம் படைத்தளங்களின் படையினருக்கும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அதிகாலை 4:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள டொரமடலாவப் பகுதியில் பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது.

பெல்-212 ரக உலங்குவானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தான் சிக்கியுள்ளதாக பின்னர் அறியப்பட்டுள்ளது.

படையினர் அதனை விடுதலைப் புலிகளின் வானூர்தி என தவறாக எண்ணியுள்ளனர். உலங்குவானூர்தி தாக்கப்பட்டதும் வவுனியா வான் படைத்தளத்திற்கு அது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரண்டும் வவுனியாவினூடாக சென்று ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டன.

தரையில் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை கைப்பற்றிய விடுதலைப் புலிகள் வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கி தாக்குதலை நடத்தினர். அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும் அவர்கள் தாக்கியழித்தனர்.

கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அனுராதபுரம் தளத்தின் தளபதி குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க வவுனியாவில் நிலைகொண்டிருந்த சிறப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் உபால் எதிரிசிங்காவை தொடர்புகொண்டு உடனடியாக சிறப்புப் படையினரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர். அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். எனினும் சமர் தொடர்ந்தது.

பீச்கிராஃப், சில உலங்குவானூர்திகள் ஆகியவற்றை அழிப்பதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டுவிட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.

காலை 7:00 மணியளவில் மேஜர் சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் 11:00 மணியளவில் மோதல்கள் முடிவுக்கு வந்தன.

21 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் குண்டை வெடிக்க வைத்திருந்தனர்.

செய்மதி தொலைபேசி ஊடாக முற்பல் 10:30 மணிவரையிலும் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி தலைமையுடன் தொடர்புகளை பேணி வந்திருந்தனர். அவர்கள் இரண்டு தமிழீழக் கொடிகளையும் கொண்டு வந்திருந்தனர்.

இத்தாக்குதலில் 4 அதிகாரிகள் உட்பட 13 வான் படையினரும், இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார்.

எம்ஐ-24 - 02

எம்ஐ-17 - 01

கே-8 - 01

பிரி-6 - 01

செஸ்னா-150 - 01

பீச்கிராஃப் - 01

பெல்-212 - 01

ஆளில்லாத வானூர்திகள் - 02

என 8 வான்கலங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன.

பிரி-6 - 03

கே-8 - 01

செஸ்னா வானூர்திகள் - 01

உள்ளிட்ட மேலும் 10 வானூர்திகள் சேதமடைந்தன.

தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் விடுதலைப் புலிகள் அதற்கு உரிமை கோரியிருந்தனர்.

அவர்கள் தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் பெயர்களையும் பதவிகளையும் வெளியிட்டிருந்தனர்.

தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீதான வான் தாக்குதல்கள் மற்றும் விநியோக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாகவே அவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபையை மகிந்த கூட்டியிருந்தார். அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எனினும் இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் நாட்டில் இருக்கவில்லை. வான் படைத்தளபதியையும் அவரது படையினரையும் கடுமையாக சாடிய மகிந்த, கோத்தபாயாவை உடனடியாக அனுராதபுரம் செல்லுமாறும் பணித்திருந்தார்.

அன்று மாலை காவல்துறை மா அதிபர், வான் படைத்தளபதி ஆகியோருடன் அனுராதபுரம் சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச தளத்தின் அழிவுகளை பார்வையிட்டதுடன் தளத்தின் பொறுப்பையும் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது.

அனுராதபுரம் பகுதிக்கான கட்டளைத் தளபதியாக பனாங்கொடவில் அமைந்துள்ள 11 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ன மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார்.

தளமானது அவசரமான நிலைமைகளை எதிர்கொள்ளும் தன்மையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. முகாமை பாதுகாப்பதற்கான எந்தப் பயிற்சிகளும், ஒத்திகைகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை. தாக்குதல் நடைபெற்ற சமயம் காவலில் இருந்த வான் படையினருக்கு அவசர நிலைமைகளை எதிர்கொள்ளும் பயிற்சிகளும் வழங்கப்படிருக்கவில்லை.

முகாம் வெளிப்பகுதியில் வேலிகளை கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியமானது. அங்கு பொதுமக்களின் நடமாட்டம் சுதந்திரமாக இருந்தது. தளத்தின் புலனாய்வு பிரிவும் தரம் வாய்ந்தது அல்ல.

இராணுவத்தின் அண்மைய தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் பலத்தை சிதைத்து விடவில்லை. இத்தாக்குதல் தமிழ் மக்களினதும் விடுதலைப் புலிகளினதும் உளவுரனை அதிகரிக்கும் என்பது உண்மை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி<புதினம்

உணர்வெழுச்சியோடு 21 கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகள் !














அனுராதபுரத்தில் சிங்களப் பேரினவாதப் படைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தி தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்து வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று தமிழீழத் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன.

இன்று வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழீழ தேசியக் கொடியேற்றப்பட்டு கரும்புலி மாவீரர்களுக்கு ஈகச் சுடரேற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

கோட்டங்களில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுகளில் பெருமளவில் மக்கள் திரண்டு தமது உணர்வுபூர்வமான வணக்கங்களை கரும்புலி மாவீரர்களுக்கு செலுத்தினர்.

கிளிநொச்சி

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக அணியிசையுடன் கிளிநொச்சி அரச செயலக வளாகத்திலிருந்து நினைவுப்பேரணி புறப்பட்டு பண்பாட்டு மண்டபத்தை சென்றடைந்தது.

கிளிநொச்சி வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

பொதுச்சுடரினை மாவீரர் பணிமனை பணிமுதல்வர் பொன். தியாகம் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து 21 சிறப்பு கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்குப் பெற்றோர்கள், உடன்பிறப்புக்கள், பொறுப்பாளர்கள் போராளிகளால் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சொலைமன் சூசிறீல், ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் துளசிச்செல்வன் ஆற்றிய உரை:

ஒரு முக்கிய காலகட்டத்தில் அனுராதபுரம் வான் படைத்தளம் மீது கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழர்களின் வீரமரபு சிங்கள தேசத்தில் மீண்டுமொரு முறை நீரூபிக்கப்பட்டுள்ளது. கரும்புலி மாவீரர்களின் தியாகத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறது.

அனுராதபுரம் தாக்குதல் சிங்கள அரசுக்கு ஒரு பலமான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. பொய்யான பரப்புரைகளும் போர் நடவடிக்கைகளும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியாது என்பதையே உணர்த்தி நிற்கிறது

தமிழர்கள் எந்தக் காலத்திலும் எந்தவேளையிலும் அடிபணிந்து போக மாட்டார்கள் என்பதையும் இத்தாக்குதல் உணர்த்தி நிற்கின்றது என்றார்.

இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் மலர்தூவி 21 கரும்புலி மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர்.

புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் 21 சிறப்புக் கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக திருவுருவப்படங்கள் தாங்கியவாறு புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபம் அருகாமையில் இருந்து இன்னிய இசை அணிவகுப்புடன் பொன்விழா மண்டபத்திற்கு பேரணி சென்றடைந்தது.

வீரவணக்க நிகழ்வுக்கு புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி தலைமை வகித்தார்.
பொதுச்சுடரினை ராதா வான்காப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவரான கரிகாலன் ஏற்றினார்.

ஈகச்சுடரேற்றப்பட்டு மலர்மாலைகள் சூட்டப்பட்டதனைத் தொடர்ந்து முல்லை வலயக்கல்வி பணிப்பாளர் அரியரத்தினம், தூயவன் அரசறிவியற் கல்லூரி பொறுப்பாளர்களில் ஒருவரான கலைக்கோன், சிறிசுப்பிரமணிய வித்தியாசாலை முதல்வர் செல்வநாயகம் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.

விசுவமடு
விசுவமடு கோட்டம் தருமபுரம் மகா வித்தியாலயத்தில் விசுவமடு கோட்டப் பொறுப்பாளர் சீராளன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை வவுனியா கட்டளைத்தளபதி வேலவன் ஏற்றினார்.
ராஜன் கல்விப்பிரிவு பொறுப்பாளர் கீதன், மாணவி தர்சிகா ஆகியோர் வீரவணக்க உரைகளை வழங்கினர்.

முழங்காவில்
முழங்காவில் கோட்டத்தில் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பொதுச்சுடரினை ராதா வான்காப்பு படையணி பொறுப்பாளர்களில் ஒருவரான அன்புமணி ஏற்றினார்.

ஈகச்சுடரேற்றி மலர்மாலை ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து ஆசிரியர் குவேந்திரன், ராஜன் கல்விப்பிரிவைச் சேர்ந்த நிலவன் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.

மன்னார்
மன்னார் விடத்தல்தீவில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை இளவேனில் பணியாளர் சுரேன் ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியினை மாந்தை மேற்கு கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஆரூரன் ஏற்றினார்.

ஈகச்சுடரினை கிராம அலுவலர், போராளி கோபி ஆகியோர் ஏற்றினர்.

கடற்புலிகளின் மன்னார் அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்புராச் மலர்மாலையை சூட்டினார்.
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சகாயம் வீரவணக்க உரை நிகழ்த்தினார்.

கனகராயன்குளம்
கனகராயன்குள கோட்டத்தில் மாங்குளம் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியினை கோட்டப் பொறுப்பாளர் கலையரசன் ஏற்றினார்.
மலர்மாலை சூட்டப்பட்டு ஈகச்சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாங்குளம் மகா வித்தியாலய ஆசிரியர் சிவகணேசன், பங்குத் தந்தை அன்ரனி சுதாகரன், துணைமுதல்வர் புஸ்பமாலா ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.
புலித்தேவன் சிறப்பு வீரவணக்கவுரையை வழங்கினார்.

ஒட்டுசுட்டான்
நெடுங்கேணி ஒட்டுசுட்டான் கோட்டத்தில் கோட்டப் பொறுப்பாளர் ஞானம் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கடற் கரும்புலி காந்தனின் தாயார் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் கோட்டப் பொறுப்பாளர் ஞானம் ஏற்றினார்.

ஈகச் சுடரேற்றப்பட்டு மலர்மாலை சூட்டப்பட்டதனைத் தொடர்ந்து வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவுச் சங்கக் கணக்காளர் சபாரத்தினம், பொது அமைப்பு ஒன்றியத் தலைவர் பூபாலசிங்கம் மோகனதாஸ் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.
ஒளிக்கலைப் பிரிவு பொறுப்பாளர் செந்தோழன் சிறப்பு வீரவணக்க உரையை நிகழ்த்தினார்.

முள்ளியவளை
முள்ளியவளையில் கோட்டப் பொறுப்பாளர் உமைநேசன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலாங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஏற்றினார்.

ஈகச்சுடரேற்றி மலர்மாலை சூட்டப்பட்டதனைத் தொடர்ந்து குமுழமுனை பாடசாலை முதல்வர், தூயவன் அரசறிவியற் கல்லூரி முதல்வர் அரசண்ணா ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.

மல்லாவி
மல்லாவி கோட்டத்தில் கோட்டப் பொறுப்பாளர் செம்மணன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக அனிஞ்சியன்குளம் பாடசாலையிலிருந்து கரும்புலி வீரர்களின் திருவுருவப்படங்களைத் தாங்கிய பேரணி மாவீரர் மண்டபத்தை சென்றடைந்தது.
மாவீரர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை அரசியல்துறை நடுவப் பணியகப் போராளி சி.எழிலன் பொதுச்சுடரை ஏற்றினார்.

சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்மாலைகள் சூட்டப்பட்டதனைத் தொடர்ந்து பாலிநகர் பாடசாலை முதல்வர் திருமதி கிருஸ்ணபிள்ளை உரை நிகழ்த்தினார்.

வீரவணக்க உரையை சி. எழிலன் நிகழ்த்தினார்.

மேஜர் எழிலன்பனின் நடுகல் திரைநீக்கம்
மேஜர் எழிலன்பனின் திருவுருவப்படம் வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் எடுத்துச் செல்லப்பட்டு முழுப்படைய மதிப்புடன் நடுகல் திரைநீக்கம் செய்யப்பட்டது.
மேலும் வவுனியா கட்டளைப் பணியகத்திலும் 21 கரும்புலி மறவர்களின் வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன.
நன்றி>புதினம்.

Thursday, October 25, 2007

அனுராதபுர தாக்குதல் நிலவரம், கானொளியில்.

அனுராதபுர தாக்குதல் நிலவரம், கானொளியில் பார்க்க.






வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தேசியத் தலைவர் அகவணக்கம்!







அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று அகவணக்கம் செலுத்தினார்.

வன்னியில் இன்று வியாழக்கிழமை (25.10.07) சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் திருஉருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்மாலை அணிவித்தார்.
நன்றி>புதினம்.

Wednesday, October 24, 2007

அனுராதபுர தாக்குதலுக்கு எதிராக உலகத்தில் இருந்து வந்த "முதலாவது கண்டனக் குரல்"


அனுராதபுரம் வான் படைத்தாக்குதலை "தாம் வன்மையாக கண்டிப்பதாக" வீ.அனந்தசங்கரி கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுதாரபுரம் வான் படைத்தளத்தின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மிக வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இத்தாக்குதல் தேவையற்றது- அர்த்தமற்றது- ஆத்திரமூட்டக் கூடியது. மகிழ்ச்சிக்குரியது அல்ல என்று கூறியுள்ளார்.

"பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர் வரை எவ்வித வயது வேறுபாடின்றி வகை தொகையின்றி தமிழ் மக்கள் மீது வானிலிருந்து நாசகார குண்டுகளை வீசி கொன்றொழிக்கப் பயன்படுத்தப்பட்ட வான் படைத்தளமும் வானூர்திகளுமே கரும்புலிகளின் தற்கொடையினால் தகர்க்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களைக் கொல்லப் பயன்படுத்திய வான் தளத்தை தகர்த்து விட்டார்களே என்று சிங்களவர்கள் வருத்தம்தான் அடைந்தனர். அது போர் இலக்குகளில் ஒன்று. ஜே.வி.பி. உள்ளிட்ட எந்தப் பேரினவாதியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அறிவிக்கப்படாத யுத்தத்தில் ஒரு போர் இலக்கு அழிக்கப்பட்ட்டுள்ளமை குறித்து அனைத்துலகம் உட்பட எவரும் எதுவும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ் மக்களைக் கொன்றொழிக்கப் பயன்படுத்தப்பட்ட வான்படைத் தளத்தை அழித்தமைக்காக "தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி" என்ற பெயரில் "கண்டனம்" ஒன்று வெளியாகிறது எனில்... அதனை என்னவெனச் சொல்வது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நன்றி>புதினம்

போரியல் மரபை மீறிய சிங்களம்!



அநுராதபுரம் ஆயர் நோபர்ட் பீபீசீ சந்தேசயாவுக்கு வழங்கிய கருத்து:-

தாக்குதல்களை நடத்தியவர்களின் சடலங்கள் என்றாலும் அந்த சடலங்களுக்கு நாம் உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். சடலங்களை நிர்வாண கோலத்தில் எடுத்துச் செல்லாது மனித தன்மையுடன் எடுத்து சென்றிருக்கலாம் என்று அநுராதபுரம் கத்தொலிக்க திருச்சபையின் ஆயர் நோபர்ட் தெரிவித்தார்.

மேலும் கூறியதாவது;

தாகுதல்களில் பலியான கரும்புலிகளின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுர நகரத்தின் வழியாக வைத்திய சாலைக்கு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நிர்வாண கோலத்திலேயே கொண்டு செல்லப்பட்டுள்ளன. சடலங்கள் நிர்வாணக்கோலத்தில் டிராக்டரில் எடுத்துச்செல்லப்படுவதாகவும், இந்த நடவடிக்கை முறைக்கேடானது என்றும் அங்கு சென்று திரும்பியவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.நிர்வாண கோலத்தில் எடுத்து செல்கின்ற சடலங்களை பார்ப்பது சரியானது இல்லை என்பதனால் நான் நேரடியாக சென்று பார்க்கவில்லை.

சடலங்கள் யாருடையது என்பது இங்கு முக்கியமில்லை. சடலங்கள் விடுதலைப்புலிகளுடையது என்பதனால் அது தொடர்பாக நாம் பேசவில்லை. எனினும் யாருடைய சடலங்கள் என்பதை கருத்தில் கொள்ளாது சடலங்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். அத்துடன் மனித தன்மையுடன் செயற்படவேண்டும்.

அநுராதபுர வான் படைத்தள தாக்குதலானது புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல்: பி.இராமன்

அநுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல் என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் ஆலோசகர் பி.இராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் முக்கிய பகுதிகள்:

நம்பமுடியாத அளவிலான மிக உச்சக்கட்ட உறுதிப்பாடும், துணிவும், துல்லியமும் நிறைந்த வெற்றிகரமான தாக்குதலை, விடுதலைப் புலிகளின் 21 கரும்புலி உறுப்பினர்கள் நடத்தியிருக்கின்றனர்.

குறிப்பாக, இந்தத் துணிகரத் தாக்குதலுக்கு, ஒரு கிழக்கு மாகாணத்தவர் தலைமை தாங்கியிருப்பதும், விடுதலைப் புலிகளின் வான்படையின் இரு வானூர்திகள் வழங்கிய ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானவை.

மிக அதிகபட்ச புலனாய்வுத் தகவல்களுடன் மதிநுட்பம் நிறைந்த, உச்சக்கட்ட திட்டமிடல் மற்றும் பயிற்சிகளை உள்ளடக்கிய இத்தகையதொரு தாக்குதலை, உலகின் வேறு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் நடத்தியிருக்க முடியாது என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டதாக மேற்கோள் காட்டும் இராமன், இதற்காக விடுதலைப் புலிகள் பலவித தியாகங்கள் இழப்புக்களுடன் கூடிய வலிகளைத் தாங்கிக்கொண்டு, நீண்டகாலம் திட்டமிட்டிருக்கின்றனர் என்றே தான் கருதுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

கரும்புலிகள், சிறிய குழுக்களாகப் பிரிந்து, இரு வேறு திசைகளிலிருந்து, அநுராதபுர வான்படைத் தளத்திற்குள் ஊடுருவியிருக்கின்றனர். வெறும் 20 நிமிடத்துக்குள் பாதுகாப்புக் கடமையிலிருந்து படையினரைத் திகைக்க வைக்கும் வகையில் அதிரடித் தாக்குதல்களைத் தொடுத்து, ஆயுதங்களையும் தொடர்பாடல் உபகரணங்களையும் கைப்பற்றியதுடன், அங்கிருந்த வானூர்தி எதிர்ப்பு ஏவுகணையையும், வான் பரப்பைக் கண்காணிக்கும் ராடார் உபகரணத்தையும் செயலிழக்க வைத்துள்ளனர்.

இந்த முதற்கட்ட செயற்பாடுகளின் வெற்றியை, தமது கட்டளைத் தலைமையகத்திற்கு தகவலாகப் பரிமாறியதும், விடுதலைப் புலிகளின் வான்படை, தமது இரு வானூர்திகளை அனுப்பி, குண்டுத் தாக்குதலையும் நடத்திவிட்டு, வெற்றிகரமாக தளம் திரும்பியிருக்கின்றன.

சிறிலங்காவின் அநுராதபுரம் வான் படைத்தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணி, அதிகாலை 3:00 மணியிலிருந்து 9:00 மணிவரை, தங்களது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து, படிப்படியாக மிகத் துல்லியமான திட்டமிடலில், அங்கிருந்த பல்வேறு வானூர்திகளை அழித்துள்ளனர்.

உலங்கு வானூர்திகள் - 03

பயிற்சி வானூர்திகள் - 02

ஆளற்ற வேவு வானூர்திகள் - 03

போன்றவை இவற்றில் அடங்கும்.

இது தவிர, வவுனியா வான் படைத்தளத்திலிருந்து நிலைமையை அவதானிக்கச் சென்ற சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தியை, விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோ படையினர், சுட்டு வீழ்த்தியுள்ளனர். வான்படை முகாமிலிருந்த ராடார் உபகரணங்களை, விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இயங்க வைத்து, வான்பரப்பை தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார்கள் என்பதனையே இந்தத் தாக்குதல் சுட்டிக்காட்டுன்கிறது.

வான் படைத்தளத்தில் பாதுகாக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியத்தை முற்றாக தாக்கியழித்த விடுதலைப் புலிகளின் கொமாண்டோப் படையணி பின்னர் அங்கிருந்த வானூர்தி ஓடுபாதையையும் குண்டுவீசி பாதிப்படைய வைத்துள்ளனர்.

காலை 9:00 மணிவரை கரும்புலிகள் அநுராதபுரம் வான் படைத்தளத்திலிருந்து தங்களது கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பிலிருந்ததாக, நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

சரியாக 9:00 மணிக்கு அனைத்து கொமாண்டோ உறுப்பினர்களின் தொடர்புகளும், முற்றாக துண்டிக்கப்பட்டன. இதன்படி பார்க்கும்போது, கரும்புலிகள், 9 மணிக்கு தங்களைத் தாங்களாகவே முடித்துக் கொள்வதற்கு முடிவெடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறதே தவிர சிறிலங்காப் படையினர் அவர்களைக் கொல்வதற்கு வாய்ப்புக் கொடுத்ததாகத் தெரியவில்லை.

தற்போது கிடைக்கின்ற தகவல்களை வைத்துப் பார்க்கும் போது கரும்புலிகள் முகாமிற்குள் நுழைந்து, முகாமைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், தரைப் படைக்கு உதவி வழங்குகின்ற வகையில் விடுதலைப் புலிகளின் வான்படை எவ்வாறு செயல்படலாம் என்பதனைப் பரீட்சிக்கின்ற ஒரு களமாக, தரைப்படையின் நகர்வுகளில் வான் படை எத்தகைய உதவிகளை வழங்கலாம் என்பதை ஆராய்கின்ற களமாக, இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

ஏனெனில், தரைப்படையினர் தங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் வான் படை முகாமைக் கொண்டுவந்த பின்னர், வானூர்திகள் வந்து குண்டு போடுகின்ற தேவை அவசியமானதாகத் தெரியவில்லை. எனவே, இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவும் நோக்கப்படலாம்.

விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல் உக்கிரத்தை, சிறிலங்கா அரசு எப்படியும் மூடி மறைத்துவிட முயற்சிக்கிறது என்பது தெரிகிறது. தங்களது இரண்டு உலங்குவானூர்திகள் அழிக்கப்பட்டதாகவும், இன்னுமொன்று விபத்துக்குள்ளானதாகவும் சிறிலங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், லண்டனைத் தளமாகக் கொண்ட "டெய்லி ரெலிகிராஃப்" ஊடகத்தின் கொழும்பு செய்தியாளர், குட்டை உடைத்திருக்கிறார். அவரது தகவலின்படி, 14 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முக்கிய கண்காணிப்பு வானூர்தியான பீச்கிறாஃப்ற் உட்பட, மொத்தம் 17 வானூர்திகள் அல்லது உலங்குவானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன என்று அவரது அதிகாரபூர்வ செய்தியில் விபரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன.

அநுராதபுர வான் படைத்தள முகாம், சிறிலங்கா அரசின் இராணுவச் செயற்பாடுகளுக்கு, ஒரு மிக முக்கியமான மைய முகாம்.

வான் படையின் பிரதான பயிற்சி முகாமாகவும், பிரதான புலனாய்வுத் தகவல் வழங்கல் முகாமாகவும் செயற்பட்ட இப் படை முகாமில், வானிலிருந்து படம் பிடிக்கப்பட்டு, அங்குள்ள நவீன ரக உபகரணங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு, உயர்மட்டத் தலைமைகளுக்கு மிக அவசியமான அத்தனை அறிவார்த்தமான புலனாய்வுத் தகவல்களையும் வழங்கும் தளமாகவும் இது இயங்கியது.

பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட ஆலோசகர்களும் பயிற்சியாளர்களும், அநுராதபுரம் வான் படை முகாமுடன் தொடர்புகளைத் தொடர்ச்சியாகப் பேணி வருவதுடன், அவ்வப்போது நேரடியாக அங்கு வந்து போவதும் உண்டு.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீது, சிறிலங்கா படைகள் குண்டு வீசுகின்ற பலத்தை, இந்தத் தாக்குதல் முறியடிக்கா விடினும், கடற்படை மற்றும் வான் படையின் கண்காணிப்பு, புலனாய்வு மற்றும் படையினரைக் காவிச் செல்லும் பணிகளை மிக மோசமாகத் தாக்கியிருக்கின்ற இந்தத் தாக்குதல், மிகப் பாரிய பொருளாதார நெருக்கடியையும் படைத்தரப்பிற்கு உருவாக்கியிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை சிறிலங்கா அரச படைகள் தாக்கியழித்ததற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக அல்லது, வடக்கில் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக, அநுராதபுரம் வான்படைத் தளம் மீதான இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் முன்னெடுத்திருக்கலாம்.

தொலை நோக்குப் பார்வையும், தெளிவான சிந்தனையும், சீரிய திட்டமிடலும், தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் இருக்கிறது என்பதையே இந்தத் தாக்குதல் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. அண்மைக்கால பின்வாங்கல்களும் இழப்புக்களும், விடுதலைப் புலிகளின் மனோபலத்தில் எந்தக் குறைபாட்டையும் ஏற்படுத்தவில்லை.

கிழக்கு மாகாணத்தை இழந்தமை, எவ்விதத்திலும் அவர்களது பலத்தைக் குறைக்கவில்லை. சிறுபான்மைத் தமிழினத்திற்கான அரசியல் வெற்றியை அடைகின்ற அவர்களது இலட்சியப் பயணத்திற்கான மன உறுதிப்பாடு இரட்டிப்பாக உயர்ந்திருப்பதையே, இந்த வான்படைத்தளம் மீதான தாக்குதல் சுட்டி நிற்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Tuesday, October 23, 2007

அடி உதவுவது போல் அண்ணன், தம்பி கூட உதவமாட்டார்கள்.

Sri Lanka 'open to talks' despite Tiger assault


Sri Lanka's government said the door was still open for Tamil Tigers to talk peace, a day after the rebels mounted their biggest-ever suicide operation with a ground attack backed by air strikes.

Foreign Secretary Palitha Kohona said the attack, in which 13 servicemen and around 20 Black Tiger suicide fighters were killed, had not changed the government's desire for a negotiated end to a two-decade civil war in which 70,000 people have died.

However the government has declared it aims to destroy the Liberation Tigers of Tamil Eelam (LTTE) militarily and evict them from all territory they control in the far north, while the separatist Tigers demand an independent state, leaving the sides deadlocked.

"Yesterday's attack was just another pin-prick. It is not going to change anything on the ground," Mr Kohona said of Monday's pre-dawn attack, in which Black Tigers infiltrated a base in the northern district of Anuradhapura and rebel light aircraft dropped bombs.

"It has very little military significance."

The Tigers claimed to have destroyed eight aircraft parked at the base during the assault, including helicopter gunships and aerial reconnaissance craft, in what analysts said was a body-blow to the military. The government said three aircraft were damaged.

"The situation remains that the government is committed to bringing this conflict to an end through a negotiation process rather than through a military process," Mr Kohona said.

"However it is important that both sides come to the table. The government is ready and willing to be at the table, but the LTTE so far has indicated no intention of coming to the table."

The Defence Ministry on Tuesday posted pictures of the slain suicide fighters sprawled on tarmac at the base, some charred, one with eyes wide-open and one with a gaping hole in his head.

The dead were then stripped, their naked bodies piled into the back of a tractor trailer, and driven along the road in full view of the public.

- Reuters

Monday, October 22, 2007

Seven aircrafts destroyed in Anuradhapura. US $ 25 million damage!!!

படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்.

(LeN, 2007 October 06, 1.45 PM) The damage caused by the LTTE air and ground dual attack on the Anuradhapura Air Base this morning has been guessed a staggering US $ 25 million, the highest loss in the Sri Lanka Air Force history.

Unconfirmed reports say that the damaged fleet includes a Rs. 2.5 billion beach craft which can be airborne for a long time.

The damaged fleet, according to sources, contains one beach craft, one Bell helicopter, two MI-24 assault helicopters, one MI-17 transport helicopter, one K-8 training aircraft and a Cessna light aircraft.e

சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதலில் 8 வானூர்திகள் முற்றாக தாக்கியழிப்பு!!!







அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கரும்புலி அணியினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 8 வானூர்திகள் முற்றாக தகர்த்து எரியூட்டி அழிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்தியறிக்கை:

இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:20 மணியளவில் 21 பேர் கொண்ட சிறப்புக் கரும்புலி அணியினர் அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்திற்குள் உள்நுழைத்து தாக்குதல் தொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாலை 4:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் தளத்தின் மீது குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.

இன்றைய தாக்குதலில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான

பயிற்சி வானூர்தி - 01
எம்.ஐ - 24 ரக உலங்கு வானூர்திகள் - 02
PT6 ரக - 01
பெல் 212 - 01
வேவு வானூர்தி - 01
CTH - 748 - 01
மேலும் வானூர்தி - 01
ஆகியன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி அணியினர் அணுராதபுரம் வான்படைத் தளத்திற்குள் தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளள்ளனர். கரும்புலி அணியினரின் தாக்குதலுக்கு உதவியாக தமிழீழ வான்படையினரும் அனுராதபுரம் தளம் மீது தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியிருப்பதாக வான் புலிகளின் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் வவுனியாவிலிருந்து உதவிக்குச் சென்ற பெல் - 212 ரக உலங்கு வானூர்தியொன்றும் வீழ்ந்து நெருங்கியுள்ளது என்று அச்செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Wednesday, October 17, 2007

ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்.

ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்.






ரஜீவ் கொலையின் மறுபக்கம்!!!

அதிசய மனிதர் பிரபாகரன்(Pirabakaran phenomenon) என்கின்ற ஆக்கத்தின் சுருக்க மொழியாக்கம் இதுவாகும்.

ராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன. புலிகள் அல்லாதோர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் இந்தியாவின் விசாரனைக் குழுவும், இந்தியாவின் உளவுத்துறையும் காவல்துறையும் நீதிமன்றங்களும் தட்டிக்கழித்துவிட்டன அல்லது வேணும் என்று ஒதுக்கிவிட்டனர். அவர்களின் ஒரே குறிக்கோள் புலிகளுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவது. அதன் விளைவாகப் பொய்யான ஆதாரங்களை எல்லாம் அவர்கள் சமர்ப்பிக்கத் தொடங்கினார்கள்! தடயங்களும் ஆதாரங்களும் சாட்சிகளும் புலிகளுக்கு எதிராகத் திசைதிருப்பப்பட்டன. அண்மையில் மீனவர்கள் கடத்தப்பட்ட விடயத்தில்கூட பல இல்லாதபொல்லாததை இந்திய அரசு கூறுவதைக் காணலாம்.

ராஜீவ் கொலையுடன் சந்திரசுவாமி என்பவர் தொடர்புபட்டுள்ளதாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றசம்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் சிலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் அவற்றை யாரும் கண்டுகொள்ளவில்லை.
காங்கிரசுக் கட்சிக்காரர்கள் ராஜீவ் இறக்கும்போது அவரின் இடத்தில் இருந்து மூன்று மீற்றர் சுற்றளவுக்கு அப்பால் இருந்திருக்கின்றனர். ராஜீவ் காந்தி போன்ற பிரபல நபர் தமிழகத்தில் உள்ள கூட்டம் ஒன்றுக்கு வரும்போது அங்குள்ள காங்கிரசுக் கட்சிக்காரர்கள் எல்லாம் அவர் அருகே நின்று தங்களையும் பிரபலப்படுத்தப் பார்த்திருப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக, மூப்பனார் மற்றும் இன்னொரு ஆள் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது மேடைக்கு அருகே இருந்தார்கள் என்றும், சிறீபெரும்பதூரில் போட்டியிட்ட வேட்பாளர்கூட மூன்றுமீற்றர் சுற்றளவிற்கு வெளியே இருந்தாராம்.

அண்மையில் மாலைதீவுக் கடலில் புலிகளின் ஆயுதப் படகு வேடத்தில் றோ செய்த நாடகத்தில் மாலைதீவு மீனவர்களைத் தாக்கிவிட்டு அந்தப் படகு மாலைதீவுக் கடற்படை வரும்வரை பார்த்துக்கொண்டு நின்றதாம். முதலில் புலிகளோ இல்லை வேறு யாரேனுமோ ஆயுதம் கடத்தினால் நாலாம்பேருக்குத் தெரியாமல் போயிருப்பார்கள். ஆயுதம் கடத்துபவர்கள் ஆயுதும் இல்லாத மீனவர்கள்மீது தாக்கவேண்டிய அவசியம் இல்லை. அடுத்தததாக, படகில் இருந்து தப்பிய பொறிஞர் படகு பழுதாகி இருந்ததாகக் குறிப்பிடவில்லை. எனவே மாலைதீவுக் கடற்படையின் படகு அங்கு வரும்வரையும் நகராமல் அந்த ஆயுதப்படகு நின்றதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை, எல்லாம் அந்தப் படகு பிடிபட வேண்டும் என்பதே.
இதற்கு முன்னர் புளொட் இயக்கத்தை பலிக்கடாவாகப் பயன்படுத்தி இந்திய அரணத்தை(இராணுவத்தை) மாலைதீவில் நிலைநிறுத்த றோ நாடகம் ஒன்றை ஆடியதும் ஞாவகம் இருக்கலாம்.

அவைபோல்தான் ராஜீவ் காந்தி கொலையின் பின்னால் காங்கிரசுக் காரர்கள், பிரேமதாசா மற்றும் றோ இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்திய உளவுத்துறை என்ன, உலகில் உள்ள பல உளவுத்துறைகளும் பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் செல்வாக்கு உள்ள அரசியல் வாதிகளுக்கும் சார்பாக ஈடுபடுவது வழக்கம்தானே.

கொலையில் சம்பந்தப்பட்ட சிவராசன் உண்மையில் பிரபாகரன் சொன்னதற்கு அமைய ராஜீவைக் கொன்றான் என்றால் புலிகளிடம் உள்ள வேகப் படகு ஒன்றன்மூலம் சிவராசனைத் தமிழகத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டுச்சென்றிருக்கலாம். ஆனால் சிவராசன் அவ்வாறு செல்லவில்லை. சிவராசன் சந்திரசுவாமி எனப்படும் காங்கிரசுக் காரரின் சொல்லுக்கு அமையவே ராஜீவைக் கொன்றதாகக் கூறப்படுகின்றது. அதற்கு முன்னர் தில்லி சென்ற சிவராசன் அங்கு சந்திரசுவாமியின் மாளிகையில் நடந்த யாகம் போன்ற நிகழ்வில் கலந்துகொண்டாராம் (அது ராஜீவைக் கொல்வதற்காக செய்யப்பட்ட யாகம் என்றும் பேசப்படுகின்றது).

ராஜீவ் கொலைக்குப் பின்னர் சிவராசன் இன்னும் சில கொலைகளைச் செய்துவிட்டு ஐரோப்பா செல்வதற்கு சந்திரசுவாமி பணம் கொடுத்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது. சந்திரசுவாமிக்கும் அமெரிக்க சி.ஐக்கும் தொடர்பு இருந்ததைக்கூட சிலர் கூறுகின்றனர்.

சிவராசன் கொலைசெய்யப்பட்ட வீட்டில் இருந்த சிவராசனின் சகாக்கள் சயனைட் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் சிவராசன் தலையில் சுடப்பட்டு இறந்திருந்தார். சிவராசன் பெங்களுரில் தங்கியிருந்த வீட்டை சுற்றி இந்திய அதிரடிப்படை, புலனாய்வுத்துறை, சயனைட் நஞ்சைத் தணிப்பதில் அனுபவமிக்க மருத்துவர்கள் போன்றோர் இருந்தார்கள். அவ்வாறு இருந்தும் சிவராசனும் அவனது சகாக்களும் கொல்லப்பட்டார்கள். அதில் முக்கியமாக சிவராசனும் இன்னொருவரினதும் உடலங்கள் உடனே எரிக்கப்பட்டுவிட்டன! ஆனால் தற்கொலைதாரி தானுவின் உடலம் மட்டும் பத்திரமாகப் பேணப்பட்டது!

ஒரு பெரும் கொலையில் முக்கிய நபரான சிவராசன் எனப்பட்ட ஒற்றைக் கண்ணணின் உடலம் ஏன் உடனே எரிக்கப்பட்டது? யாரைக் காப்பாற்ற? மேலும் ராஜீவ் காந்தியின் பறனை சில கோளாறின் நிமித்தம் ராஜீவின் பயணத்தைச் சுணக்கிவிட, ராஜீவ் கூறினாராம் தான் கூட்டத்திற்குப் போகாவிட்டால் மரகதம் சந்திரசேகரர் (சிறீ பெரம்பதூரின் வேட்பாளர்) குறைநினைப்பார் என்று. ஆனால் விசாரனைகளின்போது மரகதம் தான் ராஜீவைக் கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.

காங்கிரசு நா.உ(M.P) மரகதம் சந்திரசேகர், அவரது மகளும் ச.அ(சட்ட அவை) உறுப்பினருமான லதா பிரியகுமார் இருவருக்கும் ராஜீவுக்கு மாலைபோட காத்துநின்ற தானுவை நிரையில் கொண்டுபோய்விட்ட லதா கண்ணனைத் தெரியும். ஆனால் அது தொடர்பாக அவர்கள் இருவரும் விசாரனைக்கு உட்படுத்தப்படவில்லை!

காங்கிரசுக் கட்சிக்காரர் ராமசாமி, சந்திரசுவாமி, மரகதம் சந்திரசேகரர், லதா பிரியகுமார் போன்றவர்கள் காங்கிரசின் முக்கிய உறுப்பினர்கள் என்பதால் ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பாக அவர்களை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் அப்பாவி நளினியும் முருகனும் சிறையில் வாடுகிறார்கள்.

மேலும் தானுவுக்குப் பயிற்சி அளிப்பதில் இருந்து தானு ராஜீவுக்கு மாலைபோடும்வரை படமெடுத்துக்கொண்டன கரிஸ் பாபு சம்பவத்தில் இறந்துவிடுகிறார். ஆனால் அவரின் புகைப்படக்கருவியைப்பெற அவரது தந்தையாரைப் புலிகள் அனுப்பினார்கள் என்று குற்றம் சாட்டுவது எவ்வளவுக்கு நம்பத்தக்கது? இதற்கும் அண்மையில் மாலைதீவில் புலிகளின் ஆயுதப் படகு மாலைதீவுக் கடற்படை வருகைக்குக் காத்துநின்று மூழ்கினதற்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்தீர்களா?

சிவராசன் ரெலோ இயக்கத்தில் இருந்ததாகவும் ராஜீவ் கொலைக்கு காங்கிரசு, றோ அல்லது பிரேமதாசாவால் பயன்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.

றோ இதை செய்யாமல் இருந்திருந்தாலும் புலிகளின் இரண்டாம் தளம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தில் இருந்து புலிகளை வேரோடு எடுக்க இந்த சம்பவம் பெரிதும் உதவியது. ஆனால், அதனால் றோ நினைத்ததுபோல் புலிகள் பலவீனமடையவில்லை. ராஜீவ் கொலைவழக்கில் மாத்தையா சம்பந்தப்படுத்தப்படாததும் மேலும் றோ ராஜீவ்கொலைக்குப் பிண்ணனியில் உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. இதன்பின்னர் மாத்தையாவை வைத்து பிரபாகரனைக் கொல்லப்போட்ட திட்டம் புலிகளுக்குத் தெரியவர மாத்தையா விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

ராஜீவ் கொலைக்கு முன்னர் காசி ஆனந்தன் மற்றும் சில புலிகளின் முக்கியத்தர்கள் ராஜீவோடு சந்தித்துப் Nபுசியுள்ளார்கள். ஆனால் ஏதோ நம்பவைத்துக் களுத்தறுத்த கதையில் அந்தப் பேச்சுக்கள் கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில் ராஜீவ் புலிகளுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள முற்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

எனவே ராஜீவ் மீண்டும் பதவிக்கு வந்தால் அது தனக்கு நல்லாதிருக்காது என்று பிரேமதாசா எண்ணியிருப்பார். ஆகையால் சிவராசனைப் பயன்படுத்தி ராஜீவைக் கொன்றுவிட்டு அந்தப் பழியைப் புலிகள்மீது போட்டு தனக்கு அருகில் உள்ள நாட்டின் அதிகாரத் தலைமைமையத் திணறடித்து, தனக்கு எதிராக உள்ள புலிகளை தமிழகத்தில் இருந்து வேரறுக்கவும் பிரேமதாசா முயன்றிருக்கலாம்.

இதில் பிரேமதாசாவும் றோவும் ஒன்றிணைந்துகூட வேலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

ராஜீவ் கொலைக்குப் பின்னர் பிரேமதாசாவும் கொலை செய்யப்படுகிறார். என்ன ஒற்றுமை என்றால் ராஜீவ் கொலைசெய்யப்பட்ட மாதிரியே கொல்லப்படுகிறார். ஒருவேளை பிரேமதாசாவை றோ போட்டிருக்கும் அதற்கு இரு காரணங்கள் இருந்திருக்கும். ஒன்று பிரேமதாசாதான் ராஜீவைக் கொன்றார் என்ற உண்மை றோவுக்குத் தெரிந்து பழிவாங்கியிருப்பார்கள், அல்லது ராஜீவைக் கொலைசெய்ய றோ செய்த திட்டம்பற்றி பிரேமதாசாவிற்கு அதிகம் தெரியும். கூடத் தெரிந்தவரை விட்டுவைப்பது றோவுக்கு நன்மைதராது எனவே பிரேமதாசாவைப் போட்டிருக்கலாம்.

அடுத்ததாக பிரேமதாசாவை புலிகள் போட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதாவது இந்திய ராணுவத்தை நீக்க தங்களுடன் ஒத்துழைத்துவிட்டு தங்கள் முதுகில் பிரேமதாசா குத்தியதை உணர்ந்த புலிகள் பிரேமதாசாவைப் பரலோகம் செல்ல வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதில் மட்டும் புலிகள் பலிக்கடா ஆகவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமிர்தலிங்கம், யோகேசுவரன், ஆலாலசுந்தரம் போன்றவர்களையும் றோதான் தட்டியிருகு;கவேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

அமிர்தலிங்கத்தையும் யோகேசுவரனையும் கொழும்பில்வைத்து தட்டியது மாத்தையாவின் கையாள் விசு. ஆனால் மாத்தையா மற்றும் அவரது நெருங்கிய சகாக்கள் பிரபாகரனுக்கு எதிராகச் சதி செய்திருந்ததால் பின்னர் கொல்லப்பட்டார்கள். அவர்களின் பின்னணியில் றோ இருந்ததைப் புலிகள் இனம்கண்டதும் குறிப்பிடத்தக்கது (மீண்டும் ராஜீவ் கொலைவழக்கில் மாத்தையா பெயர் அடிபடாததையும் கவனிக்கவும்).

ஆனால் அமிர்தலிங்கத்தைத் தாம்தான் கொன்றதாகப் புலிகள் பொறுப்பேற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் புலிகள் ஒத்துக்கொள்ளாவிட்டால் புலிகளின் பலம் குன்றிப்போனதாகவும், மாத்தையா பிளவுபற்றிய சம்பவங்கள் பலவற்றை வெளியே தெரிவிக்கவேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் புலிகள் மூடிமறைத்துவிட்டனர்.

அண்மையில் பார்த்த திரைப்படம் ஒன்றில் உருசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அணு ஆயுதப்போர் நடக்கச் செய்ய நாசியைச் சேர்ந்தவர்கள் திட்டம்போடுகிறார்கள். அதில் முதற்கட்டமாக உருசியாவில் இருந்து பிரிந்துசென்ற நாடொன்றின்மீது சிலரின் சதிவேலையால் உருசியப்படைகள் வேதியல் குண்டை வீசுகிறார்கள், பல உயிர்கள் பலியாகின்றன. உடனே உருசிய முதல்மந்திரி தொடர்புகொள்ளப்படுகின்றார்.
வேதியல் குண்டு வீச்சை உருசியாதான் செய்ததா என்று வினவப்படுகின்றார். அதற்கு 'ஆம், நான்தான் செய்தேன், ஏன் அமெரிக்கா கிரோசிமாமீதும் நாகசாகிமீதும் குண்டுபோடவில்லையா?" எனக்கூறித் தான் செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கின்றார்.

சிலவேளைகளில் அரசுகளும் இயக்கங்களும் தாம்செய்தாதவற்றை சூழ்நிலை காரணமாக தாம் செய்ததாக ஏற்கவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. ஒன்று தமது பலவீனத்தை மறைக்க, இன்னொன்று ரகசியங்களைப் பாதுகாக்க.

ராஜீவ் காந்தியின் கொலைபின்னால் புலிகளைவிட வேறொரு கை இருக்கவேண்டும். ஆனால் அந்தக் கோணத்தில் விசாரனைகள் எதையும் இந்தியா மேற்கொள்ளாததும் தட்டிக்கழித்ததும் இதில் காங்கிரசுக் கட்சி மற்றும் றோ அல்லது சிங்கள அரசு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றே அறியப்படுகின்றது.

இந்திய அமைதிப்படை காலத்திலும், அதற்குப் பின்னரும் புலிகளை மக்களிடம் இருந்து பிரிக்க பல அரசியல் படுகொலைகளை வெளிநாட்டு சக்திகளும் சிங்கள அரசும் செய்துவிட்டு பழியைப் புலிகள்மீது போட்டுவிட்டனர். அவ்வாறாகவே ராஜீவ் கொலையும் செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.

உதவி: http://www.unarvukal.com/forum/index.php?s...ic=4626&hl=


Who really killed Rajiv Gandhi - CBI finds disturbing facts resembling JFK assassination
Kriti Sen, Special Correspondent
December 11, 2004


Who really killed Rajiv Gabdhi. Based on what Central Bureau of Investigation is finding, it may be more complex than John F. Kennedy's assassination. It is easy to point the finger to Tamil Tigers and forget about the real culprits. Slowly things rea coming out from bottom of the rugs. Tamil Tiger connection was used as front end and possibly as a diversion. But based on CBI sources, there were many people who wanted Rajiv dead. This includes even people he loved to work with. Some did it, many helped and many knew about it and did nothing much.


JFK's assassination was similar. And the cover up was obviously better orchestrated. Now people even say Onases, Jackie Kennedy's future husband funded the assassination. Complex as it may be, Rajiv Gandhi's assassination is similar if not more complex.

Interestingly CBI is moving fast from all direction and Sonia being in power the process is getting full support.

CBI on Friday told a Delhi court that it was investigating the suspected role of self-styled godman Chandraswami in the Rajiv Gandhi assassination case.

"One of the allegations under investigation is that Chandraswami had financed the assassination of Rajiv Gandhi," the agency said opposing an application by Chandraswami, who faces a fera violation case, seeking permission to travel abroad.

"Evidence and material does point an accusing finger towards Chandraswami...And raise a serious doubt regarding his involvement in the assassination of Rajiv Gandhi", CBI superintendent of police B N Mishra, told metropolitan magistrate V K Khanna, quoting from the Jain commission of inquiry report.

Mishra is the chief investigating officer of the multi disciplinary monitoring agency constituted in December 1998 to further probe the assassination, including the role of Nemi Chand Jain alias Chandraswami.

Chandraswami had sought the court's permission to go abroad for two months to deliver "spiritual discourse". The matter will now come up for hearing on December 13.

Former Prime Minister Rajiv Gandhi was assassinated by a human bomb at Sriperumbadur near Chennai on May 21, 1991. Seventeen other persons were also killed in the explosion, which left 44 persons seriously injured.

Mishra told the court that 23 letters rogatory had been sent to various countries in order to know the activities of Chandraswami, including financial transactions of him and others allegedly involved in the case.

However, only five countries have so far responded while the result from the remaining 18 were awaited.

“The investigation of this case is still continuing and on receipt of the result of investigation on the letters rogatory, further investigation, including the examination of Chandraswami will have to be taken up”, Mishra said in his written submission before the court.

Chandraswami's application seeking permission to travel abroad was also opposed by the enforcement directorate, which accused him of involvement in “serious economic offences”.

The self-styled godman was recently acquitted in the Lakhubhai Pathak cheating case and the St Kitts forgery case.

Meanwhile, Chandraswami's lawyers Santosh Chauriha and K K Mannan claimed the CBI had no locus standi in the case which related to fera violation. The enforcement directorate had in 1998 given its no-objection on a similar application by the accused, they said.

Chauriha said the court had directed the agency to produce the file pertaining to the case on Monday for its perusal.

http://www.indiadaily.com/editorial/12-11c-04.asp



The Pirabakaran Phenomenon என்னும் நூலினை வாசிக்க http://www.sangam.org/PIRABAKARAN/

Sunday, October 07, 2007

களநிலைமைகளும் காத்திருக்கும் இலக்கும்.

களநிலைமைகளும் காத்திருக்கும் இலக்கும். 05.10.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை நிகழ்ச்சி.